வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புதேர்தல் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு (exit poll) என்பது வாக்காளர்கள் வாக்கினைச் செலுத்திவிட்டு வாக்குச் சாவடிகளை விட்டு வெளியேவரும் போது நடத்தப்பெறும் கருத்துக்கணிப்பாகும். இதில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளனர் போன்ற கேள்விகளைக் கேட்கும் கருத்துக்கணிப்பைப் போலன்றி, உண்மையில் அவர்கள் யாருக்கு வாக்களித்தனர் என்பது குறித்து கேள்வி கேட்கப்படும். வாக்காளர்கள் வாக்களிக்கும் முன்பு நடத்தப்படும் கருத்துக்கணிப்பு போன்றே இக்கருத்துக்கணிப்பும் நடத்தப்படுகின்றது. செய்தித்தாள் நிறுவனங்கள், கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் அல்லது ஒலிபரப்பு நிறுவனங்கள் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை முன்னரே கூறும் நோக்கத்தில் இந்த வாக்களிப்புக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை நடத்துகின்றனர். ஏனெனில் பெரும்பாலான தேர்தல்களில் வாக்குகளை எண்ணி முடித்து முடிவுகள் வெளிவர பல மணி நேரங்கள் அல்லது சில நாட்கள் கூட ஆகலாம். வாக்களிப்புக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பைக் அறிமுகப்படுத்திய பெருமை மிட்டொ ப்ஸ்கை பன்னாட்டு நிறுவனத்தின் நிறுவுனரான வாரன் மிட்டோப்ஸ்கை (Warren Mitofsky) என்பவரைச் சாரும்.[1] நோக்கம்![]() வாக்காளர்களைப் பற்றிய மக்கள்தொகை விளக்கத் தரவுகளைச் சேகரிக்கவும் அவர்கள் ஏன் அவ்வாறு வாக்களித்தார்கள் என்பதைக் கண்டறியவும் வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பயன்படுகின்றன. உண்மையில் யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பதை எவரும் அறிய முடியாது என்பதால் இந்தத் தகவலைச் சேகரிப்பதற்கான ஒரே வழி கருத்துக்கணிப்பே ஆகும். வாக்களிப்புக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வரலாற்றிலும் உலகம் முழுவதிலும் தேர்தல் மோசடியின் அளவுக்கான ஒரு சோதனையாகவும் அடையாளங்காட்டியாகவும் பயன்பட்டு வந்துள்ளன. வெனிசுலேனியா நினைவு பொதுவாக்கெடுப்பு, 2004 மற்றும் உக்ரேனிய அதிபர் தேர்தல், 2004 ஆகியவை இதற்கான சில உதாரணங்களாகும். சிக்கல்கள்பிற எல்லா கருத்துக்கணிப்புகளையும் போலவே வாக்களிப்புக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளிலும் இயல்பாகவே ஒரு பிழை விளிம்பு உள்ளது. வாக்களிப்புக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் ஏற்படும் பிழைக்கான மிகப் பிரபலமான எடுத்துக்காட்டு 1992 இங்கிலாந்து பொதுத் தேர்தலில் ஏற்பட்ட நிகழ்வாகும். அப்போது நடைபெற்ற வாக்களிப்புக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் இரண்டும் தொங்கு பாராளுமன்றம் அமையும் என முன்கணித்தன. ஆனால் முடிவுகள் வேறுவிதமாக, அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் ஜான் மேஜர் (John Major) தலைமையிலான பழமைவாதக் கட்சியே (Conservative Party) அரசு அமைத்தது. இந்தத் தோல்வி பற்றிய விசாரணைகளில், வேறுபடும் பதிலளிப்பு வீதம், மாதிரியின் அளவைக் குறைவாகப் பயன்படுத்தியது மற்றும் மாதிரிப்புள்ளிகளின் தவறான தெரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருப்பது தெரியவந்தது.[2][3] தேர்தல் வாக்களிப்புக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை நடத்தும் நிறுவனங்கள்ஐக்கிய அமெரிக்காவில் தேசிய தேர்தல் அமைப்பில் (The National Election Pool) (NEP) ஏபிசி, ஏபி, சிபிஎசு, சிஎன்என், பாக்சு நீயூசு, மற்றும் என்பிசி ஆகியவை அடங்கியுள்ளன. இந்நிறுவனங்கள் வாக்களிப்புக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை நடத்துகின்றது. 2004ஆம் ஆண்டிலிருந்து எடிசன் மீடியா ரிசர்ச் (Edison Media Research) நிறுவனமே தேசிய தேர்தல் நிறுவனத்திற்காக இந்த வாக்களிப்புக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை நடத்திவருகிறது. இந்தியாவில் "தி டைம்சு குழுமம்", "சிவோட்டர்", இந்தியா டுடே போன்ற பல செய்தி நிறுவனங்களும் ஒலிபரப்பு நிறுவனங்களும் வாக்கெடுப்புக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை நடத்துகின்றன. உலகிலேயே மிகப்பெரிய குடியாட்சி நாடான இந்தியாவில் பல நிறுவனங்கள், வாக்கெடுப்புக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பின் மூலம் தேர்தல் முடிவை முன்கணிக்கின்றன.[4] விமர்சனம் மற்றும் சர்ச்சைகள்வாக்களிப்புக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பைப் பற்றிய பரவலான விமர்சனம் சில நிகழ்வுகளில் ஏற்பட்டது. குறிப்பாக அமெரிக்காவில் வாக்களிப்புக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பின் முடிவுகள் அனைத்து உண்மையான வாக்குப்பதிவுகளும் முடியும் முன்னரே வெற்றியாளர்களைப் பற்றிய முன்கணிப்புக்கான அடிப்படையாகத் தோன்றின மற்றும்/அல்லது அடிப்படையை வழங்கின. இதனால் அது தேர்தல் முடிவுகளைப் பாதிக்கும் சாத்தியம் உருவானது. 1980 அமெரிக்க அதிபர் தேர்தலில், NBC நிறுவனம் 20,000 வாக்காளர்களின் வாக்களிப்புக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில், ரொனால்ட் ரீகன் (Ronald Reagan) வெற்றி பெறுவார் என இரவு 8:15 மணிக்கு (கிழக்கத்திய திட்ட நேரம்) அறிவித்தது. ஆனால் மேற்குக் கடற்கரையில் (West Coast) நேரம் மாலை 5:15 மணியே ஆகியிருந்தது, அப்போதும் வாக்கெடுப்பு நடந்துகொண்டே இருந்தது. இந்த முடிவுகளைக் கேட்ட பின்னர் வாக்காளர்கள் வாக்களிப்பைப் புறக்கணித்ததாக சந்தேகிக்கப்பட்டது.[5] அப்போதிலிருந்து தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒரு மாநிலம் முழுவதும் வாக்கெடுப்பு முடியும் வரை அதிபர் தேர்தலில் வென்றவரைப் பற்றிய முன்கணிப்பைக் கூறுவதில்லை என தாமாக முன்வந்து ஒரு முடிவு செய்தன.[6] 2000 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஊடக நிறுவனங்கள் புளோரிடா மாகாணத்திற்கான வாக்களிப்புக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை ஃப்ளொரிடா பேன்ஹேண்டில் வாக்கெடுப்பு முடிவதற்கு முன்னதாகவே வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.[7] இங்கிலாந்து, இத்தாலி, பிரான்சு, ஜெர்மனி, இந்தியா, சிங்கப்பூர் போன்ற சில நாடுகளில் நாடு முழுவதுமாக தேர்தல் நடந்து முடிவதற்கு முன்னரே வாக்கெடுப்புக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பின் முடிவுகளை வெளியிடுவது குற்றமென அறிவித்துள்ளன.[8][9] சில நிகழ்வுகளில் வாக்களிப்புக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் ஏற்பட்ட சிக்கல்கள், வாக்காளர் குழுக்கள் அதிக துல்லியத்தன்மைக்காக தரவுகளைச் சேகரிப்பதை ஊக்கப்படுத்தியுள்ளன. இது வெற்றிகரமானது என்பது 2005 இங்கிலாந்து பொதுத் தேர்தலில் நிரூபணமானது. அத்தேர்தலில் பிபிசி மற்றும் ஐடிவி (ITV) இரண்டு நிறுவனங்களும் தமது தரவுகளை ஒருங்கிணைத்து வெளியிட்ட வாக்களிப்புக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் பாட்டாளி (லேபர்) கட்சிக்கு 66 இடங்களுடன் கூடிய பெரும்பான்மை கிடைக்கும் எனக் கூறிய கணிப்பு மிகத் துல்லியமான உண்மையாக அமைந்தது. இந்த முறையானது 2007 ஆஸ்திரேலிய ஃபெடரல் தேர்தலிலும் வெற்றிகரமானதாக இருந்தது. அத்தேர்தலில் ஸ்கை நியூஸ், சேனல் 7 மற்றும் ஆஸ்போல் ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து பாட்டாளிக் கட்சியானது ஆளும் கூட்டணிக்கு எதிராக 53 சதவீத இடங்களுடன் வெற்றியைப் பெறும் எனக் கூறின. மேற்கோள்கள்
குறிப்புதவிகள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia