விக்கிப்பீடியா பேச்சு:ஒலிபெயர்ப்புக் கையேடுபிறமொழிச் சொற்களைத் தமிழில் ஒலிபெயர்ப்பு செய்தல்பிறமொழிச் சொற்களை தமிழில் ஒலிபெயர்ப்பு செய்யும் பொழுது தமிழ் முறைமையைப் பின்பற்றத் தவறினால், தமிழ் ஒலிப்புமுறை குட்டிசுவராகிவிடும். தமிழில் பிற இந்திய மொழிகளில் இருப்பது போல் க,ச,ட,த,ப ஆகிய எழுத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் 4 வகையான வேறுபாடுகளைக் காட்ட நான்கு தனித்தனி எழுத்துக்கள் இருப்பது போல் இல்லை. தமிழின் சிறப்பு இது. தமிழில் ஒவ்வொன்றுக்கும் இரு வேறுபாடுகள் தான் உண்டு (சகரத்திற்கு மட்டும் 3 வேறுபாடுகள்). ஆனால் அவற்றுக்குத் தனி எழுத்துகள் கிடையாது. ஆனால் துல்லியமாய் ஒலிக்க மிகச்சீரான ஒலிப்பு முறை உண்டு. இதனை மீறினால் தமிழ் ஒலிப்பொழுக்கம் சிதறி சீர்மை இழக்கும். உயிர் ஏறிய வல்லினம் இரண்டே இரண்டு இடத்தில்தான் வல்லினமாக ஒலிக்கும், பிற இடங்களில் மெல்லினமாகத்தான் ஒலிக்கும். வல்லினமாக ஒலிக்கும் இரண்டு இடங்களாவன: (1) சொல்லின் முதல் எழுத்தாக. (2) புள்ளி வைத்த வல்லின எழுத்துக்குப் பின் (அடுத்ததாக) வந்தால். பிறமொழிச் சொற்களை தமிழ் இயல்புக்கு ஏற்ப, திரித்து எழுதுவதே நல்லது. இதுவே சற்றேறக்குறையா எல்லா மொழிகளும் பின்பற்றும் முறை. சீன, சப்பானிய (நிப்பானிய), செருமன் மொழிகளைப் பாருங்கள். ஏன் ஆங்கிலத்தையே பாருங்கள். பழனி என்னும் ஊரை Palani என்றுதானே எழுதுகிறார்கள். Srinivasan என்னும் பெயரை ஸ்ரீnivaasan என்றா எழுதுகிறார்கள்? பல்லாயிரக்கணக்கான சீன மொழிச் சொற்களை ஆங்கிலேயர்கள் எப்படி எழுதுகிறார்கள்? ஏன் பிரான்சிய மொழியில் Paris என்பதில் வரும் அடித்தொண்டை ரகர ஒலிப்பையா காட்ட முயல்கிறார்கள்? இல்லையே. அருள் கூர்ந்து எழுத்துப் பெயர்ப்பு செய்யாதீர்கள். ஒலிப்பெயர்ப்பு செய்யுங்கள். ஒலிப்புத்துல்லியம் ஓரளவிற்குத்தான் காட்ட வேண்டும். ஆனால் தமிழ் முறையைப் பின்பற்றிச் செய்யுங்கள். சில திரிபுகள், தமிழ் இயல்புக்கு ஏற்றவாறு செய்தலே சரியான முறை. தமிழைக் கிள்ளுக்கீரையாக எண்ணி பலர் செய்யும் முறைகேடுகளை தமிழ் விக்கியில் கைக்கொள்ளலாகாது. இவை என் கருத்துக்கள். --செல்வா 21:47, 18 நவம்பர் 2008 (UTC)
நற்கீரன், கட்டாயம் கையேடு செய்தல் வேண்டும். அண்மையில் பேச்சு:சுடாலின்கிரட் சண்டை பக்கத்தில் ஒலிபெயர்ப்பு பற்றிய கருத்தைப் பதிவு செய்தேன். செருமன் என்று எழுதினால் cheruman என்று சொல்ல வேண்டும் அப்பொழுது நிகழும் திரிபு மிகச் சிறியதே. மேலும் அந்த செருமன் மொழியாளரே J என்னும் ஒலிப்பைக் காட்ட முடியாது, பின் ஏன் தமிழர்களில் சிலர் தயங்குகிறார்கள் என்று விளங்கவில்லை. செருமானியர், தங்கள் மொழியை 'டாய்ட்சு என்று அழைப்பதால் நான் இயன்ற இடங்களில் எல்லாம் 'டாய்ட்சு (daaytchu) (அல்லது டாய்ட்சு = (ஒலிப்பு) taaytchu) என்றே எழுதுகிறேன். செருமன் நாட்டை பிரான்சியர் L’Allemagne என்கின்றனர், நாம் செருமன் என்றால் என்ன குறைந்து விடும்? 'டாய்ட்சு மொழியை (செருமன் மொழியை) பிரான்சியர் La langue allemande அல்லது Allemand என்று அழைக்கின்றனர். எனவே தமிழில் செருமன் என்றோ, டாய்ட்சு என்றோ, இடாய்ட்சு என்றோ, 'டாய்ட்சு என்றோ அழைக்கலாம். அதே போல செருமானியர் என்றோ இடாய்ட்சியர் என்றோ டாய்ட்சு மக்கள் என்றோ கட்டாயம் எழுதலாம். செருமானியரை தியூத்தானியர் (Teutonic) என்றும் அழைக்கலாம். French மொழி அவர்கள் ஒலிப்பில் 'விரான்சே (ஃவிரான்சே) என்பது போல் ஒலிக்கின்றது. எனவே பிரான்சே என்று தமிழில் எழுதலாம். பிரான்சு, பிரான்சிய மொழி (பிரான்சே) என்பன தமிழ் எழுத்துக்களைக் கொண்டு அழகாக போதிய அளவு துல்லியத்துடன் எழுத முடியும். பிரெஞ்சு (Pirenju, Firenju) என்பது ஆங்கிலத்தைத் தழுவி தவறுதலாக எழுதுவது. பிரெஞ்சு என்று எழுதிவிட்டு பிரெஞ்ச்சு என்று படித்தால் தமிழ் ஒலிப்புமுறை கெடுகின்றது. ஆனால் Pirenju என்றே ஒலித்தால் தமிழ் ஒலிப்பு முறையாகிலும் கெடாமல் இருக்கும். சிறுகச் சிறுக கெட விடுவது பெருங்கேடாய் முடியும். கருத்தில் கொள்ள வேண்டுகிறேன். பிரான்சு, பிரான்சிய மொழி, பிரான்சு மக்கள் (பிரான்சியர்) என்று எழுதுவது நல்லது. பாரிசு என்று எழுதவதே சரி. பிரான்சியர் தங்கள் மொழியில் பாரிசு நகரத்தை பாஃறீ [paʁi] என்பது போல ஒலிக்கிறார்கள். கிரேக்க மொழியர் Παρίσι (பாரிசி) என்று ஒலிக்கிறான். நாம் பாரிசு என்று எழுதினால் அத்து மீறி குறை கூறுகிறார்கள். அவர்களைப் பொருட்படுத்த வேண்டுமா, நேர்மையை, தமிழ் முறையை பொருட்படுத்த வேண்டுமா என்று எண்ணிப்பார்க்க வேண்டும். பாரிசு என்று எழுதுவதைக் எதிர்த்து கிண்டல் செய்பவர்கள் நேர்மையாக உரையாடவில்லை. --செல்வா 00:45, 19 நவம்பர் 2008 (UTC)
துவங்குகிறேன், சுந்தர். கருத்துக்கு நன்றி. மேலும் சில எடுத்துக்காட்டுகள் தர விழைகிறேன் (சுடாலின்கிராடு சண்டைஎன்னும் கட்டுரைப் பேச்சுப் பக்கத்தில் நிகழ்ந்த உரையாடலை ஒட்டி): சுவாமினாதன் என்று எழுதுவது தமிழ் முறை. ஸ்வாமிநாதன் என்று தமிழ் நலத்தைகெடுத்து, தமிழ் முறைமையை மீறி எழுதத் தேவை இல்லை. சுவர்னம், சொர்ணம் (ஸ்வர்னம்) , சுவர்கம் (ஸ்வர்கம்), சொர்கம், சுவாகா (ஸ்வாகா), சுவேத்தா, சுவேதாரணியன் (ஸ்வே(த்)தா, ஸ்வே(த்)தாரண்யன்), சுவாதி (ஸ்வாதி), சுயம் (ஸ்வயம்), தாபி, தாபித்தல் (உயிர்ப்புடைய தமிழில் வினை!!), தாபிதம் (ஸ்தாபி, ஸ்தாபித்தல், ஸ்தாபிதம்), தலவரலாறு (ஸ்தல வரலாறு)...என்று எத்தனையோ இடங்களில் முதலில் வரும் காற்றொலி சகர ஒற்றைத் (ஸ்) தமிழ்ப்படுத்தித்தானே ஆண்டு வந்திருக்கின்றோம் (சில இடங்களில் தமிழ்ச்சொல்லை வடமொழியில் ஸ் என்னும் எழுத்தைச் சேர்த்தும் அம்மொழியாளர்கள் காட்டுவதுண்டு). ஆழ்வார்கள் கூட சிரீதரா என்றுதானே எழுதுகிறார்கள். தமிழ்நலத்தின் மீது அக்கறை இல்லாதவர்கள், தமிழ் முறையை மீறி வலிந்து எழுதுவோர்களுக்காக தவறான பாதையை நாம் தேர்ந்து கொள்ளுதல் கூடாது. அனுமன், அனுமான் என்று எழுதுவதும், அரி, அரன் என்று எழுதுவதும் தமிழ் வழக்கம் ஹனுமான், ஹநுமான், ஹரி, ஹரன் என்று எழுதுவது வலிந்து தமிழ் முறையை மீறுவது, தமிழ் முறையைப் போற்றாமை ஆகும். பிரபாகரன் என்று எழுதுவது தமிழ் முறை, ப்ரபாஹரன் என்று எழுதுவது வலிந்து தமிழ் முறையைக் கெடுப்பது (ஒலிப்புத்துல்லியம் என்னும் போர்வையில்). மொழிக்கு மொழி மாறும் பொழுது சில திரிபுகள் ஏற்படுவது இயல்பே. மேலும் ஒவ்வொரு மொழிக்கும் அதற்கான ஓர் ஒலிநயம் இருக்கும். அந்த உள்ளிணக்க, உள்ளிசைவை, உள்ளினிமையை வலிந்து கெடுத்தல் கூடாது. மொழிக்கு மொழி ஏற்படும் ஒலித்திபைப் பெரிது படுத்தி, இழிவுபடுத்திப் பேசி தம் மொழியையே கெடுக்கிறார்கள் பலர். இது ஏற்புடையதன்று. --செல்வா 14:09, 19 நவம்பர் 2008 (UTC) பிற மொழிச் சொற்களை தமிழ் மரபுக்கு ஏற்ப மாற்றி எழுதவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இதை மொழியில் ஒரு பகுதியில் மட்டும் இறுக்கமாகக் கடைப்பிடித்துக்கொண்டு இன்னொரு பகுதியில் "அம்போ" என விட்டுவிடக்கூடாது. அறிவியல் சொற்களில் மட்டும் ஏன் விதிவிலக்கு. "ஹைட்ரஜன்", "ஆக்சிஜன்", "எலெக்ட்ரான்" என்று எல்லாக் கிரந்த எழுத்துக்களுக்கும், தமிழ் வழக்குக்கு மாறான பயன்பாடுகளுக்கும் ஏன் முழுமையான சுதந்திரம் கொடுக்கவேண்டும். இதே கொள்கையை அடிப்படையாகக் கொண்டு சமயம், இசை போன்ற துறைகளிலும் வட மொழியிலிருந்து வந்த சொற்களை அப்படியே எழுதவேண்டும் என்கிறார்களே? அறிவியல் கற்கும் மாணவனை "எலெக்ட்ரான்" என்றுதான் எழுதவேண்டும் என்று சொல்லிவிட்டு, "ஆம்ஸ்ட்ரடாம்" என்று என்று எழுதாதே என்று சொல்லலாமா? இன்று அறிவியலைச் சாதாரண மக்கள் மட்டம் வரையும் கொன்று செல்வதற்கான தேவைகளும் வழிமுறைகளும் உள்ளன. இந்நிலையில் இந்த இரண்டு வகைத் தமிழ் வழக்குகளுக்கு இடையிலான எல்லைக்கோட்டை எங்கே வரைவது? மயூரநாதன் 17:23, 19 நவம்பர் 2008 (UTC)
//அறிவியல் சொற்களில் கிரந்தத்தை முற்றிலுமாக தவிர்க்கலாம்.// சுந்தரின் இக்கருத்தையே சற்று விரிவாக நோக்கலாம். ஏற்கனவே கிரந்தத்தில் எழுதப்பட்ட சொற்களில் கிரந்தம் தவிர்த்து எழுதுவதில் உள்ள தயக்கங்களை நாம் அறிவோம். ஆனால், புத்தறிவியில் போன்ற துறைகளில் இதுவரை தமிழிலேயே எழுதப்படாத பெயர்களை நாம் முதன் முதலாக எழுதி அறிமுகப்படுத்தும்போதே கிரந்தம் தவிர்த்து அறிமுகப்படுத்தலாம் என்பதை குறைந்தபட்ச வழிகாட்டலாக கொள்ளலாம். --ரவி 19:46, 19 நவம்பர் 2008 (UTC)
தொடர்புடைய கட்டுரைகளும் ஏனைய பக்கங்களும்தமிழ் ஒலிப்புமுறை தொடர்பில் கட்டுரைகளோ கையேடுகளோ எழுதுமிடத்தில் பின்வரும் பட்டியலில் சேர்க்க வேண்டுகிறேன். இவற்றின் துணைகொண்டு இக்கையேட்டை வடிக்கலாம். முதலாவதாக தமிழில் மெய்யொலிக் கூட்டம் என்ற கட்டுரையை இடுகிறேன். -- சுந்தர் \பேச்சு 16:26, 2 டிசம்பர் 2008 (UTC) |
Portal di Ensiklopedia Dunia