தமது இன்னுயிரை ஈந்து தமிழீழ விடுதலைப் போருக்கு வீறு சேர்த்த மாவீரர்கள், அவர்களின் தலைமுறையிலேயே போற்றப்பட வேண்டும். அவர்களின் வீரங்களும் ஈகங்களும், அருஞ்செயல்களும் மக்களிடம் எடுத்துச் சொல்லப்பட வேண்டும். அந்த மாவீரர்களின் பெற்றோர்களும், குடும்பத்தினர்களும் அவலப்படக் கூடாது என்ற நோக்கின் அடிப்படையில், எமது தலைவரின் எண்ணத்திலிருந்து உருவானதுதான் மாவீரர் நாள்.
தமிழீழ விடுதலைப் போருக்கு இன்னுயிரை ஈந்து உரமாகிப்போன மாவீரர்களின் எண்ணிக்கை, பத்து நூறு என்ற நிலை மாறி ஆயிரக்கணக்காக உயர்ந்துவிட்ட நிலையில், ஒவ்வொரு மாவீரரையும் தனித்தனியாக ஆண்டுதோறும், அவரவர் நிறைவு நாட்களில் நினைவுகூர இயலாது என்ற நிலையில் அனைவரையும் ஒரே நாளில் நினைவுகூரக்கூடியதாக தமிழீழ விடுதலைப் போரில் முதல் களச் சாவடைந்த எமது இயக்க வீரர் லெப்ரினன்ட் சங்கரின் (சத்தியநாதன்) நினைவு நாளான நவம்பர் 27 ஆம் நாளை பொதுவான நாளாகத் தேர்ந்தெடுத்த எமது தலைவர் 1989 ஆம் ஆண்டில் தமிழீழ மாவீரர் நாளை அறிவித்தார்.
இலங்கையில்
யாழ்ப்பாணம்
யாழ் பல்கலைக்கழகத்தில் நவம்பர் 25 அன்று (இரண்டு நாட்கள் முன்னதாகவே) அஞ்சலி செலுத்தப்பட்டது. கைலாசபதி அரங்கில் மாணவர்களும், பல்கலைக்கழகப் பணியாளர்களும் மெழுகுதிரிகளை ஏற்றி நினைவுகூர்ந்தனர்.[1]
நல்லூர் பின் வீதியில் அமைக்கப்பட்ட திலீபன் நினைவுத் தூபியில் பொதுமக்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். வடமாகாணசபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தலைமைதாங்கிய இந்த நிகழ்வில், வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.[2]
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இலங்கை இராணுவத்தின் முகாம் அமைந்துள்ளது. எனவே மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக நினைவுச் சுடரேற்றியும், மலர்களைத் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் முற்பகல் 11.30 மணியளவில் இந்த நிகழ்வு நடைபெற்றது.[3]
சாட்டி எனுமிடத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுமக்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தலைமையில், மாலை 3 மணியளவில், இந்த நிகழ்வு நடைபெற்றது.[4]
நாட்டின் வடக்கு-கிழக்குப் பகுதியில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில், அவற்றின் தனிப்பட்ட நினைவுகூரல் அறிவிப்புகள் காணப்பட்டன.[13]
ஐக்கிய இராச்சியத்தில்
இலண்டன் நகரத்தில் கடையமைத்து வணிகம் செய்யும் தமிழர்கள் தமது கடை வாயிலில் தமிழீழ தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, மாவீரர் நாளை நினைவுகூர்ந்தனர்.[14]
இலண்டன் குயின் எலிசபெத் வளாகத்தில் சுமார் 10,000 தமிழர்கள் மாவீரர் நாள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.[15]
டென்மார்க்கில்
ஆரசு பல்கலைக்கழகத்தில், தமிழ் மாணவர்கள் நவம்பர் 25 அன்று (இரண்டு நாட்கள் முன்னதாக) அஞ்சலி செலுத்தினர். செயற்கையாக வடிவமைக்கப்பட்ட நினைவுக் கல்லின் முன் மெழுகுதிரிகளை ஏற்றி வைத்து வணங்கினர்.[16]
மாவீரர் நாள் நிகழ்வு ஒன்றில் தமிழர்கள் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து எழுச்சி உரைகள், கவிதைகள், எழுச்சி நடனங்கள், நாடகம் ஆகியன இடம்பெற்றன.[17]
ஜெர்மனியில்
நிகழ்வு ஒன்றில் தமிழர்கள் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினர்.[18]
பின்லாந்தில்
தலைநகர் ஹெல்சின்கிலில் நடந்த மாவீரர் நாள் நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றுதல், தமிழீழ தேசிய கொடியினை ஏற்றுதல், மாவீரர் நாள் அறிக்கையை ஒலிக்கவிடுதல், மாவீரர்களுக்கும் போரினால் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கும் அக வணக்கம் செலுத்துதல், செயற்கையாக அமைக்கப்பட்ட நினைவுக் கற்களுக்கு மலர் வணக்கம் செலுத்துதல் ஆகியன இடம்பெற்றன.[19]