2017 நீட் தேர்வுக்கு எதிரான தமிழகப் போராட்டங்கள் என்பது இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களைக் குறிக்கும். தமிழகத்தில் நடந்த போராட்டங்களுக்கு ஆதரவாக பாண்டிச்சேரி உள்ளிட்ட இந்தியாவின் பிற பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன.
10 செப்டம்பர் அன்று 9 ஆவது நாளாக போராட்டங்கள் தொடர்ந்தன.
பின்னணி
தமிழ்நாடு அரசுப் பாடத் திட்டத்தின் தேர்வில் 1176 மதிப்பெண்கள் எடுத்து, நீட் தேர்வில் மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றதால் அனிதா எனும் மாணவி மருத்துவப் படிப்பிற்கு தேர்வாகவில்லை. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களும், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் போராட்டங்கள் நடத்தினர்.[1]
தமிழ்நாட்டில் போராட்டங்கள்
சென்னை
- 05 செப்டம்பர் 2017 - லயோலா கல்லூரி, வேளச்சேரி குருநானக் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவக் கல்லூரி (ஓமந்தூரார்), சேலையூரில் உள்ள பொறியியல் கல்லூரி, கவுரிவாக்கம் கலை-அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளின் மாணவர்கள் பலவித போராட்டங்களில் ஈடுபட்டனர். மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளும் நடந்தன. நகரின் 36 இடங்களில் போராட்டங்கள் நடந்ததாக காவற்துறை தெரிவித்தது. 7 இடங்களில் மொத்தமாக 183 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.[2]
- 06 செப்டம்பர் 2017 - மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மாணவ அமைப்பினைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை காவற்துறையினர் அங்கிருந்து அகற்றினர்.[3]
- 09 செப்டம்பர் 2017 - நுங்கம்பாக்கத்திலுள்ள சென்னை பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு 4 மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.[4]
கோவை
- 05 செப்டம்பர் 2017 - நீதிமன்ற வளாகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வழக்கறிஞர்கள் ஊர்வலம் சென்றனர். சுமார் 2,000 வழக்கறிஞர்கள் தமது பணியை புறக்கணித்தனர். அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். அரசு கலைக் கல்லூரியில் சுமார் 60 மாணவர்கள் வளாகத்தினுள்ளேயே கூக்குரல் எழுப்பி போராட்டம் நடத்தினர். சுமார் 250 மாணவர்கள், பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் போராட்டம் நடத்தினர்.[5]
திருநெல்வேலி
- 05 செப்டம்பர் 2017 - பேட்டை பகுதியிலுள்ள எம்.டி.ட்டி இந்து கல்லூரியின் மாணவர்கள் தமது வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். பாளையங்கோட்டை பகுதியிலுள்ள சேவியர் கல்லூரியின் மாணவர்கள் போராட்டம் நடத்திவிட்டு, வகுப்புகளுக்குச் செல்லாமல் வீடு திரும்பினர். ஜான் கல்லூரி நிர்வாகம் தனது கல்லூரிக்கு விடுமுறை அறிவித்தது.[6]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்