2021 மியான்மர் இராணுவப் புரட்சி (2021 Myanmar coup d'état) 2020-இல் மியான்மர் நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற 2020 பொதுத் தேர்தலில்ஆங் சான் சூச்சி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சி மிகப்பெரும்பான்மையான (83%) தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் முறைகேடுகள் செய்து ஆங் சான் சூச்சி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாய முன்னணி கட்சி வெற்றி பெற்றது செல்லாது என மியான்மர் இராணுவம் குற்றம் சாட்டியதுடன், 1 பிப்ரவரி 2021 அன்று இராணுவப் புரட்சி மூலம்[4][5][6] , தேர்தலில் வெற்றி பெற்றவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்க முடியாத வகையில், நாட்டில் நெருக்கடி நிலையை நடைமுறைப்படுத்தியும், நாடாளுமன்றத்தை முடக்கியும், ஆங் சான் சூச்சியை வீட்டுக் காவலில் வைத்த்னர்.[7][8]மேலும் நாடாளுமன்றத்திற்கு புதிதாக தேர்தல் நடத்தப்படும் என இராணுவம் அறிவித்துள்ளது.[1][2] இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் பிப்ரவரி 2021 முடிய 50 பேரும், மார்ச் 1 முதல் 3ஆம் தேதி வரை 38 பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.[9]
வரலாறு
2020 மியான்மர் பொதுத் தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்ற பகுதிகள் (சிவப்பு நிறத்தில்) - இராணுவத்தினர் கட்சி வெற்றி பகுதிகள் (பச்சை நிறத்தில்)
ஐக்கிய இராச்சியத்தின் காலனி நாடாக இருந்த பர்மா என்ற மியான்மர் 1948-இல் விடுதலைப் பெற்றது. இராணுவத்தின் தலைமையில், பிரதம அமைச்சர் யு நூ 4 சனவரி 1948 முதல் 12 சனவரி 1956 முடிய பர்மாவை ஆண்டார். [10] இராணுவத்தின் தலைமையில் 1960 பர்மா பொதுத் தேர்தல் நடைபெற்றது. இராணுவத்தின் தலைமையில் நாடாளுமன்றம் செயல்பட்டது. [11] ஜெனரல் நி வின்[12] தலைமையில் 1962-இல் இராணுவப் புரட்சி ஏற்பட்டது. நி வின் பர்மாவில் 26 ஆண்டுகள் இராணுவ ஆட்சி நடத்தினார்.[13]
1988இல் ஜெனரல் நி வின்னுக்கு எதிராக பர்மாவில் கிளர்ச்சிகள் நடைபெற்றது. அதனால் ஜெனரல் நி வின் பதவி நீக்கப்பட்டார்.[14]செப்டம்பர் 1988-இல் பர்மிய இராணுவத்தின் மூத்த படைத்தலைவர்கள் அமைதி மற்றும் வளர்ச்சிக் குழு ஒன்றை நிறுவினர். பின்னர் இக்குழுவின் பர்மாவின் ஆட்சியைக் கைப்பற்றி ஆண்டது.[14]இக்காலக்கட்டத்தில் ஆங் சான் சூகி நாடாளுமன்ற ஜனநாயகத்திற்காக போராடிக் கொண்டிருந்தார். 1990 மியான்மர் பொதுத் தேர்தலிலின் போது ஆங் சான் சூகி வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இருப்பினும் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்றாலும், ஆங் சான் சூகி மியான்மர் நாட்டில் பிறக்காதவர் என்ற காரணத்த்தினால், மியான்மர் அரசின் தலைமை ஆலோசகராக மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டார்.[15][16][17]எனவே இராணுவம் மேலும் 22 ஆண்டுகள் 2011 ஆண்டு முடிய மியான்மரில் ஆட்சி செலுத்தியது.[18] 2008-இல் மியான்மர் நாட்டிற்கான அரசியல் அமைப்பு வரைவுச் சட்டம் உருவாக்கப்பட்டது. 2011 முதல் 2015 முடிய மியான்மர் நாட்டில் அரசியல் மாற்றங்கள் உருவாகத் தொடங்கியது. மியான்மர் நாடாளுமன்றத்திற்கு 2015-இல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது. இருப்பினும் இராணுவத்தினர் ஆட்சியில் முக்கியமான துறைகள தங்கள் வசம் எடுத்துக் கொண்டனர்.[19]ஆங் சான் சூகி மியான்மர் அரசின் தலைமை ஆலோசகராக மட்டும் பதவியில் இருந்தார்.
8 நவம்பர் 2020-இல் நடைபெற்ற 2020 மியான்மர் பொதுத் தேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி, நாடாளுமன்றத்திற்கான மொத்தமுள்ள 476 தொகுதிகளில் 396 தொகுதிகளை (83% கைப்பற்றியது. மியான்மர் இராணுவத்தின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கான கட்சி வெறும் 33 தொகுதிகளை மட்டும் வென்றது.
எனவே ஆங் சான் சூகியின் தேர்தல் வெற்றி மோசடியானது என இராணுவத்தினரினர் குற்றம் சாட்டி, மியான்மர் நாட்டில் 1 பிப்ரவரி 2021 அன்று இராணுவப் புரட்சி மூலம் நாடாளுமன்றத்தை முடக்கியும், நெருக்கடி நிலையை அறிவித்தது. இதனால் பொதுமக்கள் இராணுவத்திற்கு எதிராக அணி திரண்டு நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 3 மார்ச் 2021 வரை இராணுவத்தால் போராட்டக்காரர்கள் 88 பேர் கொல்லப்பட்டனர். மேற்குலக நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா மியான்மர் இராணுவத்திற்கு எதிராக தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.[20]