2022 உங்கா தொங்கா எரிமலை வெடிப்பும் ஆழிப்பேரலையும் (2022 Hunga Tonga eruption and tsunami) 2022 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 ஆம் தேதியன்று பசிபிக் பெருங்கடலில் நிகழ்ந்தன. தொங்கா நாட்டின் எரிமலைத் தீவான உங்கா தொங்காவில் ஒரு பெரிய வெடிப்பு 15 சனவரி 2022 அன்று ஏற்பட்டது. இந்த வெடிப்பு தொங்கா, பிஜி மற்றும் அமெரிக்க சமோவாவில் சுனாமிகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பிஜி, சமோவா, வனுவாட்டு, நியூசிலாந்து, ஆத்திரேலியா, சப்பான், அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, சிலி மற்றும் ஈக்வடார் ஆகிய நாடுகளில் ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.[1] நியூசிலாந்து, அமெரிக்கா, சிலி மற்றும் பெருவில் ஆழிப்பேரலைகள் சேதப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டது.[2] பெருவில் 2 மீட்டர் அலை கடற்கரையைத் தாக்கியதில் இருவர் நீரில் மூழ்கினர். கலிபோர்னியாவில் இரண்டு மீனவர்கள் இலேசான காயமடைந்தனர்.
பின்னணி
2014 ஆம் ஆண்டு முதல் ஒப்பீட்டளவில் செயலற்றநிலையில் இருந்த பின்னர்[3] உங்கா தொங்கா எரிமலை 20 திசம்பர் 2021 அன்று வெடித்தது. புவியின் அடுக்கு மண்டலத்திற்குள் துகள்களை அனுப்பியது. எரிமலையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் (43 மைல்) தொலைவில் உள்ள தொங்காவின் தலைநகரான நுக்கு'அலோபாவில் மேல் நோக்கி எழுந்த சாம்பல் புகைப்படலத்தைக் காணமுடிந்தது.[4]நியூசிலாந்து நாட்டின் வெலிங்டனில் உள்ள எரிமலை சாம்பல் ஆலோசனை மையம் விமான நிறுவனங்களுக்கு ஒரு ஆலோசனை அறிவிப்பை வெளியிட்டது.[5] 170 கிலோமீட்டர் (110 மைல்) தொலைவுக்கு எரிமலைவெடிப்பு சப்தங்கள் கேட்டன.[6] இந்த ஆரம்ப வெடிப்பு டிசம்பர் 21 அன்று 02:00 மணிக்கு முடிவடைந்தது.[4] எரிமலையின் செயல்பாடு தொடர்ந்தது, டிசம்பர் 25 அன்று எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களின் படி தீவின் அளவு அதிகரித்திருந்தது.[7] தீவில் எரிமலை நடவடிக்கைகள் குறைந்ததால், அது 11 சனவரி 2022 அன்று செயலற்ற எரிமலையாக அறிவிக்கப்பட்டது.[8]
வெடிப்புகள்
தோராயமாக 1 மணி 40 நிமிடத்திற்கு விண்வெளியில் இருந்து பார்த்த வெடிப்பு
2022 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதியன்று ஒரு பெரிய வெடிப்பு தொடங்கியது. வளிமண்டலத்தில் 20 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவுக்கு எரிமலையானது சாம்பல் மேகங்களை அனுப்பியது.[9] தொங்கா அரசாங்கம் குடியிருப்பாளர்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தது.[10] எரிமலைக்கு அருகில் உள்ள தொங்கா நாட்டுப் புவியியலாளர்கள் வெடிப்புகளையும் 5 கிலோமீட்டர் அளவுக்கு அகலமான சாம்பல் மேகத்தையும் கவனித்தனர்.[11]
அடுத்த நாள், குறிப்பிடத்தக்க அளவு பெரிய வெடிப்பு சுமார் 17:00 மணிக்கு ஏற்பட்டது. எரிமலை சாம்பல் ஆலோசனை மையம் விமான நிறுவனங்களுக்கு மீண்டும் ஒரு ஆலோசனை அறிவிப்பை வெளியிட்டது.[12] எரிமலை வெடிப்பின் சாம்பல் தொங்காவின் பிரதான தீவில் நிலச்சரிவை ஏற்படுத்தியது. மேலும் இம்மேகம் சூரியனை மறைத்தது. நுக்கு'அலோபாவில் 40 மைல் (65 கிமீ) தொலைவில் உரத்த வெடிச்சத்தங்கள் கேட்டன. வானத்திலிருந்து சிறிய கற்கள் மற்றும் சாம்பல் மழை பொழிந்தது.[13] டோங்காவில் வசிக்கும் பலர் உயரமான பகுதிகளுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது நெரிசலில் சிக்கிக்கொண்டனர்.[14] வெடிச்சத்தம் தோராயமாக 520 மைல்கள் (840 கிமீ) தொலைவில் உள்ள சமோவா வரை கேட்டது.[15][16] பிஜியில் வசிப்பவர்கள் வெடிச்சப்தத்தை இடியின் ஒலிகளாக விவரித்தனர்.நியூசிலாந்தின் வடக்குத் தீவிலும், ஆத்திரேலியாவின் கிழக்குக் கடற்கரை வரையிலும் பெருஞ் சத்தம் கேட்டது. விண்வெளியில் இருந்தும் மிகவும் பரந்த வெடிப்புத் தோற்றமும் அதிர்ச்சி அலைகளும் செயற்கைக்கோள்கள் மூலம் அறியப்பட்டன.[17] நியூசிலாந்து முழுவதும் உள்ள வானிலை நிலையங்களால் அழுத்த அலையானது அதிகபட்சமாக 7 எக்டா பாசுகல்கள் அளவு வீச்சாக அளவிடப்பட்டது.[18] ஆத்திரேலியாவில் உள்ள வானிலை நிலையங்களாலும் அழுத்த அலை பதிவு செய்யப்பட்டது.[19][20][21] அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும் 5.8 என்ற மேற்பரப்பு-அலை அளவுகளில் வெடிப்பை பதிவு செய்தது.[22] சுவிட்சர்லாந்தில் 2.5 எக்டோ பாசுகல் அழுத்த ஏற்ற இறக்கம் அளவிடப்பட்டது.[23]
எரிமலை வெடிப்பு நேரத்தில் தீவிர மின்னல் செயல்பாடும் பதிவு செய்யப்பட்டது. வைசாலா தேசிய மின்னல் கண்டறிதல் வலையமைப்பு கதிரியக்க அலைகள் வடிவில் மின்னலைக் கண்டறிந்தது. எரிமலை வெடிப்பதற்கு முந்தைய இரண்டு வாரங்களில் பல நூறு முதல் ஆயிரம் மின்னல்கள் கணினியால் பதிவு செய்யப்பட்டன. சனவரி 14 முதல் 15 வரை பல்லாயிரக்கணக்கான மின்னல்கள் ஏற்பட்டன. சனவரி 15 அன்று 05:00 மற்றும் 06:00 மணிக்கு இடையில் 200,000 மின்னல்கள் பதிவு செய்யப்பட்டன.[24]
பூர்வாங்க அவதானிப்புகள், அடுக்கு மண்டலத்தில் இவ்வெடிப்பு அதிக அளவு எரிமலைப் பொருட்களை வெளியேற்றியது என்பதைக் காட்டுகிறது. மேலும் இந்த வெடிப்பு ஒரு தற்காலிக காலநிலை விளைவை ஏற்படுத்தும் திறனையும் கொண்டது எனவும் கூறப்படுகிறது.[25] ஆக்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி இந்நிகழ்வை 1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் நிகழ்வாக விவரிக்கிறார்.[26][27]
தகவல் தொடர்பு சிக்கல்கள் காரணமாக தொங்காவில் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் பற்றிய முழுமையான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.[33] நியூசிலாந்து நாட்டின் பிரதம மந்திரி இயசிந்தா ஆர்டெர்ன், தொங்காவின் கடலுக்கடியில் சேவை வழங்கிய கம்பி வடங்கள் மின்வெட்டு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தகவல்தொடர்புகளை மீட்டெடுக்க அதிகாரிகள் அவசரமாக முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்.[34]
தொங்காவின் கடலோரப் பகுதிகளை ஆழிப்பேரலைகள் தாக்குவதைக் காட்டும் கானொளிக் காட்சிகள் இசுகை செய்தி தொலைக்காட்சி மூலம் தெரிவிக்கப்பட்டது.[35] தலைநகருக்கு அப்பால் உள்ள சிறிய தீவு அட்டாட்டா நீரில் மூழ்கியுள்ளதாகவும், மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. சாம்பலின் விளைவாக தொங்காவில் வசிப்பவர்கள் சுவாசிக்க சிரமப்படுவதாக சில தகவல்கள் பெறப்பட்டுள்ளன.[36] தொங்கன் அரசாங்கம் வெடிப்பு மற்றும் ஆழிப்பேரலையால் நிகழ்ந்த எந்த உயிரிழப்புகளையும் உறுதிப்படுத்தவில்லை.[37]
பெரு நாட்டின் லம்பேக்கியு நகரத்தின் நைலாம்ப் கடற்கரையில் 2 மீ (6 அடி 7 அங்குலம்) உயர ஆழிப்பேரலை இரண்டு பெண்களைக் கொன்றது. ஓட்டுநருடன் இரண்டு பெண்களும் ஒரு லாரியில் இருந்தனர். ஓட்டுநரான பெண்களில் ஒருவரின் கணவர் அலை தாக்கியதில் அங்கிருந்து தப்பியோடினார்.[30]
கலிபோர்னியாவில் உள்ள சான் கிரிகோரியோவில் நான்கு மீனவர்கள் ஆழிப்பேரலையால் கடலில் அடித்துச் செல்லப்பட்டனர். இருவர் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்றனர். மேலும் இருவர் மீட்கப்பட்டு காயமின்றி மீட்கப்பட்டனர்.[38]சான் பிரான்சிசுகோ தீயணைப்பு வீரர்கள் மற்றும் அமெரிக்க கடலோர காவல்படையினர் மூன்று நபர்களை அலையிலிருந்து மீட்டனர்.
மீட்பு
அட்டாட்டா தீவில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது முதன்மை தீவான தொங்கா தீவுக்கு அப்பால் அமைந்துள்ளது. அருகிலுள்ள சிறிய தீவு ஆழிப்பேரலையால் மூழ்கியது.[36] தீவில் உள்ள ராயல் சன்செட் ஐலேண்ட் ரிசார்ட்டின் முகநூல் பதிவில், இங்கு தங்கியிருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என் தெரிவித்துள்ளது.[39]
உதவி
நியூசிலாந்தின் பிரதம மந்திரி ஜசிந்தா ஆர்டெர்ன், வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரிகள் தொங்காவிற்கு உதவி வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறினார்.[40] ஆர்டெர்ன் தொங்காவில் நடந்த நிகழ்வுகளை "மிகவும் கவலைக்குரியது" என்று விவரித்தார்.[36] சனவரி 16 அன்று 15:00 NZDSTக்கு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், நியூசிலாந்து அரசாங்கம் ஆரம்ப நிதியாக நியூசிலாந்து டாலர் 500,000 நன்கொடையை வழங்குவதாக அறிவித்தார். தேவையான உதவிகளை வழங்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தனர். வானில் உள்ள சாம்பல் மேகம் தணிந்தவுடன் உளவு விமானமூலம் அனுப்பப்படும் என்றும், சாம்பல் மேகம் அளவு 63,000 அடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஓரியன் சேவை உச்சவரம்புக்கு மேலே உள்ளது.[34]