26 நவம்பர் 2024ல் அமெரிக்கா மற்றும் பிரான்சு நாடுகள் மத்தியஸ்தர்களாக இருந்து,.இஸ்ரேல்-லெபனான் இடையே 27 நவம்பர் 2024 முதல் நடைமுறைக்கு வந்த போர் நிறுத்த ஒப்பந்தம் ஆகும்.[1]
8 அக்டோபர் 2023 அன்று இஸ்ரேலியப் படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா படைகளுக்கும் இடையே தெற்கு லெபனான் பகுதிகளில் போர் ஏற்பட்டது. 1 அக்டோபர் 2024 அன்று இஸ்ரேலியப் படைகள், லெபனானின் தெற்கு எல்லையை கடந்து தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் நிலைகள் மீது தாக்குதல்கள் தொடுத்தது.
இந்த போர் நிறுத்த உடன்படிக்கையின்படி[2][3],இஸ்ரேல் தனது படைகளை தெற்கு லெபனாலிருந்து வெளியேற வேண்டும், [4][5][6]மற்றும் ஹிஸ்புல்லா படையினர் லித்தானி ஆற்றின் வடக்கு பக்கமாக பின்வாங்க வேண்டும்.[7]மேலும் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் லெபனான் அரசுத் துருப்புகளும் மற்றும் ஐ.நா. அமைதிப் படையினரும் நிறுத்தப்படுவார்கள். அமெரிக்கா தலைமையிலான ஐந்து நாடுகளின் குழு, போர் நிறுத்த நடைமுறைகளை கண்காணிக்கும்[8][5]. ஒப்பந்த நிபந்தனைகளை ஹிஸ்புல்லா மீறினால் தாக்குதல் நடத்தும் உரிமை தங்களுக்கு உள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.[9]
போர் நிறுத்த உடன்படிக்கையில் கூறப்பட்டவைகள்
ஹிஸ்புல்லாவோ அல்லது லெபனானில் உள்ள வேறு எந்த ஆயுத இயக்கமோ இஸ்ரேலுக்கு எதிராக எந்த தாக்குதல் நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது.
தரை, வான் மற்றும் கடல் உட்பட லெபனானில் உள்ள இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் எந்த தாக்குதல் நடவடிக்கையையும் மேற்கொள்ளாது.
இஸ்ரேலும் லெபனானும் ஐ. நா. பாதுகாப்பு மன்றத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது.
லெபனான் ஆயுதப் படைகள்,இராணுவம் மற்றும் உள் பாதுகாப்புப் படைகள் மட்டுமே தெற்கு லெபனானில் செயல்பட அங்கீகரிக்கப்பட்ட ஆயுதக் குழுக்களாக இருக்கும்.
லெபனானில் ஆயுதங்களின் விற்பனை, விநியோகம் மற்றும் உற்பத்தி லெபனான் அரசாங்கத்தின் மேற்பார்வை மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்.
ஆயுதங்கள் மற்றும் அவற்றின் பாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து அங்கீகரிக்கப்படாத அமைப்புகளும், உள்கட்டமைப்பு மற்றும் இராணுவ நிலைகளும் அகற்றப்படும். அங்கீகரிக்கப்படாத ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படும்.
60 நாட்களுக்குள் இஸ்ரேல் தனது படைகளை படிப்படியாக இஸ்ரேலிய எல்லைக்குள் திரும்பப் பெறும்.
இந்த காலகட்டத்தில், ஹிஸ்புல்லா ஆயுதக் குழுக்கள் லித்தானி ஆற்றின் வடக்கே பின்வாங்குவார்கள். அதே நேரத்தில் லெபனான் எல்லையில் லெபனான் நாட்டின் இராணுவம் மற்றும் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைகள் மட்டும் இருப்பர்..
ஹிஸ்புல்லா அல்லது லெபனானில் உள்ள மற்றொரு அமைப்பு ஒப்பந்தத்தை மீறும் பட்சத்தில் லெபனானைத் தாக்குவதற்கு இஸ்ரேலுக்கு முழு உரிமை உண்டு.