உருசியாவின் நான்காம் இவான்
இவான் நான்காமவன் வசீலியெவிச் (Ivan IV Vasilyevich, உருசியம்: Ива́н Васи́льевич, ஒ.பெ Ivan Vasilevich; 25 ஆகத்து 1530 – 28 மார்ச் [யூ.நா. 18 மார்ச்] 1584),[1] பரவலாக கொடூரமான இவான் (Ivan the Terrible) அல்லது அச்சமூட்டும் இவான் (Ivan Grozny), மாஸ்கோ பெரிய குறுமன்னராட்சியில் இளவரசராக 1533 முதல் 1547 வரை இருந்தவரும் 1547 முதல் இறக்கும்வரை சாராகவும் இருந்தவரும் ஆவார். இவரது நீண்ட ஆட்சியில் கசன், அசுட்டிரகன், சைபீரிய ஆட்சிகளை வெற்றி கண்டு உருசியாவின் பரப்பளவை ஏறத்தாழ ஒரு பில்லியன் ஏக்கர்கள், 4,046,856 km2 (1,562,500 sq mi)[2] அளவிற்கு விரிவுபடுத்தினார். இவற்றால் உருசியாவை பன்முகப் பண்பாடுடைய நாடாக மாற்றினார். பழங்கால அரசாக இருந்த மாசுக்கோ குறுநாட்டை ஓர் பேரரசாக மாற்றி அதன் சாராக முடிசூடிக் கொண்டார். வரலாற்றுச் சான்றுகள் இவானை முற்றிலும் வெவ்வேறானவனாகக் காட்டுகின்றன: அறிவாளியாகவும் கடவுள் நம்பிக்கை மிகுந்தவராகவும் விவரிக்கப்படும் இவானுக்கு கடுங்கோபமும் உளப் பிறழ்ச்சி வெளிப்பாடுகளும் உண்டாகுமென பதியப்பட்டிருக்கின்றன.[3] அகவை கூடும்போது இவையும் கூடின; இவற்றால் ஆட்சியும் பாதிக்கப்பட்டது.[4][5] இத்தகைய மனநோய் வெளிப்பாட்டின்போது தனக்கு அடுத்து பதவியேற்க தயார் செய்திருந்த மகன் இவான் இவனோவிச்சைக் கொன்றார். இதனால் இவருக்கு அடுத்து மனவளர்ச்சிக் குறையால் பாதிக்கப்பட்டிருந்த இவானின் மற்றொரு மகன்[6] முதலாம் பியோதர் முடிசூடினார். இவானின் பங்காற்றல் சிக்கலாக இருந்தது: சிறந்த பேராளராக விளங்கினார், கலை மற்றும் வணிகத்தை ஊக்குவித்தார், முதல் அச்சுக்கூடத்தை நிறுவினார், பொதுமக்களிடையே மிகவும் புகழ் பெற்றிருந்தார். இவரது மனச்சிதைவும் உருசிய மேட்டுக்குடியினரை கொடூரமாக நடத்தியதும் புகழ் பெற்றது. இவரது கொடுமைக்கும் மனநோய்க்கும் நோவோகார்டு படுகொலை காட்டாக விளங்குகின்றது.[7] மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia