ஓடி விளையாடு பாப்பா என்பது பாரதியார் எழுதிய பரந்து அறிமுகமான ஒரு குழந்தைகள் பாட்டு. இப் பாடலின் பல பகுதிகள் இலங்கை, இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பாட நூல்களில் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பாடல் குறித்து பாரதியாரின் மகள் இப் பாடலை ‘என் தந்தை எனக்காக நான் செய்ய வேண்டியதற்கெல்லாம் அட்டவணையாகப் பாடிக் கொடுத்தார்’ என்று கூறியுள்ளார்.[1] இந்தப் பாடல் பெண் குழந்தைகளை சிறப்பாக ஊக்கப்படுத்தி பாடப்பட்டதாக நெல்லைக் கண்ணன் கூறுகிறார்.
ஓடி விளையாடு பாப்பா, - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.
[ஓய்ந்திரு = சோம்பியிரு, சும்மாவிரு; வை = திட்டு; வையாதே = திட்டாதே]
சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வன்னப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.
கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு இரக்கப் படவேணும் பாப்பா.
[எத்து = ஏமாற்று]
பாலைப் பொழிந்துதரும் பாப்பா, - அந்தப் பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.