குமாரபுரம் படுகொலைகள்
குமாரபுரம் படுகொலைகள் அல்லது 1996 திருகோணமலைப் படுகொலை அல்லது 1996 கிளிவெட்டிப் படுகொலை 1996 பெப்ரவரி 11, 1996 அன்று இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள குமாரபுரம் என்ற கிராமத்தில் இலங்கை இராணுவம் மற்றும் துணைப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட துன்பியல் நிகழ்வாகும். இதன் மூலம் 9 பெண்கள், 12 வயதிற்குக் கீழ்ப்பட்ட 9 பிள்ளைகள் உட்பட 24 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 26 பேர் மிக மோசமாகப் படுகாயமடைந்தனர். 1995 ஏப்ரல் மாதத்தில் ஈழப்போர் மீண்டும் ஆரம்பமாகியதை அடுத்து இடம்பெற்ற மிக மோசமான தமிழ்மக்கள் படுகொலை இதுவாகும். இப்படுகொலைகள் தொடர்பாக இலங்கை அரசு இலங்கை இராணுவ வீரர்கள் மற்றும் ஊர்காவல் படையினர் பலரைக் கைது செய்து, 2004 ஆம் ஆண்டில் விசாரணைகளை ஆரம்பித்தது.[1][2][3][4][5] 2016 சூலை 27 இல் குற்றம்சாட்டப்பட்டிருந்த 6 இராணுவத்தினரையும் நீதிமன்றம் நிரபராதிகள் எனத் தீர்ப்பளித்து விடுதலை செய்தது.[6][7] படுகொலை செய்யப்பட்டவர்கள்இத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டோர் விபரங்கள் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது: சி. சிவராஜா (70), கி. கோவிந்தன் (72), சி. சின்னத்துரை (58), வ. நடராஜா (22), சு.லட்சுமி (35), சு. கமலாதேவி (35), சு. பரமேஸ் (30), ச. பாக்கியம் (29), வள்ளிப்பிள்ளை (28), செ. பாக்கியம் (26), ஆ. அன்னம்மா (25), து. கருணாகரன் (15), சு. தனலடசுமி (15), க. சுவாதிராஜா (15), வி. சுதாகரன் (14), ரா. கமலேஸ்வரி (13), த.கலா (12), ச. நிஷாந்தன் (11), சு. பிரபாகரன் (11), தீ. பத்மினி (09), சி. பிரசாந்தினி (06), பா. வசந்தினி (06), சு. சுபாசினி (03) ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர்.[8] இலங்கை அரசு விசாரணைகள்மூதூர் - குமாரபுரம் வாசிகள் 24 பேரின் படுகொலை தொடர்பான நீதிமன்ற விசாரணை 2013 சூலை 17, 18, 19 ஆம் நாட்களில் அனுராதபுரம் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவிருப்பதாக படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதிமன்றினால் அழைப்பாணை விடுக்கப்பட்டது.[8] ஆரம்பக் கட்ட விசாரணைகள் மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. போர்ச் சூழலில் எதிரிகளுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக காரணம் காட்டி இந்த வழக்கு விசாரணைகள் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. 2016 சூலை 27 அன்று அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்ன பிரதிவாதிகளைக் குற்றவாளிகளாக நிரூபிப்பதற்கு போதுமானளவு ஆதாரங்களை முன்வைக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்து குற்றஞ்சாட்டப்பட்டு, சாட்சிகளால் அடையாளம் காணப்பட்டிருந்த இராணுவ உறுப்பினர்கள் 6 பேரையும் விடுதலை செய்தார்.[9][10] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia