குமாரவேலு சந்திரசேகரன்
குமாரவேலு எசு. சந்திரசேகரன் (ஆங்கிலம்: Komaravolu S. Chandrasekharan) (பிறப்பு: 21 நவம்பர் 1920)[1] சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிக்கு நகரில் உள்ள உயர்நுட்பக்கல்விக் கழகமாகிய ஈ.டி.எச் (ETH Zurich, Eidgenössische Technische Hochschule Zürich) பணியாற்றி ஓய்வுபெற்ற ஒரு கணிதவியல் பேராசிரியர்[2]; இவர் டாட்டாவின் அடிப்படை ஆய்வுகளுக்கான கல்விக்கழகத்தின் கணிதத் துறையின் தோற்றுநர்களில் ஒருவராவார். இவர் எண் கோட்பாட்டில் கூட்டுமை (summability) பற்றிய ஆய்வுகளில் புகழ் ஈட்டியவர். பதுமசிரீ விருதும், சாந்தி சொரூப்பு பட்நாகர் விருதும், இராமானுசன் பதக்கமும் வென்றவர். இவர் டாட்டா அடிப்படை ஆய்வுகளுக்கான கல்விக்கழகத்தின் (டி.ஐ.எவ்.ஆர், TIFR) பெருமையப் பேராளராக (Honorary Fellow) உள்ளார். சந்திரசேகரன் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள பாப்பட்லா என்னும் ஊரில் உள்ள பள்ளியில் படித்தார். பின்னர் சென்னையில் உள்ள பிரசிடென்சி கல்லூரியில் கணிதத்தில் முதுகலைப் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழத்தில் 1942 இல் கே. ஆனந்தராவ் நெறியாளுமையில் முனைவர் பட்டமும் (பி.எச்டி) பெற்றார். சந்திரசேகரன், அமெரிக்காவில் நியூஜெர்சி மாநிலத்தில், பிரின்சிட்டனில் உள்ள முன்னோடு ஆய்வுகளுக்கான கழகத்தில் ([Institute for Advanced Study, Princeton) இருந்தபொழுது ஓமி பாபா (Homi Bhabha) அழைப்பின் பேரில் டாட்டா ஆய்வுக்கழகத்தில் வந்து சேர்ந்தார். உலகின் பல அறிஞர்களை டாட்டா ஆய்வுக்கழகத்தில் வந்து உரையாற்ற வைத்தார். 1965 இல் ஹோமி பாபா ஒரு வானூர்தித் தீநேர்ச்சியில் இறந்து போன பின்பு, டாட்டா ஆய்வுக் கழகத்தை விட்டுவிட்டு சுவிட்சர்லாந்தில், சூரிக்கு நகரத்தில் உள்ள ஈ.டி.எச் என்னும் உயர்நுட்பக் கல்விக்கழகத்தில் சேர்ந்தார் [1], பின்பு அங்கிருந்து 1988 இல் ஓய்வு பெற்றார்[3][4] அடிக்குறிப்புகள்
உசாத்துணைவெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia