சுவர்ணபூமி வானூர்தி நிலையம்
சுவர்ணபூமி வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: BKK, ஐசிஏஓ: VTBS) (ஆங்கிலம்: Suvarnabhumi Airport; மலாய்: Lapangan Terbang Suvarnabhumi தாய் மொழி: ท่าอากาศยานสุวรรณภูมิ; சமசுகிருதம் सुवर्णभूमि Suvarṇabhūmi) என்பது தாய்லாந்து, பாங்காக் நகரில் அமைந்துள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும். இது பாங்காக் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Bangkok International Airport) என்றும் அழைக்கப்படுகிறது.[3][4] சுவர்ணபூமி என்றால் தங்க நிலம் (Golden Land) என்று பொருள்படும். இந்த நிலையத்தில் 2006 செப்டம்பர் 15-ஆம் தேதி, அதிகாரப்பூர்வமாக உள்நாட்டு விமான சேவை திறக்கப்பட்டது. 2006 செப்டம்பர் 28-ஆம் தேதி, முதல் பல உள்நாட்டு; பன்னாட்டு வர்த்தக வானூர்திச் சேவை நிறுவனங்களும் இங்கிருந்து தங்களின் சேவைகளைத் தொடங்கின.[5][6] பொதுதாய்லாந்து, சமுத் பிரகான் மாநிலம் (Samut Prakan Province), பாங் பிலி மாவட்டம் (Bang Phli District), இரட்ச தேவா (Racha Thewa) நகரத்தில் 32.4 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பன்னாட்டு வானூர்தி நிலையங்களில் ஒன்றாகவும்; வானூர்திப் போக்குவரத்துக்கான பிராந்திய மையமாகவும் உள்ளது. அத்துடன் ஒரு முக்கிய வானூர்தி சரக்கு மையமாகவும் (Cargo Air Freight Hub) உள்ளது.[7][8] சொற்பிறப்பியல்சுவர்ணபூமி (Suvarṇabhūmi), சுவரபூமி எனும் சொற்கள் சமசுகிருதச் சொற்கள் ஆகும். "தங்க நிலம்" ("Land of Gold") என்று பொருள் படும். தேவநாகரி எழுத்து முறைமையில் (सुवर्णभूमि) என்று பயன்படுத்தப்படுகிறது. சுவர்ணா (Suvarna) என்றால் தங்கம்; பூமி (Bhumi) என்றால் நிலம்.[9][10] சுவர்ணபூமி எனும் பெயர் மறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யாதெச் (Bhumibol Adulyadej) அவர்களால் தேர்வு செய்யப்பட்டது. ஒரு பௌத்த தங்க இராச்சியத்தைக் குறிக்கிறது. சுவர்ணபூமி எனும் இராச்சியம் கங்கையின் கிழக்கே தென்கிழக்கு ஆசியாவில் எங்காவது இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. துவாரவதி பண்பாடுதாய்லாந்தின் அரசு பிரகடனங்கள் மற்றும் தேசிய அருங்காட்சியகங்கள் சுவர்ணபூமி எனும் இராச்சியம்; தாய்லாந்தின் மத்திய சமவெளிகளின் கடற்கரையில் இருந்ததாகவும்; பழங்கால நகரமான ஊ தோங்கு (U Thong) நகரத்திற்கு அருகில் இருந்ததாகவும் வலியுறுத்துகின்றன. இந்திய மயமாக்கப்பட்ட (Greater India) துவாரவதி கலாசாரத்தின் (Dvaravati Culture) பிறப்பிடமாக சுவர்ணபூமி இருக்கலாம் என்றும் கணிக்கப் படுகிறது. ஆனால் அந்தக் கூற்றுக்கள் நிரூபிக்கப்படவில்லை. என்றாலும், தாய்லாந்து அரசாங்கம், அந்தப் பழைமையான பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில் புதிய பாங்காக் வானூர்தி நிலையத்திற்கு சுவர்ணபூமி வானூர்தி நிலையம் என்று பெயரிட்டது.[11] வரலாறுஇந்த வானூர்தி நிலையம் தற்போது தாய் ஏர்வேஸ் (Thai Airways International), தாய் இசுமயில் (Thai Smile) மற்றும் பாங்காக் ஏர்வேஸ் ஆகியவற்றின் முக்கிய மையமாகவும்; தாய் வியட்ஜெட் ஏர் (Thai VietJet Air), தாய் ஏர் ஏசியா (Thai AirAsia) மற்றும் தாய் ஏர் ஏசியா எக்சு (Thai AirAsia X) ஆகியவற்றின் இயக்கத் தளமாகவும் உள்ளது. அத்துடன் ஆசியா, ஓசியானியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களின் பிராந்திய நுழைவாயிலாகவும்; பல்வேறு வெளிநாட்டு வானூர்தி சேவைகளை இணைக்கும் மையமாகவும் செயல்படுகிறது. இந்த நிலையம் 2006 செப்டம்பர் 15-ஆம் தேதி, அதிகாரப் பூர்வமாக உள்நாட்டுச் சேவைகளுக்குத் திறக்கப்பட்டது. இரு வாரங்கள் கழித்து, 2006 செப்டம்பர் 28-ஆம் தேதி, பன்னாட்டு வானூர்திச் சேவைகளுக்கு திறந்துவிடப் பட்டது.[12] பரபரப்பான வானூர்தி நிலையம்உலகின் 17-ஆவது; ஆசியாவின் 11-ஆவது; மற்றும் தாய்லாந்து நாட்டின் மிகவும் பரபரப்பான வானூர்தி நிலையமாகவும் விளங்குகிறது. 2017-ஆம் ஆண்டில் 60 மில்லியன் பயணிகளைக் கையாண்டுள்ளது. மேலும் இது ஒரு முக்கிய விமான சரக்கு மையமாகவும் உள்ளது.[13] உலகின் 95 விமான நிறுவனங்கள் இந்த வானூர்தி நிலையத்தைப் பயன்படுத்துகின்றன. 2012-ஆம் ஆண்டில் இன்ஸ்ட்டாகிராம் (Instagram) புகைப்படங்களை எடுப்பதில் உலகின் மிகவும் பிரபலமான தளமாக இருந்தது.[14] கோவிட்-19 பெருந்தொற்று காலத்தின் போது, இந்த வானூர்தி நிலையம் தற்காலிகமாக ஒரு மருத்துவமனையாகவும்; மற்றும் தடுப்பூசி மையமாகவும் செயல்பட்டது.[15][16] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia