12 சிறுவர்களும் அவர்களது பயிற்றுநரும் ஒன்பது நாட்களுக்குப் பிறகு உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டது; அனைவரும் 2018, சூலை 8 முதல் 10 வரைக்குள் மீட்கப்பட்டனர்.[3][4][5][6][3][4]
தாம் இலுவாங் குகை மீட்பு அல்லது 2018 தாய்லாந்து குகை மீட்பு என்பது தாய்லாந்தின்சியாங் ராய் மாகாணத்தில் உள்ள தாம் இலுவாங் நாங் நோன் குகையில் (உறங்கும் சீமாட்டியின் பெருங்குகை, தாய்: ถ้ำหลวงนางนอน) சிக்கிக்கொண்ட 11 முதல் 17 அகவையினராகிய 12 சிறுவர்களையும் அவர்களது 25 அகவை பயிற்றுநரையும் மீட்க மேற்கொள்ளப்பட்ட பெரும் மீட்புப்பணியாகும். இக்குகைக்குள் அவர்கள் நுழைந்த சிறிது நேரத்திலேயே பெருமழையால் வெள்ளம் ஏற்பட்டு நுழைவாயிலை அடைத்துக்கொண்டது. இதனால் வெள்ளநீரிலிருந்து தள்ளியிருக்க குகையின் உட்புறம் சிறுவர்கள் சென்றனர். உள்ளக கால்பந்தாட்ட இளைஞரணி உறுப்பினர்களாகிய இச்சிறுவர்களும் அவர்களது உதவிப் பயிற்றுநரும் காணாமல் போனதாக உடனேயே அறிவிக்கப்பட்டது; தேடுதல் பணிகளும் உடன் தொடங்கின.
குகை அமைப்பினுள் உயர்ந்து வந்த வெள்ளநீரால் அவர்களைத் தேடுவது கடினமாயிற்று. ஒரு வாரத்திற்கும் மேலாக அவர்களைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. உலகளவில் ஊடகச் செய்திகளும் பொதுமக்கள் ஆர்வமும் எழுந்த நிலையில் தேடுதல் முயற்சிகள் விரிவாக்கப்பட்டன. குறுகிய நீர்வழிகளிலும் கலங்கிய நீரிலும் தேடி வந்தனர். சூலை 2 அன்று பிரித்தானிய மூழ்காளர்கள் இவர்கள் உயிருடன் இருப்பதைக் கண்டறிந்தனர். குகையின் நுழைவிலிருந்து 3.2 கி.மீ (2.0 மைல்) உட்புறமாக உயரமானப் பாறைகளில் அவர்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். மீட்பு ஒருங்கிணைப்பாளர்கள் இவர்களை மீட்க சிறுவர்களுக்கும் பயிற்றுநருக்கும் அடிப்படை ஆழ்நீர் மூழ்கல் திறன்களில் பயிற்சி அளிப்பதா அல்லது மழைநீர் வடியும்வரையோ அல்லது புதிய நுழைவைக் குடையும் வரையோ காத்திருப்பதா என ஆராய்ந்தனர். குகையிலிருந்து பல நாட்கள் நீரிறைத்தும் மழை சற்று விட்டபின்னரும் அடுத்த பருவ மழை துவங்குமுன் மீட்புப்பணிகளைத் தொடங்கினர். அடுத்து சூலை 11 அன்று 52 mm (2.0 அங்) அளவிலான மழை வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்தது. சூலை 8 அன்று, நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்டனர். சூலை 9 அன்று, மேலும் நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்டனர். சூலை 10 அன்று மிஞ்சிய அனைத்து சிறுவர்களும் அவர்களது பயிற்றுநரும் மீட்கப்பட்டனர்.
இந்த மீட்புப் பணியில் தாய்லாந்து கடற்படையின் சீல்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பல்வேறு நாடுகளிலிருந்தும் தன்னார்வலர்கள் இம்மீட்பில் ஈடுபட்டனர். இந்த மீட்பின்போது ஒரு உயிரிழப்பு நேர்ந்தது. சூலை 5 அன்று குகைக்குள் ஆக்சிசன் உருளைகளை வழங்கிவிட்டு குறுகிய நீர்வழியில் திரும்புகையில் சமான் குணன் என்ற தாய்லாந்து கடற்படை வீரர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.