தென்னை காண்டாமிருக வண்டு (Oryctes rhinoceros) என்பது ஓரிக்டசு பேரினத்தினைச் சார்ந்த சிற்றின வண்டாகும். இது தென்னை மரங்களில் காணப்படும் ஒரு வகை பூச்சியாகும்.[2]
வாழ்க்கைச் சுழற்சி
வண்டு பெரியதாக அதிக தூரம் பறக்கக் கூடியதாகக் கருமை நிறத்தில் கடினமான இறக்கைகளையும், தலைப் பகுதியில் பின்னோக்கி வளைந்த ஒரு கொம்பையும் கொண்டிருக்கும். இதனால் இதற்குக் காண்டாமிருக வண்டு என்ற பெயர் பெற்றது. இவ்வண்டு எருக்குழி, சாக்கடை, சாணம் ஆகிய இடங்களில் முட்டையிடும். முட்டையிலிருந்து ஆங்கில எழுத்து 'C' வடிவத்தில் புழு வெளிவரும்.இப்புழுக்களுக்கு "கிரப்" என்று பெயர். இவை எருவைத்தின்று நன்கு வளர்ச்சி அடைந்து எருக்குழியிலேயே கூட்டுப்புழுவாக மாறும். பின் கூட்டுப்புழுவிலிருந்து வண்டாக வெளிவரும்.[3]
சேத அறிகுறி
வண்டுகள் தென்னையின் குருத்துப்பகுதியைக் குடைந்து துவாரம் செய்து உள்ளே சென்று குருத்தைக் கடித்து, சக்கைப் பொருளை வெளியேற்றும். இதனால் பாதிக்கப்பட்ட ஓலைகள் விரியும்போது விசிறி வடிவத்தில் தோன்றும். இளம் மரங்களாக இருந்தால் இறந்து போகும்.[4]
கட்டுப்பாட்டு முறைகள்
தென்னந் தோப்புகளுக்கு அருகில் எருக்குழிகளை அமைக்கக்கூடாது .
கொக்கி வடிவ கம்பியைக் கொண்டு குருத்துப்பகுதியில் உள்ள வண்டை வெளியே எடுக்க வேண்டும் .
கொழுஞ்சிப் பயிரை மரங்களுக்கிடையே பயிர் செய்வதால் இச்செடியின் வாசனையால் வண்டுகள் வேறிடங்களுக்குப் பறந்துவிடும்.
விளக்குப் பொறிகளை வைத்து, தாய் வண்டுகளைப் பிடித்து அழிக்கலாம்.
மாலாத்தியான் தூள் மற்றும் மணலை 1:1 என்ற விகிதத்தில் கலந்து குருத்துப் பகுதியில் இடவேண்டும்.
ஆமணுக்குப் பிண்ணாக்கைத் தண்ணீரில் கலந்து பானையில் ஊற்றி, தோப்புகளில் ஆங்காங்கே வைத்து வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
↑வேளாண் செயல்முறைகள் - செய்முறை இரண்டாம் ஆண்டு, பக்கம் 72-75, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம்
↑Zelazny, B.; Moezir, Moehafzan (1989). "Pengendalian hama kumbang rhinoceros pada tanaman kelapa [Control of the rhinoceros beetle in coconut palms]". Berita Perlindungan Tanaman Perkebunan1 (2): 1–6.