பிலிப்பைன்சின் வரலாறுபிலிப்பைன்சின் வரலாறு, 67,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டுமரங்களிலோ, வள்ளங்களிலோ மனிதர்கள் இத்தீவுகளில் குடியேறியதில் இருந்து தொடங்குகின்றது. 2007 இல் கலாவோ மனிதன் கண்டுபிடிக்கப்பட்டது இதை உறுதிப்படுத்துகிறது.[1][2][3] using rafts or boats at least 67,000 years ago as the 2007 discovery of Callao Man suggested.[4] நிக்ரிட்டோ குழுக்கள் முதலில் இத் தீவுக் கூட்டத்தில் குடியேறின. ஆசுத்திரோனீசியர்கள் பின்னரே இத்தீவுகளில் குடியேறினர். இச்சமுதாயக் குழுக்கள் காலப் போக்கில், வேறுபட்ட அளவிலான பொருளாதாரச் சிறப்பாக்கம், சமூகப் படிநிலையாக்கம், அரசியல் ஒழுங்கமைப்பு ஆகியவற்றுடன் கூடிய குடியிருப்புக்களாக வளர்ச்சி பெற்றிருக்கக்கூடும் என அறிஞர்கள் நம்புகின்றனர்.[5] இவற்றுட் சில குடியேற்றங்கள், தொடக்க நாடுகள் எனச் சொல்லக்கூடிய அளவுக்கு அளளவையும், சிக்கற்றன்மையையும் அடைந்திருந்தன என்ற கருத்தும் அறிஞர்களிடையே நிலவுகின்றது.[6] இது தற்காலக் குடியிருப்பு மையங்களான மேனிலா, தொண்டோ, பாங்கசினான், செபு, பனே, போகோல், புட்டுவான், கொட்டபாட்டோ, லனாவோ, சுலு[2] ஆகியவற்றின் முன்னைய வடிவங்களை உள்ளடக்குகின்றது. இந்தக் குடியேற்றங்கள், முதலாம் இராஜேந்திர சோழனின் தென்கிழக்காசியப் படையெடுப்பு உள்ளிட்ட இந்தியாவில் இருந்து ஏற்பட்ட பல படையெடுப்புக்களினால், இந்து சமயம், மொழி, பண்பாடு, இலக்கியம், மெய்யியல் ஆகியவற்றின் செல்வாக்குக்கோ,[7] அரேபியாவில் இருந்து இசுலாத்தில் செல்வாக்குக்கோ, சீனாவுடன் தொடர்புடைய சீனமயமான சிற்றரசுகளின் செல்வாக்குக்கோ உட்பட்டு இருந்திருக்கக்கூடும். முதலாம் ஆயிரவாண்டுகளில் இருந்து இவ்வாறான சிறிய கரையோர நாடுகள் செழிப்புற்றிருந்தன.[8][9] இந்த இராச்சியங்கள் இன்றைய சீனா, இந்தியா, சப்பான், தாய்லாந்து, வியட்நாம், இந்தோனீசியா போன்றவற்றோடு வணிகத்தில் ஈடுபட்டிருந்தன.[10] ஏனைய குடியேற்றங்கள் "பரங்கே" எனப்படும் சுதந்திரமான சிறிய குடியேற்றப் பகுதிகளாக இருந்தன. இவை பெரிய நாடொன்றோடு இணைந்து இயங்கின. ஐரோப்பியர் ஒருவரின் முதல் பதிவு செய்யப்பட்ட வருகை பெர்டினன்ட் மகலனின் வருகையாகும். இவர் 1521 மார்ச் 16 ஆம் தேதி சமர்த் தீவைக் கண்டார். அடுத்தநாள், கிழக்கு சமரின் குய்யுவானின் பகுதியாக உள்ள ஓமோனொன் (Homonhon) தீவில் இறங்கினார்.[11] 1565 பெப்ரவரி 13 இல் மெக்சிக்கோவில் இருந்து மிகுவேல் லோப்பசு டெ லெகாசுப்பியின் (Miguel López de Legazpi) வருகையுடன் இசுப்பானியக் குடியேற்றம் தொடங்கியது. இவர் முதலாவது நிரந்தரக் குடியேற்றத்தை செபுவில் நிறுவினார்.[12] தீவுக் கூட்டத்தின் பெரும் பகுதி இசுப்பானிய ஆட்சியின் கீழ் வந்தது. இதன்மூலம் பிலிப்பைன்சு என அறியப்பட்ட முதல் ஒன்றிணைந்த அரசியல் அமைப்பு உருவானது. இசுப்பானியக் குடியேற்றவாத ஆட்சி கிறித்தவம், சட்டக் கோவை, ஆசியாவின் மிகப் பழைய நவீன பல்கலைக்கழகம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. பிலிப்பைன்சு, மெக்சிக்கோவைத் தளமாகக் கொண்டிருந்த புதிய இசுப்பெயினின் அரசப் பிரதிநிதியின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் இது இசுப்பெயினின் நேரடி ஆட்சிக்குள் கொண்டுவரப்பட்டது. இசுப்பானிய-அமெரிக்கப் போரில் இசுப்பெயின் தோற்றதைத் தொடர்ந்து 1898 இல் பிலிப்பைன்சின் இசுப்பானிய ஆட்சி முடிவுக்கு வந்தது. ஈதன் பின்னர் பிலிப்பைன்சு ஐக்கிய அமெரிக்காவின் ஒரு ஆட்சிப்பகுதி ஆகியது. எமிலியோ அகுய்னால்டோ தலைமை தாங்கிய பிலிப்பைன் புரட்சி ஒன்றை அமெரிக்கப் படைகள் ஒடுக்கின. பிலிப்பைன்சை ஆள்வதற்கு, அமெரிக்கா ஒரு தீவுசார்ந்த அரசாங்கத்தை அமைத்தது. 1907 இல் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிலிப்பைன் அவை உருவாக்கப்பட்டது. யோன்சு சட்டமூலத்தில் பிலிப்பைன்சுக்குச் சுதந்திரம் வழங்குவதாக ஐக்கிய அமெரிக்கா உறுதி அளித்திருந்தது.[13] முழுச் சுதந்திரத்துக்கு முன் ஒரு இடைக்கால ஒழுங்காக 10 ஆண்டுகளுக்கான பிலிப்பைன்சு பொதுநலவாயம் 1935 இல் உருவாக்கப்பட்டது. எனினும், இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் 1042 ஆம் ஆண்டு சப்பான் பிலிப்பைன்சைக் கைப்பற்றியது. 1945 இல் ஐக்கிய அமெரிக்கப் படைகள் சப்பானியப் படைகளைத் தோற்கடித்தன. 1946 இன் மணிலா ஒப்பந்தம் சுதந்திரமான பிலிப்பைன்சுக் குடியரசை உருவாக்கியது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia