பூமிக்கடலில் ஒரு மந்திரவாதி
பூமிக்கடலில் ஒரு மந்திரவாதி (A Wizard of Earthsea) என்ற புதினம் அமெரிக்க எழுத்தாளரான அர்சலா கே. லா குவின் (Ursula K. Le Guin) எழுதிய குழந்தைகளுக்கான ஒரு கற்பனை ஆங்கிலப் புதினம். இந்தப் புதினம் 1968 ஆம் ஆண்டில் முதன் முதலாக சிறிய பதிப்பகம் பாரானசசால் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்தது. இது கற்பனை இலக்கியம் மற்றும் குழந்தைகளுக்கான இலக்கியம் போன்ற இலக்கிய வகைகளில் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தக் கதையானது கற்பனையான பூமிக்கடலில் உள்ள தீவுகூட்டத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டு, மந்திரம் அறிந்த இளமையான சிறுவனான கேட் என்பவரைச் சுற்றி நடப்பதாக எழுதப்பட்டுள்ளது. இவர் கோன்ட் என்னும் தீவில் பிறந்தவர். கேட் சிறுவனாக இருக்கும் பொழுதே பெரும் வல்லமையைக் கொண்டிருந்தார். மந்திரவாதிகளுக்கான பள்ளியில் சேர்ந்தார். இவரது முட்டாள்தனமான தன்மை அவருடைய நண்பர்களில் ஒருவரோடு மோதலை உண்டாக்கியது. இருவருக்கும் இடையே நடந்த மந்திர மாயாஜாலச் சண்டையில், கேட் மந்திரத்தைத் தவறாக உச்சரிக்கப் போய் ஒருவித நிழல் உருவம் உண்டாகியது. இந்தப் புதினம் முழுமைக்கும் கேட் அந்த நிழல் உருவத்திடமிருந்து எப்படி தப்பித்து அதனை அழிக்கிறார் என்பதை விளக்குவதாகவே அமைந்திருக்கும். புத்தகம் பெரும்பாலும் முக்கிய கதைமாந்தரின் வளர்ச்சி (Bildungsroman) அல்லது வளர்ந்து வரும் கதைமாந்தரைப் பற்றி விவரிக்கும் புதினமாக விவரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கதையின் நாயகன் கேட், தனது சக்தியைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறான், மேலும் இதன் மூலம் இறப்புடன் இணக்கம் ஏற்படுத்துகிறான். இந்தப் புதினமானது மந்திரவாதிகள் பராமரிக்க வேண்டிய பூமிக்கடலின் அடிப்படை சமநிலை குறித்த தாவோவியக் கருத்துக்களைக் கொண்டுள்ளது. இக்கருத்து மொழி மற்றும் பெயர்கள் எவ்வாறு உலகத்தின் சமநிலையைப் பாதிக்கும் கொண்டுள்ளது என்ற கருத்தை நெருக்கமாக இணைந்திருக்கிறது. கதையின் கட்டமைப்பு ஒரு பாரம்பரிய காப்பியங்களோடு ஒத்திருந்தாலும் அவற்றிலிருந்து மாறுபட்டதாக உள்ளதாகவும் விமர்சகர்கள் கருதுகின்றனர். பொதுவாக வழக்கமான மரபுக்கதைகளில் நாயகன் வெள்ளை நிறத்தில் தான் இருப்பதும் ஆனால் இங்கு கருப்பு நிறத்தில் உள்ளதுமே விமர்சகர்களின் கருத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது. பூமிக்கடலில் ஒரு மந்திரவாதி வாசகரிடத்தில் நல்ல நேர்மறை விமர்சனங்களைப் பெற்றது. ஆரம்பத்தில் நல்ல குழந்தைகளுக்கான புதினம் என்ற வகையிலும் பின்னர் அனைத்து பொது வாசகரிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் புதினம் 1969 ஆம் ஆண்டிற்கான போஸ்டன் குளோப் ஹார்ன் புத்தக விருது பெற்றது மற்றும் 1979 ஆம் ஆண்டின் லீவிஸ் காரோல் செல்ஃப் விருது பெற்றது. மார்கரெட் அட்வூட் இப்படிச் சொன்னார், கற்பனை இலக்கியத்தின் "நல்வாழ்வு" என்றழைத்தார்.[3] லா குவின் பூமிக்கடலில் ஒரு மந்திரவாதி புதினத்தின் தொடர்ச்சியாக அடுத்து அடுத்து ஐந்து புத்தகங்களை வெளியிட்டார். 1971 ஆம் ஆண்டில் தி டோம்ஸ் ஆஃப் அட்வான் (The Tombs of Atuan) , 1972 ஆம் ஆண்டில் தொலைவான கடற்கரை (The Farthest Shore),1990 ஆம் ஆண்டில் தெஹான்(Tehaப்nu), 2001 ஆம் ஆண்டில் மற்றொரு காற்று(The Other Wind), மற்றும் பூமிக்கடலில் இருந்து கதைகள்(Tales from Earthsea) என்ற ஐந்து புத்தகங்கள் பூமிக்கடல் வரிசைத் தொடராக வெளியிட்டார். ஜார்ஜ் சுலுசர் பூமிக்கடல் தொடரை "உயர்ந்த பாணியையும், கற்பனைகளையும்" கொண்டிருப்பதாக பாராட்டினார்.[4] அப்பொழுது அமன்டா கிரெய்க், பூமிக்கடலில் ஒரு மந்திரவாதி "மிகவும் உள்ளக் கிளர்ச்சி ஊட்டுகிற, விவேகமுடைய மற்றும் அழகிய குழந்தைகளுக்கான புதினம்" என்று கூறினார்.[5] மேற்கோள்கள்
வெளிப்புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia