பூவுலகின் நண்பர்கள் இயக்கம்![]() பூவுலகின் நண்பர்கள் இயக்கம் என்பது தமிழ்நாட்டில் செயல்படும் ஓர் அரசு சாரா இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு ஆகும். "உலகமயமாக்கம் மற்றும் ஆதிக்க சக்திகளின் சுரண்டலுக்கு எதிராக வளங்குன்றா வளர்ச்சி தொடர்பான அறிவு-விழிப்புணர்வை அதிகரிப்பது மற்றும் அனைத்து வர்க்க மக்களுக்கும் சுற்றுச்சூழல் நீதி கிடைக்கச் செய்வது" என்பதை அடிப்படை நோக்கமாய்க் கொண்டு தமிழகத்தில் செயல்படுகிறது.[1] வரலாறு1990 களில் சுற்றுச்சூழல் ஆர்வம் மிக்க இளைஞர்கள் சிலர் ஒன்று கூடி இந்த இயக்கம் துவங்கப்பட்டது. தனியாகவும் புவியின் நண்பர்கள், உலகளாவிய நிதியம், பசுமை அமைதி (Greenpeace), பினாங்கு பயனீட்டாளர் சங்கம் போன்ற அமைப்புகளோடும் இணைந்தும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் “பூவுலகின் நண்பர்கள்” ஈடுபட்டனர். பூவுலகு எனும் பெயரில் இரு மாதத்திற்கு ஒருமுறை வெளியாகும் சூழல் இதழையும் வெளியிட்டனர். இவ்வமைப்பில் முக்கியப் பங்காற்றிய நெடுஞ்செழியன் [2] மற்றும் அசுரன் ஆகியோர் உடல்நலக்குறைவால் இறந்ததை அடுத்து சிலகாலம் தேங்கியிருந்த பணிகள் இவ்விருவரின் நண்பர்கள் மற்றும் பலரால் மீண்டும் துவங்கப்பட்டன. பூவுலகு இதழ் தற்போது இரு மாத இதழாக வெளிவருகிறது. இதன் ஆசிரியர் குழுவினர் தன்னார்வமாகப் பணிபுரியும் ஆர்வலர்களாய் உள்ளனர்.[3] பணிகள்சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றி நூல் பதிப்பித்தல், பரப்புதல், தீர்வுகளை பரிந்துரைத்தல், ஆதரவை திரட்டுதல், தொடர்பியல் கருவிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி அளித்தல், சட்ட ஆலோசனை வழங்குதல், ஒத்துணர்வுள்ள அமைப்புகளுடன் இணைந்து செயல்படுதல் ஆகியவை மூலம் அனைத்து வர்க்க மக்களிடமும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை உருவாக்கும் பணியை இவ்வியக்கம் செய்து வருகிறது. சட்டப் போராட்டங்கள்அணுசக்தி விபத்தைக் கருத்தில் கொண்டு கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படுவதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் 2011 அக்டோபரில் பொது நல வழக்கினைத் தாக்கல் செய்தது.[4] இந்திய அணுசக்திக் கழகம் வழங்கிய பாதுகாப்புக் காப்புறுதியைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2012 இல் இவ்வழக்குத் தள்ளுபடியானது. பூவுலகின் நண்பர்களின் மேல்முறையீட்டை இந்திய உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.[5][4] தமிழக அரசின் சென்னை-சேலம் விரைவுப்பாதையை எதிர்த்து பொது நல வழக்கினைத் தொடுத்தது.[6] மேலும் தேனியில் நியூட்ரினோ ஆய்வகம், தஞ்சாவூர் நெடுவாசலில் மீத்தேன் வாயு திட்டம் போன்றவற்றை எதிர்த்தும் சட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளது.[7]
வெளி இணைப்புகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia