மிகவும் ஆற்றல் வாய்ந்தவர்களின் 7 பழக்கங்கள்
மிகவும் ஆற்றல் வாய்ந்தவர்களின் 7 பழக்கங்கள் (The 7 Habits of Highly Effective People) என்னும் நூல் 1989 ஆம் ஆண்டு முதலில் வெளியிடப்பட்டது. இது இசுடீபன் கோவே[1] என்பவரால் எழுதப்பட்ட வணிக மற்றும் தன்னம்பிக்கை குறித்த நூலாகும். பயனுள்ள வாழ்க்கை எவ்வாறு வாழ்வது, குறிக்கோளுள்ள வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பதை இவர் தெளிவாக விளக்குகிறார். இதை இவர் “சரியாக வடக்கு நோக்கி” என்று பெயரிடுகிறார், இவர் வகுத்துள்ள இந்தக் கோட்பாடுகள் எப்பொழுதும் எக்காலத்திற்கும் பொருந்தும். இந்நூல் முதலில் வெளியிடப்பட்ட 1989 ஆம் ஆண்டு முதல், உலகம் முழுவதிலும் 250 லட்சம் படிகளுக்கு மேல் விற்றுத் தீர்ந்துள்ளன[2]. இதன் ஒலிநூல் தான் அமெரிக்காவில், புதினமல்லாத நூல்களில் முதலில் வெளியிடப்பட்ட நூலாகும். இது சுமார் 100 லட்சம் நூல்களுக்கு மேல் விற்றுச் சாதனை புரிந்துள்ளது. சமகாலத்தில் சுயமுன்னேற்ற நூல்கள் சுபாவம் மற்றும் ஆளுமை தொடர்பான முன்னேற்ற வழிகளை வலியுறுத்துகின்றன. இவைகள் தம்மை எவ்வாறு வெளிப்படுத்துவது, எப்படி, என்ன பேசுவது, என்ன நினைப்பது போன்ற அணுகுமுறையைப் பற்றிக் கூறுகின்றன. இது சரியான அணுகுமுறை அல்ல என்று ஆசிரியர் கூறுகின்றார். சரியான அணுகுமுறை குணம் மற்றும் நடத்தை தொடர்பானது என்று விளக்குகிறார். ஒவ்வொருவரும் தமது வாழ்வில் அனுசரிக்க வேண்டிய விழுமியங்களை, எந்தக்காலத்திலும், எப்பொழுதும், யாரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நன்னெறிகளுடன் ஒருமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றார். அடிப்படையில் நேர்மையும் நியாயமும் இல்லாத ஆளுமைகள் வெளியில் நடை உடை பாவனைகளை மாற்றுவதால் எவ்விதப் பயனும் ஏற்படப் போவதில்லை என்று தெளிவாக்குகின்றார். வெறும் கோட்பாடுகளை உதட்டளவில் கொள்ளாமல் விழுமியங்களை உளப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு அனுசரிப்பதுதான் பலன் தரும் என்று ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றார். உதட்டளவில் உள்ள கோட்பாடுகள் மேலோட்டமானவை என்றும், ஏற்றுக்கொண்ட விழுமியங்கள் உளப்பூர்வமானவை என்றும் அக உணர்வு சார்ந்தது என்றும், இவ்வாறு உளப்பூர்வமாக அனுசரிக்கும் விழுமியங்களே பலனைத் தீர்மானிக்கும் என்றும் கூறுகிறார். ஒருவன் அனுசரிக்க வேண்டிய ஏழுப்பழக்கங்களையும் ஒவ்வொன்றாக எடுத்துக்கூறி, இவைகள் ஒருவனை பிறரைச்சார்ந்திருக்கும் நிலையிலிருந்து உயர்த்தி தற்சார்பு நிலைக்குக் கொண்டு செல்லும் என்று விளக்குகின்றார். நிறைமனம்நூலாசிரியர் “நிறைமனம் அல்லது பொருளாதார நிறைவு மனநிலை” என்னும் எண்ணக் கருவை முன்வைக்கின்றார். நிறைவான மனதுடன் ஒருவன் வாழ்க்கையை அணுகினால் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள தேவையான ஆதாரம் சுயமாகவே வரும் என்றும் வெற்றிகிட்டும் என்றும் கூறுகின்றார். [3]இவ்வாறான நிறைமனநிலையை எப்பொழுதும் எதற்கும் குறைகூறும் மனநிலை அல்லது பற்றாக்குறை மனநிலையிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றார். இது போன்ற குறைமனப்பான்மை என்பது ஒருவர் வெற்றி இன்னொருவர் தோல்வியில் தான் வரும் என்னும் அடிப்படையில் அமையும் என்று கருதுவர். இது தவறு என்றும் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இருவரும் வெற்றியடைய வழியுள்ளது என்றும் குறிப்பிடுகிறார். நிறைமனம் உள்ளவர்கள் இதுபோன்று தோல்விவரும் என்ற மனப்பான்மையை ஏற்றுக்கொள்ளாமல், தோல்வி பயம் கொள்வதைத் தவிர்த்து அதனையும் கொண்டாடமுடியும் என்று எண்ணுவர் என்று கூறுகிறார். இந்நூல் வெளியீட்டிற்குப் பிறகு பல நூல்கள் இக்கருத்தைப் பற்றி எழுதியுள்ளன [4].சுயமரியாதையும் தன்னம்பிக்கையுமே இதுபோன்று நிறைமன நிலையைக் கொடுக்கும் என்றும், இதுவே பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மையும் மற்றவர்களை மதிக்கும் பண்பையும், பொறுப்புகளை சுயமாக எடுத்துக்கொள்ளும் மனநிலையையும் கொடுக்கும் என்றும் தெரிவிக்கின்றார். வணிக நிறுவனங்களும் தங்கள் செயல் பாட்டில் இந்த நிறைமன அணுகுமுறையைக் கடைப்பிடித்து பலன் பெறலாம் என்று கூறுகிறார்.[5] வாழ்வின் அணுகுமுறைக்கு அடிப்படைவாழ்விற்கு அணுகுமுறை முக்கியம். தற்பொழுது நமது அணுகுமுறை உருவாகுவதற்கு அடிப்படை, நாம் வளர்ந்த விதம், கற்ற கல்வி, சூழ்நிலை, உற்றார் உறவினர் மற்றும் சமூகம் அளித்த பதில். இவை எதுவும், நாம், தன் உணர்வுடன், நமக்குத் தேவை என்று உருவாக்கியவை அல்ல. இவை இயற்கையில் நமக்கு கிடைத்தவை. நாம், தன் உணர்வுடன், சுயமாக நமக்கு எது தேவை என்று, அறிவைப் பயன்படுத்தித் தேடாமல், சீர்தூக்காமல், மதிப்பிடாமல் இயற்கையாக யாரோ அளித்த தாக்கத்தால் உருவான அணுகுமுறையைப் பற்றிக் கொண்டு கிடைத்தற்கறிய வாழ்க்கையை, வாழ்வது எப்படி அறிவுடைமையாகும்? என்று ஆசிரியர் வினவுகின்றார். இதற்கு பதிலாக உலகம் முழுவதும் எல்லோராலும் எப்பொழுதும் ஏற்றுக்கொண்ட நன்னெறிகளான நேர்மை, நியாயம், அன்பு, கருணை, ஒழுக்கம் போன்ற பண்புகளின் அடிப்படையில் நமது அணுகுமுறையை உருவாக்கிக் கொண்டு வாழ்வது தான் சிறந்தது என்று ஆசிரியர் பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார். மிகுந்த ஆற்றல் மிக்கவர்களிடம் காணப்படும் ஏழுபழக்கங்கள்ஆக்கப்பூர்வமான காரியத்தில் தொடர்ந்து ஈடுபடுதல், செயலின் தாக்கம், முடிவு அல்லது செயலின் பயன் என்பதை மனதில் வைத்துக்கொண்டு செயல்படுதல், முதலில் செய்ய வேண்டிய வேலையை முதலில் செய்தல், எல்லோரும் வெல்ல வாய்ப்பு உள்ளது என்பதை அறிதல், உங்களை மற்றவர்கள் புரிந்துகொள்ளும்முன் நீங்கள் மற்றவர்களை, மற்றவற்றைப் புரிந்து கொள்ளுதல், எல்லாவற்றுடனும் எல்லோருடனும் இணைந்து செயல்படுதல் ஆகியன ஆசிரியர் கூறும் 7 பழக்கங்கள் ஆகும். நூலுக்கு வரவேற்புஇந்நூல் 250 லட்சம் படிகள் உலகம் முழுவதும் பலமொழிகளிலும் ஒலிநூல் 15 லட்சம் நகல்களும் விற்றுத் தீா்ந்துள்ளன. 2011 ஆகஸ்டு மாதம் “டைம்” பத்திாிக்கை இந்நூலை உலகளவில் உள்ள மிகப்பெரிய தாக்கத்தை எற்படுத்திய 25 நூல்களில் ஒன்றாக தேர்ந்தெடுத்துள்ளது.[6] அன்றைய அமெரிக்க அதிபர் திரு பில்கிளிண்டன் நூலாசிரியரை அணுகி இந்நூலில் உள்ள பரிந்துரைகளை வெள்ளை மாளிகை அதிகாரிகளை அனுசரிக்க வைக்க ஆலோசனை வழங்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார்.[7] ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia