முலை ஊடுகதிர்ப்படச் சோதனை
முலை ஊடுகதிர்ப்படச் சோதனை (Mammography) முறைமையில் குறைந்தளவு எக்ஸ் கதிர்கள் (பொதுவாக 0.7 mSv) பயன்படுத்தி மனித முலையை ஆராய்வதாகும். இது புற்றுநோய் தன்மையை அறிவதற்கும் நோயுள்ளவர்களைப் பிரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதன் முதன்மை நோக்கமாக மார்பகப் புற்றுநோய் உள்ளதை நோய்த்தன்மையுள்ள கட்டிகள் மற்றும்/அல்லது நுண் கால்சிய சேர்க்கைகளாலோ துவக்கநிலையிலேயே அறிவதாகும். மார்பகப் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க இந்தச் சோதனை மிகவும் உதவியுள்ளதாகக் கருதப்படுகிறது. மார்பகப் புற்றுநோயை துவக்கத்திலேயே கண்டறியும் வண்ணம் பல நாடுகளில் முதிய மகளிருக்கு முலை ஊடுகதிர்ப் படச் சோதனை ஊக்குவிக்கப்படுகிறது.2009ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் தடுப்பு சேவைகள் செயற்திட்ட அணியினர் 40 முதல் 49 வரை உள்ள மகளிருக்கான சோதனை வழிகாட்டல்களில் பெரும் மாற்றத்தைக் கொணர்ந்தது. சுருக்கமாக, இதன்படி 50 அகவைக்கு மேற்பட்டோருக்கே இச்சோதனைகளை வழக்கமாகச் செய்ய அறிவுறித்தியது. இந்த அரசு அறிவுரையை பல புற்றுநோய் மற்றும் மகளிர் தன்னார்வல அமைப்புக்கள் எதிர்த்தன. இருப்பினும், அமெரிக்க அரசு இன்னமும் முலை ஊடுகதிர்ச் சோதனையை 50 முதல் 74 வரையுள்ள பெண்களுக்கு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை, மருத்துவ முலைச் சோதனைகளுடனோ அல்லாமலோ, அறிவுறுத்தியுள்ளது.[1] மருத்துவச் சோதனைகள் மார்பகப் புற்றுநோய் மரணம் இதன்மூலம் 20% வரை குறைந்துள்ளதாக மதிப்பிடுகிறார்கள்.[2][3] இரு மிக உயர்ந்த தர ஆய்வுகளின் அடிப்படையில் வெளியான கட்டுரையால் 2000 முதல் முலை கதிர்படங்கள் (Mammograms) சர்ச்சைகளுக்கள்ளாகி உள்ளன[4] பிற எக்ஸ் கதிர்கள் போலவே முலை ஊடுகதிர் படங்களும் கதிரியக்க விளைவுகளைக் கொண்டு படம் பிடிக்கின்றன. இந்தப் படங்களை ஆராய்ந்து கயிரியக்க மருத்துவர்கள் வழமைக்கு மாறானவற்றை அறிகிறார்கள். எலும்புகளுக்குப் பயன்படுத்தப்படும் குறைந்த அலைநீள எக்ஸ் கதிர்கள் போலல்லாது இங்கு கூடுதல் அலைநீளமுள்ள எக்ஸ் கதிர்கள் (பொதுவாக Mo-K) பயன்படுத்தப்படுகின்றன. துவக்க கால மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய உடற்கூறு முலைச் சோதனையுடன் கூடிய முலைக் கதிர்படச் சோதனை முதன்மை விருப்பத்தேர்வாக உள்ளது. மீயொலி, டக்டோகிராபி, பொசிட்ரோன் வெளியாடு ஊடுகதிர்ப் படச்சோதனை (PEM), மற்றும் காந்த ஒத்ததிர்வு வரைவு ஆகியன கூடுதல் சோதனைகளாக உள்ளன. மீயொலி பொதுவாக முலைக் கதிர்படச் சோதனை மூலம் கண்டறியப்பட்ட கட்டிகளைக் குறித்த மேலாய்வுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. சில மருத்துவமனைகளில் முலை ஊடுகதிர்ப்படம் மூலம் கண்டறியப்படாத நிலையில் உள்ள முலைக்காம்பு குருதிக்கசிவுகளில் நோயறிய டக்டோகிராம் பயன்படுத்தப்படுகிறது. ஐயத்திற்குரிய கண்டுபிடிப்புகளை மேலாய்வு செய்யவும் அறுவை சிகிட்சைக்கு முன்னர் அறுவை செய்முறையை (முலையைத் தக்கவைக்கும் கட்டி நீக்கமா அல்லது முலையையே எடுத்து விடுவதா என) மாற்றக்கூடிய வகையில் ஏதேனும் கூடுதல் வளர்சதைகள் உள்ளனவா என அறியவும் MRI பயனாக உள்ளன. முலை தன்-சோதனை (BSE) குணமாக்கக்கூடிய நிலையில் உள்ள புற்றுநோய்களைக் கண்டறிய முன்பு ஊக்குவிக்கப்பட்டாலும் தற்காலத்தில் அதன் செயற்திறன் குறைவின் காரணமாக சுகாதார அதிகாரிகள் பொதுப்பயனிற்கு அறிவுறுத்துவதில்லை.[5][6] தன-சோதனையை விட பெண்கள் உடல் குறித்த மற்றும் மார்பக நலன் குறித்த விழிப்புணர்வை வளர்ப்பதே அவர்களது நோக்கமாக உள்ளது. முலை ஊடுகதிர்ப்படச் சோதனை கண்டறியாத, ஆனால் நோயுள்ள, நிகழ்வுகள் 10 விழுக்காடாக உள்ளது. இது பொதுவாக ஒளிபுகா அளவு செறிவான திசுக்கள் புற்றுக்கட்டியை மறைத்து விடுவதால் ஏற்படுகிறது. மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia