யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் (Jaffna International Airport, (ஐஏடிஏ: JAF, ஐசிஏஓ: VCCJ) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் பலாலி என்னும் இடத்தில் உள்ள படைத்துறை வானூர்தித் தளமும், பன்னாட்டு வானூர்தி நிலையமும் ஆகும்.[1][2] யாழ்ப்பாண நகரில் இருந்து 16 கி.மீ. (9.9 மைல்) வடக்கே அமைந்துள்ள இவ்வானூர்தி நிலையம், பலாலி விமான நிலையம் (Palaly Airport) அல்லது பலாலி விமானப் படைத்தளம் (SLAF Palaly) எனவும் அழைக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானிய வான் படையின் பயன்பாட்டுக்காக நிர்மாணிக்கப்பட்டு, பின்னர் நாட்டின் இரண்டாவது பன்னாட்டு வானூர்தி நிலையமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் இலங்கை வான்படை இதனைக் கையகப்படுத்தியது. வரலாறுஇரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானிய வான் படை இலங்கையின் காங்கேசன்துறைக்கு அருகில் பலாலியில் வான்வெளிக்களம் ஒன்றை அமைத்தது.[3][4] போரின் போது இத்தளத்தில் பிரித்தானியாவின் வான்படையணிகளும் (இல. 160, இல. 203, இல. 292, இல. 354) வான்-கடல் மீட்பு அணிகளும் இங்கு நிலை கொண்டிருந்தன.[5] போரின் முடிவை அடுத்து இவ்வான்வெளிக்களம் பிரித்தானியரால் கைவிடப்பட்டதை அடுத்து, இலங்கையின் குடிமை வான்போக்குவரத்துத் திணைக்களம் இதனைக் கையேற்றது.[4] ஏர் சிலோன் நிறுவனத்தின் முதலாவது பயணம் 1947 டிசம்பர் 10 இல் இரத்மலானை வானூர்தி நிலையத்தில் இருந்து பலாலி வழியாக சென்னைக்கு நடத்தப்பட்டது.[6] இலங்கை விடுதலை அடைந்த பின்னர் இவ்வானூர்தி நிலையத்தூடாக தென்னிந்திய நகரங்களுக்கும், கொழும்புக்கும் சேவைகள் இடம்பெற்றன.[7] ஈழப்போர் ஆரம்பித்ததை அடுத்து பயணிகள் சேவை மட்டுப்படுத்தப்பட்டது.[7] 1976 ஆம் ஆண்டில் இலங்கை வான்படையின் பிரிவு ஒன்று இங்கு நிறுவப்பட்டது.[4] 1982 சனவரி முதல் இப்படைப்பிரிவின் வான்வெளிக்களமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.[4] வானூர்தி நிலையம் ஈழப்போரில் பங்கேற்ற ஆயுதப் படையினருக்கு பயன்பட்டது. 1990களின் ஆரம்பத்தில் வானூர்தி நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் அதியுயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு, அங்கு குடியிருந்த பொது மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.[8][9] 1990 முதல் 1995 வரை வலிகாமம் பகுதியில் அரசுக் கட்டுப்பாட்டில் இருந்த ஒரே இடம் இந்த உயர் பாதுகாப்பு வலயம் மட்டுமே. 1995 இல் வலிகாமம் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து, பயணிகள் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. 1996 இல் லயன் ஏர் தனியார் நிறுவனம் கொழும்புக்கு போக்குவரத்து சேவையை ஆரம்பித்தது. 1998 மார்ச் மாதத்தில் மொனாரா ஏர்லைன்சு நிறுவனம் தனது சேவையை ஆரம்பித்தது.[10] இச்சேவை இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறி விடுதலைப் புலிகள் அச்சுறுத்தியதை அடுத்து இச்சேவை 1998 செப்டம்பர் 16 இல் நிறுத்தப்பட்டது.[11] 1998 செப்டம்பர் 29 ஆம் நாள் இரத்மலானையை நோக்கி பகல் 1:48 மணிக்குப் புறப்பட்ட பயணிகள் வானூர்தி லயன்ஏர் 602,[12] 2.10 மணியளவில் காணாமல் போனது. மன்னாருக்கு 15கி.மீ. வடக்கே இரணைமடு என்ற இடத்தில் இது கடலில் மூழ்கியதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.[13] அதில் பயணம் செய்த அனைத்து 55 பேரும் கொல்லப்பட்டனர்.[14] இவ்வானூர்தியை விடுதலைப் புலிகளே சுட்டு வீழ்த்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.[15] 2002 ஆம் ஆண்டில் நோர்வே அரசின் ஆதரவுடனான போர் நிறுத்தம் ஏற்பட்டதை அடுத்து பயணிகள் சேவைகள் மீண்டும் ஆரம்பித்தன.[7] சூன் 2002 எக்ஸ்போஏர் சேவை யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது.[16][17][18] 2013 சனவரி 4 இல் புதிய பயணிகள் ஏறுதுறை நிறுவப்பட்டது.[19][20] வானூர்தி நிறுவனங்களும் சேரிடங்களும்பயணிகள் வானூர்திகள்
சரக்கு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia