லெபனான் உள்நாட்டுப் போர்
லெபனான் உள்நாட்டுப் போர் (Lebanese Civil War, அரபி: الحرب الأهلية اللبنانية - Al-Ḥarb al-Ahliyyah al-Libnāniyyah) 1975 முதல் 1990 வரை லெபனானில் பல தரப்பினரிடையே நடைபெற்ற உள்நாட்டுப் போராகும். இந்த உள்நாட்டுப் போரில் 120,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்படுகின்றது.[2][3]2012ஆம் ஆண்டு நிலவரப்படி, ஏறத்தாழ 76,000 மக்கள் லெபனானின் உள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர்.[4] தவிரவும் இப்போரின் காரணமாக ஒரு மில்லியன் மக்கள் லெபனானை விட்டு வெளியேறியதாகவும் மதிப்பிடப்படுகின்றது.[5] சுன்னி இசுலாமியருக்கும் சியா இசுலாமியருக்கும் இடையேயும், கிறித்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையேயும் நடைபெற்ற இந்த உள்நாட்டுப் போரில் சிரியா, இசுரேல் நாடுகளும் பலஸ்தீன விடுதலை இயக்கமும் ஈடுபட்டன. 1976இல் சிரியா மற்றும் அரபு நாடுகள் கூட்டமைப்பால் ஏற்பட்ட சிறு அமைதிக்குப் பிறகு மீண்டும் உள்நாட்டுச் சண்டை தொடர்ந்தது; முதன்மையாக பாலத்தீன விடுதலை இயக்கம் முதலிலும் பின்னர் இசுரேல் ஆக்கிரமித்திருந்த தென் லெபனானில் சண்டை கூடுதலாக இருந்தது. மே 17, 1983இல் அமெரிக்க ஐக்கிய நாடு ஆதரவு நல்கிய உடன்பாடொன்று லெபனானுக்கும் இசுரேலுக்கும் இடையே ஏற்பட்டது. ஆனால் சிரியா தனது படைகளை மீட்டுக் கொள்ளாததால் இந்த உடன்பாடு தோல்வியுற்றது.[6] ![]() போருக்கு முன்னதாக லெபனான் பல சமயத்தவர் வாழும் நாடாக இருந்தது. கடலோர நகரங்களில் சுன்னிகளும் கிறித்தவர்களும் பெரும்பான்மையினராக இருக்க சியாக்கள் தெற்கு லெபனானிலும் பெக்கா இனத்தவர் கிழக்கிலும் துரூசு, கிறித்தவர்கள் மலைப் பிரதேசங்களிலும் வாழ்ந்து வந்தனர். லெபனான் அரசு மரோனிய கிறித்தவர்களின் ஆதிக்கத்தில் இருந்தது.[7][8] 1920 முதல் 1943 வரை பிரான்சிய குடியேற்றவாத அதிகாரங்களின்படி அரசியலும் சமயமும் தொடர்பானவை ஆயிற்று; நாட்டு நாடாளுமன்றம் கிறித்தவர்களே முன்னிலை வகிக்குமாறு அமைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் முசுலிம்கள் பெரும்பான்மையாக இருந்த நாட்டில் மேற்கத்திய மரபுசார் அரசுக்கு எதிராக இடதுசாரிகளும் அரபுசார் அமைப்புகளும் இயக்கங்கள் அமைத்தனர். இசுரேல் நிறுவப்பட்டு பல்லாயிரக்கணக்கான பாலத்தீன ஏதிலிகள் லெபனானுக்கு இடம்பெயர்ந்தமையால் நாட்டின் முசுலிம் மக்கள்தொகை கூடலாயிற்று. ஆட்சியிலிருந்த மரோனியக் கிறித்தவர்கள் மேற்கத்திய நாடுகளை ஆதரிக்க இடதுசாரிகளும் அரபுசார் குழுக்களும் சோவியத்துடன் இணைந்திருந்த அரபுநாடுகளை ஆதரிக்க பனிப்போரின் போது நாடு பிளவுபட்டது.[9] மரோனியக் கிறித்தவர்களுக்கும் பாலத்தீன விடுதலை இயக்கத்தினருக்கும் 1975இல் சண்டை மூண்டது; பிறகு இடதுசாரிகள், அரபுசார் குழுக்கள் இவர்களுடன் இணைந்து கொண்டனர். [10] இந்தச் சண்டையின்போது கூட்டணிகள் விரைவாகவும் எதிர்பாரா வண்ணமும் மாறிக்கொண்டு வந்தன. மேலும் இசுரேல்,சிரியா போன்ற வெளிநாட்டு சக்திகளும் போரில் ஈடுபட்டு பல்வேறு தரப்பினருடன் இணைந்து சண்டையில் பங்கேற்றனர். ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படை, அமைதிக்கான பன்னாட்டு படை ஆகியனவும் லெபனானில் நிறுத்தப்பட்டன. 1989இல் ஏற்பட்ட டைய்ஃப் உடன்பாட்டை அடுத்து சண்டை முடிவுக்கு வந்தது. சனவரி 1989இல் அரபு நாடுகள் கூட்டமைப்பு நியமித்த குழு சண்டைக்கான தீர்வுகளை முன்வைத்தது. மார்ச்சு 1991இல் நாடாளுமன்றம் மன்னிப்புச் சட்டத்தை செயலாக்கியது; இதன்படி இச்சட்டத்திற்கு முந்தைய அனைத்து அரசியல் குற்றங்களுக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டது.[11] மே 1991இல் ஆயுதக் குழுக்கள் கலைக்கப்பட்டன; ஹிஸ்புல்லா மட்டுமே விலக்காக இருந்தது. லெபனானின் படைத்துறை மட்டுமே சமயச்சார்பற்ற ஒரே ஆயுதமேந்திய அமைப்பாக மீளமைக்கப்பட்டது.[12] இருப்பினும் சண்டைக்குப் பின்னரும் சுன்னிகளுக்கும் சியாக்களுக்கும் இடையே சண்டைகள் இருந்து வந்தன.[13] மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia