ஹேஸ்டிங்ஸ் கமுசு பண்டா
ஹேஸ்டிங்ஸ் கமுசு பண்டா (Hastings Kamuzu Banda) (1898 – 25 நவம்பர் 1997)[1] மலாவி மற்றும் அதன் முந்தைய நியாசாலாந்து தலைவராக 1961ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரை விளங்கியவர்.தனது கல்வியை வெளிநாட்டில் கற்ற பண்டா பிரித்தானிய ஆட்சியின் பிடியில் இருந்த நியாசாலாந்தின் விடுதலைக்காகப் போராடினார்.1963ஆம் ஆண்டு பிரித்தானிய நியாசாலாந்தின் பிரதமராக முறையாக அறிவிக்கப்பட்டு அடுத்த ஆண்டு,1964, அதன் விடுதலைக்கு வழிகோலினார். [2]. இரண்டாண்டுகள் கழித்து மலாவியை குடியரசாக அறிவித்து தன்னை குடியரசுத் தலைவராக அறிவித்துக் கொண்டார். அதிகாரங்களை கையகப்படுத்தி மலாவி காங்கிரசு கட்சி என்ற ஒருகட்சி ஆட்சியை அறிவித்தார்.1970ஆம் ஆண்டு மலாவி காங்கிரசுக் கட்சி அவரை அக்கட்சியின் ஆயுட்காலமுள்ளவளவும் தலைவராக அறிவித்தது. 1971ஆம் ஆண்டு மலாவியின் தலைவராகவும் ஆயுட்காலம் முழுமைக்கும் இருக்குமாறு அறிவிக்கப்பட்டது. ஆபிரிக்காவின் நாடுகளில் மேற்கத்திய நாட்டில் பயின்ற தலைவர் என்றமுறையில் மேற்கு நாடுகளின் ஆதரவைப் பெற்றிருந்தார். பொதுவாக இவர் பெண்ணுரிமைகளை ஆதரித்தும் நாட்டில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டும் நல்ல கல்வி அமைப்பை ஏற்படுத்தியும் பிற ஆபிரிக்க நாடுகளைவிட மலாவியை முன்னேற்றப்பாதையில் நடத்தினார்.இருப்பினும் ஆபிரிக்காவின் மிகுந்த அடக்குமுறை ஆட்சியை நடத்தினார். நிறவெறி கூடிய தென்னாபிரிக்காவுடன் இவர் கொண்டிருந்த முழு தோழமையும் பலத்த கண்டனத்திற்கு உள்ளானது. 1993ஆம் ஆண்டு பன்னாட்டு நெருக்கடியினாலும் பலத்த எதிர்ப்புகளினாலும் பொது வாக்கெடுப்பு நடத்தினார். இதன்மூலம் கூடிய சிறப்பு பேரவை ஒருகட்சி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து இவரது பதவியையும் பறித்தது.அடுத்து நடந்த மக்களாட்சித் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றார். 1997ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் மரணமடைந்தார். இவரது ஆட்சிக்காலத்தைக் குறித்து இரு கருத்துகள் நிலவுகின்றன: மலாவியின் மற்றும் ஆபிரிக்காவின் நாயகர் என சிலரும் சர்வாதிகாரி என சிலரும் கருதுகின்றனர். மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia