அசோக் குமார் (திரைப்படம்)

அசோக் குமார்
அசோக் குமார் பாட்டுப்புத்தக முன்னட்டை[1]
இயக்கம்ராஜா சந்திரசேகர்
தயாரிப்புமதுரை முருகன் டாக்கி பிலிம் கம்பனி
கதைஇளங்கோவன்
வசனம்இளங்கோவன்
நடிப்புஎம். கே. தியாகராஜ பாகவதர்
வி. நாகையா
ரங்கசாமி ஐயங்கார்
என். எஸ். கிருஷ்ணன்
கே. மகாதேவய்யர்
எம். ஜி. இராமச்சந்திரன்
கே. வி. வெங்கட்ராமய்யர்
முறாலி
பி. கண்ணாம்பா
டி. வி. குமுதினி
டி. ஏ. மதுரம்
நடன அமைப்புவைத்தீசுவரன் கோவில் மீனாட்சிசுந்தரம் பிள்ளை குழுவினர்
கலையகம்நியூடோன்
வெளியீடு1941
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அசோக் குமார் 1941-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இளங்கோவன் உரையாடல் எழுத, ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், சித்தூர் வி. நாகையா, என். எஸ். கிருஷ்ணன், எம். ஜி. இராமச்சந்திரன், பி. கண்ணாம்பா, டி. வி. குமுதினி மற்றும் பலர் நடித்துள்ளனர். நியூடோன் ஸ்டுடியோவில் மதுரை முருகன் டாக்கி பிலிம் கம்பெனியால் இது தயாரிக்கப்பட்டது.[2]

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

போர்க்களம் சென்று வெற்றி வீரனாக வந்த தனது மகன் குணாளனை (தியாகராஜ பாகவதர்), தன் இளையாளான திசியரட்சதைக்கு (கண்ணாம்பா) அறிமுகப்படுத்தினார் அசோகர் (வி. நாகையா). அப்பால் அவனுக்கு விரைவாகவே யுவராஜ பட்டாபிசேகம் செய்யவும் நினைத்தார்.[1]

இந்த மகிழ்ச்சிச் செய்தியை தன் காதலி காஞ்சனமாலாவிடம் (டி. வி. குமுதினி) தெரிவித்தான் குணாளன். அதை ஒட்டுக்கேட்ட திசியரட்சதையின் தோழி பிரமீளா (டி. ஏ. மதுரம்) ஆத்திரங் கொண்டு பட்டாபிசேகம் நடக்காதவாறு செய்துவிடவேண்டுமென முயற்சித்தாள். ஆயினும் குணாளனின் பட்டாபிசேகம் நடக்காது நிற்கவில்லை. அந்த பட்டாபிசேகத்தின் போது, திசியரட்சதை குணாளன் நெற்றியில் திலகமிட்டாள். அவனது ஸ்பரிசம் பட்டதும் தன்னையுமறியாமல் அவன்மீது காதல் கொண்டாள். அன்றிரவு காஞ்சனமாலையும் குணாளனும் உல்லாசமாகப் பாடிக்கொண்டிருந்தனர். அவர்களது காதல் பாட்டு திசியரட்சதையின் காமத்தீயை நன்றாகக் கிளறிவிட்டுவிட்டது.[1]

மறுநாள் தன் தந்தையின் விருப்பப்படி குணாளன் திசியரட்சதையின் முன் பாடினான். அவன் பாடிக்கொண்டிருக்கும் போதே, அசோகர் மந்திரியின் அழைப்பிற்கிணங்க, வேலையாக வெளியே சென்றார். இதுதான் சமயம் என்று குணாளனைத் தன் இச்சைக்கு இசையத் தூண்டினாள் இளையராணி. குணாளன் மறுத்தான். இளையராணி வெகுண்டாள். அசோகர் வந்தார். குணாளன் மீது வீண் பழி சுமத்தினாள் திசியரட்சதை.[1]

குணாளன் நாடுகடத்தப்பட்டான். கர்ப்பவதியான காஞ்சனமாலாவையும் வெளியில் துரத்தினாள். குணாளனின் இரு கண்களையும் பிடுங்கச் செய்து வெளியில் துரத்தினாள். கண்ணற்ற குணாளனும், திக்கற்ற காஞ்சனமாலையும் ஒரு கிராமத்தில் சந்தித்து அங்கு கொஞ்ச நாள் தங்க, காஞ்சனமாலைக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அங்கிருந்து குழந்தையுடன் ஊரூராக பிச்சை யெடுத்துப் போய்க் கொண்டிருக்க, திடீரென்று குழந்தை இறந்து விடுகின்றது.[1]

இதற்கிடையே மகனின் பிரிவாற்றாமையினால் மனம் நொந்து சுகவீனமடைந்து, அரச மருத்துவர் சொற்படி, சுவர்ணகிரியில் திசியரட்சதையுடன் வந்திருந்த அசோகர், பாட்டுப்பாடி பிச்சையெடுத்துத் திரிந்த குணாளனின் குரலைக் கேட்டு, அவர்களை வரவழைத்து உண்மை அறிந்தார். திசியரட்சதை நஞ்சருந்தி மாண்டாள்.[1]

புத்தபிக்கு உபகுப்தாச்சாரியாரின் (கே. மகாதேவய்யர்) உதவியால் பகவான் புத்தரின் சந்நிதானத்தில் குணாளனின் இழந்த கண்கள் இரண்டையும் பெற்று சுகமாக வாழ்கிறார்கள்.[1]

நடிகர்கள்

நடிகர் பாத்திரம்
தியாகராஜ பாகவதர் குணாளன்
வி. நாகையா சாம்ராட் அசோகர்
ரங்கசாமி அய்யங்கார் ரதகுப்தர்
என். எஸ். கிருஷ்ணன் வைத்தியர் தேரையன்
கே. மகாதேவய்யர் உபகுப்தர்
எம். ஜி. ஆர் மகிந்திரன்
ரஞ்சன் புத்தர்
முறாலி கஞ்சுகி
பி. கண்ணாம்பா திட்சயரட்சிதை
டி. வி. குமுதினி காஞ்சனமாலா
டி. ஏ. மதுரம் பிரமீளா

இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள்

இப்படத்தில் மொத்தம் 19 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.[1] பாபநாசம் சிவன் பாடல்களை இயற்றியிருந்தார். உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ, சத்வகுண போதன், பூமியில் மானிட ஜென்ம மடைந்துமோர் ஆகிய பாடல்கள் மிகப் பிரபலான பாடல்களாகும்.[2]

பாடல் பாடியோர் இராகம்
சுகம் தருவதே சோலை வாசந்தானே வி. நாகையா, கண்ணாம்பா -
மாநில வாழ்வு பெரும் ஆனந்தம் தியாகராஜ பாகவதர் கல்யாணி
உள்ளங்கவருமென் பாவாய் தியாகராஜ பாகவதர், டி. வி. குமுதினி -
தியானமே எனது மனது நிறைந்தது தியாகராஜ பாகவதர் காபி
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ தியாகராஜ பாகவதர் பைரவி
மானிட வாழ்வினிலே துயர் சுகமும் கே. மகாதேவய்யர் கமாஸ்
மதனனே வா சிருங்காரா கண்ணாம்பா இந்துஸ்தானி
விட்டிட மாட்டேன் தொட்டெனை கட்டியணைத்திடுய்வாய் டி. ஏ. மதுரம், என். எஸ். கிருஷ்ணன் -
தபயோகம் பலிக்கும் நாளே கண்ணாம்பா இந்துஸ்தானி
சத்வகுண போதன் தியாகராஜ பாகவதர் ஜோன்புரி
வன்பசிப் பிணிக்குணவு நம் கையில் கிட்டினும் தியாகராஜ பாகவதர் சிந்துபைரவி
மனமே நீ ஈசன் நாமத்தை தியாகராஜ பாகவதர் குந்தவராளி
பூமியில் மானிட ஜென்ம மடைந்துமோர் தியாகராஜ பாகவதர் -
உன்னையே அன்புடன் வாரியணைக்கும் தியாகராஜ பாகவதர் -
தெரிஞ்சுட்டேன் விஷயம் புரிஞ்சிட்டேன் என். எஸ். கிருஷ்ணன் -
கிடையாது வாழ்விதிலே - சுகமே தியாகராஜ பாகவதர், டி. வி. குமுதினி -
தஞ்சம் நீ கதியே அஞ்சேல் என அயம் அருள்நிதியே கண்ணாம்பா சிந்துபைரவி
சினம் காமம் பொய் களவு வஞ்ச நெஞ்சர் தியாகராஜ பாகவதர் விருத்தம், ராகமாலிகை
பாருலகிலுழன்று நொந்தேன் நொந்தேன் - மோகனம்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 அசோக்-குமார் பாட்டுப் புத்தகம். சென்னை, பிரித்தானிய இந்தியா: தேவி பிரஸ். சூலை 1941.{{cite book}}: CS1 maint: year (link)
  2. 2.0 2.1 ராண்டார் கை (25 சனவரி 2008). "Ashok Kumar 1941". தி இந்து. Retrieved 19 அக்டோபர் 2016.

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya