அபிநந்தன்
அபிநந்தன் வர்த்தமான் (Abinandan Varthaman) இந்திய விமானப்படையில் வானூர்திச் சீறகத் தலைவர் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டில் பெப்ரவரி 27 அன்று பாகிஸ்தானிய இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். சிறைபிடிக்கப்படுவதற்கு முன்பாக அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதையடுத்து வான்குடை மூலம் தரையிறங்கிய இவர் அங்கிருந்த பாகிஸ்தான் மக்களால் தாக்கப்பட்டார். இந்த காட்சிகள் காணொலிகளாக இணையத்தில் பரவிய போது நடந்து கொண்ட விதம், இவர் வெளிப்படுத்திய தேசப்பற்று இவற்றுக்காக உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களிடையே பெரும் அங்கீகாரம் கிடைத்தது. சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானி பாதுகாப்பாகவும், நலமுடனும் மீட்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் நாடு முழுவதும் எழுந்தது. பிறப்பு மற்றும் தொடக்க கால வாழ்க்கைஅபிநந்தன் இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், திருப்பனமூரில் 1983 ஆம் ஆண்டு சூன் 23 ஆம் நாள் பிறந்தார்.[1] இவரது தந்தையார் சிம்மகுட்டி வர்த்தமான் ஆவார். அவரும் இந்திய விமானப்படையில் பணியாற்றியவர் ஆவார்.[1][2] இவரது தாயார் மருத்துவர் ஆவார். இவர் 2004 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் விமானியாக பணியமர்த்தப்பட்டார்.[1] சிறைப்பிடிப்பின் பின்னணி2019 புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்ததாக இந்திய இராணுவம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து பாக்கித்தான் விமானம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது. அப்போது அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்தியாவும் பாகிஸ்தானும் பிரச்சனைக்குரிய காஷ்மீர் பகுதி மற்றும் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டன. சிறைப்பிடிப்புஅபிநந்தன் 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 27 அன்று மிக்-21 இரக விமானத்தில் பறந்து கொண்டிருந்த போது பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து விட்டார். அப்போது அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதிலிருந்து தப்பிக்கும் பொருட்டு வான்குடை ஒன்றின் மூலம் பறந்து தரை இறங்கினார். அவர் தான் இறங்கிய இடம் குறித்து அறிந்து கொள்ளும் பொருட்டு நான் இந்தியாவில் இருக்கிறேனா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். அப்போது ஆம் என்று அங்கு நின்றோர் பதிலளிக்க இந்தியாவை வாழ்த்தும் விதமான முழக்கங்களை எழுப்பியுள்ளார் அபிநந்தன். அப்போது அங்கிருந்தோர் பாகித்தானுக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பி அபிநந்தனைப் பிடிக்க சூழ்ந்துள்ளனர். அபிநந்தன் தன்னிடமிருந்த துப்பாக்கியால் வானை நோக்கிச் சுட்டுக்கொண்டே சென்று அருகில் இருந்த ஒரு குட்டையில் இறங்கி தன்னிடமிருந்த ஆவணங்களை அவர்களிடமிருந்து காக்கும் பொருட்டு அழிக்க முயன்றுள்ளார். கூட்டத்தில் இருந்தவர்கள் அபிநந்தனைத் தாக்கினர். பாகிஸ்தான் இராணுவம் வந்த பிறகு அவர்கள் அருகாமையில் உள்ள இராணுவ முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.[3] அவர் தாக்கப்பட்ட காணொலிகள் இணையத்தில் வெளியிடப்பட்டன. அபிநந்தனை மீட்க வேண்டும் என இந்திய அரசு முயற்சி செய்தது. இந்தியா பல்வேறு நாடுகளிடமும் இது குறித்து அழுத்தம் கொடுத்தது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்சு, பிரித்தானியா, யப்பான் உள்ளிட்ட நாடுகள் சமரச முயற்சியில் ஈடுபட்டன.[4] மீட்பு2019 பெப்ரவரி 28 அன்று பாகிஸ்தான் அரசு அமைதிப்பேச்சுக்கான ஒரு அறிகுறியாக அபிநந்தனை 2019 மார்ச் 1 அன்று வாகா எல்லையில் விடுவிப்பதாக அறிவித்தது. அபிநந்தனின் விடுதலையைத் தடுத்து நிறுத்த இசுலாமாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் நீதிமன்றம் அந்த மனுவை தாக்கல் செய்யப்பட்ட அன்றே தள்ளுபடி செய்தது.[5] 2019 மார்ச் 1 ஆம் நாள் இரவு 9.23 மணியளவில் இந்திய எல்லைக்குள் நுழைந்தார்.[6][7][8] இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அபிநந்தனின் விடுதலையை வரவேற்றுள்ளார். அவரைக் குறித்து தேசமே பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.[9] வீர் சக்ரா விருதுக்கு பரிந்துரைமருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு அபிநந்தனுக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் பணியில் சேர்க்கப்பபட்டார். பாதுகாப்பு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக விமானப்படை கருதியதால் மேற்கு மண்டலத்திற்குப் பணியிட மாறுதல் செய்யப்பட்டார். வீர தீரச் செயல்களுக்கான வீர் சக்ரா விருதிற்கு அபிநந்தனின் பெயரை இந்திய விமானப்படை பரிந்துரை செய்துள்ளது.[10] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia