அறிவாய்வியல்
![]() அறிவாய்வியல், அறிவுத்தோற்றவியல் அல்லது அறிதலியல் (Epistemology, (/[invalid input: 'ɪ-']ˌpɪst[invalid input: 'ɪ-']ˈmɒlədʒi/ (ⓘ); என்பது அறிவை ஆய்வு செய்யும் துறை; இது மெய்யியலின் ஒரு கிளைப்பிரிவு ஆகும்.[1] அறிவாய்வியலில், அறிவின் தன்மை, அதை நிறுவும் முறைகள், நம்பிக்கையைப் பற்றிய ஆதாரங்கள் ஆகியன ஆராயப்படுகின்றன. இந்த ஆய்வை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்:
அறிவாய்வியலில் கீழ்க்கண்ட கேள்விகள் கேட்கப்படுகின்றன:
எபிஸ்டமாலஜி எனும் சொல் முதலில் 1854 இல் இசுகாட்டிய மெய்யியலாளராகிய ஜேம்சு பிரெடெரிக் பெரியர் பயன்படுத்தினார்..[a] என்றாலும், பிரெட் வாரன், இசுகாட்லாந்தின் ஆறாம் யேம்சு ஆகியோர் இந்த மெய்யியல் கருத்துப்படிமத்தை (Epistemon) எனும் பாத்திரம் வழியாக பொ.ஊ. 1591-இலேயே கையாண்டுள்ளனர்.[7] ஐயுறுவாதத்தினால் வரும் சிக்கல்கள்ஐயுறுவாதத்தினால் வரும் சிக்கல்கள் (The Problem of Skepticism) பல. ஐயுறுவாதம் என்பது எந்த ஒரு கருத்தையும் முழுமையாக ஏற்றுக் கொள்ளாமல், அனைத்தையும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பது. அதாவது, அறிவு என்று சொல்வதை எப்படி நம்புவது? ஒன்றை நம்புவதாலேயே அது உண்மை என்றோ பொய் என்றோ ஆகாது.[8] நாம் காண்பவை அனைத்தும் பொய்யாக இருக்கலாம். இந்த உலகத்தின் "உண்மை"யான தோற்றம் நம் கண்களுக்குப் புலப்படாமல் போகலாம். சரியான, ஆழ்ந்த அறிவு அல்லது மேலோட்டமான அறிவு என்பது ஒருவர் கண்ணோட்டத்தையும், அவர் அறிவு என்பதை எவ்வாறு விளக்க வருகிறார் என்பதையும் பொறுத்து இருக்கிறது.[8][9] எனவே, நாம் உண்மை என முடிவு செய்வதெல்லாம் நம் புலன்கள் நமக்கு உணர்த்துவதை வைத்துத்தான் செய்கிறோம். ஐயுறுவாதத்திற்கு விடை அளிக்க, ஒரு சிலர் "அடிப்படைக் கருத்துக்கள் வாதம்" (Foundationalism) என்ற கருத்தை முன் வைக்கின்றனர்.[10] இதன்படி, ஒரு சில கருத்துக்கள், ஆதாரம் இல்லாமலேயே உண்மை எனக் கருத முடியும். ஐயுறவாதம் இதை வன்மையாகக் கண்டிக்கிறது. ஏனெனில், ஆதாரம் இல்லாமல் உண்மை என்பது ஒரு வகையான அறியாமையே.[11] இது, சருக்கலான சரிவு (slippery slope) போன்றதாகும். [12] ஆயினும், "அடிப்படைக் கருத்துக்கள் வாதம்" செய்வோர் மன்சாசன் முத்தலைக் கொள்ளி (Münchhausen trilemma) வாதம் என்றொரு வாதத்தினை முன் வைக்கின்றனர்.[13] இந்த வாதத்தின் படி, ஒன்றை உண்மை என நிறுவ, மூன்று வழிகள் உள்ளன. இந்த மூன்றில், ஒன்றை நாம் எடுத்தால் தான் எதையும் உண்மை என நிறுவ முடியும் என்கின்றனர். ஆனால், ஐயுறுவாதம் பேசுவோர், உண்மை என்று நிறுவ, மூன்று வழிகளில் நாம் எதையும் எடுக்க இயலாது; அப்படி ஒரு வழியை எடுத்தாலும், ஒரு கருத்தின் மீது நம்பிக்கையை உருவாக்குமே தவிர, உண்மையைக் கொண்டு வராது என்று வாதிடுகின்றனர். எது எப்படி இருப்பினும், நடைமுறையில், ஐயுறுவாதம் ஒரு அளவுக்கு மேல் கொண்டு செல்லப்படுவதில்லை. அண்மையில், இந்த வாதத்தில் கீழ்க் கண்ட ஒரு சில மாறுதல்கள் செய்யப் பட்டுள்ளன.[3] பரணிடப்பட்டது 2010-02-03 at the வந்தவழி இயந்திரம் எடுத்துக் காட்டாக, புனைவியம் (Fictionalism) [14][15] என்ற வாதத்தில், ஒரு கருத்து முழு உண்மை என்று கூறுவதற்குப் பதிலாக, அந்தக் கருத்தினால் வரும் பயன், கலைநயம் ஆகியனவற்றைக் கருதி, அக் கருத்தை ஏற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. அது போலவே, உள்ளொளிவாதம் (Fideism) என்பதில், நம்பிக்கையும் பகுத்தறிவும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை; ஆயினும், நம்பிக்கையைப் பயன் படுத்தி, உண்மையைச் சென்று அடைய முடியும் என்ற கருத்து முன் வைக்கப் படுகின்றது. [16] [17] ஐயுறுவாதத்தில், இரண்டு பிரிவுகள் இருக்கின்றன: குறைபடுத்தப் பட்டது (mitigated), குறைபடுத்தப் படாதது (unmitigated). குறைபடுத்தப் பட்ட ஐயுறுவாதத்தில், முழு உண்மை, "வலிமையுள்ள" உண்மை, கண்டிப்பான உண்மை என்பன போன்ற கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. அதற்கு மாறாக, ஒரு கருத்து "வலுவற்ற உண்மை"யாக இருக்கலாம் என்பதை ஏற்றுக் கொள்கிறது. "வலுவற்ற உண்மை" என்று சொல்லப்படுவதும் கூட ஆதாரத்தோடு முன் வைக்கப் படும் கருத்துக்களாகவே இருக்க வேண்டும். இவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும் அறிவு, "மெய்நிகர் அறிவு" (virtual knowledge) எனப்படும். குறைபடுத்தப் படாத ஐயுறுவாதத்தில், "மெய்நிகர் அறிவு", "வலிமையுள்ள" அல்லது "வலிமை அற்ற" அறிவு போன்ற கருத்துக்கள் கூட ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.[8] மாறாக, இது போன்ற பாகுபாடுகள் ஒருவர் கண்ணோட்டத்தையும், அவர் அறிவு என்பதை எவ்வாறு விளக்க வருகிறார் என்பதையும் பொறுத்து இருக்கிறது என்ற கருத்து வலியுறுத்தப் படுகின்றது.[8] அறிவாய்வியல் சொல் தோற்றம்"அறிவாய்வியல்" என்ற சொல்லின் தோற்றம் (etymology) நீண்ட வரலாறு கொண்டது. அறிவாய்வியல் எனப் பொருள்படும் epistemology எனும் சொல் பண்டைய கிரேக்கச் சொல்லாகிய epistēmē எனும் சொல்லில் இருந்து கொணரப்பட்டதாகும். இச்சொல்லின் பொருள் அறிவு என்பதாகும். பின்னொட்டான -logy என்பது பண்டைய கிரேக்கச் சொல்லாகிய logos எனும் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். இதன் பொருள் உரையாடல் என்பதாகும். ஜேம்சு பிரெடெரிக் பெரியர் (James Frederick Ferrier) epistemology எனும் சொல்லை 'உள்ளியம்' (Ontology) எனும் சொல்லின் வடிவத்தில் உருவாக்கி, அறிவின் பொருண்மையைக் கண்டுபிடிக்கும் நோக்குடைய மெய்யியலின் ஆய்வுக்குப் பெயர்சூட்டினார். இவர் இந்த ஆராய்ச்சியின் தொடக்கத்தையே மெய்யியலின் உண்மையான தொடக்கமாகவும் அறிவித்தார். இந்தச் சொல், Wissenschaftslehre எனும் செருமானியக் கருத்துப்படிமத்துக்கு இணையானதாகும்; இச்சொல்லை செருமானிய மெய்யியலாலர்களாகிய யோகான் பிட்சேவும் பெர்னார்டு போல்சானாவும் வெவ்வேறு திட்டங்களில் எட்மண்டு குசரலுக்கு முன்பே பயன்படுத்தினர். பின்னர் பிரான்சு மெய்யியலாளர்கள் épistémologie எனும் சொல்லுக்கு [théorie de la connaissance] என, அதாவது, "அறிவுக் கோட்பாடு" எனும் குறுகிய பொருளைத் தந்தனர். எடுத்துகாட்டாக, எமிலி மேயர்சன் (Émile Meyerson) 1908-இல் எழுதிய Identity and Reality எனும் நூலில், "இச்சொல் இப்போது அறிவியியல் ஆய்வில், மெய்யியல் என்ற பொருளில் பரவலாகப் பயன்படுகிறது," என்ற குறிப்புரையுடன் வெளியிட்டார்.[18] அறிவுஅறிவு (knowledge) என்பது என்ன? என்னும் கேள்வி பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. கணிதத்தில், "2 + 2 = 4" என்பது அறிவு. "இரண்டு எண்களை எப்படிக் கூட்டுவது," என்பதும் அறிவு. அது போல, ஒருவரை அறிவது [19], ஓர் இடத்தை அறிவது, ஒரு பொருளை அறிவது அல்லது ஒரு செயலை அறிவது அனைத்தும் அறிவே. ஒரு சில மெய்யியலாலர்கள், ஒரு கருத்தைப் பற்றிய அறிவு, ஒரு செயலைப் பற்றிய அறிவு, பட்டறிவு (knowledge through experience) ஆகிய மூன்றும் வெவ்வேறானவை என்றும், அறிவாய்வியல் என்பது கருத்தைப் பற்றிய அறிவை மட்டுமே ஆய்வு செய்வது என்றும் கருதுகின்றனர்.[20] இந்த பாகுபாடுகள் ஆங்கிலத்தில் வெளிப்படையாக அமையவில்லை எனினும் பிற மொழிகளில் இவை வெளிப்படையாகவே வரையறுக்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு, போர்த்துகேயம், எசுபானியம், செருமன், டச்சு ஆகிய மொழிகளில் ஒருவரை அறிவது அல்லது ஒன்றை அறிவது என்பது முறையே connaître, conhecer, conocer, kennen ஆகிய சொற்களாலும், ஒன்றை எப்படி செய்வது என்பது savoir, saber and weten ஆகிய சொற்களாலும் மொழிபெயர்க்கப்படுகிறது. புது கிரேக்க மொழியில் இவற்றுக்கு γνωρίζω (gnorízo) , ξέρω (kséro) என்பன முறையே பயன்படுகின்றன. இத்தாலிய மொழியில் இவற்றுக்கு முறையே conoscere, sapere ஆகிய வினைகளும் conoscenza sapienza ஆகிய பெயர்ச்சொற்களும் பயன்படுகின்றன. செருமனி மொழியில் இவற்றுக்கு முறையே wissen, kennen ஆகிய வினைகளும் பயன்படுகின்றன. Wissen என்பது ஓர் உண்மையை அறிவதையும் kennen என்பது அடைதல் அல்லது செய்ய அறிதல் எனும் பொருளையும் குறிக்கின்றன; kennen, என்பதில் இருந்து Erkennen, எனும் பெயர் உருவாகிறது. இது நினைவுபடுத்தல் அல்லது பெற்றதை அறிவித்தல் வடிவத்தில் அமையும் அறிவைக் குறிக்கிறது. இச் சொல்லின் வினை, ஒரு செயலை அல்லது நிகழ்வை, அதாவது, ஒருநிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறுதலைக் குறிக்கிறது; இது erkennen அற்ற நிலையில் இருந்து உண்மையான erkennen நிலைக்கு மாறுவதைக் குறிக்கிறது. இந்த வினை, இன்றைய ஐரோப்பிய மொழிகளில் அறிதல் அலகான "episteme" எனும் சொல்லைக் குறிக்க மிகப் பொருத்தமான சொல்லாகும். எனவே, அறிவாய்வியல் செருமனி மொழியில் "Erkenntnistheorie" எனும் சொல்வழி அழைக்கப்படுகிறது. இந்த மொழியியல் சிக்கல்களின் விளக்கமும் தகவும் இன்னமும் தீர்வு எட்டப்படாத விவாதத்திலேயே உள்ளன. பெர்ட்ரேண்டு இரசல் சுட்டிக் குறித்தல் (On Denoting) எனும் தன் ஆய்வுக் கட்டுரையிலும் மெய்யியலின் சிக்கல்கள் (Problems of Philosophy) என்ற பிந்தைய நூலிலும் விளக்க அறிவுக்கும் (knowledge by description) பட்டறிவுக்கும் (knowledge by acquaintance) இடையிலான பாகுபாட்டை வலியுறுத்திக் கூறியுள்ளார். கில்பெர்ட் இரைல் (Gilbert Ryle) என்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அறிஞரும் (பொ.ஊ. 1900–1976) ' மனம் எனும் கருத்துப்படிமம் (The Concept of Mind) என்ற தனது நூலில், கருத்து அறிவுக்கும் செயல் அறிவுக்கும் இடையிலான வேறுபாட்டைச் சுட்டிக் காட்டியுள்ளார். மைக்கேல் பொலானியும் சொந்த அறிவு (Personal Knowledge) எனும் தன் நூலில், ஏட்டறிவுக்கும் நடை முறை அறிவுக்கும் உள்ள தொடர்பை மிதிவண்டியினை சமனிலையில் ஓட்டுதல் எனும் எடுத்துகாட்டுவழி விளக்குகிறார். அதாவது, மிதிவண்டியைச் சமனிலையில் ஒட்டுவதற்கான இயற்பியல் (Physics) அறிவு என்பது அதை நடைமுறையில் ஓட்டிப் பழகிப் பெறும் அறிவுக்கு ஈடாகாது எனவும் இரண்டும் எப்படி தனிவகை அறிவாக நிறுவப்படுகின்றன என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் வாதிடுகிறார், இந்த நிலைப்பாடு கில்பெர்ட் இரைலினுடையதே (Gilbert Ryle) எனலாம். இரைல் இந்த இருவகை அறிவையும், அதாவது, தகவல் அறிவையும் செயல் அறிவையும் புரிந்துகொள்ள மறுத்தல், முடிவில்லாத பின்னோக்கு வாதப் பிரச்சினையில் (infinite regress) கொண்டு சேர்க்கும் என எச்சரிக்கிறார். அண்மையில், எர்னெசுட்டு சோசா, மெய்யியலளர் ஜான் கிரேக்கோ, ஜொனாதன் கிவான்விகு, இலிண்டா திரிக்கவுசு சாகுசெவ்சுகி, டங்கன் பிரிச்சார்டு ஆகியோர் அறிவாய்வியல் என்பது மக்களின் இயல்புகளை (அதாவது, அறிதிறன் விழுமியங்களை) மதிப்பீடு செய்யவேண்டுமே ஒழிய, அவர்களது கூற்றுகளையோ அக்கூற்றுவழி உளப்பான்மைகளையோ அல்ல என வாதிடுகின்றனர்.[சான்று தேவை] நம்பிக்கைநாம் சில கருத்துக்களை முழு உண்மை (absolute truth) என்று நம்புகிறோம்; மற்றும் ஒரு சிலவற்றை உண்மை என்று ஏற்றுக் கொண்டுவிடுகிறோம். அறிவாய்வியலில், இவை எல்லாம் நம்பிக்கைகள் (beliefs) என்று அழைக்கப் படுகின்றன.[21] உண்மைஉண்மை (Truth) என்பது மெய்யான கருத்து அல்லது மெய்யான நடை முறையைக் குறிக்கும் சொல்லாக இருந்து வருகின்றது.[22] ஆராய்ச்சியாளர்கள் உண்மையைப் பற்றி பல்வகை கோட்பாடுகளும், பார்வைகளும் முன் வைத்து உள்ளனர்.[23] ஒருவர் ஒன்றை நம்ப அது உண்மையா, இல்லையா என்பது முன் தேவையாக (prerequisite) இருப்பதில்லை. மாறாக, ஒன்றைப் பற்றி உண்மையான அறிவு இருந்திருந்தால், அந்த அறிவு பொய்யாக இருக்க முடியாது. எடுத்துகாட்டாக, தன்னைத் தாங்குமளவுக்கு ஒரு பாலம் பாதுகாப்பனதே என நம்பினால், அவர் அதைத் தாண்ட முயன்று அவரது எடையால் பாலம் உடைந்து விழுந்தால், அப்போது அவர் பாலம் பாதுகாப்பனது என நம்பினார் எனக் கூறலாம். ஆனால், அவரது நம்பிக்கை தவறாகப் போய்விட்டது. எனவே, பாலம் பாதுகாப்பானது என அறிந்திருந்தார் எனக் கூறுவது சரியாகாது; ஏனெனில் அக்கூற்று இயல்பாகவே சரியன்று. இதற்கு மாறாக, பாலம் அவரது எடையைத் தாங்கினால், மேலும் அவர் அதைத் தாண்டி அதை நிறுவினால், அப்போது அவர் பாலம் பாதுகாப்பானதென அறிந்திருந்தார் என்பது சரி. "நம்பிக்கை" என்பது உண்மையைத் தாங்கி நிற்கும் ஒரு உண்மைத் தாங்கி(truth-bearer) என எடுத்துக் கொள்ளலாமா என வாதிட்டு வருகின்றனர். சிலர் அறிவை நிறுவப்பட்ட உண்மைக் கூற்றுகளின் அமைப்பு என்று கூற, மற்றவர்களோ சொற் றொடர்களின் நிறுவப்பட்ட உண்மை அமைப்பு என்கின்றனர். பிளேட்டோ தனது ஜார்ஜியாசு (Gorgias) உரையாடலில், நம்பிக்கை என்பது மிகப் பொதுவாக ஏற்கும் உண்மைதங்கியாகும் என வாதிடுகிறார்.[24] ஆதாரம்ஒரு கருத்தை அறிவாக ஏற்றுக் கொள்ள வேண்டுமாயின், அந்தக் கருத்து உண்மையானது என்பதற்கு ஆதாரம் (Justification) வேண்டும். சாக்கிரட்டீசு (Socrates, கி.மு 470/469 – கி.மு 399) தனது தியேடெட்டசு (Theaetetus) என்ற உரையாடலில், அறிவு என்றால் என்ன என்பது பற்றிய பல கோட்பாடுகளை மேற்கோள் காட்டுகிறார். அதில் அவர் கூறுவது, அறிவு என்பது விளக்கம் அமைந்த உண்மையான நம்பிக்கை என்பதாகும்.[சான்று தேவை] இங்கு விளக்கம் என்பதன் பொருள் ஏதோ ஒரு வழியில் அறிவு விளக்கவோ வரையறுக்கவோ பட்டிருக்கவேண்டும் என்பதே ஆகும். அறிவு என்பது நிறுவப்பட்ட உண்மையைப் பற்றிய நம்பிக்கை என்ற கோட்பாட்டின்படி, தரப்பட்ட கூற்று உண்மையென அறிய, ஒருவர் பொருத்தமான உண்மைக் கூற்றை நம்பினால் மட்டும் போதாது, அவர் அதை நம்புவதற்கான தகுந்த அறிவார்ந்த விளக்கத்தையும் தரவேண்டும். இதன் உட்பொருள், ஒருவர் உண்மையாக நிகழும் நிகழ்ச்சி ஒன்றை நம்பினால் மட்டும் அது பற்றிய அறிவை ஈட்ட முடியாது என்பதே. எடுத்துகாட்டாக, மருத்துவப் பயிற்சியற்ற ஒரு நோயாளி, பொதுவாக நல்லதே நடக்கும் என்ற மனப்பன்மையுள்ளவர்; தான் தனது நோயில் இருந்து விரைவாக நலமடைவோம் என்று நம்பலாம். ஒருவேளை இவரது இந்த நம்பிக்கை மெய்யாகலாம்; இருந்தாலும் தான் நலமுறுவோம் என அறிதிருந்தார் எனக் கூறமுடியாது; எனெனில் இவரது நம்பிக்கைக்கு முன்பு அவரிடம் ஆதாரம் ஏதும் இல்லை என்பதால் எனலாம். 1960 வரை அனைவராலும் அறிவு என்பது நிறுவப்பட்ட உண்மையான நம்பிக்கை எனும் வரையறை ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், அப்போது அமெரிக்க மெய்யியலாளராகிய எட்மண்டு கெட்டியர் (Edmund Gettier) வெளியிட்ட ஓர் ஆய்வு பரவலாக பல்வேறு விவாதங்களை எழுப்பியது.[சான்று தேவை] கெட்டியர் சிக்கல்![]() எட்மண்டு கெட்டியர் 'நிறுவப்பட்ட உண்மையான நம்பிக்கை அறிவா?' எனும் சிறு ஆய்வை 1953 இல் வெளியிட்டு பெரும்புகழ்பெற்றார்; இது நெடுங்காலமாக மெய்யியலாளர்கள் கொண்டிருந்த அறிவுக் கோட்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கியது.[25] இவர் குறிப்பிட்ட எளிய எதிர்மாறான எடுத்துகாட்டை, ஆயிரம் ஆண்டுகளாக விளங்கிய ஒரு முதன்மையான கோட்பாட்டுக்கு முன் வைக்க முடிந்தால், மெய்யியலின் உண்மையான மதிப்புதான் என்ன எனும் கேள்வியை எழுப்பியது. ஒரு சில பக்கங்களிலேயே கெட்டியர், ஒருவர் நம்பிக்கை நிறுவப்பட்ட நம்பிக்கையாக இருந்த போதும், பல சூழல்களில், அது அறிவு என்று கருதப் படாமல் போகலாம் என வாதிட்டார். அதாவது, ஓர் உண்மையான கூற்றின் நிறுவப்பட்ட நம்பிக்கை என்பது கட்டாயத் தேவை என்றாலும், அது அக்கூற்றை அறிய போதுமானதல்ல எனக் கெட்டியர் கருதினார். விளக்கப்படத்தில் உள்ளபடி, ஒருவர் உண்மைக் கூற்று ஒன்றை நம்பினாலும் (ஊதாப் பகுதி), அது "அறிவு" எனும் கருத்தினத்தில் அடங்காது (மஞ்சள் பகுதி). அறிவு என்பது மூன்று உட்கூறுகளைக் கொண்டது: 1) உண்மையான தன்மை(Truth); 2)உண்மையென நம்புகின்ற மன நிலை(Belief); மற்றும் 3) உண்மையென நம்புவதற்கான ஆதாரங்கள்(Justification). ஒன்றைப் பற்றிய அறிவு ஒருவருக்கு உள்ளது என்று சொல்லுவதற்கு இந்த மூன்றும் தேவை. இந்த JTB - அறிவுக் கோட்பாடு என்பது பிளேட்டோ என்ற கிரேக்க அறிஞரால் முதலில் கூறப் பட்டது எனக் கருதப் படுகின்றது. நெடுங்காலமாக சரி எனக் கருதப்பட்ட இக் கோட்பாட்டில் பிழை இருக்கிறது எனக் கெட்டியர் சுட்டிக் காட்டினார். அதாவது, J, T, மற்றும் B எனும் மூன்று கூறுகளும் சரியாக இருந்தாலும், ஒரு சில நேரங்களில், அறிவு சரியாக இல்லாமல் போக வாய்ப்புண்டு. கெட்டியர் இதை இரண்டு சிறு எடுத்துக் காட்டுகளைக் கொண்டு நிறுவினார்.[26] கெட்டியருக்கு எதிர் வாதங்கள்கெட்டியர் கருத்துக்களை மறுத்து ஒரு சில எதிர் வாதங்கள் முன் வைக்கப் பட்டன. இந்த எதிர் வாதங்கள் "அறிவு" என்றால் என்ன என்பதை வேறு வகையாக வரையறை செய்தன.[27] பொய்ப்பிக்கவியலாமை, பயனிலாமை வாதங்கள்கெட்டியர் கருத்திற்கு எதிர் கருத்தாக, ரிச்சர்டு கிர்க்கம் (Richard Kirkham) என்னும் அமெரிக்க மெய்யியலாளர் (philosopher) காரணங்கள், பொய்ப்பிக்கவியலாமை தன்மை கொண்டவையாக இருக்க வேண்டும் என்று கூறினார். [28] பொய்ப்பிக்கவியலாமை(Infallibilism) என்பது, ஒரு கருத்து உண்மை என நம்புவதற்கான ஆதாரங்கள் (Justification) எக் காரணம் கொண்டும் பொய்யாகும் வாய்ப்பு இல்லாமல் இருக்க வேண்டும். அதாவது, ஆதாரங்கள் சரியாக இருக்குமாயின், அவற்றை ஆதாரமாகக் கொண்ட கருத்தும் உண்மையாகவே இருக்க வேண்டும். கெட்டியர் கருத்திற்கு எதிர் வாதமாக பயனிலாமை(indefeasibility) என்ற வாதமும் முன் வைக்கப் பட்டது. இதன் படி, ஒரு கருத்து நம்புவதற்கான ஆதாரங்களுக்காக (J1) மட்டும் உண்மை என்று இருப்பதில்லை; மாறாக, அக் கருத்து வேறு ஒரு சில ஆதாரங்களுக்காகவும்(J2) உண்மையாக ஆகலாம். இவ்வாறு ஆகுமாயின், முதல் ஆதாரம் (அதாவது, J1) பயனற்ற ஆதாரங்களாக ஆகி விடும். அதனால், J2 போன்ற ஆதாரங்கள் இருக்கக் கூடாது. நம்பகத்தன்மை வாதம்நம்பகத்தன்மை வாதம் (Reliabilism) கீழ்க்கண்டவாறு வைக்கப்படுகின்றது. ஒரு கருத்து(Q): 1)உண்மையாக இருக்க வேண்டும்; 2)அதை ஒருவர்(P) ,உண்மை என நம்ப வேண்டும்; 3) அவர் அதை உண்மைதான் என நம்ப, ஒரு நம்பகத்தன்மை கொண்ட முறையைப் பின்பற்றி இருக்க வேண்டும். இந்த மூன்று நிபந்தனைகளும் நிறைவேற்றப் பட்டு இருந்தால், P-என்பவர் Q-என்ற கருத்தை அறிந்தவராகக் கருதப் படுவார். அதாவது, Q-எனும் கருத்து, P-என்பவரின் அறிவாக மாறும். இந்த வாதத்தை ஆல்வின் கோல்டுமேன்(Alvin Goldman), மார்சல் சுவைன்(Marshall Swain), கென்ட் பாக் (Kent Bach), ஆல்வின் பிளான்டின்கா (Alvin Plantinga) ஆகியோர் முன் வைத்தனர். [29] [30] [31] ஏனைய எதிர்வாதங்கள்இராபெர்ட்டு நாஸ்விக்(Robert Nozick), டிமதி வில்லியம்சன் (Timothy Williamson) ஆகியோர் இன்னும் சில எதிர் வாதங்களை முன் வைத்தனர். நாஸ்விக் கீழ்க் கண்டவாறு வாதிட்டார்: ஒரு கருத்து(Q): 1)உண்மையாக இருக்க வேண்டும்; 2)அதை ஒருவர்(P) ,உண்மை என நம்ப வேண்டும்; 3) அந்தக் கருத்து பொய்யாக இருக்குமாயின், P அதை உண்மை என நம்ப மாட்டார்; 4) அந்தக் கருத்து உண்மையாக இருப்பின், P அதை உண்மை என நம்புவார். இதில் வரும் மூன்றாவது நிபந்தனை கெட்டியர் சுட்டிக் காட்டும் சிக்கலுக்குத் தீர்வாக இருக்கும் என நாஸ்விக் வாதிட்டார்.[32] டிமதி வில்லியம்சன் அவர்களின் வாதத்தின் படி, Q-என்ற ஒரு கருத்தை, P-என்ற நபர் ஒருவர் அறிந்து (அதாவது, தன்னுடைய அறிவாகப் பெற்று) இருக்கிறார் என்று கூற, உண்மை, நம்பிக்கை, நம்புவதற்கான ஆதாரங்கள் ஆகியன தேவையான (necessary) கட்டியங்கள் (conditions) மட்டுமே; அவை போதுமான கட்டியங்கள் (sufficient conditions) எனக் கூற இயலாது. [33] புறநிலைவாதமும் அகநிலைவாதமும்ஒரு கருத்து Q அறிவார்ந்தது என்று P என்ற ஒருவரால் ஏற்றுக்கொள்ள J என்ற ஆதாரம் பயன்படுத்தப் படும். இந்தக் காரணம் புற உலகில் (சூழ் நிலையில்) இருந்து வரலாம், அல்லது அக நிலையில் (மன நிலை) இருந்து வரலாம். அதைப் பின் பற்றிய வாதங்கள் முறையே புறநிலை வாதம்(Externalism) என்றும் அகநிலை வாதம்(Internalism) என்றும் அறியப்படும்.[34] அறிவின் முக்கியத்துவம்ஒரு கருத்து (அறிவுக் கூற்று Q) உண்மையானது என்பதை விட, நடை முறையில் அது எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தான் இன்றியமையாதது. அறிவின் முக்கியத்துவம் முதன் முதலில் பிளேட்டோவின் மெனோ (Meno) என்ற உரையாடலில் குறிப்பிடப் பட்டுள்ளது. ஓர் அறிவான கருத்து, வெறும் உண்மையான கருத்தை விட சிறப்பு வாய்ந்தது என்று சாக்ரடீசு கூறுகிறார்.[35] அறிவு என்பது நம்பகத்தன்மை (Reliabilism) கொண்டதாக இருக்க வேண்டும் என்று கருதப் படுகின்றது. ஆனால் அது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பின், அதன் நம்பகத்தன்மையைப் பற்றி கவலைப் படத் தேவை இல்லை. ஒரு குவளை தேநீரின் சுவை தானே இன்றியமையாதது தவிர, அதைப் போட பயன் படுத்தப் படும் கருவிகள் எவ்வளவு நம்பகத்தன்மையை வாய்ந்தவை என்பது அன்று. [36] எனவே, சகசெபுசுகி (Linda Trinkaus Zagzebski) என்ற அமெரிக்க மெய்யியல் அறிஞரின் கூற்றுப் படி, ஒரு அறிவுக் கூற்றின் நம்பகத்தன்மையைவிட அது எந்த அளவுக்கு உண்மையானது என்பதே முக்கியம். (ஆனால் இதைக் கோல்டுமேன்(Alvin Goldman), ஆல்சன் (E.J. Olsson) ஆகியோர் மறுக்கிறார்கள்.[37]) இனி, கவான்விக் (Jonathan Kvanvig) போன்றோர், அறிவின் முக்கியத்துவத்தை விடுத்து, அந்த அறிவைப் பெற்றிருக்கும் ஒருவர் எவ்வாறு அதைப் புரிந்து(understand) கொள்கிறார் என்பதே முக்கியம் என்கின்றனர்.[38] [39] அறிவைச் சேர்த்தல்அறிவைச் சேர்த்தல்(acquiring knowledge) என்பது பல வழிகளில் நடை பெறுகின்றது. புலன்சாரா அறிவும் புலன்சார் அறிவும்
இந்த இரண்டுக்கும் உள்ள வேற்றுமையை விளக்க புரூசு இரசல் (Bruce Russell) ஒரு எடுத்துக் காட்டு கொடுக்கின்றார். [40]
2 + 2 = 4 என்ற கருத்தை ஒருவர் ஏற்றுக் கொண்டால், அந்தக் கருத்து அவரது புலன்சாரா அறிவு ஆகும். ஏனெனில், இந்தக் கருத்து அவர் சிந்தனையால் வந்தது; புலன்களின் பட்டறிவால் (experience) வந்ததன்று. ஆனால், 2 குவளை நீரும் 2 குவளை நீரும் சேர்ந்தால் 4 குவளையாகும் என்பது புலன் சார்ந்த அறிவு; பட்டறிவினால் வந்தது.[4] படிமலர்ச்சி உளவியல் (Evolutionary psychology) - இன் படி, மனிதரிடத்தில், புலன்சாரா அறிவு என்பது மிகக் குறைவான அளவிலேயே இருக்கின்றது; பெரும்பாலான அறிவு புலன்சார் அறிவே.[41] பகுப்பாய்வு தொகுப்பாய்வு பாகுபாடுஇம்மானுவேல் கான்ட் (Immanuel Kant) என்ற செருமானிய மெய்யியல் அறிஞர் (1724-1804) தாம் எழுதிய பகுத்தறிவு பற்றிய திறனாய்வு (Critique of Pure Reason) என்ற நூலில், பகுப்பாய்வுக்கும் (analytic) தொகுப்பாய்வுக்கும் (synthetic) உள்ள பாகுபாட்டைக் கூறியுள்ளார். ஒரு கூற்று (proposition), அது தன் இயல்பிலேயே, உண்மையை வெளிப்படையாகக் கொண்டிருக்குமேயானால், அந்தக் கூற்று பகுப்பாய்வுக் கூற்று (analytic proposition) எனப்படும்.[42] எடுத்துக்காட்டாக, "என் தந்தையின் தம்பி எனக்குச் சித்தப்பா ஆவார்" எனும் கூற்று ஒரு பகுப்பாய்வுக் கூற்று ஆகும். ஏனெனில், இந்தக் கூற்றின் பொருளை, அதில் வரும் சொற்களையும், அவை வரும் வரிசை முறையையும் (sequence) வைத்து, நாம் கணித்துக் கொள்ளலாம். மாறாக, தொகுப்பாய்வுக் கூற்றின் (synthetic proposition) பொருள் உலக நடைமுறையோடு தொடர்பு கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக, "என் தந்தையின் தம்பியின் தலை முடி கருப்பு" என்ற கூற்று, தலை முடியின் நிறம் என்னவென்று பார்க்காமல், சரியா தவறா என்று கூற இயலாது. குயின் ( Willard Van Orman Quine) என்ற அமெரிக்க மெய்யியல் அறிஞர் (1908-2000), கான்ட் கூறியது முற்றிலும் உண்மை அல்ல என்று கூறி உள்ளார்.[43] அதன் பிறகு, அண்மைக் காலங்களில் வந்த கட்டுரைகள், பகுப்பாய்வுக்கும் தொகுப்பாய்வுக்கும் உள்ள பாகுபாட்டை இன்னும் தெளிவாகக் காட்டியுள்ளன.[44] அறிவியல் - ஒரு அறிவை ஆக்கும் பணிஅறிவியல் என்பது ஒரு செம்மைப் படுத்தப்பட்ட அறிவு பெருக்கும் பணி என்று கூறலாம். உலகில் நடக்கும் நிகழ்வுகளை நன்கு கண்டறிந்து, விதிகளை உருவாக்கி, அந்த விதிகளை வைத்துக் கொண்டு உலகைப் புரிந்து கொள்ள எடுக்கப்படும் முயற்சி அறிவியலில் செய்யப் படுகின்றது. [45] பின்னோக்கு வாதப் பிரச்சினைஅறிவு ஆய்வியலில், ஒரு கருத்து Q, உண்மெய்யானது எனக் கருத வேண்டுமானால், அதற்கு போதுமான ஆதாரங்கள் (justifications J1) இருக்க வேண்டும். ஆனால், அந்த ஆதாரங்களுக்கு ஆதாரங்கள் (J2) வேண்டும். இது மட்டுமில்லாமல், J2-வுக்கு ஆதாரங்கள் (J3) வேண்டும். மேலும், J3-வுக்கு J4 வேண்டும். இப்படியே இது முடிவில்லாமல் போக வாய்ப்புண்டு. இந்த பிரச்சினையை பின்னோக்கு வாதப் பிரச்சினை (Regress problem) என அழைப்பர். [46] பின்னோக்கு வாதப் பிரச்சினைக்குத் தீர்வுகள்பல ஆய்வாளர்கள், பின்னோக்கு வாதப் பிரச்சினைக்கு, தீர்வுகள் எனத் தாங்கள் கருதியதை முன் வைத்தனர். அவற்றில் சில கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
அடிப்படைக் கருத்துக்கள் வாததத்தின் படி (Foundationalism), எல்லா கருத்துக்களுக்கும் ஆதாரம் கொடுக்க தேவை இல்லை. ஒரு சில கருத்துக்கள், ஆதாரம் இல்லாமலேயே உண்மை என கருத முடியும். எடுத்துக் காட்டாக, அவை நம் பட்டறிவு (experience) வழியாக வரலாம்.[47] [48] இந்த வாதத்தில் உள்ள ஒரு சிக்கல், ஆதாரம் தேவை இல்லை என்றால், யார் ஒருவரும் தமக்கு வேண்டிய எந்த கருத்தையும் உண்மை என்று எடுத்துக் கொள்ள முடியும்.
ஒத்திசை வாதத்தின் படி (Coherentism),பின்னோக்கு வாதத்தில் கூறப்படும் முடிவில்லா ஆதாரங்கள் பிரச்சினையை தீர்க்க ஒரு வழி உண்டு. அதாவது, Q என்ற கருத்துக்கு J1 என்பது ஆதாரம் என்றால், J1-வுக்கு J2 ஆதாரம் என்றால், J2-வுக்கு J3 ஆதாரம் என்றால்; அதாவது, Q → J1, J2 → J3, ... , Jn-1 → Jn, என்றாகுமாயின், Jn, J1-க்கு ஆதாரம், அதாவது, Jn → J1 என்று திருப்பிச் சுற்றி விடலாம். இப்படிச் செய்தால், ஆதாரங்களின் தேவை முடிவில்லாமல் போய்க் கொண்டு இராது.[49] ஒத்திசை வாதத்திலும் ஒரு பிரச்சினை இருக்கிறது. இதில் ஆதாரங்கள் தவறாக இருக்கும் போதும், திரும்பிச் சுற்றி விடலாம். எனவே, ஒத்திசை வாதமும் பின்னோக்கு வாதப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையவில்லை. அறிவு ஆய்வில் உட்பிரிவுகள்அறிவு ஆய்வுத் துறையில், கோட்பாடுகளுக்கு ஏற்ப, கீழ்க் கண்ட உட்பிரிவுகள் (கிளைகள்) உள்ளன. வரலாற்று அறிவாய்வியல்வரலாற்று அறிவாய்வியல் (Historic epistemology) பிரிவில், இதுவரை அறிவாய்வியல் வரலாற்றில் அறிவு தொடர்பான கேள்விகளும், அதற்கான விடைகளும் எவ்வாறு இருந்துள்ளன என்பன பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகின்றன. அறிவாய்வியலில் அன்று கேட்கப் பட்ட கேள்விகளை இன்று கேட்பதில்லை.[50] புலனறிவாதம்புலனறிவாதம் (Empiricism) என்ற இந்தப் பிரிவில், ஒரு கருத்தைப் பற்றிய அறிவு நம் ஐம்புலன்களின் வழியாக வருகின்றது என்ற நிலைப்பாடு எடுக்கப் படுகின்றது.[51] (கணிதம் போன்ற துறைகள் இதற்கு விதிவிலக்கு.) [52] நேர்க் கருத்து வாதம் (positivism), பொருள் முதல் வாதம் (realism), பொது அறிவு (common sense) வாதம் என்பன புலனறிவாதத்தின் உட்பிரிவுகளாகும். நேர்க் கருத்து வாதத்தின் படி, நம் அறிந்திருக்கும் ஒரு சில நேர்மறையான கருத்துக்கள் நம்மைச் சுற்றியுள்ள இயற்கை நிகழ்வுகளில் இருந்து வருகின்றன.[53] பொருள் முதல் வாதத்தின் படி, ஒரு பொருள், எதையும் சார்ந்திராமல், தானாகவே தனித்து நிற்கும் தன்மை பெற்றது.[54] பொது அறிவு என்பது நம் புலன்கள் வழியாக வரும் அறிவு; அதே நேரத்தில், நம்மில் பலருக்கும் அது பொதுவாக உள்ளது.[55] ஆக, இவை எல்லாவற்றுக்கும் அடிப்படை, அறிவு பற்றிய ஆராய்ச்சியில், ஐம்புலன்களில் இருந்து வரும் அறிவு முதன்மையானது என்ற கருத்தே. கருத்து முதல் வாதம்கருத்து முதல் வாதம் (Idealism) கூறுவது யாதெனின், உண்மையுள்ள கருத்துக்கள் நம்முள் ஏற்கனவே பொதிந்துள்ளன; அவை புலன்கள் வழியாகப் பெறப் படுவன அல்ல; அவை உய்த்து உணரும் முறையால் (intuition) பெறப்படுகின்றன என்பதாகும். இது ( கான்ட் கருதியதைப் போல) மனத்தின் இயல்பாக இருக்கலாம்; அல்லது, ( பிளேட்டோ கருதியதைப் போன்று) அக் கருத்துக்கள், நம்மைச் சார்ந்து இராமாலேயே, தனித்து நிற்கும், வல்லமை பெற்று, (உலகில்) நிலைத்து நிற்கலாம்.[56] பகுத்தறிவியம்பகுத்தறிவியம் (Rationalism) என்பது புலனறிவாதம் (Empiricism), கருத்து முதல் வாதம் (Idealism) ஆகியவற்றுடன் சிந்தனை முறை (system of thinking) என்பதை மூன்றாவது கூற்றாக இணைத்து, இந்த மூன்றும் அறிவு ஆராய்ச்சியில் சமமான நிலையில் வைக்க வேண்டும் என்று கூறுகின்றது.[57] கருத்துக் கட்டுமானம்கருத்துக் கட்டுமானம வாதம் (Constructivism) என்னும் கோட்பாட்டின் படி, அறிவு என்பது மாந்த இனம் கட்டி அமைக்கும் உண்மை சான்ற கருத்துக்களின் குவியல் என்பதாகும்.[58] எனவே, அறிவு என்பது மனிதனுக்கு அப்பால் இருக்கும் ஒரு பொருள் அல்லது எதையும் சார்ந்து இராத ஒன்று என்று சொல்வதற்கில்லை.[59] சார்பற்ற நிலை வாதம் (objectivism), அறிவில் உள்ள கருத்தைப் பற்றி பேசுகிறது; ஆனால், கருத்துக் கட்டுமான வாதம் (Constructivism), அறிவு என்ற கட்டமைப்பை எவ்வாறு உருவாக்குவது என்பதை பற்றி பேசுகின்றது.[60] எனவே, கட்டுமான வாதம், கருத்துக்கள் (உண்மைகள்) ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கின்ற நிலையை முன்னிறுத்தி, அறிவு என்றால் என்ன என்பதைப் பற்றியான ஒரு புதிய சிந்தனையை உருவாக்குகின்றது. அதாவது, இந்த வாதமுறை அறிவை எவ்வாறு நடைமுறைப் படுத்துவது என்பதில் கவனம் செலுத்துகின்றது.[61] பயன்பாட்டு முறை வாதம்பயன்பாட்டு முறை (Pragmatism) என்னும் வாதத்தில், "உண்மை என்பது ஏதோ ஒன்று எந்தச் சார்பும் இல்லாமல் மனிதனுக்கு வெளியே அமைந்து கிடப்பது அல்ல; அது நடைமுறை நிகழ்வுகளில் சம்பத்தப் பட்டிருக்க வேண்டும்; எடுத்துக் காட்டாக, ஏதேனும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்," என்ற பார்வை வைக்கப் படுகின்றது. ஒரு கருத்து எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என முதலில் கணித்துக் கொள்ள வேண்டும். பின், அந்தக் கருத்தை, அப் பயன்களைக் கொண்டு வரையறை செய்து கொள்ள வேண்டும்.[62] இவ்வாறு செய்தால், அறிவு எனக் கருதப் படும் கருத்துக்கள் நமக்கு நடை முறையில் துணை புரியும் கருத்தாக்களாக ஆகிவிடும்.[63][64] நடைமுறை அறிவாய்வியல்நடைமுறை அறிவு ஆய்வியல் (Naturalized epistemology) என்னும் பிரிவு, பயன்பாட்டு முறை வாதத்தைப் (Pragmatism) போன்றே, ஒரு கருத்தின் பயனைப் பற்றி, குறிப்பாக, அக் கருத்து எவ்வாறு நடை முறையில் படிப்படியாக வளர்ச்சியடைந்து பயன் தருகின்றது என்பதை பற்றி பேசுகின்றது. [65] ஒரு கருத்து உண்மையானதா, அதற்கு ஆதாரம் உள்ளதா என்பன கேள்விகளை மட்டுமே கேட்டுக் கொண்டிராமல், அக் கருத்து ஒருவருக்கு தம் பிரச்சினைகளைத் தீர்க்க எந்த அளவுக்குப் பயன் தரும் என்பது இன்றியமையாததாகக் கருதப் படுகின்றது. ஐயுறவியல்அறிவு ஆய்வியலில், ஐயுறவியல் (Skepticism) என்பது உண்மை எனக் கருதப் படும் ஒவ்வொரு கருத்தையும் ஐயத்தோடு (சந்தேகத்தோடு) பார்ப்பது ஆகும். பலரும் அறிந்த கிரேக்க அறிஞர் சாக்கிரட்டீசு(Socrates) ஒரு ஐயுறுவாளர் (சந்தேகப் படுபவர்,skeptic) எனக் கருதப் படுபவர். இவர் ஒவ்வொன்றையும் சந்தேகக் கண்ணோடு பார்த்தபோது, எதைப்பற்றியும் இவருக்கு முழு நம்பிக்கை வரவில்லை. அதாவது, "எனக்கு எதைப் பற்றியும் முழுவதுமாகத் தெரியாது என்பதுதான் எனக்கு முழுவதுமாகத் தெரிந்த ஒன்று," என்று கூறினார். அதன் பிறகு, 16-ஆம் நூற்றாண்டில் வந்த டேக்கார்ட் (René Descartes) இதே பிரச்சினையைப் பற்றி ஆராய்ந்து, அதன் பயனாக, (நாம் அனைவரும் அறிந்த) "நான் சிந்திக்கிறேன், ஆகையால் நான் இருக்கிறேன்" (I think, therefore I am) என்ற கருத்தை முன் மொழிந்தார். அடிப்படைக் கருத்துக்கள் வாதம் (Foundationalism), பயன்பாட்டு முறை வாதம் (Pragmatism) ஆகியன ஐயுறவியல் வாதத்திற்கு எதிராகத் தோன்றியவை. அதன் பிறகு, ஏரண நேர்க் கருத்து வாதம் (Logical Positivism) மற்றும் குகன் (Kuhn), பாப்பர் (Popper) ஆகியோரின் கருத்துக்கள், அறிவியல் உண்மைகளையும் ஐயுறவியல் கண்கொண்டு பார்த்தவை.[66] அறிவாய்வியல் - காணொலிகள்குறிப்புகள்மேற்கோள்கள்
சான்று நூல்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia