அலெக்சாந்தர் சுதக்கோவ்
அலெக்சாந்தர் எவ்கனீவிச் சுதக்கோவ் (Aleksandr Evgenievich Chudakov, உருசியம்: Александр Евгеньевич Чудако́в, 16 சூன் 1921 - 25 சனவரி 2001), ஒரு சோவியத் உருசிய இயற்பியலாளர். இவர் அண்டக்கதிர் இயற்பியலில் ஆய்வுகள் செய்தார். இவர் அவரால் கண்டறியப்பட்ட சுதக்கோவ் விளைவால் பெயர்பெற்றவர். சுதக்கோவ் விளைவு என்பது குறுகிய மின்னன்-நேர்மின்னன் இணைகளில் மின்னணுவாக்க இழப்புகள் குறைந்து கொண்டே போகும் விளைவைக் குறிக்கிறது. மேலும் இவர் நிலைமாறும் அல்லது நிலைபெயரும் கதிர்வீச்சு நிலவுதலை செய்முறை வாயிலாக உறுதிப்படுத்தினார்.[1] இவர் தூய, பயன்முறை இயற்பியலுக்கான பன்னாட்டு ஒன்றியத்தின் அண்டக்கதிர் ஆணையத்துக்குத் தலைவராக விளங்கினார். வாழ்க்கையும் அறிவியல் பணியும்அலெக்சாந்தர் சுதக்கோவ் 1921 ஜூன் 16 இல் பிறந்தார். இவர் 1948 இல் மாஸ்கோ அரசு பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றார்.[2] இவர் 1953 இல் நிலைமாறும் அல்லது நிலைபெயரும் கதிர்வீச்சு நிலவுதலை செய்முறை வாயிலாக உறுதிப்படுத்தினார். கோட்பாட்டியலாக இதை 1945 இலேயே முன்கணித்தவர்கள் விதாலி கின்சுபர்கும் இலியா ஃபிரான்கும் ஆவர். குறுகிய மின்னன்-நேர்மின்னன் இணைகளில் மின்னணுவாக்க இழப்புகள் குறைந்துகொண்டேபோகும் விளைவை இப்போது சுடகோவ் விளைவு எனப்படுகிறது. சுடகோவ் விளைவைப் போன்றதொரு நிகழ்வு குவைய வண்ன இயங்கியலிலும் ஏற்படுவது காணப்பட்டுள்ளது. சுதக்கோவ் 1961 இல் சத்சேபினுடன் இணைந்து காமாக்கதிர் வானியலுக்கான செர்ன்கோவ் கதிர்வீச்சு முறையை முன்ம்ழிந்தார்.மேலும் கிரீமியாவில் உள்ள காத்சிவெலியில் அதற்கான முன்னோடி செய்முறையையும் செய்துகாட்டினார்.[3] சுதக்கோவ் 1960 களின் நடுவில் இருந்து பாக்சான் நொதுமன் வான்காணகம்/நிலத்தடி மிளிர்வுத் தொலைநோக்கி வடிவமைப்பிலும் கட்டுமானத்திலும் தலைமையேற்றார். இந்த ஆய்வகம் 1978 இல் இயங்கத் தொடங்கியது. இது நிலத்தடி இயற்பியல் ஆய்வுக்கான பன்முக ஏந்துகளைக் கொண்டதாகும்.[3] வானியற்பியலில் இன்றும் இயங்கும் இந்த தொலைநொக்கியைப் பயன்படுத்தி முதல் தரமான முடிவுகள் பெறப்படுகின்றன.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia