அ. தட்சிணாமூர்த்தி![]() அ. தட்சிணாமூர்த்தி (பிறப்பு: 1938) சங்க இலக்கியத்தில் புலமைபெற்ற முதிர்ந்த தமிழறிஞர். தமிழ்ப் பேராசிரியர், நூலாசிரியர், ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல பரிமாணங்கள் கொண்டவர். தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் வல்லவர். சங்க இலக்கிய மொழிபெயர்ப்பு முன்னோடிகளில் ஒருவர். பத்தொன்பது செம்மொழி இலக்கியங்களை ஆங்கிலப்படுத்தியவர்; அகநானூற்றினை முழுமையாக ஆங்கிலப்படுத்திய முதல் தமிழறிஞர்.[1] செம்மொழித்தமிழாய்வு நிறுவனம் வெளியிட்ட பத்துப்பாட்டு மொழிபெயர்ப்புத்தொகுதியின் பதிப்பாசிரியர்; பாரதிதாசனின் பாடல்களை மொழிபெயர்ப்பின் மூலம் வெளியுலகுக்குக் கொண்டுசென்றவர். பழந்தமிழ் இலக்கியங்கள், இடைக்கால இலக்கியங்கள், அண்மைக்கால இலக்கியங்கள் என்று முப்பத்திற்கும் மேற்பட்ட படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். தமிழர் நாகரிகமும் பண்பாடும் எனும் வரலாற்று நூலைப் படைத்தவர். சங்க இலக்கிய உரைகள் மற்றும் ஆராய்ச்சி நூல்களின் ஆசிரியர்.[2] நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளின் ஆசிரியர். 2003 -ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு வழங்கும் பாரதிதாசன் விருதை வென்றவர். இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின், 2015-ஆம் ஆண்டிற்கான குடியரசுத்தலைவர் விருதாகிய தொல்காப்பியர் விருதினைப் பெற்றவர். பிறப்பும் கல்வியும்தட்சிணாமூர்த்தி அய்யாசாமி, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகிலுள்ள நெடுவாக்கோட்டை என்னும் சிற்றூரில் மிக எளிய உழவர் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை அய்யாசாமி நெடுவாண்டார், தாய் இராசம்மாள். மூன்று மூத்த சகோதரிகளோடு குடும்பத்தில் கடைசி மகனாகப் பிறந்தவர். இவர் தம் குடும்பதின் முதல் பட்டதாரி ஆவார். பள்ளிப்படிப்பை மன்னார்குடி பின்லே பள்ளியில் முடித்தார். பின்னர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பி. ஏ. (ஆனர்ஸ்) - தமிழ்மொழியும் இலக்கியமும் (1961), பி. எட்., - தமிழ்மொழியும் சமூகவியலும் (1962) பயின்றார். சென்னைப்பல்கலைக்கழகத்தில் "ஐங்குறுநூற்றில் முல்லைத்திணை" எனும் தலைப்பில் ஆய்வு செய்து தமிழில் எம்.பில் பட்டமும் (1978-79), "சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உறவுகள்" எனும தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டமும் (1988) பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேரறிஞர்கள் தெ. பொ. மீனாட்சிசுந்தரம், தண்டபாணி தேசிகர் ஆகியோரின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. பணி1962-இல் திருவாரூர் வடபாதி மங்கலம் சோமசுந்தரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல்நிலைத் தமிழாசிரியராகத் தம் பணியைத் தொடங்கியவர், தொடர்ந்து 33 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராகவும் பேராசிரியராகவும் பல கல்வி நிலையங்களில் பணியாற்றினார். 1965-67-இல் மன்னம்பந்தல் ஏ.வி.சி அறத்துறைக்கல்லூரியில் பயிற்றுநராகவும், 1967-91 காலங்களில் பூண்டி அ. வீரையா வாண்டையார் நினைவு திரு. புட்பம் கல்லூரியில் இருபத்துநான்கு ஆண்டுகள் தமிழ் விரிவுரையாளராகவும் பணியாற்றினார். பாண்டித்துரைத்தேவர் அமைத்த நான்காம் தமிழ்ச் சங்கம் ஆகிய மதுரைத்தமிழ்ச்சங்கத்தைச்சேர்ந்த செந்தமிழ்க் கலைக்கல்லூரியின் முதல்வராகப் 1991 - இல் பொறுப்பேற்றார். நிதியின்மையால் பொலிவிழந்திருந்த சங்கத்தை சீரமைக்கும் பணியையும் மேற்கொண்டார். பல வளர்ச்சித் திட்டங்களை வகுத்து தமிழக அரசிடம் நிதிக்கோரிக்கை வைத்தார். 1996 - இல் பணிவோய்வு பெற்ற நிலையில் அம்முயற்சியில் வெற்றியும் கொண்டார். பணி ஓய்வுக்குப்பின் தஞ்சை நகரத்தில் வாழ்ந்து வருகிறார். நூலாசிரியராக1973 ஆம் ஆண்டில், தமிழர் நாகரிகமும் பண்பாடும் என்னும் வரலாற்று நூலின் எழுதி வெளியிட்டார். தமிழ் நாகரிகத்தின் பண்பாட்டுக்கூறுகள் ஒவ்வொன்றும் காலப்போக்கில் வளர்ந்த வரலாற்றை ஒரே நூலில் தொடர்ச்சியாக விளக்கும் இந்த அரிய நூல் அவரைத் தமிழ் உலகுக்கு அடையாளம் காட்டியது. இந்நூல் இன்றுவரை ஆராய்ச்சி மாணவர்களுக்கும், தமிழ்ப் பெருமக்களுக்கும் பெரிதும் பயன்படுகிறது. 2001-இல் வெளியான சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உறவுகள் என்னும் ஆய்வு நூல் சங்ககாலச் சமுதாயத்தில் நிலவிய பல்வேறு உறவு நிலைகளை நடைமுறை சார்ந்தும் குறிக்கோள் நிலையிலும் விரிவாக விளக்குகிறது. தமிழியற் சிந்தனைகள், திணைப்புலவரும் தெய்வப்புலவரும், பெயரும் பின்னணியும் போன்ற ஆய்வு நூல்கள் தமிழ் இலக்கியமும் இலக்கணமும் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளின் அரிய தொகுப்புகளாகும். சங்க இலக்கியங்களாகிய ஐங்குறுநூறு, பரிபாடல் (ஒரு பகுதி) ஆகியவற்றிக்கான உரைகளையும் எழுதியுள்ளார். மொழி பெயர்ப்பாளராக1999 - 2012 காலகட்டத்தில் 19 பழந்தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் முழுமையாக மொழியாக்கம் செய்தார். அவற்றில் 13 சங்க இலக்கிய நூல்களும் 6 பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் அடங்கும். இவர் பெருநூலான அகநாநூற்றை முதன் முதலில் முழுமையாக ஆங்கிலத்தில் மொ ழியாக்கம் செய்தது குறிப்பிடத்தக்க ஒன்று. இதை 1999-இல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்டது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஆறு நூல்களின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பையும் தந்துள்ளார். குறுந்தொகையின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்து 31 ஆண்டுகளுக்குப்பிறகு வெளிவந்த இரண்டாவது முழு மொழிபெயர்ப்பு இவருடையதாகும் .இது 2012 - ஆம் ஆண்டிற்கான நல்லி – திசையெட்டும் விருது பெற்றது. உலகத் தமிழாராய்ச்சிக் கழகம், 2001 - ஆம் ஆண்டு வெளியிட்ட இவருடை நற்றிணையின் ஆங்கில மொழிபெயர்ப்பு மூலத்துக்கு நெருக்கமான முதல் முழுபெயர்ப்பாகக் கருதப்படுகிறது. இவரது பத்துப்பாட்டின் மொழிபெயர்ப்பு, முதல் மொழிபெயர்ப்பு வெளிவந்து 67 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த இரண்டாவது முழு மொழிபெயர்ப்பாகும். இடைக்கால இலக்கியங்களான அபிராமி அந்தாதி, நீதி வெண்பா, பெருமாள் திருமொழி ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். பாரதிதாசனின் புரட்சிக்கவி, சஞ்சீவிபருவதத்தின் சாரல், தமிழச்சியின் கத்தி, காதலா கடமையா, இருண்டவீடு, நல்ல தீர்ப்பு, கடல்மேல் குமிழிகள் ஆகிய அண்மைக்கால படைப்புகளையும் முதல் முறையாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். பாரதியின் பாரதி அறுபத்தாறும் இவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அ. ச. ஞானசம்பந்தன் என்னும் அறிஞரின் கம்பன்—புதிய பார்வை என்னும் நூலை இவர் ஆங்கிலத்தில் மொழி ஆக்கம் செய்து 2013 இல் சாகித்திய அகாதமி வெளியிட்டது. பதிப்பாசிரியராகசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செவ்விலக்கிய நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புக்களை தொகுதிகளாக வெளியிடும் திட்டத்தின் கீழ் முனைவர் அ. தட்சிணாமூர்த்தி, பதிப்பாசிரியாகப் பணியாற்றி, Pattuppāṭṭu—Text, Transliteration and Translations in English Verse and Prose என்ற பத்துப்பாட்டு மொழிபெயர்ப்புத்தொகுதியினை தொகுத்து உருவாக்கியுள்ளார். திருமுருகாற்றுப்படை முதல் மலைபடுகடாம் வரை அமைந்த பத்து நூல்களின் மூலப்பனுவல்கள், அவற்றின் ஒலிபெயர்ப்புக்கள், ஆய்வுக் கட்டுரைகள், கவிதையிலும் உரைநடையிலும் அமைந்த மூன்று மொழிபெயர்ப்புக்கள், பதிப்பாசிரியரின் விரிவான அடிக்குறிப்புக்கள், தமிழ்ப்பண்பாடு தொடர்பான சொற்களுக்கும் தொடர்களுக்கும் உரிய விளக்கங்கள் ஆகியவை இதில் அடங்கியுள்ளன. 1946 முதல், இந்நூல் தொகுத்து முடிக்கப்பட்ட 2010 ஆம் ஆண்டு வரையில் கிடைத்த முப்பத்தாறு மொழிபெயர்ப்புக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மொழிபெயர்ப்புக்கள் இந்நூலில் இடம்பெறுகின்றன. ஆய்வாளராகஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு இவர் தேர்ந்தெடுத்தத் தலைப்பு ஐந்குறுநூற்றில் முல்லைத்திணை என்பதாகும். பல்லாண்டுகள் ஆய்ந்து ஐங்குறுநூறு ஐந்து புலவர்களன்றி, ஏனைத் தொகைநூல்களில் ஆழ்ந்த பயிற்சியுடைய ஒரே புலவர் வேறுபல புதுமைகளையும் புகுத்தி நூல்வடிவாக எழுதியது ஆகலாம் என்றும், அது கலித்தொகை, பரிபாடல் ஆகிய இரண்டுக்கும் முன்னும் குறுந்தொகை முதலிய பிறவற்றிக்குப் பின்னும் தோன்றியிருக்க வேண்டும் என்றும் நிறுவியுள்ளார். சங்ககாலப்புலவர்கள் தனிச்செய்யுள்களின் ஆசிரியர்களே. நூலாசிரியர்கள் அல்லர். முதன்முதலாக அகத்துறை சார்ந்த சில நூறு செய்யுட்களை உள்ளடக்கிய ஒரு நூலைப்படைத்தவராகப் பெயர் அறியப்படாத இந்தப்புலவர் காணப்படுகிறார் என்பது இவருடைய ஆய்வுமுடிவாகும். இது ஒரு புதிய பார்வையாகவும் சங்க இலக்கியத் தொகையாக்கம் பற்றிய வரலாற்றை மறுஆய்வு செய்யவேண்டும் என்பதற்குத் தூண்டுதலாகவும் அமைகிறது. இவருடைய முனைவர் பட்ட ஆய்வேடு சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உறவுகள் பற்றியதாகும். குறிக்கோள் நிலையிலும் நடைமுறை சார்ந்த நிலையிலும் சங்ககால மாந்தரிடையே நிலவிய உறவுகளை ஆள்வோர்-ஆளப்படுவோர், பேரரசர்-குறுநிலத் தலைவர்கள் அரசர்-மறவர் வள்ளல்கள்-புலவர், வள்ளல்கள்-பிற கலைஞர்கள், காதலன்-காதலி, கணவன்-மனைவி, தலைவன்-பரத்தையர், தனிமனிதன்-சமூகம் எனப் பல நிலைகளிலும் இவர் ஆய்ந்திருக்கிறார். பண்டைக்காலத்துக் கலைப்பிரிவினருள் ‘பொருநர்’ என்பாரைக் ‘கூத்தர்’ என்றே பலரும் கருதினர். நச்சினார்க்கினியர் இதில் முதன்மையானவர். ஆனால் தட்சிணாமூர்த்தி தன் முனைவர்பட்ட ஆய்வேட்டில் பொருநர் என்பார் கூத்தரினும் வேறுபட்டவர் என்ற கருத்தை வலிவுறுத்துகிறார். தம் கருத்துக்கு ஆதரவாகத் தொல்காப்பியர் தம்முடைய ஆற்றுப்படை இலக்கணம் பற்றிய நூற்பாவில் கூத்தரையும் பொருநரையும் தனித்தனியே குறிப்பிடுதலை எடுத்துக் காட்டுகிறார். இந்தியப்பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆய்வுக்கோவை, கரந்தைத் தமிழ்ச் சங்க வெளியீடான தமிழ்ப்பொழில், மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடான செந்தமிழ் முதலான பல்வேறு இதழ்களில் இவர் வெளிட்டுள்ள ஆய்வுக்கட்டுரைகள் பல புதிய செய்திகளைத் தமிழுலகுக்கு அளித்துள்ளன. இவற்றில் தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, பண்டைத்தமிழர் பண்பாடு, இடப்பெயர், மக்கள் பெயர் முதலான பல்வேறு பொருள்கள் பற்றிய இவருடைய ஆய்வுமுடிவுகள் இடம்பெறுகின்றன. குறிப்பிடத்தகுந்த புதிய ஆய்வுமுடிவுகளைக் கொண்ட கட்டுரைகளில் சில: ஆனும் நீனும் எனும் கட்டுரை, தொல்காப்பியர் வெளியிட்டுள்ள ஓரெழுத்து ஒரு மொழிகள் பலவற்றில் சில ஒரு காலத்தில் ஈற்றில் னகர ஒற்றோடு முடிந்தவை என நிறுவுகிறது. நும்மின் வரலாறு எனும் கட்டுரை முன்னிலைப்பன்மையான ‘நீம்’ என்ற பழைய சொல்லின் திரிபான ‘நிம்’ என்பதிலிருந்து மேலும் திரிபுற்று ‘நும்’ என்று ஆயிற்று என்பதும், இந்தச்சொல்லின் முதலில் உள்ள நகர இகரம் நகர உகரமாகத் திரிந்த வரலாற்றைத் தொல்காப்பியத்தில் உள்ள ‘நுந்தை’ என்னும் முறைப்பெயர் பற்றிய சூத்திரம் காட்டுகிறது என்றும் குறிப்பிடுகிறது. சொல்லிசை அளபெடை எனும் கட்டுரை, தொல்காப்பியர், அளபெடையை, செய்யுள் ஓசை பற்றிய இலக்கணக்கூறாகவே கருதுகிறார் என்றும், பின் வந்தவர்கள் பெயரெச்சம் வினைச்சொல்லாக ஆவதற்கு அளபெடுப்பது சொல்லிசையளபெடை என்று கூறுவது பொருத்தமில்லை என்றும் நிறுவுகிறது. சேனாவரையர் வெரீஇ, தழீஇ போன்ற வடிவங்களின் இறுதியில் நிற்கும் இகரம் வினையெச்சத்தைக் குறிக்கும் விகுதியே என்றும், அது ‘செய்து’ என்னும் வாய்ப்பாட்டுக்குரிய செய்யுள் வடிவம் என்றும் விளக்குகிறது. வினைத்தொகையும் பெயரெச்சமும் என்ற விரிவான கட்டுரை வினைத்தொகை ‘செய்யும்’, ‘செய்த’ என்னும் வாய்ப்பாட்டு எச்சங்களாகவே உரையாசிரியர்களால் விரிக்கப்பட்டுள்ளமையை எடுத்துக்காட்டுகிறது. சில பொருள்களின் பண்பினை விளக்கும் சூழ்நிலையில் மூன்று காலமும் அடங்கி இருக்கின்றன என்றும், ஏற்ற இடங்களில் ஒவ்வொரு காலத்தையே சுட்டுவது உண்டு என்றும், வினைத்தொகையின் முதற்சொல் வினையே என்றும், தொல்காப்பியர் தம் எழுத்ததிகாரத்தில் தொழிற்பெயர் என்று குறித்தவை பெயராகவும் சிலபோது வினையாகவும் இயங்கும் சொற்களே என்றும் சான்றுகளுடன் நிறுவுகிறது. தொல்காப்பியத்தின் மரபியலில் உள்ள உயிர் வகைகள் பற்றிய சூத்திரத்தில் ‘மாவும் புள்ளும் ஐயறிவினவே’ என்ற பாடம் இளம்பூரணத்திலும், ‘மாவும் மாக்களும் ஐயறிவினவே’ என்ற பாடம் பேராசிரியத்திலும் உள்ளன. நச்சினார்க்கினியர் முதல் தற்காலத்துப் பேரறிஞர்கள் உள்படப் பலரும் பேராசிரியருடைய உரையைத் தழுவி மாக்கள் என்பார் ஆறாம் அறிவு இல்லாதவர்கள் என விளக்கம் கூறியுள்ளனர். தட்சிணாமூர்த்தி இளம்பூரணர் பாடமே பொருத்தமானது என்பதைத் தம்முடைய மக்களும் மாக்களும் எனும் கட்டுரையில் மிகப்பல சான்றுகளைக்காட்டி நிறுவியுள்ளார். ‘ஆயர்’ என்ற குடிப்பெயர் பசுவைக்குறிக்கும் ‘ஆ’ என்ற சொல்லின் அடியாக உருவானது என்று பலர் கருதுகின்றனர். ஆனால், தட்சிணாமூர்த்தி அது ‘ஆயம்’ என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது என்பதை விளக்கமாகப் பல சான்றுகளுடன் தம் ‘ஆயர்--சொல்லாய்வு” எனும் கட்டுரையில் எடுத்துக்காட்டியுள்ளார். ஆங்கிலத்தில் ‘Herd’ என்று சொல்வதும் தமிழில் ‘ஆயம்’ என்று சொல்வதும் பொருளால் ஒத்திருப்பதையும் காட்டுகிறார். மணிமேகலையில் உள்ள ஆதிரை பிச்சையிட்ட காதை, புத்தபகவானின் மொழிக்கொள்கையைத் தெளிவு படுத்துகிறது என்றும், புத்தர் வைதீகர்களுக்கு மாறாக மக்களின் பேச்சு மொழியையே பயன்படுத்தினார்; அதனை விளக்கவே சாதுவன் நாகரிகம் அற்ற சாரணர் மொழியினை அறிந்தவனாகப் படைக்கப்பட்டுள்ளான் என்றும் கூறும் தட்சிணாமூர்த்தி, வணிகர்களின் வாயிலாகவே புத்தநெறி தமிழ்நாட்டிலிருந்து கீழைத்தீவுகளுக்குப் பரவிற்று என்றும் தம் பண்பாட்டுத்தூதன் சாதுவன் என்ற கட்டுரையில் கூறுகின்றார். சங்க இலக்கிய அகத்திணைப் பாடல்களில் திணைக்கலப்பு மணத்திற்கும் இடமுண்டு என்று அறிஞர் வ. சுப. மாணிக்கனார் தம் ‘தமிழ்க்காதல்’ என்ற ஆய்வு நூலில் குறிப்பிடுகிறார். அகம் 140-ஆம் பாடல், நெய்தல் நிலத்தலைவிக்கும் குறிஞ்சித்திணைத் தலைவனுக்கும் இடையே ஏற்பட்ட காதலையும், அகம் 390- ஆம் பாடல், நெய்தல் தலைவிக்கும் முல்லைத் தலைவனுக்கும் இடையே ஏற்பட்ட காதலையும் விளக்குவதாகக் கூறியுள்ளார். ஆனால், தட்சிணாமூர்த்தி தன்னுடைய “சங்க இலக்கியத்தில் திணைக்கலப்பு மணம்” எனும் கட்டுரையில், இவ்விரு செய்யுட்களிலும் தலைவியாக வரும் உமணப்பெண் மருத நிலத்தைச் சார்ந்தவள் என்பது நற்றிணை 183-ஆம் பாடலால் அறியப்படுவதாலும், நெல்லே உப்புக்குப் பண்டமாற்றுப்பொருளாக அமைவதாலும், இக்காதலர்கள் மருத நிலத்தைச் சார்ந்தவர்களே என்று நிறுவுகிறார். இப்பாடல்களில் வரும் நில வருணனைகள் உமணர் உப்பு விற்கும் ஊர்களைக் குறிப்பனவேயன்றித் தலைவர்களின் ஊர்களைக் குறிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டுகிறார். அதுபோலவே, கன்னிப்பெண்கள் பண்டு தம் கூந்தலில் மலர் அணிவதில்லை; திருமணநாளில் மணமகன் தான் முதன்முதல் மலர் அணிவிக்கிறான் என்று வ.சுப. மாணிக்கனார் தமிழ்க்காதலில் கூறியுள்ளார். தட்சிணாமூர்த்தி, “கன்னியர் கூந்தலில் கடிமலர்” என்ற தம் கட்டுரையில், பல சான்றுகளை மேற்கோள்காட்டி இக்கருத்தினை மறுத்துள்ளார் எழுதிய தமிழ் நூல்கள்
சங்க இலக்கிய உரைகள்
பதிப்பித்த நூல்கள்மொழி: ஆங்கிலம்
மொழிபெயர்த்த நூல்கள்மொழி: தமிழிலிருந்து ஆங்கிலம் செவ்வியல் இலக்கியங்கள்1. “Akananuru – The Akam Four Hundred, Kalirruyanai Nirai (Volume I)”, Bharathidasan University, Thiruchirapalli, 1999 “Akananuru – The Akam Four Hundred, Manimitai Pavalam (Volume II)“, Bharathidasan University, Thiruchirapalli, 1999 “Akananuru – The Akam Four Hundred, Nittilakkovai (Volume III)” ,Bharathidasan University, Thiruchirapalli, 1999 2. “The Narrinai Four Hundred”, International Institute of Tamil Studies, Chennai, 2001 3. “Kuruntokai – An Anthology of Classical Tamil”, Vetrichelvi Publishers, Thanjavur, 2007 4. “Patinenkilkkanakku – Works on Akam theme” (Includes 6 Books), Bharathidasan University, Thiruchirapalli, 2010
5. “Pattuppattu In English - The Ten Tamil Idylls” (Includes Ten Books), Thamizh Academy, SRM University, Kattankulattur, 2012 இடைக்கால இலக்கியங்கள்1. “Perumal Thirumozhi”, Senthamizh, Madurai Tamil Sangam, Madurai, 1996. 2. “Abirami Anthathi”, Senthamizh, Madurai Tamil Sangam, Madurai, 1996. 3. “The Neethivenba”, The Scholar Miscellanist, Thanjavur, January – April 2002 இக்கால இலக்கியங்கள்1. “Poems of Bharathidasan – A Translation”, Vetrichelvi Publishers, 1990, Revised Second edition: “Two Major Works of Bharathidasan”, New Century Book House, Chennai, 2021 (சஞ்சீவி பர்வதத்தின் சாரல், புரட்சிக்கவி ஆகிய இரு நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு) 3. “Paratitacan’s The Darkened Home”, The Scholar Miscellanist, Thanjavur, 2001. (இருண்ட வீடு) 4. “Paratitacan’s The Good Judgment”, The Scholar Miscellanist, Thanjavur, September 2005. ( நல்ல தீர்ப்பு) 5. “Paratitacan’s The Dagger of a Tamil Woman”, Bharathidasan University, Tiruchirappalli, 2006 (தமிழச்சியின் கத்தி) 6. “Paratitacan’s Love or Duty”, Bharathidasan University, Tiruchirappalli, 2006 (காதலா– கடமையா) 7. “Paratitacan’s The Bubbles on the Sea”, Bharathidasan University, Tiruchirappalli, 2006 (கடல் மேல் குமிழிகள்) 8. “Bharathy Sixty Six”, The Scholar Miscellanist, Thanjavur, April – August 2005. Revised Second edition: “Bharathy Sixty Six”, Volume — “Paattu Thirathhaalae”, Mahakavi Bharathiar Advanced Research Centre, Bharathiyar University, Coimbatore, 2021 (பாரதியாரின் ‘பாரதி அறுபத்தாறு) 9. “Kamban – A New Perspective”, Sahitya Akademi, New Delhi, 2013. (அ. ச. ஞானசம்பந்தம் எழுதிய ‘கம்பன் – புதிய பார்வை) சிறப்புகளும் விருதுகளும்
மேற்கோள்கள்உசாத்துணை |
Portal di Ensiklopedia Dunia