ஆர். நாகேந்திர ராவ்
ரட்டிஹள்ளி நாகேந்திர ராவ் (23 யூன் 1896 - 9 பெப்ரவரி 1977) என்பவர் ஓர் இந்திய நாடக நடிகர், திரைப்பட நடிகர், தென்னிந்திய திரைப்பட இயக்குநர் ஆவார். நாடகத்துறையில் தனது வாழ்க்கையைத் துவக்கிய, ராவ் பின்னர் திரைப்படத் துறைக்கு வந்தார். அங்கு இவர் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியராக மாறினார். சில சமயங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க ஆளுமைகளில் ஒருவராகக இவர் கருதப்படுகிறார்.[1] ஹன்னிலி சிகிரிதாகா (1968) என்ற கன்னடத் திரைப்படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகருக்கான கருநாடக அரசின் திரைப்பட விருதை ராவ் பெற்றார். திரையுலகிற்கு இவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இவருக்கு 1976 ஆம் ஆண்டு இந்திய அரசால் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. ராவுக்கு நான்கு குழந்தைகள் இருந்தனர், அவர்களில் மூன்று பேர் திரைப்படத்துறையில் பணியாற்றுகின்றனர். இவரது இரண்டாவது மகனான, ஆர். என். கிருஷ்ண பிரசாத், ஒரு ஒளிப்பதிவாளர், மூன்றாவது மகனான, ஆர். என். ஜெயகோபால், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், இவரது இளைய மகன், ஆர். என். சுதர்சன், ஒரு நடிகராவார்.[2] ஆரம்ப கால வாழ்க்கைநாகேந்திர ராவ் 1896 ஆம் ஆண்டு சூன் 23 ஆம் நாள் பிரித்தானிய இந்தியாவின் மைசூர் இராச்சியத்தில் உள்ள ஹோல்கெரேவில் பிறந்தார்.[3] தொழில்ராவ் தனது எட்டு வயதில் கன்னட நாடகங்களில் நடித்து நாடக நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். சிறுவயதில், சீதை போன்ற தெய்வீக பெண் கதாபாத்திரங்களையும் சந்திரமதி, டெஸ்டெமோனா போன்ற வரலாற்று கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். பின்னர் இவர் ஆண் வேடங்களை ஏற்று நடிக்கத் துவங்கினார். இவரது நாடகப் பணி பழைய மைசூர் இராச்சியம் மற்றும் மெதராஸ் மாகாணம் ஆகியவற்றில் பிரபலமானதாக இருந்தது. நாடகத்துறையில், ஏ. வி. வரதாச்சார்யாவின் ரத்னாவளி நாடக நிறுவனம் மற்றும் மைசூரில் உள்ள சாமுண்டேஸ்வரி நிறுவனம் போன்றவற்றில் பணியாற்றினார்.[4] 1931 இல் இந்தியாவில் பேசும் படங்களின் சகாப்தம் தொடங்கியவுடன், ராவ் பம்பாய்க்கு (இப்போது மும்பை) புறப்பட்டார். அங்கு, பாரிஜாத புஷ்பஹரணம் (1932), கோவலன் (1933) ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடிகரும் இயக்குநருமான பி. கே. ராஜா சாண்டோவால் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார். கோவலன் படத்தில் கோவலனாகவும் பாரிஜாத புஷ்பஹரணம் படத்தில் நாரதர் என முக்கிய வேடத்தில் நடித்தார் மேலும் தெலுங்குத் திரைப்படமான ராமதாசு (1933) என்ற படத்தில் நடித்தார். . திரைப்படத்தில் நுழைந்ததைத் தொடர்ந்து, ராவ் பெங்களூர் திரும்பினார். பின்னர் கன்னட திரையுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நடிகரும் இயக்குநருமான சுப்பையா நாயுடுவுடன் இணைந்து ஸ்ரீ சாகித்ய சாம்ராஜ்ய நாடக மண்டலியை (ஸ்ரீ சாஹித்ய சாம்ராஜ்ய நாடக நிறுவனம்) நிறுவினார்.[3] கன்னடத்தில் ஒரு திரைப்படத்தை எழுதி உருவாக்க வேண்டும் என்ற தனது கனவை நனவாக்க, பெங்களூர் தொழிலதிபரான ஷா சமன்லால் தூங்காஜியை நிதியுதவி செய்யுமாறு அணுகினார். படத்தை இயக்குவதற்கு யாரகுடிபதி வரத ராவைத் தேர்ந்தெடுத்த தூங்காஜி, கன்னடத்தில் முதல் பேசும் படமான சதி சுலோக்சனாவைத் தயாரித்தார். இறுதியாக படம் 3 மார்ச் 1934 அன்று வெளியிடப்பட்டது. ராவ் இப்படத்தில் இராவணனாக நடித்ததுடன், படத்திற்கு இசையமைத்தார். 1943 ஆம் ஆண்டு வெளியான சத்ய ஹரிச்சந்திரா திரைப்படம் இவரது இயக்கத்தில் வெளியான முதல் படமாகும். இப்படத்தை இவரே தயாரித்து நடித்தார். ராவின் நாடகமான புக்கைலாசா மூன்று முறை திரைப்படமாக எடுக்கப்பட்டது; 1938 மற்றும் 1940 இல் சுந்தர் ராவ் நட்கர்ணியும், 1958 இல் கே. சங்கரும் எடுத்தனர். இந்த நாடகத்தில்தான் கன்னட சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்த ராஜ்குமார், நாடக நடிகராக நாரதர் வேடத்தில் நடித்தார்.[3] 1951 இல், ராவ் சொந்தமாக ஆர்.என்.ஆர். பிக்சர்ஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினார். 1957 ஆம் ஆண்டு பிரேமத புத்திரி திரைப்படம் இந்த பதாகையின் கீழ் தயாரித்து ராவ் இயக்கினார், மேலும் படத்தில் துணை வேடத்தில் நடித்தார். 5 வது தேசிய திரைப்பட விருதுகளில், கன்னடத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருதை இப்படம் பெற்றது.[5] தயாரிப்பு நிறுவனம் 1964 வரை இருந்தது. இதைத் தொடர்ந்து, அவர் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கதே (1966) மற்றும் கருளினா கரே (1970) போன்ற படங்களில் தந்தை வேடங்களில் தோன்றினார். ராஜ்குமாருடன் இணைந்து நடித்த அவரது 1968 திரைப்படமான ஹன்னிலி சிகிரிதாகா படத்தில் இவரது நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான கருநாடக அரசு திரைப்பட விருதைப் பெற்றார். இவர் நடித்த கடைசி படம் 1974 இல் வெளியான புரொபசர் ஹுச்சுராய திரைப்படம் ஆகும்.[3] திரைப்படவியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia