இந்தியன் ஏர்லைன்சு விமானம் 440
இந்தியன் ஏர்லைன்சு விமானம் 440 (Indian Airlines Flight 440) 1973 மே 31 அன்று 65 பேருடன் பாலம் விமான நிலையத்தை அண்மித்த போது விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 48 பேர் உயிரிழந்தனர். விபத்து440 விமானம் தமிழ்நாடு, சென்னையில் இருந்து புதுதில்லி நோக்கிச் சென்ற வழமையான பயணிகள் விமானம் ஆகும். போயிங் 737 ரகத்தைச் சேர்ந்த இவ்விமானம் சாரங்கா எனப் பெயரிடப்பட்டிருந்தது. 1973 மே 31 இல் மாலை 7:15 மணிக்குப் புறப்பட்ட இவ்விமானம் புதுதில்லி பாலம் விமான நிலையத்தை இரவு 9:50 மணியளவில் அண்மித்த போது, அப்பகுதியில் நிலவிய புயல்மழை காரணமாக, விமான நிலையத்தில் இருந்து மூன்று மைல் தொலைவில் விமானம் உயர் அழுத்தக் கம்பிகளுடன் மோதி இரண்டாகப் பிளந்து தீப்பிடித்தது.[1] விமானப் பணியாளர்கள் உட்பட 65 பேர் இவ்விமானத்தில் சென்றனர். இவர்களில் 48 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.[2] விமானத்தில் முன் பக்கத்தில் பயணம் செய்த சிலர் உயிர் தப்பினர்.[3] இறந்தவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய நடுவண் அமைச்சர் மோகன் குமாரமங்கலம், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவரும், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கே. பாலதண்டாயுதம்[4] உட்பட அமெரிக்காவைச் சேர்ந்த நால்வர், ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த மூவர், யெமனை சேர்ந்த ஒருவரும் அடங்குவர். மூன்று அமெரிக்கர்களும், இரண்டு சப்பானியர்களும் உயிர் பிழைத்தவர்களில் அடங்குவர்.[3] ஏழு பணியாளர்களில் ஐவர் உயிரிழந்தனர்.[3] இந்தியன் ஏர்லைன்சு விமானம் 440 விபத்தை ஆராய்ந்த நிபுணர் குழு விமானத்தை வானூர்தி இறங்கும் பாதைக்குக் கீழே ஓட விட்ட விமான ஓட்டிகளின் தவறே விபத்துக்குக் காரணம் எனக் கண்டறிந்தது.[5] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia