இலங்கைச் சோனகர் அல்லது இலங்கை முசுலிம்கள் (Sri Lankan Moors) எனப்படுவோர் இலங்கையின் மூன்றாவது பெரிய இனக்குழு ஆவர். நாட்டின் மக்கள் தொகையில் இவர்கள் 9.23% ஆவர். முக்கியமாக இசுலாமிய சமயத்தைப் பின்பற்றும் இவர்களில் பெரும்பாலானோர் தமிழ் மொழியைத் தமது தாய்மொழியாகக் கொண்டவர்கள்.[1][2][3][4][5]
இவர்கள் 8 முதல் 15 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையில் குடியேறிய அராபிய வணிகர்களின் வழித்தோன்றல்கள் என்ற கருத்து நிலவுகின்றது.[6][7][8][9] இவர்களின் பேச்சு, எழுத்து வழக்கில் பல அரபுச் சொற்கள் கலந்துள்ளன.
பேருவளை, கெச்சிமலை பள்ளிவாசல், இலங்கையின் மிகப்பழமையான பள்ளிவாசல்களில் ஒன்று
மக்கள்தொகை, பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் மற்றும் இனரீதியான கணிப்பீடுகள் ஆகியவற்றில் இலங்கை முசுலிம்கள் ஆங்கிலத்தில் "மூர்" (Moor) என்றும், சிங்களத்தில் 'யோன' என்றும் தமிழில் 'சோனகர்' என்றும் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் சமயம் சார்ந்த தரவுகள் திரட்டப்படும் போது 'இசுலாமியர்' அல்லது 'முசுலிம்கள்' என்று குறிக்கப்படுகின்றனர்.[16] தமிழில் சோனகர் என்ற சொல் சுன்னா என்ற சொல்லில் இருந்து பிறந்ததாக நம்பப்பபடுகிறது.[3][17] மூர் என்னும் பெயர் போர்த்துக்கேயரினால் வைக்கப்பட்ட பெயராகும். போர்த்துக்கீசர் ஐபீரியாவில் தாம் சந்தித்த முசுலிம் மூர்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கைச் சோனகர்களை மூர்கள் என அழைத்தனர்.[18] சோனகர் என்ற தமிழ்ச் சொல்லும், யோனக்கா என்ற சிங்களச் சொல்லும் யவனர் அல்லது யோனா என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகவும் கொள்ளப்படுகிறது. யவனர் என்ற இச்சொல் கிரேக்கர்களைக் குறித்தாலும், சில வேளைகளில் அரபுக்களையும் குறிப்பிடுகிறது.[19][20] யவனர் என்ற சொல் சமசுக்கிருத மொழி என்பதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவர். அரேபியர் என்பது பாளி மொழியில் 'யொன்ன' அல்லது 'யோன' என்றும் தமிழில் 'சோனகர்' என்றும் அழைக்கப்பட்டுள்ளது.[16]