கொழும்பு மாவட்டம் (Colombo District) என்பது இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் இலங்கை அரசினால் நியமிக்கப்படும் மாவட்டச் செயலாளரின் தலைமையில் கொழும்பு மாவட்ட செயலகத்தினால் நிருவகிக்கப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தின் தலைநகரம்கொழும்பு ஆகும். 2016 இல் கொழும்பு மாவட்டம் அதிகாரபூர்வமாக ஒரு குடும்பத்திற்கு சராசரியாக அதிக வருமானம் கொண்ட மாவட்டமாகப் பதிவு செய்யப்பட்டது.[4]
வரலாறு
கொழும்பு மாவட்டம், ஐரோப்பியக் குடியேற்றத்திற்கு முந்தைய கோட்டை இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் இந்த மாவட்டம் முதலில் போர்த்துக்கேயர் ஆட்சியிலும், பின்னர் இடச்சு ஆட்சியிலும், பின்னர் பிரித்தானியர் ஆட்சியிலும் இருந்து வந்தது. 1815 இல் பிரித்தானியர் இலங்கைத் தீவை முழுவதுமாகக் கைப்பற்றினர். அவர்கள் தீவை கீழ்நாட்டு சிங்களவர், கண்டிய சிங்களவர், தமிழர் என மூன்று இன அடிப்படையிலான நிர்வாகக் கட்டமைப்புகளாகப் பிரித்தனர். கொழும்பு மாவட்டம் கீழ்நாட்டு சிங்கள நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1833 இல், கோல்புறூக்-கேமரன் ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி, இன அடிப்படையிலான நிர்வாகக் கட்டமைப்புகள் ஐந்து புவியியல் மாகாணங்களாகப் பிரிக்கப்பட்ட ஒரே நிர்வாகமாக ஒருங்கிணைக்கப்பட்டன.[5] கொழும்பு மாவட்டமானது களுத்துறை, புத்தளம், ஏழு கோரளைகள் (இன்றைய குருணாகல் மாவட்டம்), மூன்று கோரளைகள், நான்கு கோரளைகள், கீழ் புலத்கமை (இன்றைய கேகாலை மாவட்டம்) ஆகியன இணைந்து புதிய மேல் மாகாணத்தை உருவாக்கியது.[6] இலங்கை விடுதலை பெற்ற போது, கொழும்பு மாவட்டம் மேல் மாகாணத்தில் அமைந்துள்ள இரண்டு மாவட்டங்களில் ஒன்றாக இருந்தது. மாவட்டத்தின் சில பகுதிகள் 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதிதாக உருவாக்கப்பட்ட கம்பகா மாவட்டத்திற்கு மாற்றப்பட்டன.
புவியியல்
கொழும்பு மாவட்டம் இலங்கையின் தென்மேற்கே அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 699 சதுரகிமீ ஆகும்.[1]
நிருவாக அலகுகள்
கொழும்பு மாவட்டம் 13 பிரதேச செயலகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் பிரதேச செயலாளரினால் (முன்னர் துணை அரச அதிபர்) நிருவகிக்கப்படுகிறது.[7] பிரதேச செயலகங்கள் மேலும் 566 கிராம சேவையாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[7]