உரோமைக் குடியரசு
உரோமைக் குடியரசு உரோம நாகரீகம் குடியரசு அரசமைப்பாக இருந்த கால கட்டத்தைக் குறிக்கிறது. முடியரசாக இருந்த உரோம நகர் கிமு 508 இல் குடியரசானது. ஒவ்வொரு ஆண்டும் கோன்சல்கள் எனப்பட்டும் இரு அதிகாரிகள் செனேட் அவையினால் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, குடியரசை நிருவகித்தனர். காலப்போக்கில் ஒரு விரிந்த அரசியலமைப்புச் சட்டமும் உருவானது. அதில் அரசின் ஒவ்வொரு பிரிவின் அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டு ஒவ்வொரு அங்கமும் முழு அதிகாரத்தைக் கையிலெடுக்காவண்ணம் அதிகாரத் தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. தேசிய நெருக்கடி காலங்களைத் தவிர அதிகாரிகளின் பதவிக் காலம் ஓராண்டாக குறுக்கப்பட்டிருந்தது. எந்த வொரு தனி மனிதனும் குடியரசு மீது சர்வாதிகாரம் செலுத்த முடியாதவாறு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன. ஆனால் உரோமக் குடியரசு படையெடுப்புகளாலும் பிற நாட்டுக் கூட்டணிகளாலும் அளவில் பெருகியதால், குடியரசு நிருவாக முறை கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போனது. அதிகாரம் ஒரு சில செல்வாக்கு வாய்ந்த செனேட்டர்கள் கையில் தங்கியதால், அவர்களுக்குள் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டன. உள்நாட்டுப் போர் மூழ்வது வழக்கமானது. கிமு முதலாம் நூற்றாண்டின் இறுதியில் தொடர்ச்சியாக பல உள்நாட்டுப் போர்கள் நிகழ்ந்தன. அவற்றின் இறுதியில் வெற்றி பெற்ற ஆக்ட்டேவியன் அகஸ்ட்டஸ் என்ற பெயரில் பேரரசராகத் தன்னை அறிவித்துக் கொண்டார். குடியரசு கலைக்கப்பட்டு உரோமைப் பேரரசு உருவானது. மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia