என். சி. வசந்தகோகிலம்
என். சி. வசந்தகோகிலம் என அழைக்கப்படும் நாகப்பட்டினம் சந்திரசேகரன் வசந்தகோகிலம் (1919 - 7 நவம்பர் 1951) கருநாடக இசைக் கலைஞரும், பாடகியும், நடிகையும் ஆவார். இந்திய விடுதலைக்குப் பின்னர் கவியோகி சுத்தானந்த பாரதியாரின் பாடல்களைப் பிரபலமாக்கியவர். இவர் 1951 இல் காச நோய் வாய்ப்பட்டு இறந்தார்.[1] ஆரம்ப வாழ்க்கைவசந்தகோகிலம் கொச்சியில் இரிஞ்ஞாலகுடா (இன்றைய கேரளாவில்) சந்திரசேகர ஐயர் என்பவருக்குப் பிறந்தார். இவரது இயற்பெயர் காமாட்சி ஆகும். இவரது குடும்பம் நாகப்பட்டினத்திற்குக் குடிபெயர்ந்தது. நாகப்பட்டினம் 'ஜால்ரா' கோபால ஐயர் என்பவரிடம் இசைப் பயிற்சி பெற்றார். 1936 இல் இவரது குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்தது. சென்னையில் கச்சேரிகளில் பாடத் தொடங்கினார். சென்னை இசைக் கல்லூரியில் 1938 இல் அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் தலைமையில் நடந்த ஆண்டு விழாவில் பாடி முதல் பரிசைப் பெற்றார்.[1] இசையுலகில்வசந்தகோகிலம் பல தமிழ்ப் பாடல்களைப் பாடிப் புகழ் பெற்றார். சென்னையில் தமிழ் இசைச் சங்கம், நெல்லை சங்கீத சபை ஆகியவற்றில் தொடர்ச்சியாகப் பாடி வந்தார். இவரது கருநாடக, மெல்லிசைப் பாடல்கள் பல இசைத்தட்டுகளாக வெளிவந்துள்ளன. பிரபல பாடகர் டைகர் வரதாச்சாரியார் இவருக்கு "மதுரகீத வாணி" என்ற பட்டம் சூட்டினார். திரைப்படங்களில்வசந்தகோகிலம் தமிழ்த் திரைப்படங்களில் பாடியும், நடித்தும் உள்ளார். 1940 இல் சி. கே. சக்தியில் இயக்கத்தில் வெளிவந்த சந்திரகுப்த சாணக்யா படத்தில் சாயா இளவரசியாக நடித்தார். தொடர்ந்து வேணுகானம் (1941), கங்காவதார் (1942), ஹரிதாஸ் (1944), வால்மீகி (1946), குண்டலகேசி (1946), கிருஷ்ண விஜயம் (1950) ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.
குடும்பம்இவரது தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கவில்லை. இவரது இசை வாழ்க்கையை விரும்பாத கணவர் இவரை விட்டுப் பிரிந்து விட்டார்.[1] கடைசிக் காலத்தில் இவர் வழக்கறிஞரும், திரைப்படத் தயாரிப்பாளருமான சி. கே. சதாசிவன் (சி. கே. சச்சி) என்பவருடன் குடும்பம் நடத்தினார். காச நோயால் பாதிக்கப்பட்டு சென்னை கோபாலபுரத்தில் இருந்த அவரது வீட்டில் 1951 நவம்பர் 7 மாலை தனது 32வது அகவையில் காலமானார்.[1] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia