இந்திய விடுதலை இயக்கம்இந்திய விடுதலை இயக்கம் (Indian independence movement) என்பது பிரித்தானிய காலனித்துவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு தெற்கு ஆசியாவில் நடந்த தொடர்ச்சியான வரலாற்று நிகழ்வுகளாகும். 1947 இல் இந்திய விடுதலைச் சட்டம் நிறைவேற்றப்படும் வரை இது நீடித்தது. இந்திய விடுதலைக்கான முதல் தேசியவாத இயக்கம் வங்காள மாகாணத்தில் உருவானது. பின்னர் அது புதிதாக உருவாக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசு மூலம் வேரூன்றியது. முக்கிய மிதவாத தலைவர்கள் பிரித்தானிய இந்தியாவில் இந்தியக் குடிமைப் பணித் தேர்வுகளில் கலந்து கொள்ள உரிமை கோரினர். அதே போல் பூர்வ குடிகளுக்கு அதிக பொருளாதார உரிமைகளையும் கோரினர். 20ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் சுயாட்சி மீது தீவிர அணுகுமுறை காணப்பட்டது. 1920களில் சுதந்திரப் போராட்டத்தின் கட்டங்கள் காந்தி தலைமையால் வகைப்படுத்தப்பட்டன. மேலும் காந்தியின் அறப் போராட்டம் மற்றும் சட்ட மறுப்பு கொள்கையை காங்கிரசு ஏற்றுக்கொண்டது. ஜவகர்லால் நேரு, வல்லபாய் பட்டேல், கான் அப்துல் கப்பார் கான், மௌலானா அபுல் கலாம் ஆசாத் மற்றும் பலர் காந்தியின் சித்தாந்தத்தை பின்பற்றியவர்களில் சிலர். இரவீந்திரநாத் தாகூர், சுப்பிரமணிய பாரதி மற்றும் பங்கிம் சந்திர சட்டர்ஜி போன்ற அறிஞர்கள் தேசபக்தி விழிப்புணர்வை பரப்பினர். சரோஜினி நாயுடு, விஜயலட்சுமி பண்டித், பிரிதிலதா வதேதர் மற்றும் கஸ்தூரிபாய் காந்தி போன்ற பெண் தலைவர்கள் இந்திய பெண்களின் விடுதலையையும் சுதந்திரப் போராட்டத்தில் அவர்களின் பங்கேற்பையும் ஊக்குவித்தனர். சில தலைவர்கள் மிகவும் வன்முறை அணுகுமுறையைப் பின்பற்றினர். இது காலவரையற்ற தடுப்புக்காவலை அனுமதித்த ரௌலட் சட்டத்திற்குப் பிறகு குறிப்பாக பிரபலமானது. இந்தச் சட்டம் இந்தியா முழுவதும், குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் எதிர்ப்புக்களைத் தூண்டியது. அங்கு அவர்கள் ஜலியான்வாலா பாக் படுகொலை மூலம் அடக்கப்பட்டனர். இந்திய விடுதலை இயக்கம் நிலையான கருத்தியல் பரிணாம வளர்ச்சியில் இருந்தது. அடிப்படையில் காலனித்துவத்திற்கு எதிரானதாக இருந்தது. மேலும், மதச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசு மற்றும் சிவில்-தாராளவாத அரசியல் கட்டமைப்புடன் சுயாதீனமான, பொருளாதார வளர்ச்சியின் பார்வைகளால் இது நிரப்பப்பட்டது. 1930களுக்குப் பிறகு, இந்த இயக்கம் வலுவான சோசலிச நோக்குநிலையை எடுத்தது. இது இந்திய சுதந்திரச் சட்டம் 1947 மூலம் உச்சக்கட்டத்தை அடைந்தது. இது பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்து பிரித்தானிய இந்தியாவை இந்திய மேலாட்சி அரசு மற்றும் பாக்கித்தான் மேலாட்சி அரசாகப் பிரித்தது. 1950 ஜனவரி 26 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியக் குடியரசை நிறுவியது. பாக்கித்தான் தனது முதல் அரசியலமைப்பை 1956 இல் ஏற்றுக்கொண்டது.[1] 1971 இல், கிழக்கு பாகிஸ்தான் தனது சுதந்திரத்தைப் பெற்று வங்காளதேசம் என மாறியது.[2] பின்னணிஇந்தியாவில் ஆரம்பகால பிரித்தானிய காலனித்துவம்போர்த்துகலைச் சேர்ந்த வாஸ்கோ ட காமா, அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக இந்தியாவை அடைந்த முதல் ஐரோப்பிய ஆய்வாளர் ஆவார். அவர் 1498 ஆம் ஆண்டில் மசாலாப் பொருட்களைத் தேடி கோழிக்கோட்டை அடைந்தார்.[3] ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, டச்சு மற்றும் ஆங்கிலேயர்கள் இந்திய துணைக் கண்டத்தில் வர்த்தக புறக்காவல் நிலையங்களை நிறுவினர். 1613 ஆம் ஆண்டில் சூரத்தில் முதல் ஆங்கில வர்த்தக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.[4] அடுத்த இரண்டு நூற்றாண்டுகளில், ஆங்கிலேயர்கள் [note 1] போர்த்துகீசியர்கள் மற்றும் டச்சுக்காரர்களை தோற்கடித்தனர். ஆனால் பிரெஞ்சுக்காரர்களுடன் மோதலில் இருந்தனர். பதினெட்டாம் நூற்றாண்டின் முதல் பாதியில் முகலாயப் பேரரசின் வீழ்ச்சி பிரித்தானியரை இந்திய அரசியலில் காலடி வைக்க அனுமதித்தது.[5] பிளாசி சண்டையின்போது, இராபர்ட் கிளைவின் கீழிருந்த பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் இராணுவம் வங்காள நவாப் சிராச் உத் தவ்லாவைத் தோற்கடித்து அந்த நிறுவனம் இந்திய விவகாரங்களில் ஒரு முக்கிய சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. 1764ஆம் ஆண்டு பக்சார் சண்டைக்குப் பிறகு, வங்காளம், பீகார் மற்றும் ஒடிசாவின் மிட்னாபூர் பகுதி மீது நிர்வாக உரிமைகளைப் பெற்றது.[6] திப்பு சுல்தானின் தோல்விக்குப் பிறகு, தென்னிந்தியாவின் பெரும்பகுதி நிறுவனத்தின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது அல்லது ஒரு துணைப்படைத் திட்டம் மூலம் அதன் மறைமுக அரசியல் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. மராட்டியப் பேரரசு ஆட்சி செய்த பகுதிகளை, தொடர்ச்சியான போர்களில் கைப்பற்றியப் பின்னர், நிறுவனம் அந்த பகுதிகளின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது. முதலாம் ஆங்கிலேய-சீக்கியப் போர் (1845-46) மற்றும் இரண்டாம் ஆங்கிலேய–சீக்கியப் போர்களில் (1848-49) சீக்கியப் படைகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், 1849 ஆம் ஆண்டில் பஞ்சாபின் பெரும்பகுதி இணைக்கப்பட்டது.[7]
இயக்கங்கள்![]() கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்த அழகு முத்துக்கோன் தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்களின் இருப்புக்கு எதிரான ஆரம்பகால புரட்சியாளராக இருந்தார். 1757இல் ஆங்கிலேயர்கள் மற்றும் மருதநாயகத்தின் படைகளுக்கு எதிரான போரில் தோற்கடிக்கப்பட்டு அவர் தூக்கிலிடப்பட்டார்.[8] ஆங்கிலேயர்களால் ஆதரிக்கப்பட்ட ஆற்காடு நவாப்பை பூலித்தேவன் எதிர்த்தார்.[9] மருதநாயகம் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் சென்னை இராணுவத்தின் தளபதியாக இருந்தார். அவர் பிரித்தானிய இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் அருகேயுள்ள பனையூர் என்ற கிராமத்தில் ஒரு தமிழ் வேளாளர் குடும்பத்தில் பிறந்தார். அவர் இசுலாம் மதத்திற்கு மாறி முகமது யூசுப் கான் என்று பெயரை வைத்துக் கொண்டார். மதுரையின் ஆட்சியாளராக ஆனபோது கான் சாஹிப் என்று பிரபலமாக அறியப்பட்டார். அவர் ஆற்காடு துருப்புக்களில் ஒரு போர்வீரராகவும், பின்னர் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் துருப்புக்களுக்கு தளபதியாகவும் ஆனார். தென்னிந்தியப் பாளையக்காரர்களின் கிளர்ச்சியை அடக்க ஆங்கிலேயர்களும் ஆற்காடு நவாபும் இவரைப் பயன்படுத்திக் கொண்டனர். பின்னர் மதுரையின் நாயக்கர் ஆட்சி முடிவடைந்தபோது மதுரையை நிர்வகிக்கும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவர் ஆங்கிலேயர்களுக்கும் ஆற்காடு நவாபுக்கும் எதிராகப் போரிட்டார். 1764 அக்டோபர் 15 அன்று மதுரை அருகே சம்மட்டிபுரத்தில் தூக்கிலிடப்பட்டார். கிழக்கத்திய இந்தியாவிலும், நாடு முழுவதிலும், பழங்குடி சமூகங்கள் பிரிட்டிஷ் மற்றும் அவர்களின் சக உறுப்பினர்களுக்கு எதிராக, குறிப்பாக ஜமீந்தார்கள் மற்றும் பணக்காரர்களுக்கு எதிராக ஏராளமான கிளர்ச்சிகளை ஏற்பாடு செய்தன.[10][11][12] 1771 ஆம் ஆண்டில் சார்க்கண்டு பகுதி கிழக்கிந்திய நிறுவனத்திற்கு பின்சு மாஞ்சி தலைமையில் மாற்றப்பட்டது.[10] பின்னர், வங்காளத்தின் அருகிலுள்ள ரங்க்பூரில் 1782 முதல் 1783 வரை விவசாயிகள் கிளர்ச்சி நடந்தது.[13] சார்க்கண்டில் பின்சு மாஞ்சியின் கிளர்ச்சியைத் தொடர்ந்து, இப்பகுதி முழுவதும் ஏராளமான கிளர்ச்சிகள் நடந்தன. இதில் 1784 இல் தில்கா மாஞ்சி தலைமையிலான கிளர்ச்சி, 1798 முதல் 1799 வரை மன்பூமின் பூமிஜ் கிளர்ச்சி; 1800 இல் பூகன் சிங்கின் தலைமையில் பாலாமுவின் செரோ கிளர்ச்சி மற்றும் 1807 ஆம் ஆண்டில் துகன் மாங்க் தலைமையிலான தமார் பிராந்தியத்தில் முண்டா சமூகத்தின் இரண்டு கிளர்ச்சிகளும், புண்டு மற்றும் கொன்டா தலைமையின் கீழ் 1819-20 இல் நடந்த கிளர்ச்சியும் அடங்கும்.[10] 1820 முதல் 1821 வரை மேற்கு சிங்பூமில் உள்ள ரோரோ ஆற்றின் சைபாசா அருகே ஹோ மக்களின் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆனால் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்ட காலனித்துவ குதிரைப்படையால் தோற்கடிக்கப்பட்டது.[14][15] 1771 முதல் 1809 வரை இந்த பிராந்தியங்களில் சூவர் கிளர்ச்சிகளை வழிநடத்திய கங்கா நரேன் சிங் தலைமையில் வங்காளத்தின் மிட்னாபூர் அருகே ஒரு பெரிய பூமிஜ் கிளர்ச்சி ஏற்பட்டது.[16] இசுலாமிய போதகரான சையத் மிர் நிசார் அலி திடுமிர் 19 ஆம் நூற்றாண்டில் வங்காள ஜமீந்தார்கள் மற்றும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒரு விவசாய எழுச்சியை வழிநடத்தினார். தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து, அவர் ஒரு மூங்கில் கோட்டையைக் கட்டினார். இது பெங்காலி நாட்டுப்புற புராணங்களில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றது. ஆங்கிலேய வீரர்கள் கோட்டையைத் தாக்கியதால் ஏற்பட்ட காயம் காரணமாக 1831 நவம்பர் 19 அன்று இறந்தார்.[17] இந்த கிளர்ச்சிகள் சார்க்கண்டு மற்றும் அதற்கு அப்பால் பெரிய பிராந்திய இயக்கங்களுக்கு வழிவகுத்தன. அதாவது சிங்க்ரே மற்றும் பின்ரே மாங்கி தலைமையிலான கிழக்கு இந்தியாவில் வசிக்கும் பழங்குயின மக்கள் ( கோல், முண்டா, ஓரான், பூமிஜ் மற்றும் ஹோ சமூகங்கள்) 1830 முதல் 1833 வரை "வெளியாட்களுக்கு" எதிராக கிளர்ச்சி செய்ய ஒன்றிணைந்தன.[10][11][14][18] 1855 முதல் 1857 வரை 60,000 க்கும் மேற்பட்ட சந்தாலிகள் , சாந்தலர்கள் கிளர்ச்சி எனப்படும் தொடர் போராட்டத்தை வழிநடத்தினர் (ஆனால் 1784 ஆம் ஆண்டிலேயே தொடங்கியது என கூறப்படுகிறது) . 1857 ஆம் ஆண்டின் கிளர்ச்சிக்கு வழிவகுத்த அதன் மிகவும் தீவிரமான ஆண்டுகளில் முர்மு குலத்தைச் சேர்ந்த சகோதரர்கள் சித்து, கன்ஹு, சந்த் மற்றும் பைரவ் மற்றும் அவர்களது சகோதரிகள் புலோ மற்றும் ஜானோ ஆகியோர் தீவிரமாக இருந்தனர்.[19][20][21][22] 100 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தகைய தீவிரமான கிளர்ச்சிகள் கிழக்கு இந்தியாவில் ஒரு பெரிய, தாக்கத்தை ஏற்படுத்திய, மில்லினேரியன் இயக்கத்திற்கு அடித்தளத்தை உருவாக்கின. இது பிர்சா முண்டா தலைமையில் இப்பகுதியில் பிரித்தானிய ஆட்சியின் அடித்தளத்தை மீண்டும் உலுக்கியது. முண்டா சமூகத்தைச் சேர்ந்த பிர்சா முண்டா, ஆங்கிலேய அரசிடமும், உள்நாட்டு நிலவுடமைதாரர்களிடமும் அடிமைப்பட்டிருந்த பழங்குடி மக்களுக்காகப் போராடினார்.[23][24][25] 1900ஆம் ஆண்டு கெரில்லா வீரர்களின் உதவிகொண்டு போராடிய இவரை ஆங்கிலேய அரசு கைது செய்தது. தனது 25ஆவது வயதிலேயே சிறையிலேயே மரணமடைந்தார்.[24][26] அவரது இயக்கம் அடக்கப்படுவதை உறுதி செய்வதற்காக அவசர தகனம்/அடக்கம் செய்யப்பட்டது.[23][24][26] ![]() கிழக்கிந்திய நிறுவனத்திற்கு மைசூர் மிகக் கடுமையான எதிர்ப்பை வழங்கியது. மைசூர் இராச்சியத்திற்கும், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திற்கும் இடையே ஆங்கிலேய-மைசூர்ப் போர்கள் நடந்தது. ஐதர் அலியும் அவரது வாரிசான திப்பு சுல்தானும் நான்கு முனைகளில் போரை நடத்தினர். ஆங்கிலேயர்கள் மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கில் இருந்து தாக்கினர். அதே நேரத்தில் மராத்தியர்களும் நிசாமின் படைகளும் வடக்கிலிருந்து தாக்கின. நான்காவது போரின் விளைவாக ஐதர் அலி மற்றும் திப்பு (1799 இல் இறுதிப் போரில் கொல்லப்பட்டார்) ஆகியோரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டன. மேலும் கிழக்கிந்திய நிறுவனத்தின் நலனுக்காக மைசூர் இராச்சியம் கலைக்கப்பட்டது. நிறுவனம் இந்தியாவின் பெரும்பகுதியை வென்று கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது.[27] பழசி ராஜா 1774 முதல் 1805 வரை இந்தியாவின் கண்ணூருக்கு அருகிலுள்ள வடக்கு மலபாரிலுள்ள கோட்டயம்-மலபார் நாட்டின் மன்னராக இருந்தார். பிரித்தானியக் குடியேற்றவாதத்தை எதிர்த்துப் போராடிய துவக்க கால விடுதலை வீரர்களில் இவரும் ஒருவர். 1799 இல், திப்புவின் சீரங்கப்பட்டணம் வீழ்ந்த பிறகு ஆங்கிலேயர் வயநாடு பகுதிகளை தமதாக்கிக் கொண்டனர். இதனை எதிர்த்து மீண்டும் ஆங்கிலேயருடன் சூன் 1800 இல் சண்டையிடத் துவங்கினார். ஆங்கிலேயர்கள் பழசிராசாவை கைது செய்ய சென்றபோது அவர் தற்கொலை செய்து கொண்டார். 1766இல் ஐதராபாத் நிசாம், வடக்கு சர்க்கார் மாவட்டங்களை பிரிட்டிஷ் அதிகாரத்திற்கு மாற்றினார். இன்றைய ஒடிசாவிலும் அப்போதைய அரசியல் பிரிவின் வடக்குப் பகுதியிலும் அமைந்துள்ள பரலகேமுண்டி தோட்டத்தின் ஆட்சியாளர் இரண்டாம் ஜெகந்நாத கஜபதி நாராயண தேவன் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் புதிய ஐரோப்பிய காலனித்துவவாதிகளுடன் மோதல்களில் ஈடுபட்ட முதல் ஆட்சியாளர்களில் ஒருவர். ஒடிசாவின் பண்டைய நிலத்தை வெளிப்புற ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து விடுவிப்பதற்கும், கடந்த காலத்திலிருந்து இழந்த கீழைக் கங்க வம்சம்-கஜபதி பேரரசின் மகிமையின் மறுமலர்ச்சிக்கும் மூலோபாய இராஜதந்திர திட்டங்களை வகுப்பதில் இவர் தனது வாழ்க்கையின் இறுதி வரை முயற்சி செய்தார். ![]() பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி வேலு நாச்சியார் 1760 முதல் 1790 வரை சிவகங்கையின் ராணியாக இருந்தார். வேலு நாச்சியார் போர் ஆயுதங்கள், வளரி, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் ஆகியவற்றில் பயிற்சி பெற்றிருந்தார். அவர் பல மொழிகளில் அறிஞராகவும் இருந்தார். மேலும் பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் உருது போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். தனது கணவர் முத்துவடுகநாதத்தேவர் 1772-இல் ஐரோப்பியரின் படையெடுப்பால் இறந்த பின்னர், நாட்டை மீட்டெடுக்க காத்திருந்தார். இந்தப் படையெடுப்பை எதிர்க்க நினைத்த வேலுநாச்சியார் விருப்பாட்சியில் தங்கி ஐதர் அலியைச் சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேயர் எதிர்ப்புப் பற்றிப் பேசி விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஐதர் அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார்.[28] 1780- ஆண்டு ஜூன் மாதம் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஐதல் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். அவரது படை உதவியுடன் போர் பயிற்சி பெறாத மக்களின் துணைகொண்டு ஆங்கிலேயர்களை வெற்றிக்கொண்டார். பிறகு சிவகங்கை சீமையின் முதல் இராணியாக முடிசூட்டப்பட்டார்.[29][30] வீரபாண்டிய கட்டபொம்மன் இந்தியாவின் தமிழ்நாட்டின் பஞ்சலாங்குறிச்சியைச் சேர்ந்த பதினெட்டாம் நூற்றாண்டின் பாளையக்காரராகவும், கிழக்கிந்திய நிறுவனத்திற்கு எதிராக பாளையக்காரர் போர்களை நடத்திய தலைவராகவும் இருந்தார். கிழக்கிந்திய நிறுவனத்தின் இறையாண்மையை ஏற்க மறுத்த கட்டபொம்மன் அவர்களுக்கு எதிராகப் போராடினார்.[31] அவர் ஆங்கிலேயர்களால் பிடிக்கப்பட்டு கிபி 1799 இல் தூக்கிலிடப்பட்டார்.[32] கொங்குநாட்டு தலைவரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பாளையக்காரருமான தீரன் சின்னமலை கிழக்கிந்திய நிறுவனத்திற்கு எதிராகப் போராடினார்.[33] கட்டபொம்மன் மற்றும் திப்பு சுல்தான் ஆகியோரின் மரணத்திற்குப் பிறகு, 1800 ஆம் ஆண்டில் கோயம்புத்தூரில் ஆங்கிலேயர்களைத் தாக்க சின்னமலை மராட்டியர்கள் மற்றும் மருது பாண்டியர் ஆகியோரின் உதவியை நாடினார். பிரித்தானிய படைகள் நட்பு நாடுகளின் படைகளைத் தடுத்து நிறுத்த முடிந்தது, சின்னமலை கோயம்புத்தூரைத் தானாகவே தாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவரது இராணுவம் தோற்கடிக்கப்பட்டு அவர் பிரித்தானிய படைகளிடமிருந்து தப்பினார். சின்னமலை கெரில்லா போரில் ஈடுபட்டார். 1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அரச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார்.[34][35] 1804 ஆம் ஆண்டில் கோர்த்தா மன்னரான கலிங்கரிடமிருந்த புரி ஜெகன்நாதர் கோயிலுக்கான பாரம்பரிய உரிமைகள் பறிக்கப்பட்டன. இதற்கு பதிலடியாக ஆயுதமேந்திய பைகா குழு ஒன்று பிப்பிலியில் ஆங்கிலேயர்களைத் தாக்கியது. கலிங்க இராணுவத்தின் தலைவரான ஜெய ராஜ்குரு ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒரு பொதுவான கூட்டணியை உருவாக்கக் கோரினார்.[36] இராஜ்குருவின் மரணத்திற்குப் பிறகு, ஒடிசாவில் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சிக்கு எதிராக பக்சி ஜகபந்து ஆயுதப் புரட்சியைத் (பைகா கலகத்தைத்) தொடங்கினார். இது பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திற்கு எதிரான முதல் கிளர்ச்சியாகும்.[37][38][39] ![]() 1857ஆம் ஆண்டு கிளர்ச்சி1857 ஆம் ஆண்டின் இந்தியக் கிளர்ச்சி என்பது கிழக்கிந்திய நிறுவனத்திற்கு எதிராக வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் ஏற்பட்ட ஒரு பெரிய கிளர்ச்சியாகும்.[40] நிறுவனத்தின் இராணுவம் மற்றும் இராணுவ பாசறைகளில் சேவை நிலைமைகள் வீரர்களின் மத நம்பிக்கைகள் மற்றும் தப்பெண்ணங்களுடன் பெருகிய முறையில் மோதலுக்கு வந்தன.[41] இராணுவத்தில் உயர் சாதியைச் சேர்ந்த உறுப்பினர்களின் ஆதிக்கம், வெளிநாட்டில் பணியமர்த்தப்பட்டதன் காரணமாக சாதியை இழந்தது, அவர்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவதற்கு அரசாங்கத்தின் ரகசிய வடிவமைப்புகள் பற்றிய வதந்திகள் ஆகியவை அதிருப்தியை அதிகரிக்க வழிவகுத்தன.[42] சிப்பாய்கள் தங்கள் குறைந்த ஊதியம் மற்றும் பதவி உயர்வு மற்றும் சலுகைகள் விஷயங்களில் பிரிட்டிஷ் அதிகாரிகள் கடைப்பிடித்த இன பாகுபாடு ஆகியவற்றால் ஏமாற்றமடைந்தனர்.[43] 1764 ஆம் ஆண்டு நடந்த பக்சார் போருக்குப் பின் கிழக்கிந்திய வணிகக் குழு இந்தியாவில் ஒரு அரசியல் சக்தியாக எழுச்சியுற்றது. பின் வந்த காலங்களில் இந்தியாவின் வளங்கள் கம்பெனியின் வணிக முன்னேற்றத்திற்காகவே பயன்படுத்தப்பட்டன. இந்தியர்களின் நலன்கள் பெரிதாக பொருட்படுத்தப்படவில்லை. செல்வச் சுரண்டல், இந்திய கைவினைத் தொழில்களின் நலிவு போன்றவை இந்தியாவில் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தன. தொழில் புரட்சியின் விளைவாக பிரிட்டன் தொழிலகங்களில் இயந்திரங்கள் அதிக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டன. புதிதாக அறிமுகமான இயந்திரங்களின் உதவியால் உற்பத்திப் பொருட்களும் அதிக அளவில் தயாரிக்கப்பட்டன. ஆங்கிலேயே வணிகர்கள் இவற்றை விற்பனை செய்யும் சந்தையாகவே இந்தியாவை பார்க்கத் தொடங்கினர். அதே நேரம் இந்தியாவில் கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்ட இந்தியப் பொருட்களுக்கு பிரிட்டனில் அதிக வரிகள் விதிக்கப்பட்டன. எனவே இந்தியப் பொருட்களுக்கான தேவை சரிந்து இந்தியத் தொழில்கள் அழிவை நோக்கி சென்றன. இது தவிர ஆங்கிலேயர்கள் நிலவரி மக்கள் விருப்பத்திற்கு எதிராக அமைந்திருந்தன. ஆங்கிலேயரின் துணைப்படைத் திட்டம் சுதேச சமஸ்தான மன்னர்களிடையே வெறுப்புணர்ச்சி உண்டாக்கியது அப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட என்பீல்டு வகை துப்பாக்கிகள் உடனடிக் காரணமாக அமைந்தன. அவ்வகை துப்பாக்கிகளுக்கு வழங்கப்பட்ட தோட்டாக்கள் ஒரு வகை உறையால் மூடப்பட்டிருந்தன. இவற்றை வாயால் கடித்து உறைகளை அகற்ற வேண்டியிருந்தது. இந்த உறைகள் மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பினால் ஆனவை என்று தகவல் பரவியது. இது இந்து மற்றும் முஸ்லிம் சமயத்தைச் சார்ந்த ராணுவ வீரர்களின் சமய உணர்வை புண்படுத்துவதாக ராணுவ வீரர்கள் எண்ணினர். இதன் காரணமாக ராணுவ வீரர்கள் அவ்வகை உறைகளை வாயால் கடித்து நீக்க மறுத்து உயர் அதிகாரிகளை எதிர்த்தனர். இதன் தொடர்ச்சியாக மங்கள் பாண்டே இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரர்களில் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் 1857 மார்ச் 29 ஆம் நாளில் பாரக்பூரில் தனது உயரதிகாரியை தாக்கி தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இதற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார். இதுவும் ஆங்கிலேய இராணுவத்தில் பணிபுரிந்த இந்திய வீரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட ஒரு ஆரம்பமாக அமைந்தது.[44] ![]() 1857 மே 10 அன்று, மீரட்டில் இராணுவ வீரர்கள் தங்களுக்கு கட்டளையிட்ட அதிகாரிகள் மீது திருப்பித் தாக்கினர்.[45] அவர்களில் சிலர் கொல்லப்பட்டனர். அவர்கள் மே 11 அன்று தில்லியை அடைந்து, கிழக்கிந்திய நிறுவனத்தின் சுங்கச்சாவடிக்கு தீ வைத்து, செங்கோட்டையை நோக்கி அணிவகுத்துச் சென்றனர்.[46] இந்துக்கள், முஸ்லிம்கள் என்ற வேறுபாடின்றி இந்தியரை ஒன்றிணைப்பதற்கான தேவை ஏற்பட்டதனால் முகலாயப் பேரரசர் இரண்டாம் பகதூர் சா சபாரை தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என கிளர்ச்சியை ஆதரித்த அரசர்களும், கிளர்ச்சிப் படைகளும் கேட்டுக்கொண்டன. பிரித்தானியரை இந்தியாவிலிருந்து அகற்றும்வரை எல்லா அரசர்களும் இந்தியாவின் பேரரசராக சபாரை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தனர்.[40] கிளர்ச்சியாளர்கள் நகரத்தின் ஐரோப்பிய, யூரேசிய மற்றும் கிறிஸ்தவ மக்களில் பெரும்பகுதியைக் கொன்றனர். இதில் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய பூர்வீகவாசிகளும் அடங்குவர்.[47] அயோத்தியின் பிற பகுதிகளிலும், வடமேற்கு மாகாணங்களிலும் கிளர்ச்சிகள் வெடித்தன. இதைத் தொடர்ந்து உள்நாட்டிலும் கிளர்ச்சி வெடித்தது. இது மக்கள் கிளர்ச்சிகளுக்கு வழிவகுத்தது.[48] ஆங்கிலேயர்களின் இராணுவ பலத்தால் கிளர்ச்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. [49] ஆங்கிலேயர்கள் தில்லிக்கு அருகே கிளர்ச்சியாளர்களின் முக்கிய இராணுவத்துடன் சண்டையிட்டு, அவர்களைத் தோற்கடித்து, 1857 செப்டம்பர் 20 அன்று நகரத்தை மீட்டெடுத்தனர்.[50] அதைத் தொடர்ந்து, மற்ற மையங்களிலும் கிளர்ச்சிகள் நசுக்கப்பட்டன. கடைசி குறிப்பிடத்தக்க போர் 1858 ஜூன் 17 அன்று குவாலியரில் நடந்தது. இதில் ராணி லட்சுமிபாய் கொல்லப்பட்டார். 1859 வரை தாந்தியா தோபே தலைமையில் அவ்வப்போது நடந்த சண்டைகளும் கொரில்லா போர்களும் தொடர்ந்தன. ஆனால் பெரும்பாலான கிளர்ச்சியாளர்கள் இறுதியில் அடக்கப்பட்டனர். நவீன இந்திய வரலாற்றில் 1857 இல் நடைபெற்ற கிளர்ச்சி முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. ஆங்கிலேயர்களின் இராணுவ மற்றும் அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்திய அதேவேளை, அவர்கள் இந்தியாவை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கும் இது வழிவகுத்தது.[51] இந்திய அரசு சட்டம் 1858 இன் கீழ், கிழக்கிந்திய நிறுவனத்தின் பிரதேசம் பிரித்தானிய அரசாங்கத்திற்கு மாற்றப்பட்டது.[52] முடியரசின் பிரதிநிதியாக இந்தியத் தலைமை ஆளுநர் நியமிக்கப்பட்டார். புதிய ஆட்சிக் கொள்கையின் அறிவிப்பின்படி "இந்திய அரசர்கள், தலைவர்கள் மற்றும் மக்கள்" ஆகிய அனைவரும் பிரித்தானிய ஆட்சியின்கீழ் சமமாக நடத்தப்படுவார்கள் என்று விக்டோரியா அவர்கள் அறிவித்தார்.[53] இந்திய மக்களுக்கு செய்யப்பட்ட அரச பிரகடனத்தில், விக்டோரியா மகாராணி பிரித்தானிய சட்டத்தின் கீழ் பொது சேவைக்கு சமமான வாய்ப்பை உறுதியளித்தார். மேலும் இச்சட்டம் பூர்வீக இளவரசர்களின் உரிமைகளை மதிப்பதாக உறுதியளித்தது.[54] இளவரசர்களிடமிருந்து நிலங்களை கைப்பற்றும் கொள்கையை ஆங்கிலேயர்கள் நிறுத்தி, மத சகிப்புத்தன்மை அறிவித்து, இந்தியர்களை பொது சேவையில் அனுமதிக்கத் தொடங்கினர். இருப்பினும், அவர்கள் பூர்வீக இந்திய வீரர்களுடன் பிரித்தானிய வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்தனர். மேலும் பிரித்தானிய வீரர்கள் மட்டுமே பீரங்கிகளைக் கையாள அனுமதித்தனர். இரண்டாம் பகதூர் சா யங்கோனுக்கு நாடுகடத்தப்பட்டு, அங்கு அவர் 1862 இல் இறந்தார். முகலாயப் பேரரசு முடிவுக்குக் கொண்டுவந்தது. 1877 இல் அரசி விக்டோரியா இந்தியாவின் மகாராணி ஆனார் 1876இல் பிரித்தனின் பிரதமர் பெஞ்சமின் டிஸ்ரைலி விக்டோரியாவை மகாராணியை இந்தியாவின் பேரரசியாக அறிவித்தார். இது பிரித்தானிய மரபுகளுக்கு அந்நியமானதாக இருந்ததால் பிரித்தன் தாராளவாதிகள் ஆட்சேபனை தெரிவித்தனர்.[55] ![]() அமைப்புரீதியாக்கப்பட்ட இயக்கங்களின் எழுச்சிசிப்பாய் கலகத்தைத் தொடர்ந்த பல்லாண்டுகளும் தேசிய மற்றும் பிரதேச அளவிலான இந்திய தலைமை குறித்த இந்திய பொதுமக்கள் அபிப்பிராயம், அரசியல் விழிப்புணர்வு, தெளிவுபடுத்தலின் காலமாக இருந்தது. தாதாபாய் நௌரோஜி 1866இல் கிழக்கிந்திய கூட்டமைப்பை உருவாக்கினார், சுரேந்திரநாத் பானர்ஜி 1876இல் இந்திய தேசிய கூட்டமைப்பை நிறுவினார். ஓய்வுபெற்ற பிரித்தானிய பொதுப்பணி சேவகர் ஆலன் ஆக்டவியன் ஹியூமின் பரிந்துரைகளால் தூண்டப்பெற்று 1885 ஆம் ஆண்டு மும்பையில் கூடிய எழுபத்து மூன்று இந்தியப் பிரதிநிதிகள் இந்திய தேசிய காங்கிரசை நிறுவினர்.[57] அவர்கள் பெரும்பாலும் முற்போக்கு சிந்தனைவாதிகளாகவும் தேர்ந்த மேற்கத்திய கல்வியாளர்களாகவும், அந்தந்த மாகாண சீர்திருத்தவாதிகளாகவும் சட்டம், கற்பித்தல், இதழியலைத் தொழிலாகவும் கொண்டிருந்தனர். காங்கிரசு கட்சி தொடங்கப்பட்டபோது, நன்கு வரையறுக்கப்பட்ட சித்தாந்தங்களைக் கொண்டிருக்கவில்லை என்பதுடன் அரசியல் அமைப்பிற்குத் தேவையான சில மூலாதாரங்களை மட்டுமே கட்டுப்படுத்தியது. மாறாக, இது பிரித்தானிய அரசாங்கத்திற்கு விசுவாசமாக உள்ள வருடாந்திர அடிப்படையில் சந்திக்கின்ற மற்றும் குறைந்த சிக்கல் நிரம்பிய குடியுரிமைகள் அல்லது அரசாங்கத்திலான குறிப்பாக பொதுப்பணித் துறையில் வாய்ப்புக்கள் போன்றவற்றின் மீதான பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற மிகவும் விவாதம் செய்கின்ற ஒரு அமைப்பாகவே இருந்தது. இந்தத் தீர்மானங்கள் இந்திய அரசாங்கத்திற்கும் அவ்வப்போது பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கும் சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால் காங்கிரஸின் துவக்ககால பலன்கள் போதுமானவையாக இல்லை. ஒட்டுமொத்த இந்தியாவையும் பிரநிதித்துவம் செய்வதாக கூறிக்கொண்டாலும் காங்கிரசு நாட்டுப்புற மேல்வர்க்க நலன்களின் பிரதிநிதியாகவே இருந்தது; மற்ற பொருளாதார பின்னணிகளிலிருந்து வந்த உறுப்பினர்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டன.[57] இருப்பினும், வரலாற்றின் இந்த காலம் இன்றும் முக்கியமானது. ஏனெனில் இது துணைக் கண்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வந்த இந்தியர்களின் முதல் அரசியல் அணிதிரட்டலையும், சுதந்திரமான சுதேச அரசுகளின் தொகுப்பைக் காட்டிலும், இந்தியா ஒரு தேசமாக இருக்க வேண்டும் என்ற கருத்தின் முதல் வெளிப்பாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தியது.[57] ![]() இந்திய சமுதாயத்தை சீர்திருத்துவதில் மதக் குழுக்கள் அதிகளவில் பங்கு வகித்தன. இவை ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம் மற்றும் சீக்கிய மதத்தின் நாம்தாரி (அல்லது குகா) போன்ற சமூக-சமய குழுக்களின் செல்வாக்கு இந்திய சமூகம் மறுசீரமைப்படைவதற்கு முன்னோடியாக இருந்தது. சமய சீர்திருத்தம் மற்றும் சமூக பெருமிதத்தின் வலியுறுத்தல் முழுமையான தேசபக்திக்கான பொதுமக்கள் அமைப்பின் எழுச்சிக்கு அடிப்படையாக அமைந்தது.[58] லால்-பால்-பால் என்று பிரபலமாக அறியப்பட்டவர்கள் (பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால், லாலா லஜபதி ராய்), விவேகானந்தர், இராமகிருஷ்ணர், அரவிந்தர், வ. உ. சிதம்பரம்பிள்ளை, சுப்பிரமணிய பாரதி, பங்கிம் சந்திர சட்டர்ஜி, இரவீந்திரநாத் தாகூர் மற்றும் தாதாபாய் நௌரோஜி போன்ற ஆண்களும் மற்றும் ஆங்கில-ஐரியப் பெண்ணான சகோதரி நிவேதிதை போன்ற பெண்களின் படைப்புகள் புத்துணர்ச்சிக்கும் சுதந்திரத்திற்கும் ஆர்வத்தை பரப்பின. பல ஐரோப்பிய மற்றும் இந்திய அறிஞர்களால் இந்தியாவின் பூர்வீக வரலாறு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது இந்தியர்களிடையே தேசியவாதத்தின் எழுச்சிக்கு ஊக்கமளித்தது.[57] அந்த சமயத்தில் சுதேசி இயக்கம் மிகவும் வெற்றிகரமாக இருந்தது. திலகரின் பெயர் எங்கும் பரவத் தொடங்கியது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் அவரைப் பின்பற்றத் தொடங்கினர். ![]() இந்திய துணித் துறையும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது. துணித் தொழில்துறையின் வணிகப் பொருட்கள் இந்தியாவில் தொழில்துறை புரட்சிக்கு முன்னோடியாக இருந்தன, விரைவில் இங்கிலாந்தில் பருத்தி துணிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டதால், உள்நாட்டு சந்தை நிறைவுற்றது. மேலும் தயாரிப்புகள் வெளிநாட்டு சந்தைகளில் விற்கப்பட வேண்டியிருந்தது. மறுபுறம், இந்தியா பருத்தி உற்பத்தியில் வளமானதாக இருந்தது. மேலும் பிரித்தானிய ஆலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களை வழங்கும் நிலையில் இந்தியா இருந்தது. கிழக்கிந்திய நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் தனது வேர்களை நிலைநாட்டியிருந்தது. கச்சா பொருட்கள் இங்கிலாந்துக்கு மிகக் குறைந்த விலையில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. அதே நேரத்தில் சுத்திகரிக்கப்பட்ட தரமான பருத்தி துணி இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு மிக அதிக விலையில் விற்கப்பட்டது. இது இந்தியாவின் பொருளாதாரத்தை வறட்சியடையச் செய்து, இந்தியாவின் துணித் தொழிலை பெரிதும் பாதித்தது. இதனால் பருத்தி சாகுபடி செய்பவர்கள் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டது. 1905 அக்டபர் 16 ல் கர்சன் பிரபு பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தை இரண்டாக பிரிக்க முடிவு எடுத்தார். [59] வங்காளப் பிரிவினையை அறிவித்த பிறகு, வங்காள மக்களிடமிருந்து பெரும் எதிர்ப்பு எழுந்தது. ஆரம்பத்தில், பிரிவினை செய்தித்தாள்கள் பிரச்சாரத்தின் மூலம் எதிர்க்கப்பட்டது. இத்தகைய நுட்பங்களை முழுமையாகப் பின்பற்றுபவர்கள் பிரித்தானிய பொருட்களை புறக்கணிக்க வழிவகுத்தனர், மேலும் இந்திய மக்கள் சுதேசி அல்லது இந்தியப் பொருட்களை மட்டுமே பயன்படுத்துவதாகவும், இந்திய ஆடைகளை மட்டுமே அணிவதாகவும் உறுதியளித்தனர். இறக்குமதி செய்யப்பட்ட ஆடைகள் வெறுப்புடன் பார்க்கப்பட்டன. பல இடங்களில், வெளிநாட்டு துணிகளை பொது இடங்களில் எரிக்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. வெளிநாட்டு துணிகளை விற்பனை செய்யும் கடைகள் மூடப்பட்டன. பருத்தி ஜவுளித் தொழில் சுதேசி தொழில் என்று சரியாக விவரிக்கப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் சுதேசி ஜவுளி ஆலைகள் வளர்ச்சியடைந்தன. சுதேசி தொழிற்சாலைகள் எல்லா இடங்களிலும் தோன்றின. ![]() 1900 வாக்கில், காங்கிரசு ஒரு அகில இந்திய அரசியல் அமைப்பாக உருவெடுத்திருந்தாலும், அதற்கு பெரும்பாலான இந்திய முஸ்லிம்களின் ஆதரவு இல்லை.[60] மத மாற்றம், பசு வதை மற்றும் அரபு எழுத்துக்களில் உருது மொழியைப் பாதுகாப்பதற்கு எதிராக இந்து சீர்திருத்தவாதிகள் நடத்திய தாக்குதல்கள், காங்கிரசு மட்டுமே இந்திய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்றால் சிறுபான்மை அந்தஸ்து மற்றும் உரிமைகள் மறுப்பு பற்றிய அவர்களின் கவலைகளை ஆழப்படுத்தியது. உத்தரப் பிரதேசத்தின்அலிகரில் சர் சையத் அகமது கான் முஸ்லிம் மீளுருவாக்கத்திற்கான ஒரு இயக்கத்தைத் தொடங்கினார். இது 1875 ஆம் ஆண்டில் முகம்மதன் ஆங்கிலோ-ஓரியண்டல் கல்லூரி நிறுவப்பட்டது (1920 இல் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் என்று மறுபெயரிடப்பட்டது). நவீன மேற்கத்திய அறிவுடன் இசுலாத்தின் பொருந்தக்கூடிய தன்மையை வலியுறுத்துவதன் மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பதே இதன் நோக்கமாக இருந்தது. இருப்பினும், இந்தியாவின் முஸ்லிம்களிடையே உள்ள பன்முகத்தன்மை, ஒரே மாதிரியான கலாச்சார மற்றும் அறிவுசார் மீளுருவாக்கத்தை கொண்டு வருவது சாத்தியமற்றதாக இருந்தது. விடுதலை இயக்கத்தின் இந்துப் பிரிவு தேசியவாதத் தலைவர் பால கங்காதர திலகரால் வழிநடத்தப்பட்டது. திலகருடன் மகாத்மா காந்தியை தனது அரசியல் வழிகாட்டியாகக் கொண்டிருந்த கோபால கிருஷ்ண கோகலேவும் இருந்தார். ![]() காங்கிரசு உறுப்பினர்களிடையே தேசியவாத உணர்வுகள் அரசாங்க அமைப்புகளில் பிரதிநிதித்துவம் பெறுவதற்கும், இந்திய சட்டம் மற்றும் நிர்வாகத்தில் ஒரு கருத்தைக் கொண்டிருப்பதற்கும் வழிவகுத்தன. காங்கிரசுகாரர்கள் தங்களை விசுவாசிகளாக கருதினர். ஆனால் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தாலும், தங்கள் சொந்த நாட்டை நிர்வகிப்பதில் தங்களது பங்கை விரும்பினர். இந்த போக்கை தாதாபாய் நௌரோஜி வடிவமைத்தார். அவர் ஐக்கிய இராச்சியத்தின் பொது சபைக்கான தேர்தலில் வெற்றிகரமாக போட்டியிட்டு, அதன் முதல் இந்திய உறுப்பினராக ஆனார். தாதாபாய் நௌரோஜி தேசத்தின் விதியாக சுயராஜ்ஜியத்தை ஏற்றுக்கொண்ட முதல் இந்திய தேசியவாதி ஆவார்.[61] இந்தியாவின் கலாச்சாரம், வரலாறு மற்றும் மதிப்புகளை புறக்கணித்து அவதூறு செய்த பிரித்தானிய கல்வி முறையை பால கங்காதர திலகர் கடுமையாக எதிர்த்தார். தேசியவாதிகளுக்கு கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டதையும், தங்கள் தேசத்தின் விவகாரங்களில் சாதாரண இந்தியர்களுக்கு எந்தக் குரலும் பங்கும் இல்லாததையும் கண்டு சினம் கொண்டார். இந்த காரணங்களுக்காக, சுயராஜ்யமே இயற்கையான மற்றும் ஒரே தீர்வாக அவர் கருதினார். "சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை, நான் அதை அடைந்தே தீருவேன்" என்ற அவரது வாக்கியம் இந்தியர்களுக்கு ஒரு உத்வேகமாக இருந்தது. ![]() 1907இல் காங்கிரசு இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தது. திலகர் தலைமையிலான தீவிரவாதிகள், பிரித்தானிய பேரரசைத் தூக்கியெறியவும், அனைத்து பிரித்தானிய பொருட்களையும் கைவிடவும் உள்நாட்டு கிளர்ச்சி மற்றும் நேரடி புரட்சியை ஆதரித்தனர். இந்த இயக்கம் இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பொதுமக்களின் ஈர்ப்பையும், புரட்சியை பின்தொடர்பவர்களையும் பெற்றது. மறுபுறம், தாதாபாய் நௌரோஜி மற்றும் கோபால கிருஷ்ண கோகலே போன்ற தலைவர்களின் தலைமையிலான மிதவாதிகள் பிரித்தானிய ஆட்சியின் கட்டமைப்பிற்குள் சீர்திருத்தத்தை விரும்பினர். இதே கருத்தை கொண்டிருந்த பிபின் சந்திர பால் மற்றும் லாலா லஜபதி ராய் , வ. உ. சிதம்பரம்பிள்ளை மற்றும் அரவிந்தர் போன்ற வளர்ந்து வரும் பொதுத் தலைவர்களால் திலகர் ஆதரிக்கப்பட்டார். இவர்களின் கீழ், இந்தியாவின் மூன்று பெரிய மாநிலங்களான மகாராட்டிரம், வங்காளம் மற்றும் பஞ்சாப் ஆகியவை மக்களின் கோரிக்கையையும் இந்தியாவின் தேசியவாதத்தையும் வடிவமைத்தன. வன்முறை மற்றும் ஒழுங்கு குலைவை ஊக்கவிப்பதாக திலகரை கோகலே விமர்சித்தார். ஆனால் 1906 ஆம் ஆண்டு காங்கிரசுக்கு பொது உறுப்பினர் இல்லை. இதனால் திலக்கும் அவரது ஆதரவாளர்களும் கட்சியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கட்சி இரண்டாகப் பிரிந்தது. ![]() இந்த நேரத்தில் திலகர் கைது செய்யப்பட்டதால், இந்திய தாக்குதலுக்கான அனைத்து நம்பிக்கைகளும் ஸ்தம்பித்தன. இந்திய தேசிய காங்கிரசு மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை இழந்தது. நிலுவையிலிருக்கும் அரசியலமைப்புச் சீரமைப்பிலிருந்து அரசாங்க சேவைகள் மற்றும் தேர்தல்களில் சிறப்புப் பரிசீலனைகள் உள்ளிட்ட சலுகைகளைக் கோரி முஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு குழு தலைமை ஆளுநர் மிண்டோ பிரபுவைச் சந்தித்தது. இந்திய அரசுச் சட்டம், 1909-ல் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலகங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் முசுலிம் லீக்கின் சில கோரிக்கைளை ஆங்கிலேயர்கள் அங்கீகரித்தனர். முஸ்லிம் லீக் இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் காங்கிரசிலிருந்து பிரிந்து செல்வதை, "ஒரு தேசத்திற்குள் ஒரு தேசத்தின்" குரலாக வலியுறுத்தியது. மியான்மர், சிங்கப்பூர், மலேசியா, சப்பான், ஆப்கானித்தான், செருமனி, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் வாழ்ந்த பஞ்சாபி இந்தியர்களால் இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராட 1913 ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் கதர் கட்சி உருவாக்கப்பட்டது.[62] [63] இவர்கள் அங்கிருந்தபடியே பிரித்தானியருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய நாட்டின் விடுதலைக்கு உதவிடும் நோக்கில் பல அமைப்புகளை உருவாக்கினர்.[64] காலனித்துவ இந்தியாவில், 1914 இல் நிறுவப்பட்ட இந்திய கிறிஸ்தவர்களின் அகில இந்திய மாநாடு , இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு பங்கைக் கொண்டிருந்தது. இது சுயராஜ்யத்தை ஆதரித்தது. மேலும், இந்தியப் பிரிவினையை எதிர்த்தது.[65] இதன் உறுப்பினர்கள் கிறிஸ்தவர்களுக்கான தனித் தொகுதிகளை எதிர்த்தனர். மேலும், "ஒரே பொதுவான, தேசிய அரசியல் அமைப்பில் பொதுவான குடிமக்களாகப் பங்கேற்க வேண்டும்" என்றும் கருதினர்.[66][67] இந்திய கிறிஸ்தவர்களின் அகில இந்திய மாநாடு மற்றும் அகில இந்திய கத்தோலிக்க ஒன்றியம் ஆகியவை ஆந்திரப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எம். இரங்கசாமியை தலைவராகக் கொண்டு ஒரு செயற்குழுவை அமைத்தன. 1947 ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற்ற கூட்டுக்குழுவில், 13 அம்சங்கள் கொண்ட கோரிக்கை மனுவை தயாரித்து, அது இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்திற்கு அனுப்பப்பட்டது. அதில் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் இருவருக்கும் மத சுதந்திரம் இருக்கவேண்டும் எனக் கோரினர்.[68][67] வெளிநாட்டு மதுபானம் துணைக்கண்டத்தின் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று கருத்தைக் கொண்டிருந்த காந்தியின் வழிகாட்டுதலின் கீழ் இந்திய மித்வாதிகள் இயக்கம் இந்திய தேசியவாதத்துடன் இணைந்தது.[69][70] ![]() இயக்கங்கள்வங்காளப் பிரிவினை, 1905
ஜூலை 1905 இல், இந்தியத் தலைமை ஆளுநர் கர்சன் பிரபு வங்காள மாகாணத்தைப் பிரிக்க உத்தரவிட்டார். நிர்வாகத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கம் என்று கூறப்பட்டது.[72] இருப்பினும், இது பிளவுபடுத்தி ஆட்சி செய்வதன் மூலம் தேசியவாத உணர்வை அடக்கும் முயற்சியாக பார்க்கப்பட்டது. வங்காள இந்து அறிவுஜீவிகள் உள்ளூர் மற்றும் தேசிய அரசியலில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தினர். இந்தப் பிரிவினை வங்காளிகளுக்கு அதிர்ச்சியூட்டியது. அரசாங்கம் இந்திய மக்களின் அபிப்பிராயத்தை கேட்கத் தவறியதோடு மட்டுமல்லாமல், அந்தச் செயல்பாடு ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியை பிரதிபலிப்பதாகவும் இருந்தது. கொந்தளிப்பான சூழ்நிலை தெருக்களிலும் பத்திரிக்கைகளிலும் பரவியது. காங்கிரஸ் கட்சி சுதேசி கொள்கையின் கீழ் பிரித்தானிய தயாரிப்புகளை புறக்கணிக்கத் தொடங்கியது. மக்கள் ஒருவருக்கொருவர் தங்கள் கைகளில் ராக்கி கட்டிக்கொண்டும் ஆரந்தன் (உணவு எதுவும் சமைக்காமை) அனுசரித்தும் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இந்த நேரத்தில், அரவிந்தர், பூபேந்திரநாத் தத்தர் மற்றும் பிபின் சந்திர பால் போன்ற வங்காள இந்து தேசியவாதிகள் இந்தியாவில் பிரித்தானிய ஆட்சியின் நியாயத்தன்மையை சவால் செய்யும் கடுமையான செய்திகளை ஜுகந்தர் மற்றும் சந்தியா போன்ற வெளியீடுகளில் எழுதத் தொடங்கினர். இதனால் அவர்கள் மீது தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டது. 1800 களின் கடைசி தசாப்தத்திலிருந்து குறிப்பாக வங்காளம் மற்றும் மகாராட்டிராவில் நடந்த தீவிரப் போராட்டங்களுக்கும் இந்தப் பிரிவினை காரணியாக இருந்தது. வங்காளத்தில், சகோதரர்கள் அரவிந்தர் மற்றும் பரின் கோசு தலைமையிலான அனுசீலன் சமித்தி இயக்கம், ஆங்கிலேயப் பிரமுகர்களின் மீது பல தாக்குதல்களை ஏற்பாடு செய்தது. இத்த்க்குதலில் முசாபர்பூரைச் சேர்ந்த ஒரு பிரித்தானிய நீதிபதியின் உயிர் பறிக்கப்பட்டது. இது அலிபூர் வெடிகுண்டு வழக்கைத் தூண்டியது. அதே நேரத்தில் பல புரட்சியாளர்களும் கொல்லப்பட்டனர். அல்லது கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். கொலை செய்யப்பட்ட அல்லது தூக்கிலிடப்பட்ட குதிராம் போஸ், பிரபுல்லா சாகி, கனைலால் தத் போன்ற புரட்சியாளர்கள் அனைவராலும் விரும்பப்பட்ட வீட்டுப் பெயர்களாக மாறினர்.[71] யுகாந்தர்கொல்கத்தாவில் உள்ள டல்ஹவுசி சதுக்கத்தில் உள்ள செயலக கட்டிடம் - (எழுத்தர்களின் கட்டிடம்) மீது தாக்குதல் நடத்தியதற்காக குறிப்பிடத்தக்க பினாய் பாசு, பாதல் குப்தா, மற்றும் தினேஷ் குப்தா.
யுகாந்தர் என்பது இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் வங்காளத்தில் செயல்பட்ட ஒரு புரட்சி இயக்கமாகும். அனுசீலன் சமித்தி என்ற புரட்சி அமைப்பிலிருந்து பிரிந்து 1906ஆம் ஆண்டு உருவானது. அரவிந்தர், அவரது சகோதரர் பரிந்திர குமார் கோசு, பூபேந்திரநாத் தத்தர், ராஜா சுபோத் மாலிக் ஆகியோர் இதனைத் தொடங்கினர். இவ்வமைப்பும் அனுசீலன் சமித்தியும் உடற்பயிற்சி கழகங்கள் என்ற போர்வையில் பிரித்தானிய அரசுக்கு எதிராக இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டன. குழுவின் சில மூத்த உறுப்பினர்கள் அரசியல் மற்றும் இராணுவப் பயிற்சிக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களில் ஒருவரான ஹேமச்சந்திர கனுங்கோ பாரிசில் தனது பயிற்சியைப் பெற்றார். கொல்கத்தா திரும்பிய பிறகு, புறநகர்ப் பகுதியான மணிக்டலாவில் ஒரு தோட்ட வீட்டில் ஒரு ஒருங்கிணைந்த மதப் பள்ளியையும் வெடிகுண்டு தொழிற்சாலையையும் நிறுவினார். இருப்பினும், முசாபர்பூர் மாவட்ட நீதிபதி கிங்ஸ்ஃபோர்டை கொலை செய்ய குதிராம் போஸ் மற்றும் பிரபுல்லா சாக்கி (30 ஏப்ரல் 1908) ஆகியோரால் முயற்சிக்கப்பட்டதால், காவல்துறை விசாரணை தொடங்கியது. இது பல புரட்சியாளர்களை கைது செய்ய வழிவகுத்தது. யுகாந்தரின் மூத்த தலைவர்களில் ஒருவராக பாகாஜதீனும் இருந்தார். ஹவுரா-சிப்பூர் சதி வழக்கு தொடர்பாக அவர் உட்பட பல தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தேசத்துரோகத்திற்காக விசாரிக்கப்பட்டனர். ஆட்சியாளருக்கு எதிராக இராணுவத்தின் பல்வேறு படைப்பிரிவுகளை தூண்டியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அலிபூர் வெடிகுண்டு வழக்குகொல்கத்தாவில் வெடிகுண்டு தயாரிக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக அரவிந்தர் உட்பட யுகாந்தர் கட்சியின் பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.[73] கட்சியின் ஆர்வலர்கள் பலர் அந்தமான் சிற்றறைச் சிறைக்கு நாடு கடத்தப்பட்டனர். தில்லி-லாகூர் சதி வழக்கு![]() 25.12.1912-ல் தில்லியில் அன்றைய அளுநர் ஹார்டிங் பிரபுவின் பதவியேற்பு விழாவை ஒட்டி நிகழ்ந்த அணிவகுப்பில், யானை மீது அம்பாரியில் அமர்ந்து வந்த ஆளுநர் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. அதில் அவர் தப்பினார்; யானையின் மாவுத்தன் கொல்லப்பட்டார். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக வசந்த் குமார் பிஸ்வாஸ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். படுகொலை முயற்சிக்குப் பின்னர் நடந்த விசாரணையில் ராஷ் பிஹாரி போஸ் இந்த கொலை முயற்சியின் மூலகாரணமாக இருந்தார் என்பதை பிரித்தானியர் அறிய மூன்றாண்டுகள் ஆயின. வசந்த் குமார் பிஸ்வாஸ் வெடிகுண்டை வீசிய குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அமீர் சந்த் பாம்ப்வால் மற்றும் அவத் பிகாரி ஆகியோருடன் சதித்திட்டத்தில் பங்கு வகித்ததற்காக தூக்கிலிடப்பட்டார்.[74][75][76][77] ஹவுரா கும்பல் வழக்குமுன்னதாக கைது செய்யப்படாத பாகாஜதீன் என்ற ஜதீந்திர நாத் முகர்ஜி உட்பட பெரும்பாலான யுகாந்தர் தலைவர்கள் 1910 ஆம் ஆண்டில் சம்சுல் ஆலம் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டனர். பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலோர் 1911 இல் விடுவிக்கப்பட்டனர்.[78] அகில இந்திய முஸ்லிம் லீக்1906 இல் பிரித்தானியர் கால இந்தியாவில் டாக்காவில் அகில இந்திய முசுலிம் லீக் தொடங்கப்பட்டது.[79] பிரித்தானிய இந்தியாவில் முஸ்லிம்களின் நலன்களைப் பாதுகாக்கும் ஒரு அரசியல் கட்சியாக இருந்ததால், இந்திய துணைக் கண்டத்தில் பாக்கிஸ்தான் உருவானதன் பின்னணியில் முஸ்லிம் லீக் ஒரு தீர்க்கமான பங்கைக் கொண்டிருந்தது.[80] 1916இல் முகம்மது அலி ஜின்னா இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் அமைப்பாக இருந்த இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். கல்வி, சட்டம், கலாச்சாரம் மற்றும் தொழில்துறை ஆகியவற்றில் பிரித்தானியத் தாக்கங்கள் இந்தியாவுக்கு நன்மை பயக்கும் என்று கருதி, அந்த நேரத்தில் பெரும்பாலான காங்கிரசாரைப் போலவே, ஜின்னாவும் முழுமையான சுயாட்சியை ஆதரிக்கவில்லை. ஜின்னா அறுபது உறுப்பினர்களைக் கொண்ட பேரரசின் சட்டமன்றக் குழுவில் உறுப்பினரானார். சபைக்கு உண்மையான அதிகாரம் இல்லை, மேலும் அதிக எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கப்படாத பிரித்தானியராஜ்சார்பு விசுவாசிகள் மற்றும் ஐரோப்பியர்களை உள்ளடக்கீருயது. ஆயினும்கூட, குழந்தை திருமணங்கள் தடைச் சட்டம், முஸ்லிம் வக்ஃபு (மத அறநிலையங்கள்) சட்டப்பூர்வமாக்கப்படுவதில் ஜின்னா முக்கிய பங்கு வகித்தார். தேராதூனில் இந்திய இராணுவ அகாதமியை நிறுவ உதவிய சாண்ட்ஹர்ஸ்ட் குழுவில் நியமிக்கப்பட்டார்.[81] முதலாம் உலகப் போரின் போது, ஜின்னா மற்ற இந்திய மிதவாதிகளுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களின் போர் முயற்சியை ஆதரித்தார். முதல் உலகப் போர்துவக்கத்தில் இந்தியக் கலகம் குறித்து கொண்டிருந்த அச்சங்களுக்கு மாறாக, மைய நீரோட்ட அரசியல் தலைவர்களிடமிர்நுது பிரித்தானிய ஆட்சிக்கான விசுவாசம் மற்றும் நன்மதிப்பின் உணர்ச்சிமிகு வெளிப்பாட்டுடன் முதலாம் உலகப் போர் தொடங்கியது. ஆட்களையும் மூலாதாரங்களையும் வழங்கியதன் மூலம் பிரித்தானியர்களின் போர் முயற்சிகளுக்கு இந்தியா பெருமளவில் பங்களித்தது. கிட்டத்தட்ட 1.3 மில்லியன் இந்திய வீரர்களும் தொழிலாளர்களும் ஐரோப்பா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் போரிட்டனர். அதேசமயம் இந்திய அரசாங்கமும் இளவரசர்களும் பெரிய அளவிலான உணவு, பணம் மற்றும் வெடிப்பொருள்களை அனுப்பி வைத்தனர். இருப்பினும் வங்காளமும் பஞ்சாபும் (இந்திய விடுதலைப் போராட்டத்தில் புரட்சி இயக்கங்கள்) காலனிய நடவடிக்கைகளுக்கு எதிரான கொந்தளிப்புகள் நிரம்பிய இடங்களாகவே இருந்து வந்தன. பஞ்சாப் கொந்தளிப்புகளோடு மிக நெருக்கமாக இணைந்தபடி அதிகரித்துவந்த வங்காள தேசியவாதம் பிரதேச நிர்வாகத்தை ஏறக்குறைய முடக்கிப்போட்டுவிடும் அளவிற்கு குறிப்பிடத்தகுந்ததாக இருந்தது.[82][83]. இதற்கிடையில், ஒரு தேசியவாத கிளர்ச்சியை ஏற்பாடு செய்ய புரட்சியாளர்கள் தயாராக இல்லாததால் இந்து-ஜெர்மானிய சதி போன்ற தோல்வியுற்ற சதித்திட்டங்கள் அறங்கேறின.[84][85] புரட்சிகர சதித்திட்டங்கள் எதுவும் இந்தியாவுக்குள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மக்கள் போர் முயற்சியில் அழிவுகரமான வன்முறை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு இந்திய மக்கள் மத்தியிலிருந்து இந்திய பாதுகாப்புச் சட்டம் 1915 வடிவில் காலனித்துவ எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவைப் பெற்றது. போர்க்காலத்தில் பெரிய கிளர்ச்சிகள் எதுவும் நடக்கவில்லை. இருப்பினும் சதித்திட்டங்கள் பிரித்தானிய அதிகாரிகளிடையே கிளர்ச்சி பற்றிய ஆழ்ந்த அச்சத்தை அதிகரித்தன, இந்தியர்களை அடிபணியச் செய்ய பயமுறுத்த தீவிர சக்தியைப் பயன்படுத்த அவர்களைத் தயார்படுத்தியது. ![]() இந்து-ஜெர்மன் சதிஇந்து-ஜெர்மானிய சதி என்பது 1914 மற்றும் 1917 க்கு இடையில் இந்திய தேசியவாத குழுக்களால் முதல் உலகப் போரின் போது பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக இந்திஅ முழுவதும் கிளர்ச்சியை ஏற்படுத்த தொடங்கப்பட்ட ஒரு தொடர் திட்டமாகும். இந்தியாவில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் புரட்சி இயக்கங்கள் அமெரிக்காவில் கதர் கட்சி ஜெர்மனியில் இருந்த இந்திய விடுதலைக் குழு ஆகியோர் இச்சதித் திட்டங்களில் ஈடுபட்டனர்.[86][87][88] இவர்களுக்கு ஜெர்மானிய வெளியுறவுத் துறை அமைச்சகம், ஐரிய குடியரசு இயக்கம் ஆகியவை முழு ஆதரவு அளித்தன. சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்த ஜெர்மானியத் தூதரகம் மற்றும் உதுமானியப் பேரரசும் இதற்கு ஆதரவளித்தன.
இச்சதியின் விளைவாக பல வழக்குகள் காலனிய அரசால் தொடரப்பட்டன. லாகூர் சதி வழக்கு, இந்து-ஜெர்மானிய சதி வழக்கு ஆகியவை அவற்றுள் குறிப்பிடத்தக்கவை. சதியின் விளைவாக காலனிய அரசின் இந்தியக் கொள்கைகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. ![]() கதர் கலகம்இந்தியாவில் பிரித்தானிய இராச்சியத்தை முடிவுக்கு வர 1915 பிப்ரவரியில் பிரித்தானிய இந்திய ராணுவத்தில் பான்-இந்திய கலகத்தைத் தொடங்குவதற்கான திட்டமாகும். முதலாம் உலகப் போரின் தொடக்கத்தில், அமெரிக்காவின் கதர் கட்சி, ஜெர்மனியில் பெர்லின் குழு, பிரித்தானிய இந்தியாவில் இந்திய விடுதலைப் போராட்ட புரட்சி இயக்கங்கள், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தூதரகம் மூலம் ஜெர்மன் வெளியுறவு அலுவலகம் ஆகியவற்றுக்கிடையே இந்த சதி உருவானது. இந்த சம்பவம் அதன் பெயரை வட அமெரிக்க கதர் கட்சியிலிருந்து பெற்றது. கனடாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பஞ்சாபி சமூகத்தின் உறுப்பினர்கள் இந்த திட்டத்தில் மிக முக்கியமாக பங்கேற்றனர். முதலாம் உலகப் போரின்போது பிரித்தானிய இராச்சியத்தின் மீது பான்-இந்திய கிளர்ச்சியைத் தொடங்க 1914க்கும் 1917 க்குமிடையில் வடிவமைக்கப்பட்ட மிகப் பெரிய இந்து-ஜெர்மன் கலகத்தின் பல திட்டங்களில் இது மிக முக்கியமானது.[89] [90] [91] முக்கிய மாநிலமான பஞ்சாபில் கலகம் தொடங்க திட்டமிடப்பட்டது. அதைத் தொடர்ந்து வங்காளத்திலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் கலகம் ஏற்பட்டது. சிங்கப்பூர் வரை இந்திய அலகுகள் கிளர்ச்சியில் பங்கேற்க திட்டமிடப்பட்டன. ஒருங்கிணைந்த உளவுத்துறை மூலமும், காவல்துறை மூலமும் திட்டங்கள் முறியடிக்கப்பட்டன. பிரிட்டிசு உளவுத்துறை கனடாவிலும் இந்தியாவிலும் கதரியக்கத்தில் ஊடுருவியது. பஞ்சாபில் திட்டமிட்ட எழுச்சியைத் தொடங்குவதற்கு முன்னர் ஒரு உளவாளியால் கடைசி நிமிடத்தில் தடுக்கப்பட்டது. முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டனர்.[86][87][88] கலகத்தின் அச்சுறுத்தல் பற்றிய புலனாய்வு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பல முக்கியமான போர்க்கால நடவடிக்கைகளுக்கு வழிவகுத்தது. இதில் இங்ரெஸ் இந்தியச் சட்டம், 1914, வெளிநாட்டினர் சட்டம் 1914, இந்திய பாதுகாப்பு சட்டம் 1915 ஆகியவை அடங்கும் . இந்த சதியைத் தொடர்ந்து முதல் லாகூர் சதி விசாரணை, பெனாரஸ் சதி விசாரணை ஆகியவை பல இந்திய புரட்சியாளர்களுக்கு மரண தண்டனை வழங்கியது. மேலும் பலர் நாடுகடத்தப்பட்டனர். யுத்தம் முடிவடைந்த பின்னர், இரண்டாவது கதரியக்க எழுச்சி குறித்த அச்சம் ரௌலட் சட்டங்களின் பரிந்துரைகளுக்கு வழிவகுத்தது. பின்னர் ஜாலியன்வாலா பாக் படுகொலையில் முடிந்தது. ![]() 1 வது கிறிஸ்துமஸ் நாள் மற்றும் 2 வது கிறிஸ்துமஸ் நாள் சதிமுதல் கிறிஸ்துமஸ் தின சதி என்பது 1909 இல் இந்திய புரட்சிகர இயக்கத்தால் செய்யப்பட்ட ஒரு சதித்திட்டமாகும். ஆண்டு இறுதி விடுமுறை நாட்களில், வங்காள ஆளுநர் தனது இல்லத்தில் தலைமைத் தளபதி மற்றும் அனைத்து உயர் அதிகாரிகள் மற்றும் தலைநகரின் (கொல்கத்தா) அதிகாரிகள் முன்னிலையில் ஒரு விருந்தை ஏற்பாடு செய்தார். 10வது ஜாட் படைப்பிரிவு பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்தது. பாகாஜதீன் தலைமையில் கிளர்ச்சியாளர் குழு, விருந்து நடைறும் அறையை வெடிக்கச் செய்து காலனித்துவ அரசாங்கத்தை அழிப்பதை சாதகமாகப் பயன்படுத்த முடிவு செய்தனர். இரண்டாம் கிறிஸ்துமஸ் தின சதித்திட்டம் முதலாம் உலகப் போரின் போது பிரித்தானிய இந்தியாவின் வங்காளத்தில் ஜெர்மன் ஆயுதங்கள் மற்றும் ஆதரவுடன் கிளர்ச்சியைத் தொடங்கும் ஒன்று. 1915 கிறிஸ்துமஸ் தினத்தன்று திட்டமிடப்பட்ட இந்த திட்டம், வங்காள இந்திய புரட்சியாளர் ஜதீந்திரநாத் முகர்ஜியின் கீழ் யுகாந்தர் குழு திட்டமிடப்பட்டு வழிநடத்தப்பட்டது. கதர் கட்சியின் வழிகாட்டுதலின் கீழ் பர்மாவின் பிரித்தானிய காலனி மற்றும் சியாம் இராச்சியத்தில் ஒரே நேரத்தில் கிளர்ச்சியுடன் ஒருங்கிணைக்கவும், தென்னிந்திய நகரமான சென்னை மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள பிரித்தானிய தண்டனை காலனி மீது தாக்குதல் நடத்தவும் திட்டமிடப்பட்டது. வில்லியம் கோட்டையைக் கைப்பற்றி, வங்காளத்தை தனிமைப்படுத்தவும், தலைநகரான கொல்கத்தாவைக் கைப்பற்றவும் சதித்திட்டம் தீட்டப்பட்டது. [92] ஆனாலும் சத்திட்டம் முறியடிக்கப்பட்டது. இந்திய விடுதலைக்காக 1915 இல் காபுல் நகரில் முதலாவது நாடு கடந்த இந்திய இடைக்கால அரசு நிறுவப்பட்டது. இவ்வரசிற்கு அதிபராக ராஜா மகேந்திர பிரதாப் சிங்கும், பிரதமராக மௌலானா பர்கதுல்லால்லாவும், வெளிவிவகார அமைச்சராக செம்பகராமன் பிள்ளையும், பதவிவகித்தனர்.[93] ஆனால் போதிய பலமில்லாததால் வெற்றி பெறமுடியவில்லை. ராஜா மகேந்திரப் பிரதாப்பின் இந்தியச் சுதந்திரம் பற்றிய கட்டுரைகள் அன்றைய ஆப்கானிஸ்தானின் செல்வாக்கு மிக்க சிராஜ் அல் – அக்பர் பத்திரிகை மூலம் வெளியுலகெங்கும் பரப்பப்பட்டது. நாடுகடந்த இந்திய அரசு வெற்றிகரமாக இயங்கியதோடு தமக்குச் சாதகமான நேச நாடுகளைத் திரட்டுவதில் குறிப்பிடத்தக்க வெற்றியையும் எட்டியிருந்தது. ஆப்கானிஸ்தானில் இயங்கிய இந்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவை ஆங்கிலேயர்களின் நெருக்கடி காரணமாக ஆப்கான் அரசு 1918 ஆம் ஆண்டு திரும்பப் பெற்றது. இதனால் இவ்வரசு தோல்வியில் முடிவடைந்தது. இவ்வரசின் வெளிவிவகார துறை அமைச்சராக இருந்த செம்பகராமன் பின்னர் இட்லரின் செர்மனியக் கடற்படையின் நாசகாரிக் கப்பலான எம்டன் கப்பலின் படைத்தலைவரானார். இக்கப்பல் பின்நாளில் சென்னைத் துறைமுகத்தின் மீதும், புனித ஜார்ஜ் கோட்டையிலும் (பின்னர் தமிழ்நாடு அரசுச் செயலகமாகவும், தற்போது பாவேந்தர் செம்மொழி ஆய்வு நூலகமாவும் செயல்பட்டு வருகின்றது), திருகோணமலைத் துறைமுகத்தின் மீதும் இக்கப்பல் பீரங்கித் தாக்குதல் நடத்தியது. பிரித்தானிய சீர்திருத்தங்கள்![]() காந்தியின் இந்திய வருகை![]() தென்னாப்பிரிக்காவில் இந்திய தேசியவாத இயக்கத்தின் தலைவராக காந்தி இருந்தார். அடிப்படை பாகுபாடு மற்றும் தவறான தொழிலாளர் சிகிச்சை மற்றும் ரௌலட் சட்டம் போன்ற அடக்குமுறையான காவலர் கட்டுப்பாட்டையும் எதிர்த்தார். இந்த போராட்டங்களின் போது, காந்தி சத்தியாகிரகம் என்ற கருத்தை முழுமையாக்கினார். ஜனவரி 1914 இல் (முதல் உலகப் போர் தொடங்குவதற்கு முன்பே) காந்தி வெற்றி பெற்றார். இந்தியர்களுக்கு எதிரான சட்டம் ரத்து செய்யப்பட்டு, அனைத்து இந்திய அரசியல் கைதிகளும் அந்த நேரத்தில் தென்னாப்பிரிக்க அரசிற்கு தலைமையேற்றிருந்த ஜெனரல் ஜான் ஸ்மட்ஸால் விடுவிக்கப்பட்டனர்.[94] காந்தி இதை புறக்கணிப்பு, எதிர்ப்பு அணிவகுப்பு மற்றும் அவரும் அவரைப் பின்பற்றுபவர்களும் உண்ணாவிரதம் போன்ற அகிம்சை போராட்டங்களை விரிவாகப் பயன்படுத்துவதன் மூலம் சாதித்தார்.[95] இருபது வருடங்களாக இந்தியாவிற்கும் அதன் அரசியலிற்கும் அந்நியமானவராக இருந்த காந்தி 1915 ஜனவரி 9 அன்று இந்தியா திரும்பினார். ஆரம்பத்தில் தேசிய-அரசுக்கான அழைப்புகளுடன் அல்லாமல் காங்கிரசு கட்சி கேட்டுக் கொண்டிருந்த ஒருங்கிணைந்த வர்த்தக-சார்ந்த பிராந்தியத்திற்கு ஆதரவாக அரசியல் களத்தில் நுழைந்தார். ஐரோப்பியர்கள் கொண்டுவந்த தொழில்துறை முன்னேற்றம் மற்றும் கல்வித்துறை முன்னேற்றம் ஆகியவை இந்தியாவின் பல பிரச்சினைகளையும் தணிப்பதற்கு நீண்டகாலம் தேவைப்படுவதாக காந்தி நம்பினார். மூத்த காங்கிரசுகாரரும் இந்தியத் தலைவருமான கோபால கிருஷ்ண கோகலே, காந்தியின் வழிகாட்டியானானார். வன்முறையற்ற சட்ட மறுப்பு பற்றிய காந்தியின் கருத்துக்களும் உத்திகளும் ஆரம்பத்தில் சில இந்தியர்களுக்கும் காங்கிரசு தலைவர்களுக்கும் நடைமுறைக்கு ஒவ்வாததாகத் தோன்றின. காந்தியின் சொந்த வார்த்தைகளில், "அடங்க மறுத்தல் என்பது அறவியல் அடிப்படையில் அல்லாமல் சட்டப்பூர்வமாக இயற்றப்பட்ட சட்டங்களை மீறுவதாகும்". ஊழல் நிறைந்த அரசுடனான ஒத்துழைப்பை திரும்பப் பெறுவதன் மூலம் அது அகிம்சை முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். லோக்மான்ய திலகர் மீது காந்திக்கு மிகுந்த மரியாதை இருந்தது. ![]() ஹிந்து ஜெர்மன் சதித் திட்டம் என்று குறிப்பிடப்பட்டதையும், இந்தியாவில் இருந்த தீவிரவாத இயக்கங்களில் ஜெர்மனி மற்றும் போல்ஷெவிக்கின் தொடர்பையும் விசாரப்பதற்கென்று ரௌலட் ஆணையத்தால் பேரரச அரசியலமைப்பு சபை அமைக்கப்பட்டது. முந்தைய ஆண்டு செய்யப்பட்ட பரிந்துரைகளால் இயற்றப்பட்ட ரௌலட் சட்டம் கடுமையான முறையில் எதிர்க்கப்பட்டது.[96][97][98] தேசியவாத அமைப்புக்களின் போர்க்கால சதித்திட்டங்களை ஆராய்வதற்கும், போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் பிரச்சினையைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்கும் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் போர்க்கால அதிகாரங்களை போருக்குப் பிந்தைய காலத்திற்கும் நீட்டிக்க ரௌலட் பரிந்துரைத்தார். போர்க்காலச் சட்டம், பத்திரிகைகளை அமைதிப்படுத்துவதன் மூலமும், அரசியல் ஆர்வலர்களை விசாரணை இல்லாமல் தடுத்து வைப்பதன் மூலமும், தேசத்துரோகம் அல்லது தேசத்துரோகத்தில் சந்தேகத்திற்குரிய எவரையும் கைதாணை இல்லாமல் கைது செய்வதன் மூலமும் தேசத்துரகத்தைத் தணிப்பதற்கான அசாதாரண அதிகாரங்களை ஆளுநருக்கு வழங்கியது. போராட்டத்தில் தேசம் தழுவிய அளவில் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அன்னி பெசண்ட் மற்றும் அலி சகோதரர்கள் உட்பட பல பிரபல தலைவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். இந்தச் சட்டத்தின் நீட்டிப்பு பரவலான விமர்சன எதிர்ப்பை ஈர்த்தது. நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இது நாடு தழுவியது அல்ல என்றாலும், பரவலான மக்கள் அதிருப்தியின் தொடக்கத்தைக் குறிக்கிறது. ![]() இந்தச் செயல்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட போராட்டம் ஆர்ப்பாட்டங்களுக்கும் ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளுக்கும் வழிவகுத்தது. இது 1919 ஏப்ரல் 13 அன்று ஜலியான்வாலா பாக் படுகொலையில் முடிந்தது. அமிருதசரசில் நடந்த போராட்டத்திற்கு பதிலளிக்கும் விதமாக, பிரிகேடியர்-ஜெனரல் ரெஜினால்ட் டையர் பிரதான மற்றும் ஒரே நுழைவாயிலைத் தடுத்தார். மேலும் சுமார் 15,000 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்கிய நிராயுதபாணியான கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்த தனது துருப்புக்களுக்கு உத்தரவிட்டார். சுவர் முற்றமான ஜாலியன் வாலாபாக்கில் அவர்கள் அமைதியாகக் கூடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் டையர் அனைத்து கூட்டங்களுக்கும் விதிக்கப்பட்ட தடையை அமல்படுத்த விரும்பினார். மேலும் அனைத்து போராட்டக்காரர்களுக்கும் கடுமையான வழியில் ஒரு பாடம் கற்பிக்கவும் நினைத்தார்.[100] மொத்தம் 1,651 சுற்றுகள் சுடப்பட்டன. இதில் 379 பேர் கொல்லப்பட்டனர் (அதிகாரப்பூர்வ பிரித்தானிய ஆணையத்தின் கூற்றுப்படி) இந்திய அதிகாரிகளின் மதிப்பீடுகள் கொலைகள் 1,499 வரை இருந்தன . படுகொலையில் 1,137 பேர் காயமடைந்தனர். டையர் ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் பிரித்தனில் ஒரு சிலர் அவரை கதாநாயகனாகப் பாராட்டினர்.[101] [102] இது போர்க்கால சுயாட்சியையும் போருக்குப் பிந்தைய நன்மதிப்பு விளைவி்ன் பயனையும் சிதறடிப்பதாக இருந்தது.[103] ![]() ஒத்துழையாமை இயக்கங்கள்முதல் ஒத்துழையாமை இயக்கம்1920 முதல் 1922 வரை, காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். 1920 செப்டம்பரில் நடைபெற்ற காங்கிரசு கட்சியின் கொல்கத்தா மாநாட்டில், கிலாபத் மற்றும் ஆதிக்க அந்தஸ்துக்கு ஆதரவாக ஒரு ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்க வேண்டியதன் அவசியத்தை காந்தி மற்ற தலைவர்களிடம் உணர்த்தினார். முதல் சத்தியாகிரக இயக்கம் பிரிட்டனிலிருந்து அனுப்பப்பட்டவற்றுக்கு மாற்றாக காதி மற்றும் இந்தியப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. பிரித்தானிய கல்வி நிறுவனங்கள் மற்றும் சட்ட நீதிமன்றங்களை புறக்கணிக்கவும், அரசாங்க வேலையை ராஜினாமா செய்யவும், வரி செலுத்த மறுப்பது, பிரித்தானிய பட்டங்கள் மற்றும் கௌரவங்களை கைவிடவும் அது மக்களை வலியுறுத்தியது. இது 1919 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தை உருவாக்குவதில் செல்வாக்கு செலுத்த மிகவும் தாமதமாகிவிட்டாலும், இந்த இயக்கம் பரவலான மக்கள் ஆதரவைப் பெற்றது. இதன் விளைவாக இணையற்ற அளவிலான சீர்குலைவு வெளிநாட்டு ஆட்சிக்கு கடுமையான சவாலை முன்வைத்தது. இருப்பினும், இணையற்ற ஒழுங்கு கலைவு அந்நிய சட்டத்திற்கான தீவிர சவாலையும் ஏற்படுத்தியது. கோபமடைந்த கும்பலின் கைகளில் இருபத்தி இரண்டு காவலர்கள் கொல்லப்பட்ட சௌரி சௌரா சம்பவத்திற்குப் பிறகு காந்தி இயக்கத்தை கைவிட்டார். 1920இல், காந்தியின் தலைமையின் கீழ், காங்கிரசு கட்சி மறுசீரமைக்கப்பட்டு, சுயராஜ்யம் என்ற இலக்கைக் கொண்ட ஒரு புதிய அரசியலமைப்பு வழங்கப்பட்டது. அடையாளக் கட்டணத்தைச் செலுத்தத் தயாராக இருக்கும் எவரும் கட்சியில் உறுப்பினராக சேர்க்கப்பட்டனர். செயற்குழுக்களின் படிநிலை அமைப்பு உருவாக்கப்பட்டு இதுவரை வடிவமற்றிருந்த நீர்த்துப்போன இயக்கத்தின் மீதான ஒழுக்கம் மட்டும் கட்டுப்பாட்டிற்கு பொறுப்பேற்கச் செய்யப்பட்டது. இந்தக் கட்சி மேல்குடி அமைப்பிலிருந்து வெகுமக்கள் அனுகக்கூடிய மற்றும் பங்கேற்கக்கூடிய ஒன்றாக மாற்றியமைக்கப்பட்டது.[104] 1922இல் காந்திக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகளிலேயே விடுவிக்கப்பட்டார். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, காந்தி அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்தை நிறுவினார். அங்கிருந்து யங் இந்தியா என்ற செய்தித்தாளை நிறுவினார். இந்து சமூகத்தில் சமூக ரீதியாக பின்தங்கியவர்களை-கிராமப்புற ஏழைகள் மற்றும் தீண்டத்தகாதவர்களை இலக்காகக் கொண்ட தொடர்ச்சியான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார்.[105][106] இந்த சகாப்தத்தில் காங்கிரசு கட்சி அபுல் கலாம் ஆசாத், இராசகோபாலாச்சாரி, ஜவகர்லால் நேரு, வல்லபாய் படேல், சுபாஷ் சந்திர போஸ் போன்ற புதிய தலைமுறை இந்தியர்களைக் கண்டது. அவர்கள் பின்னர் காந்திய விழுமியங்களைக் கடைப்பிடித்தாலும், அல்லது போஸின் இந்திய தேசிய இராணுவத்தைப் போலவே, அதிலிருந்து விலகினாலும், இந்திய சுயாட்சி இயக்கத்தின் மிக முக்கியமான குரல்களை உருவாக்கினர். 1920களின் நடுப்பகுதியில் சுயாட்சிக் கட்சி, இந்து மகாசபை, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் போன்ற மிதவாத மற்றும் போர்க்குணமிக்க கட்சிகள் தோன்றியதன் மூலம் இந்தியாவின் அரசியல் பரிணாமம் மேலும் விரிவடைந்தது. பிராந்திய அரசியல் அமைப்புகளும் சென்னையில் பிராமணரல்லாதவர்கள், மகாராட்டிராவில் மஹர்கள் மற்றும் பஞ்சாபில் சீக்கியர்களின் நலன்களை தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்தின. இருப்பினும் மகாகவி சுப்பிரமணிய பாரதி, வ. வே. சுப்பிரமணியம், வாஞ்சிநாதன் மற்றும் நீலகண்ட பிரம்மச்சாரி போன்ற பிராமணர்களும் சுதந்திரப் போராட்டம் மற்றும் சாதி சமூகங்களுக்கிடையிலான சமநிலை ஆகியவற்றிற்காக தமிழ்நாட்டிலிருந்து போராடியவர்களுள் முக்கியமானவர்களாவர். 1930 களில் இராசகோபாலாச்சாரி தலைமையில், பெ. வரதராஜுலு நாயுடு பி. எஸ். குமாரசுவாமிராஜா ஆகியோர் தென்தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள் வாயிலாக வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு முன்னோடியாக மக்களை ஒருங்கிணைத்தனர். கஸ்தூரிபாய் காந்தி, அம்ரித் கவுர், சு. முத்துலட்சுமி, அருணா ஆசப் அலி மற்றும் பலர் உட்பட பல பெண்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்றனர். ![]() காந்தியின் இயக்கங்களின் விளைவு1942 ஜூலை 14 அன்று காங்கிரசு செயற்குழுவின் தலைவர் அபுல் கலாம் ஆசாத் காந்தியை ஆதரித்தார். பிரித்தானிய அரசாங்கத்திடமிருந்து முழுமையான சுதந்திரம் கோரி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார். மேலும் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் பாரிய பொது ஒத்துழையாமை முன்மொழியப்பட்டது. ஆகஸ்ட் 8,1942 அன்று வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கியது.பிரித்தானிய அரசை அடிபணிய வைத்து பேச்சுவார்த்தை மேசைக்கு அழைப்பதே இதன் முக்கிய நோக்காக இருந்தது. மற்ற முக்கிய கட்சிகள் வெள்ளையனே வெளியேறு திட்டத்தை நிராகரித்தன. மேலும் பெரும்பாலானவை பிரித்தானியர்களுடன் நெருக்கமாக இருந்தன. முஸ்லிம் லீக் ஆட்சியை ஆதரித்தது. அதன் உறுப்பினர்களிடையே விரைவாக வளர்ந்தது. மேலும் ஆங்கிலேயர்களிடம் செல்வாக்கும் பெற்றது. வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு ஆங்கிலேயர்கள் பாரிய கைதுகளுடன் விரைவாக பதிலடி கொடுத்தனர். 100, 000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பல தலைவர்களும் 1945 வரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இறுதியில், நீண்ட காலத்திற்கு இந்தியாவை இனிமேலும் ஆட்சி செய்ய முடியாதது என்பதை பிரித்தானிய அரசாங்கம் உணர்ந்தது. போருக்குப் பிறகு எப்படி கண்ணியமாகவும் அமைதியாகவும் வெளியேறுவது என்பதாக மாறியது.[107][108] பூர்ண சுயராச்சியம்காங்கிரசு தலைவரும் புகழ்பெற்ற கவிஞருமான அசரத் மோகானி மற்றும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் சுவாமி குமாரானந்த் ஆகியோர் 1921 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களிடமிருந்து முழுமையான சுதந்திரத்தை கோரினர்.[109] அசரத் மோகானி கோரிய 'பூர்ண சுயராச்சியம்' தீர்மானத்தை மக்பூர் அகமத் அசாசி ஆதரித்தார்.[110] 1928 ஆம் ஆண்டில், ஆங்கிலேய ஆட்சியிலிருந்து முழுமையான சுதந்திரத்தைக் கோருவதற்காக இலண்டனில் வே. கி. கிருஷ்ண மேனனனால் இந்திய லீக் நிறுவப்பட்டது.[111][112] இந்த அமைப்பு "போருக்கு முந்தைய பிரிட்டனில் இந்திய தேசியவாதத்தை ஊக்குவிக்கும் முக்கிய அமைப்பு" என்று விவரிக்கப்பட்டது.[113] சைமன் குழுவின் மறுப்புகள் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நட்புறவை ஏற்படுத்துவதற்காக 1928 மே மாதம் மும்பையில் அனைத்துக் கட்சி மாநாடு நடைபெற்றது. இந்தியாவுக்கான அரசியலமைப்பை உருவாக்க மோதிலால் நேரு தலைமையில் ஒரு குழுவை இந்த மாநாடு நியமித்தது. இந்திய தேசிய காங்கிரசின் கொல்கத்தா அமர்வு ஆங்கிலேய அரசாங்கத்தை 1929 டிசம்பருக்குள் இந்தியாவின் ஆதிக்க அந்தஸ்தை வழங்கவேண்டும் அல்லது நாடு தழுவிய ஒத்துழையாமை இயக்கத்தை எதிர்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது. அதிகரித்து வரும் அதிருப்தி மற்றும் வன்முறை பிராந்திய இயக்கங்களுக்கு மத்தியில், முழுமையான இறையாண்மை மற்றும் பிரித்தானிய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற அழைப்பு மக்களிடமிருந்து அதிக ஆதரவைப் பெற்றது. 1929 டிசம்பரில் நடந்த இலாகூர் கூட்டத்தில், இந்திய தேசிய காங்கிரசு முழுமையான சுயாட்சியின் நோக்கத்தை ஏற்றுக்கொண்டது. நாடு முழுவதும் ஒரு சட்ட ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்க இது செயற்குழுவுக்கு அதிகாரம் அளித்தது. 1930 ஜனவரி 26 ஆம் தேதி இந்தியா முழுவதும் பூர்ண சுயராச்சியம் (முழுமையான சுயராச்சிய தினம்) கொண்டாடப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ![]() 1931 மார்ச் மாதம் காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானது. அரசியல் கைதிகளை விடுவிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் காந்தி 90,000 க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளை விடுவிக்க முடிந்தது. பகத் சிங், சுக்தேவ் தபார் மற்றும் சிவராம் ராஜகுரு ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற அவரது வேண்டுகோளை ஆங்கிலேயர்கள் ஏற்கவில்லை. அடுத்த சில ஆண்டுகளுக்கு, இந்திய அரசு சட்டம் 1935 வெளிப்படும் வரை காங்கிரசும் அரசாங்கமும் பேச்சுவார்த்தை நடத்தின. இந்தியாவின் அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக காங்கிரஸின் கூற்றை முஸ்லிம் லீக் மறுத்தது. அதே சமயம் அனைத்து முஸ்லிம்களின் அபிலாசைகளுக்கும் குரல் கொடுப்பதாக முஸ்லிம் லீக் கூறியதை காங்கிரசு மறுத்தது. ஒத்துழையாமை இயக்கம், இந்திய சுதந்திர இயக்கத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியது. அது இந்திய தேசிய காங்கிரசின் தலைமையின் கீழ் இந்திய மக்களை ஒன்றிணைத்தது. இந்த இயக்கத்தின் விளைவாக சுய ஆட்சி மீண்டும் ஒரு பேச்சாக மாறியது. [114] ![]() தேர்தல்களும் இலாகூர் தீர்மானமும்பிரித்தானிய இந்தியாவை நிர்வகிப்பதற்கான மிகப்பெரிய மற்றும் இறுதி அரசியலமைப்பு முயற்சியான இந்திய அரசு சட்டம் 1935, ஒரு தளர்வான கூட்டாட்சி கட்டமைப்பை நிறுவுதல், மாகாண சுயாட்சியை அடைவது மற்றும் தனி வாக்காளர்கள் மூலம் சிறுபான்மை நலன்களைப் பாதுகாத்தல் என மூன்று முக்கிய குறிக்கோள்களை வெளிப்படுத்தியது. சமஸ்தான விதிகள், சமஸ்தான அரசுகளையும் பிரித்தானிய இந்தியாவையும் மையத்தில் ஒன்றிணைக்கும் நோக்கில், இளவரசர்களின் தற்போதைய சலுகைகளைப் பாதுகாப்பதில் உள்ள தெளிவின்மை காரணமாக சட்டம் செயல்படுத்தப்படவில்லை. இருப்பினும் 1937 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தேர்தல்கள் நடத்தப்பட்டபோது பிரதேச சுயாட்சி நடைமுறைக்கு வந்தது; காங்கிரசு கட்சி ஐந்து பிரதேசங்களில் தெளிவான பெரும்பான்மையுடன் முன்னணியில் இருந்ததோடு இரண்டு இரண்டங்களில் தலைமையைப் பிடித்தது. அதேசமயம் முஸ்லிம் லீக் மோசமாக செயல்பட்டது. ![]() 1939இல், மாகாண அரசாங்கங்களுடன் கலந்தாலோசிக்காமல் இரண்டாம் உலகப் போரில் இந்தியா நுழைவதாக இந்தியாவின் தலைமை ஆளுநரான லின்லித்கோ பிரபு அறிவித்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காங்கிரசு தனது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவரையும் அரசாங்கத்திலிருந்து ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொண்டது. முஸ்லிம் லீகின் தலைவரான ஜின்னா, பின்னாளில் இலாகூர் தீர்மானம் என்று அறியப்படும், ஒன்று முஸ்லிம்களுக்கும் மற்றொன்று இந்துக்களுக்கும் என்று இந்தியாவை இரண்டு அண்டைநாடுகளாப் பிரிக்கின்ற இருநாடுகள் கோட்பாடு என்றும் குறிப்பிடப்படுகின்ற இந்தியப் பிரிவினையைக் கோரி 1940 இல் இலாகூரில் நடத்தப்பட்ட வருடாந்திர முஸ்லிம் லீக் மாநாட்டில் பங்கேற்பாளர்களை வற்புறுத்தினார். பாகிஸ்தான் என்ற கருத்தாக்கம் 1930 களின் முற்பகுதியிலேயே அறிமுகப்படுத்தப்பட்டது என்றாலும் ஒருசிலரே அதற்கு எதிரிவினை புரிந்தனர். இருப்பினும், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே புகைந்துகொண்டிருந்த அரசியல் சூழலும் சர்ச்சைகளும் பாகிஸ்தான் என்ற கருத்தாக்கத்தை வலுவான கோரிக்கையாக மாற்றியது. ![]() இலாகூர் தீர்மானத்திற்கு எதிராக, அகில இந்திய ஆசாத் முஸ்லிம் மாநாடு 1940 ஏப்ரலில் தில்லியில் ஒன்றிணைந்து ஐக்கிய இந்தியாவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தது.[115] அதன் உறுப்பினர்களில் இந்தியாவில் உள்ள பல இசுலாமிய அமைப்புகளும், 1400 தேசியவாத முஸ்லிம் பிரதிநிதிகளும் அடங்குவர்.[116][117] இக்கூட்டத்தில் "தேசியவாதக் கூட்டத்தில் கலந்து கொண்டதை விட ஐந்து மடங்கு கூட்டம் அதிகமாக இருந்தது".[118] அகில இந்திய முஸ்லிம் லீக், இந்தியப் பிரிவினைக்கு எதிராக நின்ற முஸ்லிம்களை மௌனமாக்க முயன்றது. பெரும்பாலும் "அச்சுறுத்தல் மற்றும் வற்புறுத்தல்" ஆகியவற்றைப் பயன்படுத்தியது. அகில இந்திய ஆசாத் முஸ்லிம் மாநாட்டின் தலைவர் அல்லா பக்ஷ் சூம்ராவின் கொலை அகில இந்திய முஸ்லிம் லீக்கிற்கு பாக்கிதானை உருவாக்கக் கோருவதை எளிதாக்கியது.[119] புரட்சிகர இயக்கம்ஒரு சில தவறான போராட்டங்களைத் தவிர, 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திற்கு முன்னர் ஆட்சியாளர்களுக்கு எதிரான புரட்சிகள் ஏற்படவில்லை. 20 ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் இந்திய மறைமுக புரட்சிகள் அதிகரிக்கத் தொடங்கியது. வன்முறையின் துணையுடன் பிரித்தானிய ஆட்சியை ஒழிக்க முயன்ற இவ்வியக்கங்கள் வங்காளம், மகாராட்டிரம், ஒடிசா, பீகார், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் சென்னை மாகாணம் ஆகிய மாநிலங்களில் தீவிரமாக இயங்கி வந்தன. இந்தியாவுக்கு வெளியிலிருந்தும் சில புரட்சி இயக்கங்கள் செயல்பட்டு வந்தன. குறிப்பாக 1905இல் வங்காளப் பிரிவினையைச் சுற்றி வங்காளத்திலும், 1907க்குப் பிறகு பஞ்சாபிலும் குறிப்பிடத்தக்க இயக்கங்கள் தோன்றின.[120] அனுசீலன் சமித்தி, (1902- வங்காளம்) யுகாந்தர் (1906- வங்காளம்), கதர் கட்சி (1913- கலிபோர்னியா), இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு (1924- பஞ்சாப்), இந்திய தேசிய ராணுவம் போன்றவை இத்தகைய புரட்சி இயக்கங்களில் குறிப்பிடத்தக்கவை.அரவிந்தோ கோஷ் மற்றும் அவரது சகோதரர் பரிந்திர குமார் கோசு போன்ற தேசியவாதிகளால் வழிநடத்தப்பட்ட வங்காள இலக்கியமான பாங்கிம் மற்றும் விவேகானந்தர், இத்தாலிய தேசியவாதம் மற்றும் ககுசோ ஒகாகுராவின் பான்-ஆசியவாதம் ஆகியவற்றால் முன்வைக்கப்பட்ட இந்து சாக்தத் தத்துவம் போன்ற மாறுபட்ட தத்துவங்களால் சமிதி தாக்கம் பெற்றது. கோஷ் சகோதரர்கள் தலைமையில் ஆங்கிலேய அதிகாரிகளை படுகொலை செய்வதற்கான ஆரம்ப முயற்சிகள் உட்பட, அது நிறுவப்பட்ட பத்தாண்டுகளுக்குள் இந்தியாவில் பிரிட்டிஷ் நலன்கள் மற்றும் நிர்வாகத்திற்கு எதிரான புரட்சிகர பயங்கரவாதத்தின் பல குறிப்பிடத்தக்க சம்பவங்களில் சமிதி ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், மகாராட்டிராவிலும் பஞ்சாபிலும் இதேபோன்ற போர்க்குணமிக்க தேசியவாத உணர்வுகள் எழுந்தன. நாசிக் மாவட்ட நீதிவான் ஏ. எம். டி. ஜாக்சன் 1909 டிசம்பரில் ஆனந்த் கன்ஹேரேவால் சுட்டுக் கொல்லப்பட்டார், அதைத் தொடர்ந்து அன்றைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ராபர்ட் ஆஷ் வாஞ்சிநாதனால் கொல்லப்பட்டார்.[121] பாரிசு மற்றும் இலண்டன் வரை இந்திய சமூகங்கள் வழியாக இந்திய தேசியவாதம் முன்னேறியது. இலண்டனில் கிருஷ்ணா வர்மாவின் ஆதரவின் கீழ் இலண்டன் இந்தியா ஹவுஸ், பிரிட்டனில் உள்ள இந்திய மாணவர்களிடமும், பாரிசு இந்தியன் சங்கத்தில் ஆர்வமுள்ள இந்திய வெளிநாட்டவர்களிடமும் காணப்பட்ட இந்திய தேசியவாதத்தின் காரணத்திற்காக வன்முறையை ஆதரித்து நியாயப்படுத்தியதற்காக அதிக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. 1907 வாக்கில், இந்திய தேசியவாதியான மேடம் பிகாஜி ருஸ்டம் காமா உருசிய புரட்சிகர நிக்கோலஸ் சஃப்ரான்ஸ்கியுடனான தொடர்புகள் மூலம், வங்காள புரட்சியாளர்கள் மற்றும் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் கீழ் உள்ள இந்தியா ஹவுஸ் உள்ளிட்ட இந்திய குழுக்கள் வெடிகுண்டுகளை உற்பத்தி செய்வதற்கான கையேடுகளைப் பெற முடிந்தது. இந்தியா ஹவுஸ் ஆயுதங்கள் மற்றும் தேசத்துரோக இலக்கியங்களின் ஆதாரமாகவும் இருந்தது. இங்கு தயாரிக்கப்பட்ட கையேடுகள் இந்தியாவில் வேகமாக விநியோகிக்கப்பட்டது. இந்திய சமூகவியலாளர் , வந்தே மாதரம், ஓ தியாகிகளே போன்ற துண்டு பிரசுரங்களும் வெளியிடப்பட்டன. புரட்சிகர வன்முறையை சாவர்க்கர் புகழ்ந்தார். அந்த நேரத்தில் இந்தியாவில் நடந்த படுகொலைகள் உட்பட பல அரசியல் வன்முறை சம்பவங்களில் இந்தியா மாளிகையின் நேரடி தாக்கங்களும் தூண்டுதல்களும் காணப்பட்டன.[121][122][123] சாவர்க்கருக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகளில் ஒன்று, 1909 டிசம்பரில் நாசிக் மாவட்ட நீதிவான் ஏ. எம். டி. ஜாக்சனை அனந்த் கன்ஹேரே கொலை செய்யத் தூண்டியதாக இருந்தது. பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் ஒரு இத்தாலிய நபர் மூலம் இந்தியா மாளிகையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. [121] வெளிநாடுகளில் உள்ள தேசியவாதிகளின் நடவடிக்கைகள் பிரித்தானிய இந்திய இராணுவத்தின் பல பூர்வீக படைப்பிரிவுகளின் விசுவாசத்தை உலுக்கியதாக நம்பப்படுகிறது.[124] மதன்லால் திங்க்ரா கைகளில் வில்லியம் ஹட் கர்சன் வைல்லி படுகொலை செய்யப்பட்டது மிகவும் விளம்பரப்படுத்தப்பட்டது. மேலும் இந்திய தேசியவாதத்தின் மீது கண்காணிப்பும் மற்றும் அடக்குமுறையும் அதிகரித்தது.[125] இதைத் தொடர்ந்து 1912இல் இந்திய ஆளுநர் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பிறகு, இந்தியா மாளிகை, அனுசீலன் சமித்தி, பஞ்சாபில் தேசியவாதிகள் மற்றும் வட அமெரிக்காவில் இந்திய வெளிநாட்டவர்கள் மற்றும் தொழிலாளர்களிடையே எழுந்த தேசியவாதம் ஆகியவற்றின் மையமாக கதர் கட்சி ஒரு வித்தியாசமான இயக்கம் உருவாகத் தொடங்கியது. ![]() இருப்பினும், காந்திய இயக்கத்தின் தோற்றம் மெதுவாக பல்வேறு புரட்சிகர குழுக்களை உள்வாங்கத் தொடங்கியது. வங்காள சமிதி 1920களில் அதன் வன்முறை தத்துவத்திலிருந்து விலகிச் சென்றது. அதன் உறுப்பினர்கள் பலர் காங்கிரஸ் மற்றும் காந்திய அகிம்சை இயக்கத்துடன் நெருக்கமாக அடையாளம் கண்டனர். 1922இல் காந்திய ஒத்துழையாமை இயக்கம் வீழ்ச்சியடைந்த பிறகு புரட்சிகர தேசியவாத வன்முறை மீண்டும் எழுச்சி பெற்றது. வங்காளத்தில், சூரியா சென் மற்றும் ஹேம் சந்திர கனுங்கோ ஆகியோரின் தலைமையில் சமிதியுடன் தொடர்புடைய குழுக்கள் மறுசீரமைக்கப்பட்டன. தொடர்ச்சியான வன்முறைகள் 1920களின் முற்பகுதியில் வங்காள குற்றவியல் சட்டத் திருத்தத்தை இயற்றுவதற்கு வழிவகுத்தன. இது இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் சிறைவாசம் மற்றும் தடுப்புக்காவல் அதிகாரங்களை நினைவுகூர்ந்தது. வட இந்தியாவில், பஞ்சாப் மற்றும் வங்காள புரட்சிகர அமைப்புகளின் எஞ்சிய பகுதிகள், குறிப்பாக சச்சீந்திர நாத் சான்யாலுடன் சேர்ந்து சந்திரசேகர ஆசாத் வட இந்தியாவில் இந்துஸ்தான் குடியரசுக் கட்சியை நிறுவினார். சந்திரசேகர் ஆசாத் தலைமையில் இடதுசாரி சித்தாந்தங்களின் வலுவான தாக்கங்களைக் கொண்டிருந்த இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் உறுப்பினர்களால் கக்கோரி இரயில் கொள்ளை நிகழ்த்தப்பட்டது. வங்காளத்தைச் சேர்ந்த பல காங்கிரஸ் தலைவர்கள், குறிப்பாக சுபாஷ் சந்திரபோஸ், இந்த காலகட்டத்தில் புரட்சிகர அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், அவர்களுக்கு ஆதரவளித்ததாகவும் ஆங்கிலேய அரசாங்கத்தால் குற்றம் சாட்டப்பட்டனர். புரட்சியாளர்கள் சிட்டகாங் ஆயுதக் களஞ்சிய கொள்ளையில் ஈடுபட்டபோது, பிரித்தானிய அதிகாரிகளுக்கு எதிரான பிற முயற்சிகளில் ஈடுபட்டபோது, 1930 களில் வன்முறை தீவிரமடைந்தது. சச்சிந்திர நாத் சன்யால் இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பின் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டியாக இருந்தார். இதில் பகத் சிங் மற்றும் ஜத்தீந்திர நாத் தாஸ் ஆகியோர் அடங்குவர். இதில் ஆயுதப் பயிற்சி மற்றும் வெடிகுண்டுகளை எவ்வாறு தயாரிப்பது என்பதும் அடங்கும்.[126] பகத் சிங் மற்றும் பதுகேஷ்வர் தத் ஆகிய இருவரும் ஏப்ரல் 8,1929 அன்று மத்திய சட்டப்பேரவையில் பொதுப் பாதுகாப்பு மசோதா மற்றும் வர்த்தக தகராறு மசோதா நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து ஒரு வெடிகுண்டை வீசினர். அதே நேரத்தில் "இன்குலாப் ஜிந்தாபாத்" என்ற முழகத்தையும் எழுப்பினர். இருப்பினும் வெடிகுண்டு சம்பவத்தில் யாரும் கொல்லப்படவில்லை அல்லது காயமடையவில்லை. குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு பகத் சிங் சரணடைந்தார். வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு தேடுதல் நடவடிக்கைகளின் போது சுக்தேவ் மற்றும் ராஜகுரு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். விசாரணையைத் தொடர்ந்து மூவரும் 1931 இல் தூக்கிலிடப்பட்டனர். இந்த சமயத்தில் குறிப்பாக முஸ்லிம்களை சுயராஜ்ய இயக்கத்தை நோக்கி வழிநடத்துவதற்காக இனயத்துல்லா கான் மஷ்ரிகி கக்சார் தெக்ரீக் என்ற இயக்கத்தை நிறுவினார். அதன் உறுப்பினர்களில் சிலர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான இந்திய தேசிய காங்கிரசுக்குச் சென்றனர். மற்றவர்கள் பொதுவுடைமை இயகங்களுடன் மிகவும் நெருக்கமாக அடையாளம் கண்டனர். யுகாந்தர் இயக்கம் 1938இல் முறையாக கலைக்கப்பட்டது. மார்ச் 13,1940 அன்று, உதம் சிங் மைக்கேல் ஓ 'டையரை சுட்டுக் கொன்றார். புரட்சிகர இயக்கம் படிப்படியாக காந்திய இயக்கமாக பரவியது. இருப்பினும் 1930 களின் பிற்பகுதியில் அரசியல் காட்சிகள் மாறத்தொடங்குகையில் -மையநீரோட்ட அரசியல் தலைவர்கள் பிரிட்டிஷார் அளித்த சில தேர்வுகளை பரிசிலனை செய்ய முன்வந்தது மற்றும் மதவாத அரசியல் செயல்பாட்டிற்கு வந்தது ஆகியவற்றால்- புரட்சிகர செயல்பாடுகள் படிப்படியாக குறையத் தொடங்கின. கடநதகால புரட்சியாளர்கள் பலரும் இந்திய தேசிய காங்கிரசு மற்றும் மற்ற கட்சிகளில், குறிப்பாக பொதுவுடைமை கட்சியில் சேர்ந்து மையநீரோட்ட அரசியலில் இணைந்தனர். அதேசமயம் பல போராளிகளும் நாட்டின் பல்வேறு சிறைகளில் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். இங்கிலாந்தை தளமாகக் கொண்ட இந்தியர்கள், இந்தியா லீக் மற்றும் இந்திய தொழிலாளர் சங்கத்தில் சேர்ந்து, பிரிட்டனில் புரட்சிகர நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.[127] இந்த அமைப்பு தொடங்கப்பட்ட குறுகிய காலத்திற்குள், விரிவான போலீஸ் மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகளின் மையமாக மாறியது. அனுஷிலன் சமிதிக்கு எதிரான நடவடிக்கைகளில் கல்கத்தா காவல்துறையின் சிறப்பு கிளை நிறுவப்பட்டது. இந்தியா மாளிகைக்கு எதிரான உளவுத்துறை நடவடிக்கைகளால் இந்திய அரசியல் புலனாய்வு அலுவலகம் நிறுவப்பட்டது, பின்னர் அது சுதந்திர இந்தியாவில் புலனாய்வு பணியகமாக வளர்ந்தது. கடாரைட் இயக்கம் மற்றும் இந்திய புரட்சியாளர்களுக்கு எதிரான உளவுத்துறை மற்றும் பணிகளுக்கு தலைமை தாங்கியது எம்ஐ5 (ஜி) பிரிவு, மற்றும் ஒரு கட்டத்தில் பின்கெர்டனின் துப்பறியும் நிறுவனத்தை உள்ளடக்கியது. இந்திய புரட்சியாளர்களுக்கு எதிரான போலீஸ் மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கிய அல்லது பல்வேறு நேரங்களில் அதில் ஈடுபட்ட குறிப்பிடத்தக்க அதிகாரிகளில் ஜான் அர்னால்ட் வாலிங்கர், சர் ராபர்ட் நாதன், சர் ஹரோல்ட் ஸ்டூவர்ட், வெர்னான் கெல், சர் சார்லஸ் ஸ்டீவன்சன்-மூர் மற்றும் சர் சார்லஸ் டெகார்ட், டபிள்யூ. சோமர்செட் மோகம் ஆகியோர் அடங்குவர். முதலாம் உலகப் போரின் போது வங்காளத்தில் சமிதி நடவடிக்கைகளால் ஏற்பட்ட அச்சுறுத்தலும், பஞ்சாபில் காதாரைட் கிளர்ச்சி அச்சுறுத்தலும் இந்திய பாதுகாப்புச் சட்டம் 1915 நிறைவேற்றப்படுவதைக் கண்டது. இந்த நடவடிக்கைகளால் அந்த அமைப்புடன் தொடர்புடைய பல புரட்சியாளர்களை கைது செய்தல், தடுத்து வைத்தல், கொண்டு செல்லுதல் மற்றும் தூக்கிலிடுதல் ஆகியவை நடைபெற்றன, மேலும் கிழக்கு வங்காள கிளையை நசுக்குவதில் வெற்றி பெற்றது. போருக்குப் பின்னர், வங்காளத்தில் சமிதி மற்றும் பஞ்சாபில் காதாரைட் இயக்கத்தின் எந்தவொரு புத்துயிர் பெறுவதையும் தடுக்க இந்திய பாதுகாப்புச் சட்டத்தை (ரவுலட் சட்டம் என) நீட்டிக்க ரௌலட் குழு பரிந்துரைத்தது. இந்திய சுயாட்சி இயக்கத்தின் இறுதி செயல்முறைஇரண்டாம் உலகப் போர் தொடங்கியபோது, லின்லித்கோ பிரபு இந்தியப் பிரதிநிதிகளை ஆலோசிக்காமலேயே நேசநாடுகள் கூட்டுப்படையினரின் அணியில் இந்தியா இருப்பதாக அறிவித்தார். லின்லித்கோவின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முழு காங்கிரசு தலைமையும் மாகாண மற்றும் உள்ளாட்சி அரசாங்கங்களில் இருந்து ராஜினாமா செய்தது. முஸ்லிம்களும் சீக்கியர்களும், இதற்கு மாறாக, போர் முயற்சியை வலுவாக ஆதரித்தனர். இருப்பினும், பலரும் பிரிட்டிஷாரின் போர் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவே விரும்பினர், உண்மையிலேயே போரின்போது 205,000 பேர்களுடன் பிரித்தானிய இந்திய ராணுவம் மிகப்பெரிய தன்னார்வப் படைகளுள் ஒன்றாக இருந்தது.[128] குறிப்பாக 1940ஆம் ஆண்டு பிரித்தானியப் போரின்போது, தனது கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் வந்த மாபெரும் சட்ட மறுப்பு இயக்கங்களுக்கான அழைப்புகளை காந்தி எதிர்த்தார். அழிக்கப்பட்ட பிரிட்டனின் சாம்பலில் இருந்து இந்தியாவின் சுயாட்சியை தான் நாடவில்லை என்று கூறினார். 1942இல் காங்கிரசு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கியது. சில வன்முறைகள் நடந்தன. ஆனால் அது ஒடுக்கப்பட்டு அனைத்து முக்கிய தேசிய மற்றும் மாகாண பிரமுகர்கள் உட்பட பல்லாயிரயப்பட்டனர். 1945இல் போர் முடியும் வரை அவர்கள் விடுவிக்கப்படவில்லை. சுய ஆட்சி இயக்கத்தில் பண்டிட் ராம் பிரசாத் பிசுமில் தலைமையில் இந்திய இளைஞர்களால் வழிநடத்தப்பட்ட கக்கோரி இரயில் கொள்ளை (9 ஆகஸ்ட் 1925) மற்றும் இராசேந்திர இலகிரி தலைமையில் ஆசாத் இந்த் இயக்கம் ஆகியவை அடங்கும். அதன் முக்கிய கதாநாயகன் சுபாஷ் சந்திர போஸ் காங்கிரசின் முன்னாள் தலைவராக இருந்தார். போர்க்காலத்தின் தொடக்கத்திலிருந்தே, போஸ் பிரிட்டனுடன் சண்டையிட அச்சு சக்திகளுடன் சேர்ந்தார். ![]() வெள்ளையனே வெளியேறு இயக்கம்வெள்ளையனே வெளியேறு இயக்கம் என்பது இந்தியாவில் ஒரு சட்டமறுப்பு இயக்கமாகும். இது ஆகஸ்ட் 8,1942 அன்று இந்தியர்களின் உடனடி சுயாட்சிக்கான காந்தி அழைப்புக்கு பதிலளிக்கும் விதமாக தொடங்கியது. அனைத்து ஆசிரியர்களும் தங்கள் பள்ளிகளை விட்டு வெளியேறுமாறு அவர் கேட்டுக்கொண்டா. மற்ற இந்தியர்கள் அந்தந்த வேலைகளை விட்டு வெளியேறி இந்த இயக்கத்தில் பங்கேற்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுடார். காந்தியின் அரசியல் செல்வாக்கின் காரணமாக, அவரது கோரிக்கையை பெரும்பாலான மக்கள் பின்பற்றினர். மேலும், ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும், அரசியல் அதிகாரத்தை ஒரு பிரதிநிதித்துவ அரசாங்கத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் கோரி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காங்கிரசும் வழிநடத்தியது. இந்த இயக்கத்தின் போது, காந்தியும் அவரது ஆதரவாளர்களும் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக அகிம்சை போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர். இந்த இயக்கத்தில்தான் காந்தி தனது புகழ்பெற்ற செய்தியான "செய் அல்லது செத்து மடி" என்ற செய்தியை வழங்கினார். மேலும் இந்த செய்தி இந்திய சமூகத்திற்கு பரவியது. கூடுதலாக, இந்த இயக்கத்தில் ஈடுபட்ட பெண்கள் நேரடியாக "இந்திய சுதந்திரத்தின் ஒழுக்கமான வீரர்கள்" என்று அழைக்கப்பட்டனர். மேலும் அவர்கள் சுதந்திரத்திற்கான போரை தொடர வேண்டியிருந்தது ![]() போர் தொடங்கியபோது, 1939 செப்டம்பரில் நடந்த செயற்குழுவின் வார்தா கூட்டத்தின் போது, பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை நிபந்தனையுடன் ஆதரிக்கும் தீர்மானத்தை காங்கிரசு கட்சி நிறைவேற்றியது. ஆனால் பதிலுக்கு அவர்கள் சுயாட்சியைக் கேட்டபோது நிராகரிக்கப்பட்டது.[129] 1942 மார்ச் மாதத்தில், பெருகிய முறையில் அதிருப்தி அடைந்த துணைக் கண்டம் போரில் தயக்கத்துடன் மட்டுமே பங்கேற்றது. ஐரோப்பா மற்றும் தென்கிழக்காசியாவில் போர் நிலைமை மோசமடைந்தது. இந்தியத் துருப்புக்கள் மத்தியில்-குறிப்பாக ஐரோப்பாவில்-மற்றும் துணைக் கண்டத்தில் உள்ள பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வருவதால், பிரித்தானிய அரசாங்கம் இசுடாஃபோர்ட் கிரிப்சு தலைமையின் கீழ் இந்தியாவுக்கு ஒரு குழுவை அனுப்பியது. இது கிரிப்சின் தூதுக்குழு என்று அறியப்பட்டது. இந்திய தேசிய காங்கிரசில் கிரிப்சுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து இருவேறு கருத்துகள் நிலவின. வைசுராயின் தன்னிச்சையான முடிவினால் கோபம் கொண்டிருந்த ஒரு பிரிவினர், காலனிய அரசுக்கு எதிராக ஒரு பெரும் எழுச்சியைத் தொடங்க வேண்டுமென்று விரும்பினர். சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி போன்றோர் போரில் அரசுடன் ஒத்துழைக்க வேண்டுமெனக் கருதினர். காந்தி இந்தியா போரில் ஈடுபடுவதை விரும்பவில்லை. மேலும் பிரித்தானிய அரசின் நல்லெண்ணத்தின் மீது அவருக்கு நம்பிக்கையில்லை. எனினும் ராஜகோபாலாச்சாரி, ஜவகர்லால் நேரு, வல்லபாய் படேல் போன்ற காங்கிரசு தலைவர்கள் கிரிப்சை சந்தித்து அவருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். போர் முயற்சிக்கு ஒத்துழைப்புக்கு பதிலாக உடனடியாக இந்தியாவுக்கு விடுதலை வேண்டுமென்று கோரினர். தனிப்பட்ட முறையில் கிரிப்சு இந்தியாவுக்கு மேலாட்சி அங்கீகாரம் வழங்கி முழு தன்னாட்சிக்கு வழிவகுப்பதாக உறுதியளித்தார், மேலும் காலப்போக்கில் அதுவே முழு சுதந்திரமாக மாற வாய்ப்புண்டு என்றும் உறுதியளித்தார். ஆனால் வெளிப்படையாக எந்த உறுதியினையும் அளிக்க வில்லை. வைசுராயின் நிர்வாகக் குழுவில் இந்தியர்களுக்கு இடமளிக்கப்படும் என்பது போன்ற சிறு சீர்திருத்தங்களை மட்டும் முன்வைத்தார். உடனடி தன்னாட்சி வேண்டுமென்று கோரிய காங்கிரசு தலைவர்கள் இதனால் கடும் அதிருப்தி அடைந்தனர். இரு தரப்பினரும் மற்றவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையின்மையால் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. கிரிப்சு தூதுக்குழு முயற்சி தோல்வியடைந்த பின்னர் காங்கிரசு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கியது. இவ்வியக்கத்தை காலனிய ஆட்சியாளர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கினர். எனினும், இந்தியாவுக்கு மேலாட்சி அங்கீகாரம், முழுத் தன்னாட்சி போன்றவை வழங்கலாம் என்ற கிரிப்சின் நிலைப்பாடு போர் முடிந்தபின்னர் ஐக்கிய இராச்சியத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாக மாறி இந்தியாவின் விடுதலைக்கு வழிவகுத்தது. மற்றவைஉலகப் போரில் இந்தியா நுழைவதை சுபாஷ் சந்திரபோஸ் கடுமையாக எதிர்த்தார். 1938 மற்றும் 1939 ஆம் ஆண்டுகளில் காங்கிரசின் தலைவராக போஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால் பின்னர் காங்கிரசுடன் கருத்து வேறுபாடுகள் காரணமாக ராஜினாமா செய்தார். இருப்பினும் அவர் தனது வாழ்நாள் முழுவதும் காங்கிரசுடன் உணர்ச்சிபூர்வமாக இணைந்திருந்தார். அவரது ராஜினாமாவுக்குப் பிறகு அவர் கட்சியின் தலைமையிலிருந்து பிரிந்து தனது சொந்த பிரிவை உருவாக்கினார். இது முன்னோக்கிய முகாம் என்று அழைக்கப்பட்டது. இது சோசலிச கருத்துக்களைக் கொண்ட முன்னாள் காங்கிரசு தலைவர்களுக்கு ஒரு மையமாக இருந்தது.[130] பின்னர் போஸ் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கை நிறுவினார். 1940இல் கொல்கத்தாவில் இருந்த பிரித்தானிய அதிகாரிகள் போஸ்-ஐ வீட்டுக் காவலில் வைத்தனர். இருப்பினும், அவர் தப்பித்து, பிரித்தானியரை எதிர்த்துப் போராட ஒரு இராணுவத்தை திரட்ட இட்லர் மற்றும் முசோலினியின் உதவியை நாட ஆப்கானித்தான் வழியாக நாட்சி ஜெர்மனிக்குச் சென்றார். இர்வின் ரோமெல் தலைமையில் இந்திய போர்க் கைதிகளை உள்ளடக்கிய சுதந்திர இந்திய படைப்பிரிவு உருவாக்கப்பட்டது. ஜெர்மனியின் இராணுவம் வீழ்ச்சியடைந்த பிறகு, இந்தியாவின் மீது ஜெர்மனியின் படையெடுப்பு என்பது கிட்டத்தட்ட முடியாததாக மாறியது. போஸை யப்பானுகுச் செல்லுமாறு இட்லர் அறிவுறுத்தினார். போஸ் யப்பான் செல்ல ஒரு நீர்மூழ்கிக் கப்பல் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு அவர் நாடு கடந்த அரசாங்கத்தை உருவாக்கினார். நாடுகடந்த தற்காலிக சுதந்திர இந்திய அரசு, யப்பானியர்களின் உதவியுடன், இந்திய போர்க் கைதிகள் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தன்னார்வ இந்திய வெளிநாட்டினரைக் கொண்ட இந்தியத் தேசிய இராணுவத்தின் யப்பானிய ஒத்துழைப்பு பிரிவை மறுசீரமைத்தது. பிரித்தானிய இராச்சியத்தின் இந்திய வீரர்களிடையே கிளர்ச்சியைத் தூண்டும் வகையில் பொது வெறுப்பின் மீது கட்டமைக்கும் ஒரு சண்டைப் படையாக இந்தியாவை அடைவதே இதன் நோக்கமாக இருந்தது. பிரித்தானிய இந்திய இராணுவம் உட்பட நட்பு நாடுகளுக்கு எதிராக அரகான், பர்மா மற்றும் அசாமில் உள்ள காடுகளில் யப்பானிய இராணுவத்துடன் சேர்ந்து நடந்த இம்பால் சண்டையில் சுபாஸ் வழிநடத்தில் நாடு கடந்த இந்திய அரசும் சேர்ந்து படையெடுத்து தோல்வியைத் தழுவியது. [131] சுபாஷ் சந்திர போஸ், 1945 ஆகத்து 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அவர் உருசியாவிற்குச் சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. . பின்னர், ஐ. என். ஏ உறுப்பினர்களுக்கு எதிரான விசாரணைகள் 1945 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கின. இதில் முக்கிய நபர்களான ஷா நவாஸ் கான் மற்றும் பிரேம் சாகல் ஆகியோரின் பிரபலமற்ற கூட்டு இராணுவமும் அடங்கும். தேஜ் பகதூர் சப்ரு, அருணா ஆசப் அலி மற்றும் ஜவகர்லால் நேரு உள்ளிட்ட பல காங்கிரசு உறுப்பினர்கள் ஐ. என். ஏ உறுப்பினர்களை விடுவிக்க முக்கிய பங்கு வகித்தனர்.[132] அரச இந்தியக் கடற்படை கிளர்ச்சி எனப்படும் பம்பாய் கலகம் என்பது தோல்வியுற்ற கிளர்ச்சியாகும். பிரித்தானிய இந்தியாவின் கடற்படையில் பணிபுரிந்த இந்திய மாலுமிகள் பெப்ரவரி 18-20, 1946 காலகட்டத்தில் நடத்திய முழு வேலைநிறுத்தமாகும். மும்பை கடற்படைத் தளத்தில் தொடங்கிய கலகம் விரைவில் பிற கடற்படைத் தளங்களுக்கும் கப்பல்களுக்கும் பரவியது. 78 கப்பல்கள் மற்றும் 20 கடற்கரைத் தளங்களைச் சேர்ந்த சுமார் 20,000 இந்திய மாலுமிகள் இக்கலகத்தில் ஈடுபட்டனர். மூன்று நாட்களில் கலகம் பிரித்தானியப் படைத்துறையால் அடக்கப்பட்டு விட்டாலும், இந்தியாவுக்கு விடுதலை வழங்க வேண்டும் என்று பிரித்தானியர்கள் முடிவு செய்ய இக்கலகம் முக்கியத் தூண்டுகோலாக இருந்தது..[133][134] கிளர்ச்சியில் ஈடுபட்ட மாலுமிகள் சரணடைந்ததன் மூலம் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது. காங்கிரசும் முஸ்லிம் லீக்கும் இந்திய மாலுமிகளை சரணடையச் செய்தன. அமைதியின்மையின் அரசியல் மற்றும் இராணுவ அபாயங்கள் காரணமாக அவர்கள் கிளர்ச்சியை கண்டித்தனர். ![]() இந்தியாவின் இறையாண்மையும் பிரிவினையும்1947 ஜூன் 3 அன்று, பிரித்தானிய இந்தியாவின் கடைசி அரசுப் பிரதிநிதியாக இருந்த மவுண்ட்பேட்டன் பிரபு, பிரித்தானிய இந்தியாவை இந்தியா மற்றும் பாக்கித்தான் என்று பிரிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி இந்திய விடுதலைச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், பாக்கித்தான் ஒரு தனி தேசமாக அறிவிக்கப்பட்டது. 1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியா ஒரு இறையாண்மை மற்றும் ஜனநாயக நாடாக மாறியது. இறுதியில், ஆகஸ்ட் 15 இந்தியாவின் விடுதலை நாளாக மாறியது. இந்நாள் பிரித்தானிய இந்தியாவின் முடிவைக் குறிக்கிறது. ஆகஸ்ட் 15 அன்று, பாக்கித்தானுக்கும் இந்தியாவுக்கும் பொதுநலவாயம் அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே வன்முறை மோதல்கள் நடந்தன. பிரதமர் ஜவகர்லால் நேருவும் துணைப் பிரதமர் வல்லபாய் படேலும் மவுண்ட்பேட்டனை இடைக்கால இந்திய அரசின் இந்தியாவின் முதலாவது ஆளுநராகத் தொடர அழைத்திருந்தனர். ஜூன் 1948 இல் அவருக்குப் பதிலாக இராசகோபாலாச்சாரி நியமிக்கப்பட்டார். 1947 மே மாதம், இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்துடன் சேர மறுக்கும் எந்தவொரு சுதேச அரசும் எதிரி அரசாக கருதப்படும் என்று நேரு அறிவித்தார். தனது உறுதியான முயற்சிகளை வழிநடத்தி, இந்திய ஒன்றியத்திற்குள் சுதேச மாநிலங்களை கொண்டு வருவதற்கான பொறுப்பை படேல் ஏற்றுக்கொண்டார். ஜூனாகத், ஐதராபாத் இராச்சியம் மற்றும் காஷ்மீர் ஆகியவற்றை ஒருங்கிணைக்க இந்தியா தனது இராணுவ சக்தியைப் பயன்படுத்தியது.[135] ![]() இந்திய சட்ட வல்லுநரும், சமூக சீர்திருத்தவாதியுமான அம்பேத்கர், இந்திய அரசியலமைப்பு வரைவு குழுவிற்குத் தலைமை தாங்கினார்.[136][137] அரசியலமைப்புச் சபை 1949 நவம்பர் 26 அன்று அரசியலமைப்பை உருவாக்கும் பணியை நிறைவு செய்தது, 1950 ஜனவரி 26 அன்று இந்தியக் குடியரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அரசியலமைப்புச் சபை தேர்ந்தெடுக்கப்பட்ட இராசேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரானர். அதைத் தொடர்ந்து, 1951இல் சந்தன்நகரையும், 1954க்குள் புதுச்சேரி மற்றும் தங்களிடமிருந்த இந்திய காலனிகளையும் பிரெஞ்சுக்காரர்கள் விட்டுக்கொடுத்தனர். இந்திய துருப்புக்கள் 1961இல் கோவா மற்றும் போர்ச்சுகலின் பிற இந்தியப் பகுதிகளை இணைத்தன. மேலும் நாதுலா மற்றும் சோலா ஆகிய இடங்களில் சீனாவுக்கு எதிரான சோ லா மோதலுக்குப் பிறகு சிக்கிம் 1975இல் இந்திய ஒன்றியத்தில் சேர முடிவெடுத்தது. 1947இல் சுய ஆட்சியைத் தொடர்ந்து, இந்தியா பொதுநலவாய நாடுகளில் தொடர்ந்து இருந்தது. அதன் பின்னர் இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் நட்பாக மாறிவிட்டன. இரு நாடுகளும் பரஸ்பர நலனுக்காக வலுவான உறவுகளை நாடும் பல பகுதிகள் உள்ளன. மேலும் இரு நாடுகளும் வலுவான கலாச்சார மற்றும் சமூக உறவுகளையும் கொண்டுள்ளன. இங்கிலாந்தில் 16 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் உள்ளனர். 2010 ஆம் ஆண்டில், பிரதமர் டேவிட் கேமரூன் இந்திய-பிரித்தன் உறவுகளை "புதிய சிறப்பு உறவு" என்று விவரித்தார்.[138] இதனையும் காண்க
குறிப்புகள்
மேற்கோள்கள்
மேலும் கூடுதல் ஆதாரங்கள்
மேலும் வாசிக்க
முதன்மை ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia