ஐரோம் சர்மிளா
ஐரோம் சானு சர்மிளா (Irom Chanu Sharmila, பிறப்பு: மார்ச் 14, 1972) என்பவர் மணிப்பூரின் இரும்பு மங்கை என அழைக்கப்படுபவராவார். இவரை அவரது வட்டார மொழி மக்கள் மெங்ஙௌபி என அழைக்கின்றனர்[1]. மணிப்பூரில் நடந்த வன்முறைகளுக்கும் மற்றும் பிற வடகிழக்குப் பகுதிகளில் அதன் விளைவுகளுக்கும் காரணமான ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958ஐ [ASFPA] இந்திய அரசாங்கம் மீளப் பெறவேண்டும் என்று கூறி 2000ஆம் ஆண்டு நவம்பர் 2 அன்றிலிருந்து இவர் உண்ணாநிலைப் போராட்டம் இருந்துவந்தார்[2]. இது 500 வாரங்களுக்கும் மேல் தொடர்ந்து வந்தது. இதுவே உலகின் நீண்ட உண்ணாப் போராட்டமாகும்[3]. ஆகஸ்ட் 9, 2016 அன்று தனது 16 ஆண்டுகால உண்ணாநிலை போராட்டத்தை முடித்துக் கொண்டார். மணிப்பூர் முதல்வர் ஓக்ரம் இபோபி சிங்கிற்கு எதிராகத் தாம் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார்.[4] உண்ணாநிலைப் போராட்டத்திற்கான முடிவுநவம்பர் 2, 2000 அன்று மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள மலோம் என்ற சிற்றூரில் இந்தியப் படைத்துறையின் துணைப்படையான அசாம் ரைபிள்சினால் பேருந்து நிறுத்தமொன்றில் நின்றிருந்த பத்து குடிமக்கள் சுடப்பட்டு இறந்தனர்.[5][6] இந்த நிகழ்வு பின்னாளில் "மலோம் படுகொலை" என மனித உரிமை தன்னார்வலர்களால் குறிப்பிடப்படுகின்றது.[7] 1988ஆம் ஆண்டின் தேசிய சிறார் வீரதீர விருது பெற்ற 18 வயது சினம் சந்திரமணி மற்றும் 62 வயதுடைய பெண்மணி லெய்சங்பம் இபெடோமி உட்பட கொலையுண்டவர்களின் படங்களை உள்ளூர் நாளேடுகள் விவரமாக பதிப்பித்திருந்தன.[6] நான்காம் நிலை கால்நடை ஊழியரொருவரின் மகளான 28 வயது சர்மிளா இந்தப் படுகொலைக்கு எதிராக உணவு மற்றும் நீர் உண்ணாப் போராட்டத்தை மேற்கொண்டார்.[8] அவரது உடன்பிறப்பு ஐரோம் சிங்கஜித் சிங்கின் கூற்றுப்படி "சிறுவயது முதலே வியாழக்கிழமைகளில் உண்ணாதிருக்கும் விரதத்தை கடைபிடிக்கும் சர்மிளா கொலை நிகழ்ந்த நாள் வியாழக்கிழமையாக அமைந்திருந்த காரணத்தால் தனது உண்ணாநிலையை அப்படியே தொடர்ந்தார்". அவர் உண்ணாநிலைப் போராட்டத்தை துவங்கிய நாள் நவம்பர் 4 என்றும் அதற்கு முந்தைய நாள் தனது இரவு உணவை முடித்துக்கொண்டு அன்னையின் கால்களில் விழுந்து வணங்கி அனுமதி பெற்றதாகவும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.[9] போராளி என ஐயுறும் எவரையும் காலவரையின்றி காவலில் வைக்க அதிகாரம் வழங்கும் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958 (AFSPA) மீளப்பெற வேண்டும் என்பதே இவரது முதன்மையான கோரிக்கையாகும்.[5] சித்திரவதை, வலிய காணாமல் போவது, நீதித்துறைசாரா தண்டனைகள் போன்றவற்றிற்கு இந்த சட்டமே காரணமாக மனித உரிமை தன்னார்வலர்களும் எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றன.[5][8] உண்ணாநிலைப் போராட்டம் துவங்கிய மூன்றாம் நாளே சர்மிளா தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் நீதித்துறை காவலில் வைக்கப்பட்டார்.[9] அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், காவல்துறையினர் அவருக்கு வலுக்கட்டாயமாக, நாசி மூலம் குழாய் வழியே உணவு வழங்கத் துவங்கினர்.[10] இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி தற்கொலைக்கு முயலும் ஒருவரை ஓராண்டுக்கே சிறையிலடைக்க முடியும் என்பதால் அன்றிலிருந்து ஐரோம் சர்மிளா ஒவ்வொரு ஆண்டும் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுகிறார்.[9][11] தேர்தல்மக்கள் மீளெழுச்சியும் நீதியும் இணைந்தது என்னும் அரசியல் கட்சியை 18 அக்டோபர் 2016 ஐரோம் சர்மிளா நிறுவினார்.[12]. 2017 அன்று நடக்கும் தேர்தலில் ஐரோம் சர்மிளா மணிப்பூர் முதல்வர் ஒக்ரோம் இபோபி சிங்கை எதிர்த்து தோபல் தொகுதியில் போட்டியிட்டார்[13] இத்தேர்தல் முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறிய சர்மிளா ஒக்ரோம் இபோபி சிங்கை எதிர்த்து தோபல் தொகுதியில் வெறும் 90 ஓட்டு பெற்று தோல்வி அடைந்தார். அதன்பிறகு அரசியலில் இருந்தும் விலகப் போவதாக அறிவித்தார்[14] ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958ஐ எதிர்ப்பதாகவும் உண்ணா விரதத்துக்கு பதில் உத்தியை மட்டுமே மாற்றியுள்ளதாகவும் கூறினார்[15] மேற்கோள்
வெளி இணைப்புகள்14 ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு இரோம் ஷர்மிளா விடுதலையாக வாய்ப்பு
|
Portal di Ensiklopedia Dunia