கடவுளின் மகன் (Son of God) என்பது இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை, போதனை, துன்பங்கள், சாவு, உயிர்த்தெழுதல் போன்ற கூறுகளை உள்ளடக்கி, ஐக்கிய அமெரிக்க நாடுகளில் 2014இல் வெளியான ஒரு திரைப்படம் ஆகும். இது “விவிலியம்” என்ற பெயரில் ஒளிபரப்பான 10 பகுதிகள் அடங்கிய தொலைக்காட்சி குறுந்தொடரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
அத்தொடரை உருவாக்கியவர்கள் மாற்கு பர்னெட் (Mark Burnett) மற்றும் ரோமா டவுனி (Roma Downey) ஆவர். “கடவுளின் மகன்” திரைப்படத்தில் முந்திய தொலைக்காட்சித் தொடரிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகளும், அப்போது ஒளிபரப்பாமல் விடப்பட்ட பகுதிகளும் அடங்கும்.[2]
படத்தின் கருப்பொருள்
கடவுளின் மகன் திரைப்படத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பிலிருந்து, அவர் சிலுவையில் இறந்து கல்லறையில் அடக்கப்பட்ட பின் மீண்டும் உயிர்பெற்றெழுந்து விண்ணேற்றம் அடைந்தது வரையிலான நிகழ்வுகள் எடுத்துக் கூறப்படுகின்றன.[2]
ஏரோது அந்திப்பா வேடத்தில் ரிக் பேக்கன் (Rick Bacon)
லாசர் வேடத்தில் ஆனாஸ் ஷெரின் (Anas Cherin)
கதை விளக்கம்
”கடவுளின் மகன்” படத்தில் ஏற்கனவே ஒளிபரப்பான தொலைக்காட்சித் தொடரிலிருந்து பல காட்சிகளும் அப்போது ஒளிபரப்பாமல் விடப்பட்ட காட்சிகளும் உள்ளடங்கும்.[2][3] இரத்தம் சிந்தல் காட்சி, வன்முறைக் காட்சிகள் உள்ளதால் 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்குப் பெற்றோர் வழிகாட்டல் தேவை என்று தரம் இடப்பட்ட இப்படம் 2014, பெப்ருவரி 28ஆம் நாள் வெளிவந்தது.[4][5][6].
ஏற்கனவே ஒளிபரப்பான தொலைக்காட்சித் தொடரில் சாத்தான் வரும் காட்சி இருந்தது. ஆனால் திரைப்படத்தில் அக்காட்சி காட்டப்படவில்லை. இதற்குக் காரணம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைப் போன்று சாத்தான் தோற்றமளிக்கிறது என்று வழக்கமாக ஒபாமாவை எதிர்த்து விமரிசிக்கும் கிளென் பெக் (Glenn Beck) என்பவர் கூறியது ஆகும்.[7][8][9]
வரவேற்பு
வசூல்
படம் வெளியான முதல் இரவு $1.2 மில்லியன் வட அமெரிக்க திரையரங்குகளில் வசூலானது. நுழைவுச் சீட்டுகள் முன்பதிவாகவே விற்கப்பட்டிருந்தன.[10] முதல் வார இறுதியில் வட அமெரிக்காவில் மட்டும் மொத்தம் $27.5 மில்லியன் வசூலாகும் என்று கணிக்கின்றனர்.[11]
விமர்சனங்கள்
ஏற்கனவே இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்ட மக்கள் இப்படத்தைப் பார்ப்பதன் மூலம் தமது நம்பிக்கையில் உறுதி பெறுவார்கள் என்றும், நற்செய்தி நூல்களில் கூறப்படுகின்ற இயேசுவின் வரலாற்றை இப்படம் நன்முறையில் காட்டுகிறது என்றும் விமர்சகர் கூறுகின்றனர்.
என்றாலும், இப்படம் அவ்வளவு விறுவிறுப்பாக இல்லை என்றும், சிந்தனையைக் கிளறுகின்ற விதத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளவில்லை என்றும் சிலர் குறை கூறுகின்றனர். எருசலேம் நகர் காட்சிகள் பிரமாதமாக இல்லை, இயேசு தண்ணீர்மீது நடத்தல் போன்ற காட்சிகள் கவர்ச்சியாக இல்லை என்றும் சிலர் விமர்சிக்கின்றனர்.
ஒரு சில காட்சிகள் கலையழகு நிறைந்த விதத்தில் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இயேசு அன்னை மரியாவின் மடியில் வளர்த்தப்பட்ட காட்சியானது மைக்கலாஞ்சலோவின் தாயும் சேயும் என்ற புகழ்மிக்க பளிங்குச் சிலையைக் கண்முன் கொண்டுவருகிறது. இயேசு பற்றி நற்செய்தி நூல்கள் தருகின்ற தகவல்களும் இயேசு உலகுக்கு வழங்கிய செய்தியும் மிகத் தெளிவாக, அழுத்தமாக எடுத்துக் கூறப்படுகின்றன.[12][13][14][15][16][17]