கீழைச் சாளுக்கியர்
கீழைச் சாளுக்கியர் (வேங்கிச் சாளுக்கியர்) என்பவர்கள் தென் இந்தியாவில் சாளுக்கிய நாட்டை ஆண்ட பேரரசாகும். இவர்களின் தலைநகரம் வேங்கியாகும். இது தற்காலத்தில் வடவேங்கி, சின்ன வேங்கி என்ற பெயரில் கோதாவரி மாவட்டத்தில் எலுருவுக்கு அருகில் உள்ளது. இவ்வரசு பொ.ஆ.624 முதல் பொ.ஆ 1130 வரை சுமார் 500 ஆண்டுகளாக ஆட்சி செய்தது. பின்பு இது சோழப் பேரரசுடன் இணைந்தது. இணைந்தாலும் வேங்கி அரசை கீழைச் சாளுக்கியர்களே சோழர்களின் பாதுகாப்புடன் பொ.ஆ 1189 வரை ஆண்டனர். போசளர்களாலும் தேவகிரி யாதவர்களாலும் தாக்கப்பட்டு இவ்வரசு வீழ்ந்தது. இவர்கள் தங்கள் தலைநகரை வேங்கியிலிருந்து ராஜமகேந்திரவரமுக்கு மாற்றினார்கள். ஏழாம் நூற்றாண்டில் இரண்டாம் புலிகேசி கங்க மன்னனைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டு பல்லவ பேரரசின் மீது படையெடுத்தான். பல்லவ நாட்டை வென்று, முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் வசமிருந்த வேங்கி நாட்டைக் கைப்பற்றி புலிகேசி தன் தம்பியான விஷ்ணுவர்தனை அரசனாக்கினான். இந்த விஷ்ணுவர்தனின் மரபினரே கீழைச் சாளுக்கியர் எனப் பெயர் பெற்றனர்.[5] மேலைச் சாளுக்கியர்களுக்கும் சோழர்களுக்கும் இடையே பல போர்கள் வேங்கி நாட்டுக்காக நடந்தன. கீழைச் சாளுக்கியர்கள் சோழர்களுடன் நெருங்கிய மண உறவுகளை ஏற்படுத்திக் கொண்டனர். அரஞ்சய சோழன் கீழசாளுக்கிய மன்னன் வீமன் மகள் கல்யாணியை மணந்தான். இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை கீழைச் சாளுக்கிய மன்னன் விமலாதித்தியன் மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை வேங்கி நாட்டின் மன்னன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது. சோழ பேரரசுடன் சாளுக்கிய பேரரசு இணைக்கப்படுத்தப்பட்டதுடன் பண்பாடு, கோவில்கள், இலக்கியம், கலை போன்றவை சிறப்பிடம் எய்தியது. இவர்கள் ஆட்சி வேங்கி நாட்டின் பொற்காலம் என போற்றப்படுகிறது. குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia