குமாரிலபட்டர்
குமாரிலபட்டர் (Kumārila Bhaṭṭa) (சமசுகிருதம்: कुमारिल भट्ट), கி. பி., ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அசாம் பகுதியை சேர்ந்த, வேத தத்துவ தரிசனங்களில் ஒன்றான மீமாம்சை தர்சன அறிஞர் ஆவார்.[1] குமரிலபட்டர் வேதத்தின் முற்பகுதியான கர்ம காண்டம் எனப்படும் பூர்வ மீமாம்சை குறித்து மீமாம்சா சுலோக வார்த்திகம் என்ற விரிவான நூலை எழுதிப் புகழ் பெற்றவர். இவரது சீடர்களில் புகழ் பெற்றவர் பிரபாகரர். குமரிலபட்டரைப் போன்றே இவரும் பல வேத தத்துவ நூல்களை எழுதிய பூர்வ மீமாம்சகர். அவர் முருகப்பெருமானின் கலியுக-அவதாரமாக சிலர் கருதுகின்றனர். சுருதிகளில் குறிப்பிடும் மந்திரங்கள் மற்றும் யாகம், யக்ஞம் போன்ற வைதீக கர்மங்களை மட்டுமே செய்வதன் மூலம் சொர்க்கத்தை எளிதாக அடைய முடியும் கொள்கை உடையவர். ஈஸ்வரன் எனும் இறை தத்துவத்தை ஏற்றுக் கொள்ளாதவர்.[2] வேதங்களில் கூறப்பட்ட சடங்குகளைச் செய்வதால் மட்டுமே ஒருவன் எளிதாக சொர்க்கத்திற்குச் செல்ல இயலும்போது, உத்தர மீமாம்சையான வேதாந்தம் எனும் உபநிடதங்கள் மூலம் பிரம்மத்தை அறிவதன் மூலம் சொர்க்கத்தை அடைய இயலாது என்ற கொள்கை கொண்டவர். வேதத்தை ஏற்காத பௌத்த சமயக் கொள்கைகளைக் கடுமையாகச் சாடியவர். தனது நாவன்மையால், மன்னர்களின் அரசவையில் பௌத்தர்களை வாதில் வென்றவர். இவரது மீமாஞ்சா தத்துவ கருத்துகள் பாட்ட மீமாம்சா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. தொன்ம வரலாறுவேதத்தின் முற்பகுதியான கர்ம காண்டத்தைக் கடைப்பிடிக்கும் பூர்வ மீமாம்சகரான குமரிலபட்டர், பௌத்த சமயக் கொள்கைகளை அறிவதற்காகப் பௌத்தராக மாறி, நாளந்தா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். ஒரு முறை, வேத நெறிகளையும், சடங்குகளையும் தாக்கிப் பேசிய பெளத்த குரு தர்மகீர்த்தியை எதிர்த்து வாதிட்டதால், குமரிலபட்டர் பௌத்த மடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். நாளந்தாவிலிருந்து வெளியேறிய குமரிலபட்டர், பிரயாகை எனப்படும் தற்கால அலகாபாத்தில் குடியேறிப் பல மன்னரவைகளில், பெளத்த அறிஞர்களுடன் வாதப்போரில் வென்று, வேத நெறியை மீண்டும் தலை நிமிரச் செய்து, பௌத்தர்களின் செல்வாக்கை வெகுவாகக் குறைத்தார். வித்யாரண்யர் எழுதிய மாதவிய சங்கர விஜயம் எனும் நூலில்,[3] ஒரு முறை உத்தர மீம்மாம்சகரும், அத்வைத வேதாந்தியுயான ஆதிசங்கரர் குமரிலபட்டரைத் தன்னுடன் நேரடி வாதப் போருக்கு அழைத்த போது, தனக்கு வயதாகி விட்டதால் தன் சீடர் மந்தன மிஸ்ரருடன் வாதப் போர் செய்யுமாறு பணித்தார். மகிஷ்மதி நகரத்தில் வாழ்ந்து கொண்டிருந்த இல்லறத்தவரான மந்தனமிஸ்ரருடன் நடந்த வாதப் போட்டியில், ஆதிசங்கரர் வென்றார். வாதில் தோற்ற மந்தன மிஸ்ரர் தனது பெயரைச் சுரேஷ்வரர் என மாற்றிக் கொண்டு, சந்நியாசம் ஏற்று ஆதிசங்கரரின் சீடராகிப் பல அத்வைத வேதாந்த நூல்களை இயற்றி அத்வைத தத்துவங்களைப் பரப்பினார். அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
நூல்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia