சத்யவாடிகடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் வட்டத்தில், விருத்தாசலத்திலிருந்து திட்டக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் 8-ஆவது கிலோமீட்டரில் அமைந்துள்ள ஒர் கிராமம் ஆகும். கிட்டத்தட்ட 850 குடும்பங்கள் உள்ள இந்த கிராமத்தில் 4,500-இற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கிராமத்தின் பெரும்பகுதி விளைச்சல் நிலமாகையால் மக்களின் முக்கியத்தொழில் விவசாயம் ஆகும். இவ்வூரின் அருகிலேயே அம்பிகா சர்க்கரை ஆலை (முன்பு அருணா சர்க்கரை ஆலை என வழங்கப்பட்டது) உள்ளதால் கரும்பு பெருமளவில் பயிரிடப்படுகிறது. நீர்வளம் நன்றாக உள்ளதால் கரும்புக்கு இணையாக நெல்லும் பயிரிடப்படுகிறது. உளுந்து, நிலக்கடலை, கம்பு, எள், சோளம், துவரை, மரவள்ளிகிழங்கு, வெள்ளரி இன்ன பிற காய்கறிகள் போன்றவையும் அவ்வப்போது ஆங்காங்கே சிறிய அளவிலும், ஊடுபயிராகவும் பயிரிடப்படுகிறது. ஊருக்கு வடமேற்கே பெரிய ஏரி உள்ளது; ஊருக்கு தெற்கே வெள்ளாறு ஓடுகிறது, மழைக்காலத்தில் ஆற்றில் வெள்ளம் வருவதுண்டு. ஆகையால் நிலத்தடிநீர் எப்போதும் வளமாக இருக்கும். பெருமளவு நீர்ப்பாசனம் மின்மோட்டார் மூலமே நடைபெறுகிறது.