சாமிநாதன் கணேசன்
சாமிநாதன் கணேசன், (Saminathan Ganesan, பிறப்பு: 17 அக்டோபர் 1985), மலேசியாவில் ஓர் அரசியல்வாதி. மலாக்கா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர். மலேசியாவிலும் மலாக்கா மாநிலத்திலும் மிக இளம் வயதில் ஆட்சிக்குழு உறுப்பினராகப் பதவியேற்ற முதல் தமிழர்.[1] மலாக்கா மாநிலச் செயற்குழுவில் ஒற்றுமை, மனித வளங்கள், அரசு சாரா நிறுவனங்கள்; நுகர்வோர் விவகாரங்களுக்கான அமைச்சர் பதவியை 2018-ஆம் ஆண்டில், இவருடைய 33-ஆவது வயதில் ஏற்றார். தம்பி சாமிநாதன் என்று மலேசியத் தமிழர்களால் அன்புடன் அழைக்கப் படுகிறார். மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்குத் த்ன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறார்.[2] தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி கைது செய்யப் பட்டார். இவருடன் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் அவர்களும் கைது செய்யப்பட்டார்.[3][4][5] ஓர் இரப்பர் தோட்டத் தொழிலாளரின் மகனாகப் பிறந்தவர். அயராத உழைப்பும், தளராத நம்பிக்கையும் இவரை அரசியலின் சிகரத்திற்குக் கொண்டு சென்றுள்ளன. இவர் மலேசிய தமிழர் இன உரிமைகளின் போராட்டவாதியும் ஆவார்.[6] வாழ்க்கைக் குறிப்புஇவர் மலாக்கா டுரியான் துங்கல் பகுதியில் பிறந்து, டுரியான் துங்கல் தமிழ்ப்பள்ளியில் படித்தவர். லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். சமூகச் சேவையில் அதிகம் நாட்டம் கொண்டவர். தமிழர்ச் சங்கங்களின் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். அரசியல் களத்தில் சாதாரணத் தொண்டனாக வலம் வந்து கொண்டிருந்தவர். எனினும் மலாய் மொழியில் சரளமாகப் பேசக்கூடிய ஆற்றல் பெற்றவர். அதனால் மலாக்கா மாநில ஜனநாயக செயல்கட்சி நிர்வாகிகள் 2018-ஆம் ஆண்டு தேர்தலில் இவரைச் சிபாரிசு செய்தார்கள். தேர்தலில் வெற்றியும் பெற்றார். அரசியல்2018 மே 9 பொதுத் தேர்தலுக்கு சுமார் இரண்டு வாரங்கள் இருக்கும் போதுதான் பக்காத்தான் கூட்டணி ஓர் இந்திய வேட்பாளரை காடெக் சட்டமன்றத்தில் நிறுத்துவது என்ற முடிவு செய்தது. 2013-ஆம் ஆண்டு 8-ஆவது பொதுத் தேர்தலில் இந்தத் தொகுதியில் ம.இ.கா. தேசிய முன்னணியின் சார்பில் நின்று வெற்றி பெற்றது. அதனால் பலரும் அங்கு போட்டியிட தயக்கம் காட்டினார்கள். அப்போது துணிந்து போட்டியிட சாமிநாதன் முன்வந்தார். காடெக் தொகுதியில் ஜ.செ.க.வுக்கு எந்தவித கிளைகளோ, அரசியல் அடித்தளமோ இல்லை. எனினும் தனது கடந்த கால மக்கள் போராட்டங்களால் சாமிநாதனுக்கு அந்தத் தொகுதி வாக்காளர்களிடையே ஓரளவுக்கு அறிமுகம் இருந்தது. சாமிநாதனின் மனைவி உமாதேவிசாமிநாதனின் மனைவி உமாதேவி காடெக் வட்டாரத்தைச் சேர்ந்தவர். அதுவே சாமிநாதனுக்கு அமைந்த இன்னொரு சாதகம் ஆகும். அதனால் அங்குள்ள இந்திய வாக்காளர்களிடையே அறிமுகப்படுத்திக் கொள்வதும், பிரசாரம் செய்வதும் சற்றே எளிதாக அமைந்தது. காடெக், அலோர் காஜா நாடாளுமன்றத்தின் கீழ் வரும் 5 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். கடந்த 2013 பொதுத் தேர்தலில் அலோர் காஜா நாடாளுமன்றத்தில் ஜ.செ.க. போட்டியிட்டது. அந்த அனுபவத்தைக் கொண்டு ஜ.செ.க. கட்சியினரும் சாமிநாதனுக்குத் துணையாகத் தேர்தல் களத்தில் இறங்கினார்கள். இறுதியில் இந்தியர்களின் ஆதரவு; மலாய் வாக்குகள் தேசிய முன்னணி - அம்னோவுக்கு எதிராகத் தடம் புரண்டது; பக்காத்தான் கூட்டணிக்கு ஆதரவாக எழுந்த ஆட்சி மாற்ற அலை; என எல்லாம் ஒன்று சேர காடெக் தொகுதியில் 307 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார் சாமிநாதன். வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்கு பணம் இல்லைஅவர் சொல்கிறார்: பிரசாரத்தில் இறங்கும்போது ஒன்றை நான் முடிவு செய்துகொண்டேன். வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் பணம் இல்லை. ஆனால், அவர்களைப் பார்த்துக் கைகுலுக்குவதற்கு என்னிடம் வலுவான கரங்கள் இருந்தன. எனவே, வாக்களிப்பு தினத்திற்குள் எவ்வளவு பேரைச் சந்திக்க முடியுமோ அந்த அளவுக்குச் சந்தித்து அவர்களுடன் கைகுலுக்க வேண்டும் என முடிவெடுத்தேன். அதே போல நிறைய வாக்காளர்களைச் சந்தித்துக் கைகொடுத்தேன். யாருக்கும் காசு கொடுக்கவில்லை. ஆனாலும் வெற்றி பெற்றேன்” என சிரித்துக் கொண்டே கூறுகிறார் சாமிநாதன்.[7] தமிழ்ப் பள்ளிக்கூடங்களுக்கு உதவிபல ஆண்டுகளாக இந்திய சமுதாயக் களத்தில் அடிமட்டத்தில் இறங்கி சமூக, அரசியல் பணியாற்றி உள்ளார். அதனால் மலாக்கா மாநில இந்தியர்களின் உணர்வுகளையும், பிரச்சனைகளையும் நன்கு உணர்ந்து புரிந்து கொண்டவர். இந்திய சமுதாயத்தைப் பொறுத்தவரை அதன் இரு கண்கள் தமிழ்ப் பள்ளிகளும், ஆலயங்களும் தான். எனவே, மலாக்கா மாநில அனைத்து தலைமை ஆசிரியர்களையும் அழைத்து அவர்களோடு சந்திப்புக் கூட்டம் நடத்தி தமிழ்ப் பள்ளிகளின் பிரச்சனைகளைக் கண்டு அறிந்து இருக்கிறார். தமிழ்ப் பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களில் இருப்பவர்கள், ஆலய நிர்வாகப் பொறுப்புகளிலும் இருப்பதை முடிந்தவரை தவிர்த்தால் நல்லது என அறிவுறுத்தி வருகிறார். தமிழ்ப் பள்ளிகள், ஆலயங்கள் ஆகியவற்றை நோக்கியே இவரின் அரசியல் பணிகள் மையம் கொண்டு உள்ளன. உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்திக் கீழ் கைதுதமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் மலாக்கா ஆட்சிக் குழு உறுப்பினர் ஜி.சாமிநாதன் மற்றும் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.[8][9] அவர்கள் இருவரும் பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 அல்லது சோஸ்மாவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர் என்பதை மலேசியாகினி குறிப்பிட்டுள்ளது. இச்சட்டம் சம்பந்தப் பட்டவர்களை 28 நாட்கள் காவலில் வைக்க அனுமதிக்கிறது.[10] இவர்களுடன் மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டனர். மலாக்கா, நெகிரி செம்பிலான், கெடா, கோலாலம்பூர், பேராக் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும், சிலாங்கூரில் இருவரும் கைது செய்யப்பட்டனர். தீவிரவாத ஒழிப்பு எனும் பெயரில் இலங்கையில் ஓர் இன அழிப்பு நிகழ்ந்தது. இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டத் தமிழர்களைக் கொன்று குவிக்கப் பட்டனர். இந்த நூற்றாண்டின் மிகக் கொடிய இனப்படுகொலைக்கு நீதிகேட்டு உலகம் முழுக்க வாழும் தமிழ் மக்கள் போராடினார்கள்.[11] அதற்காக இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மூலம் தமிழர்களைக் குற்றவாளிகளாக அனைத்துலகச் சமூகத்தின் கண்முன்னே நிறுத்தும் செயல் வன்மையானக் கண்டனத்திற்கு உரியது என ஊடகங்கள் கருத்து தெரிவித்தன.[12][13] தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia