ஜனநாயக செயல் கட்சி
ஜனநாயக செயல் கட்சி அல்லது ஜசெக (ஆங்கிலம்: Democratic Action Party (DAP); மலாய்: Parti Tindakan Demokratik; சீனம்: 民主行动党) என்பது மலேசியாவின் முக்கிய மூன்று எதிர்க் கட்சிகளில் ஒன்றாகும்.[4] 2015ஆம் ஆண்டில் அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)யும், ஜனநாயக செயல் கட்சியும், மக்கள் நீதிக் கட்சியும் ஒன்றிணைந்து, பாக்காத்தான் அரப்பான் கூட்டணியை உருவாக்கின.[5] பாக்காத்தான் அரப்பான் கூட்டணியின் நான்கு கூறுக் கட்சிகளில் ஒன்றாக இந்தக் கட்சி, 2018 மலேசியப் பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனல் கூட்டணியைத் தோற்கடித்து நடுவண் அரசாங்கத்தை அமைத்தது. இதற்கு முன்னர் இந்தக் கட்சி 53 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இயங்கியது. ஆயினும், பாக்காத்தான் அரப்பான் கூட்டணி அதன் முதல் பதவிக் காலத்தை முடிப்பதற்கு முன்பு, அதன் பங்காளிக் கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகின. அதனால், பாக்காத்தான் அரப்பான் கூட்டணி 22 மாதங்களுக்குப் பிறகு அதிகாரத்தை இழந்தது. இதுவே 2020 மலேசிய அரசியல் நெருக்கடிக்கும் வழிவகுத்தது.[6] பாக்காத்தான் அரப்பான் கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்த ஜசெக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. பெரும்பான்மை இல்லாமல் இருந்தாலும், அது தன் அரசியல் போட்டியாளர்களுடன் இணைந்து, மலேசியாவில் ஓர் ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்தது. பொதுஅண்மைய தேர்தல்களில், முன்பு ஆளும் கட்சியாக விளங்கிய பாரிசான் நேசனல் கூட்டணிக்கு, இந்த பாக்காத்தான் அரப்பான் கூட்டணி கடும் சவால்களைக் கொடுத்து வருகின்றது. மலேசியர்களுக்கு மலேசியா எனும் கொள்கையின் அடிப்படையில், மலேசியாவில் உள்ள பல்வேறு இனங்கள், சமயங்கள், கலாசாரங்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஜனநாயக செயல் கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. மக்களாட்சியைப் பேணி மலேசிய மக்கள் அனைவருக்கும் சரிசமமான வாய்ப்புகளும் வசதிகளும் வழங்கப்பட வேண்டும் என்று இந்தக் கட்சி போராடி வருகின்றது.[7] இக்கட்சியின் கோட்டைகளாக பினாங்கு, பேராக் மாநிலங்களும் கோலாலம்பூர் கூட்டரசுப் பகுதியும் விளங்குகின்றன. வரலாறு1965-ஆம் ஆண்டில் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் வெளியேற்றப்பட்ட சிறிது காலத்திலேயே, மலாயாவில் இயங்கி வந்த சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சியும் (People's Action Party) மலாயாவில் இருந்து வெளியேறியது. அதன் பின்னர், மக்கள் செயல் கட்சியின் துணைத் தலைவர்களாக இருந்த சென் மான் கின் மற்றும் தேவன் நாயர் ஆகியோரால் 1965-இல் ஜனநாயக செயல் கட்சி நிறுவப்பட்டது. ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு என்று அழைக்கப்படும் அம்னோ தலைமையிலான மத்திய அரசாங்கத்திற்கும் சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட தீவிர கருத்து வேறுபாடுகளே சிங்கப்பூர் வெளியேற்றத்திற்கு காரணமாக இருந்தன. அந்தக் கட்டத்தில் அம்னோ கட்சி, மலாய்க்காரர்களின் பிரபுத்துவம் (Malay Supremacy / Malay Overlordship); மற்றும் மலாய் இன தேசியவாதத்திற்கும் (Malay Racial Nationalism) ஆதரவாக இருந்தது.[3] கருத்து வேறுபாடுகள்இதற்கு நேர்மாறாக,சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சி, மலேசியர்களின் மலேசியா எனும் சமத்துவம் மற்றும் குடிமை தேசியவாத மலேசிய மலேசியாவை ஆதரித்தது. அதன் காரணமாகத்தான் சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சிக்கும் அம்னோவிற்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. மலேசியர்களின் மலேசியா தேசியவாதத் தனமையை, ஜனநாயக செயல் கட்சி தன் கட்சியின் தேசியக் கொள்கையாக இன்றுவரை கடைபிடித்து வருகிறது. மக்கள் செயல் கட்சி மலாயாவில் இருந்து வெளியேற்றப் பட்டதும், அந்தக் கட்சி, சிங்கப்பூரைத் தன் தளமாகக் கொண்டு இயங்கியது. பின்னர் புதிதாக உருவாக்கப்பட்ட சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஆளும் கட்சியாக்வும் புதிய பரிமாணம் பெற்றது.[3] ஆதரவுகள்ஜனநாயக செயல் கட்சிக்கான ஆதரவுகள் பெரும்பாலும் நகரங்கள், கடலோரப் பகுதிகளில் உள்ள மதச்சார்பற்ற மற்றும் தாராளவாத வாக்காளர்களிடம் இருந்து கிடைக்கின்றன. வாக்காளர்கள் பெரும்பாலோர் நடுத்தர மக்களாக உள்ளனர். தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழிலாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களில் அடங்குவர். பினாங்கு, பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், ஜொகூர், மலாக்கா கோலாலம்பூர் ஆகிய நகரங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகள் இந்தக் கட்சியின் கோட்டைகளாக விளங்குகின்றன.[8] 2018 மலேசியப் பொதுத் தேர்தலில், இந்தக் கட்சி அதன் பங்காளிக் கட்சியான மக்கள் நீதிக் கட்சியின் பதாகையின் கீழ் 47 மக்களவைத் தொகுதிகளிலும் 104 மாநிலத் தொகுதிகளிலும் போட்டியிட்டு, 42 மக்களவைத் தொகுதிகள்; மற்றும் 102 மாநிலத் தொகுதிகளில் வெறி பெற்றது.[9] இந்தியர்த் தலைவர்கள்இராமசாமி பழனிச்சாமிபேராசிரியர் இராமசாமி பழனிச்சாமி மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வர்; மற்றும் ஜனநாயக செயல் கட்சியின் பினாங்கு பிறை சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் ஆவார். 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற மலேசியப் பொதுத் தேர்தலில், பேராசிரியர் இராமசாமி ஜனநாயக செயல் கட்சியின் சார்பில் பினாங்கு பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியிலும், பிறை சட்டமன்றத் தொகுயிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியில், அவர் அப்போதைய பினாங்கு முதலமைச்சர் கோ சு கூன்னைத் தோற்கடித்தார்.[10] பேராசிரியர் இராமசாமி, தற்சமயம் ஜனநாயக செயல் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவியை வகித்து வருகிறார்.[11] சிவகுமார் வரதராஜன்வி. சிவகுமார் என அழைக்கப்படும் சிவகுமார் வரதராஜன் மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சியின் பேராக் பத்து காஜா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பேராக் மாநிலத்தின் முன்னாள் சபாநாயகரும் ஆவார். 2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின், பேராக் மாநிலத்தை ஆட்சி செய்து வந்த பாக்காத்தான் ராக்யாட், இவரை பேராக் மாநிலச் சட்டமன்றத்தின் சபாநாயகராக்கியது. மலேசிய அரசியல் வரலாற்றில், தமிழர் ஒருவர் மலேசிய மாநிலத்தின் சபாநாயகர் பதவியை வகிப்பது அதுவே முதல் முறையாகும். தற்சமயம் கட்சியின் அனைத்துலகச் செயலாளர் பதவியை வகித்து வருகிறார்.[12] எம். குலசேகரன்எம். குலசேகரன் 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற மலேசியப் பொதுத் தேர்தலில், பேராக் மாநிலத்தின், மேற்கு ஈப்போ நாடாளுமன்றத் தொகுதியில், மலேசிய சீனர் சங்கத்தைச் சேர்ந்த இக் பூய் ஹோங் (Yik Phooi Hong) என்பவரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம். குலசேகரன் ,ஜனநாயக செயல் கட்சியின் தேசியத் உதவித் தலைவர் ஆவார்.[13] கஸ்தூரி பட்டு2013 மலேசிய பொதுத் தேர்தலில், பேராசிரியர் இராமசாமி நாடாளுமன்றத்திற்கு போட்டியிடவில்லை. அவருக்குப் பதிலாக ஜனநாயக செயல் கட்சியின் கஸ்தூரி பட்டு பினாங்கு பத்து காவான் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் மலேசிய நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சியைச் சார்ந்த முதல் தமிழ்பெண் ஆவார்.[14] காணொளிகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia