நல்ல தமிழில் எழுத விரும்புவோர் அதற்கேற்ற தமிழ் நடையைக் கையாளல் வேண்டும். மொழி நடை என்பது ஒழுங்கான அமைப்பில் எழுதுவதற்கான நெறிமுறையைக் குறிக்கும்.
இத்தகைய நெறிமுறையில் நிறுத்தக்குறிகள் (punctuation marks) பெரும் பங்கு வகிக்கின்றன. இவை பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளை உரைநடையில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், கருத்துத் தெளிவு துலங்கவும், படிப்பவரின் அக்கறையை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் குறிகளாகும்.
நிறுத்தக்குறிகளுள் ஒன்று சாய்கோடு (slash) ஆகும். சாய்கோடுகள் இருவகைப்படும். அவற்றுள் முன்சாய்கோடு (forward slash) (/) மட்டுமே நிறுத்தக்குறியாகப் பயன்படுகிறது. பின்சாய்கோடு (back slash) (\) கணினி மொழி வழக்கில் மட்டுமே உள்ளது; நிறுத்தக்குறியாகப் பயன்படுவதில்லை.
இங்கே சாய்கோடு என்று குறிக்கப்படுவது முன்சாய்கோடு ஆகும்.
சாய்கோடு:(/)
சாய்கோடு இடவேண்டிய இடங்கள் எடுத்துக்காட்டுகளுடன் கீழே தரப்படுகின்றன.
1) ஒன்றுக்குப் பொருத்தமான சில மாற்றங்களைத் தரும்போது அவற்றுக்கு இடையில் சாய்கோடு இடுவது முறை.
எடுத்துக்காட்டுகள்:
மாணவரின் தாய்மொழியாகத் தமிழ்/மலையாளம்/தெலுங்கு இருத்தல் வேண்டும்.
கட்டுரையில் வரும் ஆங்கிலச் சொற்கள் அடிக்கோடு/சாய்வெழுத்து இட்டுக் காண்பிக்கப்பட வேண்டும்.
2) அலுவலகக் கடிதங்களில் கோப்பு குறித்த விவரங்களுக்கு இடையில் சாய்கோடு இடுவது முறை.
எடுத்துக்காட்டுகள்:
அரசாணை எண்: 12/7/003/பணி நியமனம் குறித்து/ நாள்: 19.10.2000
கோப்பு எண்: 2/33அ
3) பணத்தொகையைக் குறிக்கும் எண்ணை அடுத்து சாய்கோடு இடுவது முறை.
எடுத்துக்காட்டு:
ரூ. 2000/-, ரூ. 2000/=
(குறிப்பு: மேலே காட்டியவாறு சாய்கோட்டை அடுத்து இணைப்புச் சிறுகோட்டையோ சமக்குறியையோ பயன்படுத்தும் வழக்கமும் உள்ளது.)
4) வலைத்தள முகவரி எழுதுவதில் சாய்கோடு பயன்படுகிறது.