...உடலுக்கோ மனதுக்கோ கடும் வலி அல்லது தாக்கம் ஏற்படுத்துகின்ற செயலை, அவரிடமிருந்தோ அல்லாது மூன்றாம் மனிதரிடமிருந்தோ ஏதேனும் தகவலைப் பெறவோ அல்லது ஒப்புமை பெறவோ நடத்தப்படின், அவரோ அல்லாது மூன்றாமவரோ செய்த அல்லது செய்ததாகக் கருதப்படும் செயலுக்குத் தண்டனையாக வழங்கப்படின், அவரை அல்லது மூன்றாமவரை அடிபணிய வைக்க அல்லது அவமதிக்க அல்லது வேறு ஏதேனும் பாகுபாட்டினுற்காக செய்யப்படின், அதற்கு அரசின் அனுமதியோ ஆணையோ அல்லது அரசு அதிகாரியின் நேரடி அல்லது மறைமுக ஈடுபாடோ இருப்பின் (இந்த சாசனத்தில்)சித்திரவதையாகக் கொள்ளப்படும். சட்டப்படி நிறைவேற்றப்படும் செய்கைகளிலாலான வலியோ துன்பமோ கருத்தில் கொள்ளப்படாது.[1]
அரசு அனுமதிபெற்ற சித்திரவதை தவிர, தனிநபர்களும் கூட்டங்களும் கூட மேற்கண்ட காரணங்களை ஒத்தவற்றிற்காக சித்திரவதையில் ஈடுபடலாம். தவிர பிறரின் துன்பங்களை கண்டு மகிழும் மனவக்கிரங்களுக்காக ஒருவரை சித்திரவதை செய்வதும் உண்டு.
பெரும்பாலான நாடுகளில் பன்னாட்டு சட்டம் மற்றும் உள்நாட்டுச் சட்டங்களால் சித்திரவதை தடை செய்யப்பட்டுள்ளது. பன்னாட்டு மன்னிப்பு அவையின் கூற்றுப்படி 81 உலகநாடுகளில், சிலவற்றில் நேர்முகமாகவே, சித்திரவதை கடைபிடிக்கப்படுகிறது.[2]
இவ்வாறான வதைக்கு எதிரான தேசிய, பன்னாட்டு சட்டப்பாதுகாப்பு அவை அறமுறைகளுக்குப் புறம்பானதென்பதாலும் நடைமுறைப்படுத்த வியலாது என்பதாலும் எழுந்தன.[3] இத்துணை பன்னாட்டுச் சட்டங்கள் இருப்பினும் பல நடுநிலை அமைப்புகள் உலகின் பல பகுதிகளில் நடைபெறும் சித்திரவதைகளைக் குறித்து அறிக்கைகள் வெளியிட்ட வண்ணம் உள்ளன.[4]