சிரித்திரன்
சிரித்திரன் 1963ஆம் ஆண்டில் சி. சிவஞானசுந்தரம் (சிரித்திரன் சுந்தர்) அவர்களால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நகைச்சுவை இதழ். அன்னாரின் மறைவு வரை 32 ஆண்டு காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது. சிந்தனைச் சிறப்பாலும், கேலிச் சித்திரங்கள், கருத்தோவியங்கள் போன்ற படைப்புக்களாலும் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் சிரித்திரன் சஞ்சிகை தனியிடத்தைப் பெற்றது. 'மகுடி பதில்கள்' என்று மகுடமிட்டு சுந்தர் எழுதிய கேள்வி பதில்கள் ஒரு காலத்தில் பத்திரிகை உலகில் பலராலும் பேசப்பட்டு வந்தது. சிரித்திரன் இதழ் Centre for Creativity and Innovation நிறுவனத்தால் மீள்பதிப்பிக்கப்பட்டு 2021 சனவரி தொடக்கம் யாழ்ப்பாணத்தில் இருந்து உலகெங்கும் கிடைக்க கூடிய வகையில் அச்சுப்பிரதியாக வெளியிடப்பட்டு வருகின்றது. சிரித்திரன் சஞ்சிகை மூலம் பல எழுத்தாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். வெறும் சிரிப்புச் சஞ்சிகையாக மட்டுமல்லாமல் சிரிப்புடன் சிந்தனையையும் தூண்டும் பல சிறந்த ஆக்கங்களைப் பிரசுரித்தவர் சுந்தர். திக்கவயல் தர்மு (சுவைத்திரள் ஆசிரியர்), காசி ஆனந்தன், யாழ் நங்கை ஆகியோர் ஆரம்பகால எழுத்தாளர்கள். காசி ஆனந்தனின் இலட்சியத் தாகம் மிகுந்த "மாத்திரைக் கதைகள்" பிரசித்தமானவை. குடாரப்பூர் சிவா "நடுநிசி" என்ற மர்மக்கதையை எழுதினார். மாஸ்டர் சிவலிங்கத்தின் விண்ணுலகத்திலே சிறுவர் கதை, அ. ந. கந்தசாமியின் 'சங்கீதப் பிசாசு' சிறுவர் நாவல் (இதுவே சிரித்திரனில் வெளியான முதலாவது தொடர்கதை) போன்றவை இவற்றுள் சில. எஸ். அகஸ்தியர், டானியல் அன்ரனி, சுதாராஜ், அமிர்தகழியான், நவாலியூர் சச்சிதானந்தன், தெளிவத்தை ஜோசப் இப்படிப் பலருக்கு களம் அமைத்துக் கொடுத்தார். மலையகப் படைப்பாளி ராகுலனின் "ஒய்யப்பங் கங்காணி" அன்றைய அரசியல்வாதிகளை உலுக்கியது. செங்கை ஆழியானின் "ஆச்சி பயணம் போகிறாள்", "கொத்தியின் காதல்" ஆகியன புகழ் பெற்றவை. வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia