சிவப்பணுச்சிதைவு - சிறுநீரகச்செயலிழப்புக் கூட்டறிகுறி
சிவப்பணுச்சிதைவு - சிறுநீரகச்செயலிழப்புக் கூட்டறிகுறி (சிசிகூ) அல்லது சிவப்பணுச்சிதைவு - குருதியூரியாக் கூட்டறிகுறி (Hemolytic-uremic syndrome / HUS) என்பது தொற்று ஒன்று பொதுவாக சமிபாட்டுத்தொகுதியில் ஏற்படுவதன் விளைவாக, நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகள் வெளிவிடும் நச்சுப்பொருட்களால் செவ்வணுக்கள் அழிவதையும் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதையும் கொண்டுள்ள ஒரு நோய்க் கூட்டறிகுறியாகும்.[1] இதன் விளைவாக சிவப்பணுச்சிதைவுக் குருதிச்சோகை, கடிய சிறுநீரகச் செயலிழப்பு (குருதியூரியா மிகைப்பு) மற்றும் குருதிச் சிறுதட்டுக்கள் குறைவடைதல் போன்ற குறைபாடுகள் உண்டாகும். இதனால் மிகையாகப் பாதிக்கப்படுவோர் சிறார்களாவர், எனினும் எவ்வயதினருக்கும் சிசிகூ ஏற்படலாம். பெரும்பான்மை நோய் நிகழ்வுகள் வயிற்றோட்டத்தின் பின்னரே துவங்குகின்றன, இதற்குக் காரணமாக ஈ.கோலை பாக்டீரியா விளங்குகின்றது. உணவு மூலம் தொற்றை உண்டாக்க வல்ல ஈ.கோலையின் ஓ157:எச்7 மற்றும் ஓ104:எச்4 வகைகள் பிரதான காரணிகளாகத் திகழ்கின்றன. சிசிகூ உடனடியாகக் கவனத்தில் கொள்ளவேண்டிய மருத்துவ விடயமாகும், இது 5-10% இறப்புவீதத்தைக் கொண்டுள்ளது, மீதிப்பேரில் பெரும்பாலானோர் இயல்பு நிலைக்குத் திரும்பினாலும் சிலருக்கு நெடுங்கால சிறுநீரக நோய்கள் உருவாகி சிறுநீரக மாற்றுச் சிகிச்சை செய்யவேண்டிய தேவைக்கு ஆட்படுவர்.[2] இது ஒரு கூட்டறிகுறியென 1955-இல் வரையறுக்கப்பட்டது.[3][4] உசாத்துணைகள்
|
Portal di Ensiklopedia Dunia