இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காகமேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.
சு. ப. தமிழ்ச்செல்வன்தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தவர். தினேஸ் என்ற இயக்கப் பெயரைக் கொண்டிருந்த இவர் புலிகள் இயக்கத்தில் கீழ் மட்டங்களில் இருந்து வளர்ந்து இறப்பின் போது புலிகளின் தலைமையின் உள்வட்டத்தின் ஒருவராக செயற்பட்டார். 1987 இல் யாழ். தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராகவும் 1991 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாண மாவட்ட சிறப்புத் தளபதியாகவும் செயற்பட்டார். 1993 இல் கிளிநொச்சி மாவட்டம்பூநகரியில் இலங்கை இராணுவத் தளம் மீதமான தவளைப் பாய்ச்சல் என்கிற விடுதலைப்புலிகளின் இராணுவ நடவடிக்கையில் போரில் காலில் காயமடைந்ததைத் தொடர்ந்து அரசியற் துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்; 2007 நவம்பர் இலங்கை வான்படையின் தாக்குதலில் கொல்லப்படும் வரை அப்பதவியில் இருந்தார். பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகளின் பகிரங்க முகமாக செயற்பட்டு இராணுவ இயக்கமாக இருந்த புலிகள் இயக்கத்தில் அரசியல் மாற்றங்களையும் ஏற்படுத்தி வந்தார். புலிகளின் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று வந்த இவர் அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்குப் பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவராகவும் செயற்பட்டு வந்தார். 23 ஆண்டுக் கால இயக்க வாழ்வைக் கொண்ட இவரின் இறப்பு புலிகளால் ஈடு செய்யப்பட முடியாது என பிபிசி கருத்து வெளியிட்டது.[1][2]
1993 இலிருந்து இறக்கும் வரை தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளராகச் செயற்பட்டார். நோர்வே அனுசரணையில் இலங்கை அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றினார். அன்ரன் பாலசிங்கத்தின் மரணத்தைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் அமைப்பின் அதியுயர் அரசியற் தலைவரானார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிரிகேடியர் தரத்துக்கு அவர் நிலையுயர்த்தப்பட்டுள்ளார்.
அரசியற் செயற்பாடுகள்
தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 ஆவது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப்பெற்று தமிழகத்தில் வே. பிரபாகரனின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார்.
1986 இல் வே.பிரபாகரன் தமிழகத்திலிருந்து ஈழம் வருவதற்கு முன் ஈழத்துக்கு வந்து களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டி மீளவும் தமிழகம் சென்று திரும்பவும் வே. பிரபாகரனுடன் தாயகம் திரும்பினார். அப்போது அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தினேஸ் என்பதாகும்.
தமிழகத்திலிருந்து திரும்பிய அவர், 1987மே மாதம் யாழ். தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையிலான பேச்சுவார்த்தைக்குழுவில் அன்ரன் பாலசிங்கத்துடன் இருந்து பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைப்பணியை செய்து வந்தார்.
படைத்துறைச் செயற்பாடுகள்
1987 - 1989 வரை யாழ்தென்மராட்சி பகுதியில் இந்திய இராணுவத்துக்கு எதிரான நேரடித் தாக்குதல்.
1991 இல் ஆகாய கடல்வெளி நடவடிக்கை (ஆனையிறவு இலங்கை இராணுவ முகாம் வலிந்த தாக்குதல்) இந்த நடவடிக்கையின்போது நெஞ்சில் காயமடைந்தார்.
1992 இல் இலங்கைப் படையினரின் "பலவேகய - 02" எதிர்ச்சமரிலும்.
தச்சன்காடு இலங்கைப் படைமுகாம் மீதான தாக்குதல்.
காரைநகரில் இலங்கைப் படையினர் மீதான தாக்குதல்.
1991 இல் மன்னார் சிலாபத்துறை இலங்கைப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு தளபதியாக செயல்பட்டார்.
ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையில் தென்மராட்சி தனங்கிளப்பு சிறிலங்கா படைத்தளம் அழிப்பு உள்ளிட்ட தென்மராட்சிப்பகுதி மீட்புத்தாக்குதலில் கட்டளைத் தளபதியாக பங்காற்றினார்.
மறைவு
2007, நவம்பர் 2 காலை ஆறு மணியளவில் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் ஐந்து விடுதலைப் புலிகளுடன் கிளிநொச்சியில்இலங்கை வான்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.[5]. இறக்கும்போது தமிழ்ச்செல்வனுக்கு மனைவி, எட்டு வயது மகள், மற்றும் நான்கு வயது மகன் ஆகியோர் இருந்தனர்.[1]
சு. ப. தமிழ்ச்செல்வனின் இறுதி உரை
“
தமிழினம் இரு முனைப்போரை சந்திக்கின்றது. ஒன்று எதிரியின் இன அழிப்பிற்குள்ளும் கொடுமையான போருக்குள்ளும் நாம் தள்ளப்பட்டு அதற்குள் இருந்து மீள்வதற்குமான விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். இன்னொன்று உலகத்தின் அசைவியக்கத்தோடு ஒன்றித்திருக்க வேண்டிய கட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். அதற்காகவும் நாங்கள் போராடவேண்டியவர்களாக இருக்கின்றோம்.