தட்டம்மை
![]()
தட்டம்மை அல்லது சின்னமுத்து, மணல்வாரி அம்மை, (Measles,morbilli ) என்றெல்லாம் அறியப்படும் இந்த நோய் பாராமைக்சோவைரசு குடும்பத்தைச் சேர்ந்த மோர்பில்லி தீநுண்மத்தால் ஏற்படும் ஓர் சுவாச நோய்த்தொற்றாகும். மோர்பி தீநுண்மங்கள் உறையுடைய, ஓரிழை எதிர்-உணர்வு ரைபோநியூக்ளிக் அமில தீநுண்மங்களாகும். நோய் அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், மூக்கொழுகல், சிவந்த கண்கள் ஏற்படுவதுடன் பொதுவான நீல-வெள்ளை நிற மையப்பகுதி கொண்ட சிறிய சிவப்பு நிற புள்ளிகள் போன்ற தோற்றம் வாயினுள் ஏற்படும். உடல் முழுவதும் தோலில் கொப்புளங்கள் இருக்கும். தட்டம்மை நோய்த்தொற்று உள்ளவரின் மூக்கில் அல்லது தொண்டையில் வடியும் நீருடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொற்றும்போது இந்நோய் பரவுகிறது. தொற்றிய இடத்தில் இரண்டுமணி நேரம் வரை வீரியத்துடன் காணப்படும். உடலில் கொப்புளங்கள் தோன்றுவதற்கு நான்கு நாட்கள் முன்பாகவும் நோய் வடிந்த பிறகு நான்கு நாட்கள் வரையும் நோயுற்றவரிடமிருந்த பிறருக்கு நோய் தொற்ற வாய்ப்புள்ளது.[1] விரைவாகப் பரவக்கூடிய இந்த தீநுண்மம் நோயுற்றவருடன் வாழும் இடத்தை பகிரும் 90% நபர்களுக்கு தொற்றக்கூடிய வாய்ப்பு உள்ளது. தட்டம்மை தொற்றியவருக்கு முதல் தொடர்பிலிருந்து ஒன்பது முதல் பன்னிரெண்டு நாட்கள் வரை அறிகுறியில்லா அடைவுக்காலமாக இருக்கிறது.[2] செருமானியத் தட்டம்மை என்பது இதனையொட்டிய அறிகுறிகளைக் கொண்டிருந்தாலும் இரு நோய்களும் வெவ்வேறானவை.[3][4] சத்துக்குறைவு உள்ள இளம் குழந்தைகள் இந்த நோயால் இறக்க நேரிடலாம். இந்த நோய்க்கான தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை உரிய காலத்தில் போடுவதுடன் சுகாதார பழக்கவழக்கங்களை கையாளுதலால் சிசு மரணங்களை தவிர்க்கலாம். இந்தியாவில் இந்த நோயால் 47% சிறார்கள் மரணமடைவதாக ஆய்வுக்கட்டுரையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.[5] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia