தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் (Tamilnadu Textbook and Educational Services Corporation) அல்லது தமிழ்நாடு பாடநூல் கழகம் (Tamilnadu Textbook Corporation), தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்குப் பாடபுத்தகங்களைத் தயாரித்து அச்சிட்டு விநியோகம் செய்வதற்காகத் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட நிறுவனம். வரலாறுஇக்கழகம் 1970இல் மார்ச் 4ஆம் திகதி, தமிழ்நாடு பாடநூல் சங்கம் (Tamilnadu Textbook Society) என்னும் பெயரில் சங்கங்களின் பதிவு சட்டத்தின் கீழ் (பதிவு எண்:1850) தமிழக அரசால் துவக்கப்பட்டது. பின்னர் 1993 ஆம் ஆண்டில் தமிழ்நாடு பாடநூல் கழகம் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. செப்டம்பர் 06, 2013 இலிருந்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் என்ற பெயரில் செயற்பட்டு வருகிறது (பதிவு எண் G.O.(Ms)No.178)[1]. தமிழ்நாடு அரசு மூலம் அமைக்கப்படும் ஆளுநர் குழுவின் கீழ் இயங்குகிறது[2]. தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் அமைச்சர் இக்கழகத்தின் தலைவராவார். தற்போது திண்டுக்கல் ஐ. லியோனி தலைவராக உள்ளார்.[3] பாடநூல் தயாரிப்புதமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பாடநூல்களை அச்சடித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு வழங்கி வருகிறது. இக்கழகம் மூலம் அச்சிடப்படும் பாடநூல்கள், அரசு மற்றும் அரசுதவிபெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் விலையிலும் வழங்கப்படுகின்றன. ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிப் பாடநூல்கள், சிறுபான்மை மொழிப் பாடநூல்கள், மேனிலைப் பள்ளிக்கான தொழிற்கல்விப் பாடப்புத்தகங்கள், ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கான பாடப்புத்தகங்கள் மற்றும் பல்நுட்பக் கல்லூரிக்கான பாடப் புத்தகங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கின்றது.[4] இதர பணிகள்1960கள் மற்றும் 1970களில் வெளிவந்த பாடநூல்களை மீட்டுருவாக்கம் செய்து இணையத்தில் கொண்டுவரும் ஐந்தாண்டுத் திட்டத்தை 2017 இல் தொடங்கியது.[5] இவ்வமைப்பு துறைசார்ந்த நூல்களாக சுமார் 900 நூல்களைப் பதிப்பித்திருந்தாலும் இப்போது சேகரித்தவற்றிலிருந்து 636 நூல்களை இத்திட்டத்தில் மறுபதிப்பு செய்துள்ளது.[6] பென்குயின் பதிப்பகம் 1980 களில் வெளியிட்ட திருக்குறளின் மொழிபெயர்ப்புப் புத்தகத்தையும், ஆஸ்போர்டு யூனிவர்சிட்டி பிரஸ் 2012 இல் வெளியிட்ட சி. சு. செல்லப்பாவின், வாடிவாசல் மொழிபெயர்ப்புப் புத்தகத்தையும் மறுபதிப்பு செய்துள்ளது. மேலும் தி. ஜானகிராமனின், செம்பருத்தி மற்றும் கரிசல் கதைகள் புத்தகத்தையும், ராஜம் கிருஷ்ணனின், சுழலில் மிதக்கும் தீபங்கள், நீல பத்மநாபனின், ‘தலைமுறைகள்’ ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.[7] மேலும் சிலப்பதிகாரம், அறியப்படாத தமிழகம், 26 தலித் சிறுகதைகள் உள்ளிட்ட நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia