தமிழ் இருக்கை என்பது தமிழ் மொழியை கற்பிக்க, ஆய்வு செய்யவென பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் உள்ள ஒரு பேராசிரியர் பொறுப்பு ஆகும். "ஒரேயொரு பேராசிரியர் மூலம் சராசரியாக பத்து ஆராய்ச்சி மாணவர்களை கொண்டு ஆராய்ச்சிகளும், கருத்தரங்குகளும், மொழிசார்ந்த நிகழ்வுகள் மட்டுமே நடத்தப்படுவது தமிழ் இருக்கை" என்று தமிழ் இருக்கை குழுமத்தின் உறுப்பினர் அ. முத்துலிங்கம் அவர்கள் விபரிக்கிறார்.[1] பொதுவாக நிலையான நிதியில் (endowments) இருந்து பெறப்படும் வருவாயில் இருந்து தமிழ்க் இருக்கைக்கு நிதி வழங்கப்படுகிறது.
உலக நாடுகளில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் தமிழ்க் இருக்கையை ஏற்படுத்தும் நோக்குடன் தமிழ் இருக்கை குழுமம் செயற்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசும் இந்தச் செயற்திட்டத்துக்கு ஆதரவு அளித்துவருகிறது.
பயன்கள்
உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளும் தமிழ் இருக்கையை அமைப்பது பல வகையான பயன்களைத் தரும் என்று கூறப்படுகிறது.
உலக அளவில் தமிழ்மொழிக்கான அங்கீகாரத்தைப் பெற்றுத் தருதல். தமிழின், தமிழரின் மதிப்பை உயர்த்தல்.
தமிழ் மொழியை, தமிழ் அறிவுத் தொகுதிகளை உலக மக்களிளோடு பகிர்ந்தல்.
புலம்பெயர் தமிழ் மாணவர்கள் தமிழை கற்க உதவுதல்.
உலகின் சிறந்த பல்கலைக்கழங்களில் தமிழ், தமிழியல் தொடர்பான உயர் ஆய்வினை மேற்கொள்ளல். தமிழாய்வின் தரத்தினை மேம்படுத்தல்.
விமர்சனங்கள்
தமிழ் இருக்கைகளை மேற்குநாடுகளில் பெரும் பொருட் செலவில் அமைப்பது தொடர்பாக பல வகையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உட்பட தமிழ்த் துறைகள் வளங்கள், நிதி, அக்கறை இன்றி புறக்கணிக்கப்படுகின்றன. இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கையோ தமிழ்த் துறையோ இல்லை. இந்த நிலையில் பெரும் நிதிச் செலவில் மேற்குநாடுகளில் தமிழ் இருக்கை அமைப்பது நியாமற்றது.[2]
தமிழ்நாடு அரசும், தமிழ் ஆர்வலர்களும் மேற்குநாடுகளில் செலவு செய்யும் பெரும் பொருட் செலவை தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகங்களை பலப்படுத்த பயன்படுத்தினால் கூடிய பலனைத் தரும்.
தமிழியல் ஆய்வுக்கான உள்ளடக்கம் தமிழர்களால் நெறிப்படுத்தப்பட வேண்டும். தமிழ் மொழியைக் கற்க கற்பிக்க ஆய்வு செய்ய தமிழர்கள் வெள்ளைக்காரர்களை நாடுவது, outsource செய்வது பொருத்தமற்றது. இதற்கான தலைமைத்துவமும், துறையறிவும் ஆத்மாத்த பொறுப்பும் தமிழர்களிடமே உண்டு, இருக்கவேண்டும்.[2][3]
தமிழ் இருக்கை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள், விவாதங்கள் தமிழ்ச் சூழலில் நடைபெறவில்லை. இத்தகைய பரந்த மக்களின் உள்ளீடுகள் பெறப்படாமல் அரசின் பொதுப் பணத்தை மேற்குநாடுகளில் செல்வழிப்பது நியாமற்றது.[3]
மேற்குநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தமிழ், தமிழர் சார் அறிவுத் தொகுதிகளை, கலைப்பொருட்கள் அபகரித்துச் செல்ல அல்லது கட்டுப்படுத்த இந்த தமிழ் இருக்கைகள் வழிசமைக்கும்.[4]
மேற்குநாடுகளில் தமிழ் இருக்கையை அமைப்பது காலனித்துவ கட்டுப்பாட்டையும் வரலாற்றையும் தோரணங்களையும் மீள் அமைப்பிப்பதாக அமையும்.[4]
தமிழ் இருக்கைக்கென மேற்குநாட்டு பல்கலைக்கழகங்களில் ஒதுக்கப்படும் நிலையான நிதியில் சிறிய தொகை மட்டுமே தமிழ் இருக்கைக்கு பயன்படும். பெரும் விழுக்காடு பல்கலைக்கழகத்தின் பிற பயன்பாடுகளுக்கே பயன்படுத்தப்படும்.[3]
மேற்குநாடுகள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஆதரவு தருவது போன்ற தோற்றப்பாடு இவற்றைப் பயன்படுத்தி இந்தியாவில் கிறித்தவ சமயத்தைப் பரப்பவும், பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதற்காகவும் ஆகும்.[2][3]
மேட்டுக்குடி மக்கள் இதனை முன்னெடுக்கிறார்கள். புகழுக்காகவும், மாலைக்காகவும் மேற்குநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு நிதியை வழங்குகிறார்கள். இதனால் பெரும் பயன் ஏதும் கிடைக்கப்போவதில்லை.[3]