தமிழ்ப் பல்கலைக்கழகம் (Tamil University) என்பது தஞ்சாவூரில் உள்ள தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1981, செப்டம்பர் 15ஆம் நாள் உருவாக்கப்பட்டது. தஞ்சாவூரில் தஞ்சாவூர்-திருச்சிராப்பள்ளி சாலையில் 972.7 ஏக்கர் நிலப்பரப்பில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. தமிழ் மொழி, தமிழர் பண்பாடு போன்றவற்றின் முதன்மையான உயர் ஆய்வை நோக்கமாகக் கொண்டது இப்பல்கலைக்கழகம்.
தமிழ்ப் பல்கலைக்கழகத் தனிப் பெருஞ்சின்னம்
தமிழ்ப் பல்கலைக்கழகத் தனிப் பெருஞ்சின்னம் (emblem) பற்றிய விளக்கம் பின்வருமாறு அமையும்.[2]
தங்கிவளர் இடம் தஞ்சை என்ற உண்மை தஞ்சாவூர்ப் பெருவுடையார் கோயில் காட்டும்;
பொங்குதமிழ் முப்பிரிவைச் சுவடி வீணை பொலிவுமயில் இவை காட்டும்; உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்ற குறளின் செய்தி
எழுந்த தமிழ்ப் பல்கலையின் சின்னம் ஈதே!
பழங்கலை வடிவங்களை அவற்றின் மரபு, சுய அமைப்பு, தூய்மை கெடாது பாதுகாத்தல், புது உத்திகள் கண்டு அவற்றின் வளர்ச்சிக்கு உதவுதல் முதலிய விரிவானஅடிப்படை நோக்கம் கொண்டது இப்புலம். இப்புலத்தின்கீழ் நான்கு துறைகள் தொடங்கப்பட்டு தற்போது மூன்று துறைகள் செயல்பட்டுவருகின்றன.
சிற்பத்துறை
இசைத்துறை
நாடகத்துறை
சுவடிப்புலம்
தமிழ்ப் பணிக்கு அடிப்படையாக அமையும் ஓலைச்சுவடிகள், அரிய கையெழுத்துச்சுவடிகள், கல்வெட்டுச் சான்றுகள் முதலியவற்றைத் தேடிக் கண்டுபிடித்துத் தொகுத்துப் பாதுகாத்தல் மற்றும் ஆய்வு செய்தல் ஆகிய நோக்கம் கொண்டது இப்புலம். இப்புலத்தின்கீழ் நான்கு துறைகள் செயல்பட்டு வருகின்றன.
ஓலைச்சுவடித்துறை
அரிய கையெழுத்துச்சுவடித்துறை
கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை
கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை
வளர்தமிழ்ப்புலம்
பலவிடங்களில் வாழ்ந்துவரும் தமிழர்களின் தேவையை நிறைவேற்றும் வகையில் விரிவானஅடிப்படையில் பலதுறை சார்புடையதாக ஆய்வு அமைய வழிசெய்தலை நோக்கமாகக் கொண்டது இப்புலம்.
அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை
மொழிபெயர்ப்புத் துறை
அகராதியியல் துறை
சமூக அறிவியல் துறை
அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை
கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை
மொழிப் புலம்
இலக்கிய இலக்கண ஆராய்ச்சிகளை வளர்ப்பது, தமிழ் இலக்கியப் படைப்புகளை உரிய முறையில் உலகிற்கு அறிமுகப்படுத்துவது ஆகிய அடிப்படை நோக்கங்களைக் கொண்டது இப்புலம். இப்புலத்தின்கீழ் ஆறு துறைகள் செயல்பட்டுவருகின்றன.
இலக்கியத் துறை
மொழியியல் துறை
மெய்யியல் துறை
பழங்குடி மக்கள் ஆய்வு மையம்
நாட்டுப்புறவியல் துறை
இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி
அறிவியற் புலம்
பழந்தமிழரின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மரபுச் செல்வங்களைத் தேடிக் கண்டு தொகுத்தல், ஆய்வு செய்தல் மற்றும் இக்கால நவீன தொழில்நுட்ப நுணுக்கங்களைத் துணை கொண்டு பயன் காணல் முதலான நோக்கங்களைக் கொண்டது இப்புலம். இப்புலத்தின்கீழ் இப்போது ஆறு துறைகள் செயல்படுகின்றன.
சித்த மருத்துவத்துறை
தொல்லறிவியல் துறை
தொழில் மற்றும் நில அறிவியல் துறை
கட்டடக்கலைத்துறை
கணிப்பொறி அறிவியல் துறை
சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை
வெளியீடுகள்
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முக்கிய வெளியீடுகளாவன:[6]
பெருஞ்சொல்லகராதிகள் (5 தொகுதிகள்)
கலைக்களஞ்சியங்கள் (30 தொகுதிகள்)
சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம்(3)
பல துறைசார் கலைச் சொல்லகராதிகள்(12)
பொறியியல் நூல்கள் (13)
மருத்துவ நூல்கள் (14)
தமிழ் எழுத்து வடிவில் கட்டடங்கள்
தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் எழுப்பப்படும் புலக்கட்டடங்கள் அவற்றின் உருவ அமைப்பில் "தமிழ்நாடு" என்ற சொல்லின் எழுத்துக்களைப் போன்று வடிவமைக்கப்படும்.[7] அவ்வகையில் தமிழ்நாடு என்ற சொல்லில் உள்ள எழுத்துக்களைக் குறிக்கும் நிலையில் ஒவ்வொரு எழுத்துக்கும் (த, மி, ழ், நா, டு) ஒவ்வொரு கட்டடம் அமையும்.[8][9]
'த' வடிவக்கட்டடத்தில் கலைப்புலத்துறைகளும், 'நா' வடிவக் கட்டடத்தில் சுவடிப்புலத் துறைகளும் அமையும். 'ழ்' வடிவக் கட்டடத்தில் மொழிப்புலம் செயல்பட்டுவருகிறது. 'மி' வடிவக் கட்டடத்தின் கட்டுமானம் முடிவடைய உள்ளது. இதில், அறிவியல் துறைகள் கொண்டுவரப்படவுள்ளன. 'டு' வடிவக் கட்டடம் இறுதிக்கட்டத்தையடைந்தது.[10] 'டு' வடிவக்கட்டடம் அண்மையில் திறக்கப்பட்டது.
தற்போது 'மி' வடிவத்திலுள்ள அறிவியல் புலக்கட்டடம் 8 பிப்ரவரி 2016இல் திறக்கப்பட்டது.[11]